Multiple Page/Post

தனியார் துறையினருக்கும் இன்று விடுமுறை வழங்கக் கோரிக்கை!

gamini_lokuge.jpgஇலங்கையில் பயங்கரவாதத்தைத் தோற்கடித்த இராணுவ வெற்றியைக் கொண்டாடும் முகமாக இன்று பொது மற்றும் விசேட வங்கி விடுமுறை தினமாக அரசாங்கம் அறிவித்துள்ளதால் தனியார் துறையினருக்கும் இந்த விடுமுறையை வழங்குமாறு தொழில் உறவுகள் மற்றும் உற்பத்தித்ததிறன் மேம்பாட்டு அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது..

அனைத்து அரச கூட்டுத்தாபனங்கள், நிதியச் சபைகள், மற்றும் தனியார் துறை ஆகியவற்றில் கடமைபுரியூம் சகல ஊழியர்களுக்கும் இன்று விடுமுறை வழங்குமாறு தொழில் உறவுகள் மற்றும் உற்பத்தித்திறன் மேம்பாட்டு அமைச்சர் காமினி லொகுகே கோரிக்கை விடுத்துள்ளார்

ஷெல் காஸ் நிறுவன 51வீத பங்குகளை அரசு கொள்வனவு

minis-kahali.jpgஷெல் காஸ் நிறுவனம் அதன் விநியோகங்களை இலங்கையிலும் ஆசியாவிலும் நிறுத்திக் கொள்ளப் போவதாக அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளது.  இதனையடுத்து ஷெல் காஸ் லங்கா நிறுவனத்தின் 51% பங்குகளைக் கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

உலகளாவிய ரீதியில் வர்த்தகக் கூட்டமைப்பை மறுசீரமைக்கும் திட்டத்தின் ஓர் அங்கமாகவே இலங்கையில் எரிவாயு விநியோகத்திலிருந்து விலகி நிற்கப் போவதாக குறித்த நிறுவனம் அறிவித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் தகவல் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

இது தொடர்பில் அமைச்சரவை ஆராய்ந்து தீர்மானித்ததற் கமைய இலங்கை வங்கியை நிதி ஆலோசகராகவும் மேலும் ஐந்து அமைச்சுகளின் செயலாளர் களையும் கொண்ட குழு வொன்று நியமிக்கப்படவுள்ளதாக அமைச்சர் ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்கள த்தில் நேற்று (17) நடைபெற்ற வாராந்த செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். சர்வதேச ஷெல் பெற்றோலியக் கம்பனியுடன் பேச்சுவார்த்தை நடத்தி 51% பங்குகளைக் கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

நிதி ஆலோசகராக இலங்கை வங்கி செயற்படுவதுடன் பேச்சுவார்த்தைக் குழுவில் மின்சக்தி எரிசக்தி, பெற்றோலிய வளம், பொருளாதார அபிவிருத்தி உள்ளிட்ட ஐந்து அமைச்சுகளின் செயலாளர்கள் நியமிக்கப்பட்டு ள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஷெல் காஸ் நிறுவனம் விலை அதிகரிப்புக்காக பல தடவை அரசாங்கத்திடம் கோரிக்கைகளை முன்வைத்திருந்தது. எனினும் நுகர்வோர் அதிகார சபையின் விலைச் சூத்திரத்திற்கு அமைய விலை நிர்ணயம் செய்தது. ஆனால், இதனையும் மீறி விலை அதிகரிப்பு மேற்கொண்ட போது உச்ச நீதிமன்றத்தின் ஊடாக அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. இதேவேளை, 2005 ஆம் ஆண்டு பதவிக்கு வந்ததும் அரச சொத்துக்களைத் தனியார் மயப்படுத்துவதில்லை என்ற கொள்கையை ஜனாதிபதி அறிவித்திருந்தார்.

