Multiple Page/Post

மீனவர்களின் பாதுகாப்பை வலியுறுத்தி போராட்டம் !

மீனவர்களின் பாதுகாப்பை வலியுறுத்தி போராட்டம் !

முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டவிரோத கடற்றொழில்களை கட்டுப்படுத்த முனைப்புடன் செயல்பட்டு வந்த மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் மாவட்ட இணையத்தலைவர் அன்னலிங்கம் நடனலிங்கத்தின் மோட்டார் சைக்கிள், சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்ட குழுவினரால் எரியூட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம், சட்ட விரோத கடற்றொழிலை எதிர்த்து போராடுபவர்களின் பாதுகாப்பை கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது.

இச்சம்பவத்தை கண்டித்து, மீனவ சங்கங்கள் மற்றும் சமூக இயக்கங்களின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக மக்கள் திங்கட்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனும் பங்கேற்று, மக்களிடம் இருந்து மகஜர் ஒன்றையும் பெற்றுக்கொண்டார். அவர், இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாதது குறித்து கண்டனம் தெரிவித்தார்.

அரசாங்கம் சட்ட ஒழுங்கைப் பாதுகாக்கும் பொறுப்புடன் இருக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், மே மாதம் நடைபெறும் பாராளுமன்ற அமர்வில் இதனை எதிரொலிக்க செய்வதோடு, ஜனாதிபதி செயலகம், பிரதமர், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், மற்றும் கடற்றொழில் அமைச்சரிடம் இது தொடர்பான உரிய நடவடிக்கைகளை வலியுறுத்துவதாக தெரிவித்தார்.

சர்ச்சைக்குரிய கருத்துகளை தவிர்க்கவும் ! தேர்தல் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு அறிவுறுத்தல் !

சர்ச்சைக்குரிய கருத்துகளை தவிர்க்கவும் ! தேர்தல் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு அறிவுறுத்தல் !

தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைக்கும் உள்ளுராட்சிப் பிரிவுகளுக்கு கண்ணை மூடிக்கொண்டு நிதி வழங்குவோம் மற்றைய உள்ளுராட்சிப் பிரிவுகளுக்கு ஊழல் இல்லை என்பதை ஒன்றுக்கு பத்து தடவை பார்த்துத்தான் நிதி வழங்குவோம் என ஜனாதிபதி அநுர, தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் தெரிவித்த கருத்து அரசியல் ரீதியாக சில சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இது போன்ற கருத்துகளை வெளியிடுவதைத்
தவிர்க்குமாறு ஜனாதிபதிக்கு அறிவுறுத்துமாறு ஜனாதிபதியின் செயலாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்தார்.

தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளால் தேர்தல் ஆணைக்குழுவுக்கு செய்யப்பட்ட முறைப்பாடுகளின் அடிப்படையில் இந்த கடிதம் அனுப்பப்பட்டதாகவும் அவர் கூறினார். ஜனாதிபதியின் அறிக்கை உள்ளுராட்சித் தேர்தல் சட்டத்தின் பிரிவுகள் 92 சி (தவறான செல்வாக்கு) மற்றும் 82 டி
(அதிகபட்ச நன்மைக்கான வாக்குறுதிகள்) ஆகியவற்றின் தெளிவான மீறலாகும் என்று கண்காணிப்பு அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.

 

இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள சாமர சம்பத் தசநாயக்காவை காக்க களத்தில் ரணில் !

இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள சாமர சம்பத் தசநாயக்காவை காக்க களத்தில் ரணில் !

ஊவா மாகண சபையின் முதலமைச்சர், மாகாணசபை அரச வங்கியில் வைத்திருந்த நிலையான வைப்பு நிதியை முறைகேடாக எடுத்து, அரசாங்கத்திற்கு 17.3 மில்லியன் நஷ்டம் ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் உள்ளார். இந்த விடயத்தில் மூக்கை நுழைத்த ரணில், தான் பிரதமராக இருந்த காலத்திலேயே ஜனாதிபதியாக இருந்த மைத்திரியின் சம்மதத்துடன், அப்பணத்தை எடுத்தாக ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டு சாமர குற்றமற்றவர் கூறுகிறார்.

இந்தவிடயத்தில் விரைந்து செயற்பட்ட, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு ரணில் விக்கிரமசிங்கவை கடந்த 17 ஆம் திகதி நேரில் ஆஜராகி அறிக்கை வழங்கும்படி உத்தரவிட்டது. குறிப்பிட்ட நாளில் சமூகம் தர முடியாது என தெரிவித்த ரணிலுக்கு புதிய திகதி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் வழங்கப்பட்டுள்ளது.