அதேநேரம், தனியார் மயப்படுத்தப்பட்ட அரச நிறுவனங்களை மீளப்பெறுவதெனத் தீர்மானிக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டிய அமைச்சர் ரம்புக்வெல்ல, அதன் ஓர் அங்கமாகவே ஷெல் காஸ் நிறுவனத்தின் 51% பங்குகளைக் கொள்வனவு செய்யும் நடவடிக்கையும் அமைந்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

தேசிய வெற்றிவிழா கொண்டாட்டம்; இன்று கொழும்பில் கோலாகலம்

victory-parade.jpgவிடுதலைப் புலிகளுடனான போர் வெற்றியின் ஒரு வருட பூர்த்தி தேசிய வெற்றி விழா மற்றும் இராணுவ வெற்றி அணிவகுப்பு இன்று கொழும்பில் கோலாகலமாக நடைபெறுகிறது.

விடுதலைப் புலிகளுடனான போர் வெற்றியின்   ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு மிகவும் பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்துள்ள தேசிய வெற்றி விழா கொண்டாட்டம் மற்றும் இராணுவ வெற்றி அணிவகுப்பு காலை 8 மணிக்கு காலி முகத்திடலிலும் மாலை 4.30 மணிக்கு படைவீரர்களின் தேசிய நினைவு தின வைபவம் பாராளுமன்ற மைதானத்திலும் நடைபெறவுள்ளன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வுகளில் முப்படைகளின் தளபதிகள் பொலிஸ் மா அதிபர் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதனை முன்னிட்டு கொழும்பு நகரின் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் காலி முகத்திடல் மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்கள் தேசிய கொடிகள் பறக்கவிடப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளன.

தேசிய வெற்றி விழா கொண்டாட்டம் மற்றும் இராணுவ வெற்றி அணிவகுப்பில் முதற்தடவையாக முப்படைகள் மற்றும் பொலிஸார் ஒன்பது ஆயிரம் பேர் இம்முறை பங்குகொள்ளவுள்ளதுடன் அணி வகுப்பின்போது வழமையை விட வித்தியாசமான முறையில் முப்படையினர் தமது சாகசங்களை காண்பிக்கவுள்ளதாக இராணுவப் பேச்சாளர், மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

இவர்களில் 537 முப்படை அதிகாரிகளும், 8960 முப்படை வீரர்களும் அடங்குவர். பிரதான வைபவங்களில் பிரதமர் தி.மு.ஜயரட்ண, சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, பிரதம நீதியரசர், அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், மாகாண ஆளுநர்கள், முதலமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியும் விமானப் படைத் தளபதியுமான எயார் சீப் மார்ஷல் ரொஷான் குணதிலக்க, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் திஸர சமரசிங்க, பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு தூதுவர்கள் பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

பாதுகாப்புப் படையினரின் வெற்றியை பாராட்டும் வகையிலும் அவர்களது சாகசங்களை வெளிப்படுத்தும் வகையிலும் முப்படைகளின் மற்றும் பொலிஸாரின் அணிவகுப்புக்கள் இடம்பெறவுள்ளன.வழக்கமான அணி வகுப்புக்கு மேலதிகமாக இறுதிக்கட்ட படை நடவடிக்கையில் கலந்துகொண்ட பெரும்பாலான படை வீரர்கள் முதற் தடவையாக பங்குகொண்டு பயங்கரவாதம் முறியடிக்கப்பட்டமை தொடர்பில் செயல்முறையில் காண்பிக்கவுள்ளதுடன் அதற்காக பயன்படுத்திய கனரக ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை காண்பிக்கவுள்ளனர்.

யுத்த நடவடிக்கையின்போது அங்கவீனமுற்ற படைவீரர்களும் சக்கர நாற்காலிகளில் இருந்தவாறு அணிவகுப்பில் பங்கேற்கவுள்ளனர்.

இலங்கை – பங்களாதேஷ் இன்று மோதல்

srilanka-cricket.jpgஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் 3 வது லீக் ஆட்டத்தில் இலங்கை – பங்களாதேஷ் அணிகள் இன்று மோதுகின்றன. இலங்கை அணி முதலாவது போட்டியில் பாகிஸ்தான் அணியை 16 ஓட்டங்களால் தோற்கடித்தது.

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் பங்களாதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி எளிதில் வெற்றி பெற்றது. 10 வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கையின் தம்புள்ள நகரில் நடந்து வருகிறது. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய அணிகள் பங்கேற்றுள்ளது.

இந்த நிலையில்  இங்கு மின்னொளியின் கீழ் (போதிய வெளிச்சமில்லை என்று புகார் எழுந்துள்ளது)  துடுப்பெடுத்தாடுவது 200 சதவீதம் கடினம் என்றும் டோனி தெரிவித்தார்.

மீண்டும் மத்திய வங்கியின் ஆளுநராக நியமனம்

ajith.jpgஇவ் வருடம் ஜூலை 1ம் திகதி முதல் மீண்டும் 6 வருடங்களுக்கு அஜித் நிவாட் கப்ரால், மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அஜித் நிவாட் கப்ரால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பொருளாதார விவகாரங்களுக்கான ஆலோசகராகவும் கடைமையாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.

வடக்கு, கிழக்கு மீனவர் பிரச்சினைகளை தீர்க்க விசேட செயலணி

தென்பகுதி மீனவர்களுக்கு வடக்கில் மீன்பிடிக்க அனுமதி வழங்காதிருக்க கொள்கை ரீதியாக முடிவெடுத்துள்ளதாக மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். வடபிராந்தியத்தில் மீன்பிடித்துறையை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அமைச்சர் வடக்கு, கிழக்கு மீனவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க விசேட செயலணியொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

யாழ். மாவட்ட மீன்பிடி திணைக்களம் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் ராஜித சேனாரத்ன;

யுத்த சூழ்நிலைக்கு முன்னர் 2/3 பங்கு மீன்கள் வடபகுதியில் இருந்தே பிடிப் பட்டன. யுத்தம் முடிவுக்கு வந்துள்ளதால் மீண்டும் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் மீன்பிடித்துறை அபிவிருத்தியடைந்து வருகிறது. வடபகுதி மீனவர்களுக்குத் தேவையான மீன்பிடித் துறைமுகங்கள், படகுகள், வலைகள் மற்றும் உபகரணங்கள் அடையாளங் காணப்பட்டுள்ளன. வட பகுதி மீனவர்களுக்குத் தேவையான வசதிகள், உதவிகள் என்பன வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஒரு தொன் எடையில் பிரமாண்ட திருக்குறள்! செம்மொழி மாநாட்டுக்கு உலக சாதனை

mmm.jpgஎட்டு அடி உயரம், ஐந்து அடி அகலத்தில் ஒரு தொன் எடையில் தயாரிக்கப்பட்ட பிரமாண்ட திருக்குறள் புத்தகம், வி.ஜி.பி. சார்பில் செம்மொழி மாநாட்டில் தமிழக முதல்வர் கருணாநிதியிடம் வழங்கப்படுகிறதென்று வி.ஜி.பி. உலக தமிழ்ச் சங்க நிறுவனர் வி.ஜி. சந்தோஷம் கூறினார். கோவையில் உலக தமிழ் செம்மொழி மாநாட்டுக்காக புதுமையாக எதையாவது செய்ய வேண்டும் என்று நினைத்தோம். அதன்படி பிரமாண்டமான திருக்குறள் புத்தகத்தை தயாரித்து உள்ளோம்.

8 அடி உயரமும் 5 அடி அகலமும் கொண்ட 138 பக்கங்களுடன் கூடிய திருக்குறள் புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளது. 133 அதிகாரங்கள் 1330 திருக்குறள் அதில் அச்சிடப்பட்டுள்ளது. இந்த புத்தகம் ஒரு தொன் எடை கொண்டது.

ரூ. 5 இலட்சம் செலவில் 40 பணியாளர்கள் ஒரு மாதத்துக்கு மேலாக கடும் பாடுபட்டு புத்தகத்தை தயாரித்து உள்ளனர். இது உலகில் புதிய சாதனையாகும். கோவையில் நடைபெறும் செம்மொழி மாநாட்டில் முதல் அமைச்சர் கருணாநிதியிடம் இந்த திருக்குறள் புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்படும்.

மாநாட்டில் நடைபெறும் புத்தக கண்காட்சி அரங்கத்திலும் இது இடம்பெறும். மாநாடு முடிந்த பிறகு சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் முதல் அமைச்சர் கருணாநிதியால் உருவாக்கப்படும் பேரறிஞர் அண்ணா பொது நூலகத்தில் வைக்க முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்படும். நூலகத்தில் இந்த புத்தகம் வைக்கப்படும் போது அதன் அருகில் திருவள்ளுவர் கற்சிலை வைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

புலிகளின் சிரேஷ்ட தலைவர்கள் பலர் மலேசியாவில் இருப்பதாகத் தெரிவிப்பு

விடுதலைப்புலிகளின் பல சிரேஷ்ட தலைவர்கள் மலேசியாவில் பிரசன்னமாகியிருப்பதை கண்டுபிடித்திருப்பதாக மலேசிய பொலிஸாரை மேற்கோள்காட்டி பி.ரி.ஐ. செய்திச்சேவை தெரிவித்துள்ளது.அவர்கள் மலேசியாவை புகலிடமாகவும் தளமாகவும் பயன்படுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவின் உள்துறை அமைச்சர் கிஷாமுடீன் உசைனை மேற்கோள்காட்டி இதனை ஊர்ஜிதப்படுத்தி செய்தி வெளியாகியுள்ளது. தமது வன்முறைப் போராட்டத்தை முன்னெடுக்க மலேசியாவைத் தமது தளமாக இஸ்லாமிய மற்றும் இஸ்லாமியர் சாராத போராளிக்குழுக்கள் பயன்படுத்துவதாக கிஷாமுடீன் உசைன் கூறியுள்ளார்.

அத்துடன், தமது நிதிப்பரிவர்த்தனைகள் மற்றும் தகவல் பரிமாற்றங்களுக்கு மலேசியாவை இந்தக் குழுக்கள் பயன்படுத்துவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். மேலும், தமது அமைப்புகளுக்கு ஆட்சேர்க்கும் நடவடிக்கைகளிலும் இக்குழுக்கள் ஈடுபட்டிருப்பதாகவும் உள்ளூர் உயர்கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்களை ஆட்சேர்ப்புக்கு இக்குழுக்கள் இலக்கு வைப்பதாகவும் அவர் நிருபர்களுக்கு தெரிவித்திருந்தார்.

மலேசியாவை புகலிடமாகவும் தளமாகவும் விடுதலைப்புலிகளின் சிரேஷ்ட தலைவர்கள் பலர் பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு பொலிஸ் மா அதிபர் மூசாஹசனை மேற்கோள்காட்டி அரசாங்க செய்தி முகவரமைப்பான “பேர்னாமா” செய்தி வெளியிட்டுள்ளது.

மலேசியாவுக்குள் பிரவேசிக்கும் வெளிநாட்டவர்கள் மற்றும் அவர்களின் நடமாட்டம் என்பன உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுவதாகவும் அவை தொடர்பான விபரங்கள் உள்நாட்டு மற்றும் சர்வதேச புலனாய்வு முகவரமைப்புகளுடன் பகிர்ந்துகொள்ளப்படுவதாகவும் அமைச்சர் கிஷாமுடீன் கூறியிருக்கிறார். தேசிய மற்றும் பிராந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக உள்துறை அமைச்சு உள்நாட்டு சட்ட அமுலாக்கத் துறையுடனும் சர்வதேச புலனாய்வு முகவரமைப்புகளுடனும் நெருங்கி செயற்படுவதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

கிளிநொச்சி நகரில் அபிவிருத்தி திட்டங்கள் நேற்று ஆரம்பித்து வைப்பு

kili.jpgநாமல் ராஜபக்ஷ தலைமையிலான புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவினர் கிளிநொச்சி நகரில் பல அபிவிருத்தி திட்டங்களை நேற்று ஆரம்பித்து வைத்தனர். அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பிரதியமைச்சர்களான மஹிந்தானந்த அலுத்கமகே, துமிந்த திஸாநாயக்க ஆகியோரும் கிளிநொச்சி விஜயம் செய்தனர்.

கிளிநொச்சி நகரிலிருந்து மூன்று புதிய பஸ் சேவைகள் நேற்று ஆரம்பமாகின. மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்ட இராமநாதபுரம், விஸ்வமடு, ஸ்கந்தபுரம் ஆகிய பகுதிகளுக்கு இப்பஸ்சேவைகள் ஆரம்பமாகின. தற்போது சேவையிலுள்ள கிளிநொச்சி- பூநரிக்கு இடையிலான பஸ்சேவைக்கு மேலதிகமாக மற்றுமொரு பஸ் சேவையும் ஆரம்பமானது.

இடம்பெயர்ந்து மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் நன்னீர் மீன்பிடித்துறையை ஏற்படுத்துவதற்கென அக்கராயன்குளம் மற்றும் ஏனைய குளத்திற்கும் மீன் குஞ்சுகளை விடும் நிகழ்வும் இடம்பெற்றது. நாமல் ராஜபக்ஷ எம்.பி. அக்கராயன் குளத்தில் 2 இலட்சம் மீன் குஞ்சுகளை விட்டார்.

கிளிநொச்சி நகரில் இரண்டு ச.தொ.ச. கிளைகள் திறக்கப்பட்டன. 109 ஆவது கிளை கிளிநொச்சி நகரில் தண்ணீர் தாங்கிக்கு அண்மித்த பகுதியில் திறந்துவைக்கப்பட்டது. கிளிநொச்சியில் இலங்கை மின்சார சபையின் பாவனையாளர் சேவை அலுவலகத்திற்கான அடிக்கல் நடும் வைபவம் நடைபெற்றது. அத்துடன் கிளிநொச்சி கச்சேரி வளாகத்தில் புதிய தொழிற்பயிற்சி நிலையமும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இளைஞர் சேவைகள் மன்ற அலுவலகம் திறக்கப்பட்டதுடன் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள 94 விளையாட்டுக் கழகங்களுக்கும் விளையாட்டு உப கரணங்கள் வழங்கும் வைபவமும் நடைபெற்றது.

அமைச்சர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பிரதியமைச்சர்களான மஹிந்தானந்த அலுத்கமகே, துமிந்த திஸாநாயக்க, புதிய எம்.பிக்களான நாமல் ராஜபக்ஷ, திலும் அமுனுகம, உதித லொக்குபண்டார, லொஹான் ரத்வத்த, சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே, வடமாகாண ஆளுநர் மேர்ஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி, கிளிநொச்சி அரச அதிபர் ரூபவதிகேதீஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

4 பாடசாலை அதிபர்கள் சேவையிலிருந்து இடைநிறுத்தம்

மேல்மாகாணப் பாடசாலைகளில் முதலாம் வகுப்புக்கு பிள்ளைகளைச் சேர்ப்பதில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பல்வேறு முறைப்பாடுகள் தொடர்பாக இடம்பெற்ற விசாரணைகளின் பின்னர் நான்கு பாடசாலைகளின் அதிபர்கள் சேவையிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாண முதலமைச்சரும் கல்வி அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

மேல் மாகாணத்தின் சுபசன் நிமிதெர பாடசாலை தொடர்பாடல் வேலைத்திட்டம் தொடர்பாக விளக்கமளிக்குமுகமாக முதலமைச்சில் புதன்கிழமை (16) இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பாடசாலைகளுக்கு முதலாம் வகுப்புக்கு பிள்ளைகளைச் சேர்ப்பதில் இவ்வருடத்தில் (2010) இடம்பெற்றதாக கூறப்படும் 17 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதாகவும் விசாரணைகள் முடிவுற்ற நிலையில் நான்கு அதிபர்கள் தற்காலிக வேலை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதுடன் ஏனைய முறைப்பாடுகள் தொடர்பாக விசாரணைகள் இடம்பெறுவதாகவும் முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.