இதேசமயம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சுமார் 7 மணித்தியாலங்கள் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசியல்வாதிகள் உட்பட பலருக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து நிதி வழங்கியமை தொடர்பான விசாரணைகளுக்காக மைத்திரிபால சிறிசேன வாக்குமூலம் வழங்குவதற்கு குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் நேற்று திங்கட்கிழமை முன்னிலையானார்.

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் சூத்திரதாரி ஐஎஸ்ஐஎஸ் சஹ்ரான் ஹாஷிம் ! உதய கம்மன்பில

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் சூத்திரதாரி ஐஎஸ்ஐஎஸ் சஹ்ரான் ஹாஷிம் ! உதய கம்மன்பில

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் சூத்திரதாரி யார் என அமெரிக்காவின் எஃப்பிஐ ஆதாரபூர்வமாக நிரூபித்து விட்டது. அது வேறு யாருமல்ல தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவரான சஹ்ரான் ஹாஷிமும் நெளபர் மொளலவி என்றும் உதய கம்மன்பில கூறுகிறார். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் அரசாங்கம் பிள்ளையானிடம் கட்டாய வாக்கு மூலத்தை வாங்கி ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியென வேறுயாரோ ஒருவரை பலியாக்க இருப்பதாகவும் கம்மன்பில குறிப்பிட்டார். தான் ஒற்றை மனிதனாக பிள்ளையானை சந்தித்து அரசாங்கத்தினுடைய வேடத்தை கலைத்த வீரன் ராம்போவாக உருவெடுத்திருப்பதாகவும் பெருமிதம் அடைந்தார்.

இனவாதியான கம்மன்பில இராணுவ துணைப்படையாக இருந்து பல கொலைகளில் மற்றும் கடத்தல்கள், வலிந்து காணாமல் ஆக்கப்படலில் சம்பந்தப்பட்ட பிள்ளையானை நாட்டைக் காப்பாற்றிய தேசபக்தன் என உதய கம்மன்பில பாராட்டி வருவதை அமைச்சர் கண்டித்தமை தெரிந்ததே.

ஒரு பக்கம் ஈஸ்டர் தாக்குதலில் இந்தியாவின் பங்கு என்ன? எனவும், அரசாங்கத்தை கவிழ்த்து ஆட்சியைக் கைப்பற்ற கோத்தபாய மற்றும் ராஜபக்ச குடும்பத்தின் சதியெனவும் பல்வேறு கோணங்களில் விசாரணைகள் நகருகின்றது.

பொய்யும் சாக்குப் போக்கும்: உயிர்த்த ஞாயிறு விவகாரம் தொடர்பில் அரசு மீது சஜித் கடும் விமர்சனம்

பொய்யும் சாக்குப் போக்கும்: உயிர்த்த ஞாயிறு விவகாரம் தொடர்பில் அரசு மீது சஜித் கடும் விமர்சனம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபரை இன்று வெளிக்கொணரப்போவதாக ஜனாதிபதி வாக்குறுதி அளித்திருந்தாலும், இறுதியாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை மட்டுமே குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைத்திருப்பது மக்கள் மத்தியில் மேலும் குழப்பங்களை உருவாக்கியுள்ளது. இந்தப் போக்கை கடுமையாக கண்டித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அரசாங்கம் கடந்த காலத்திலும் இன்றும் ஒரே மாதிரியான பொய்கள் மூலம் மக்களை ஏமாற்றிக் கொண்டிருப்பதாக விமர்சித்தார்.

திஸ்ஸ மஹாராமவில் நேற்று (21) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றிய சஜித், அரசியல் நிலைப்பாடுகளைக் காட்டிலும் தற்போது அதிகம் விளங்கும் கோட்பாடாக “பொய் மற்றும் பாசாங்குத்தனம்” உருவாகி விட்டதென குற்றம்சாட்டினார். மின் கட்டண குறைப்புக்கான அரசின் வாக்குறுதியும் உண்மையில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டதென அவர் விளக்கினார். மின் கட்டணத்தில் மீதமுள்ள 13% குறைப்பையும் உடனடியாக செயல்படுத்த அரசாங்கம் முன்வர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.

நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பிலும் சஜித் அதிருப்தி தெரிவித்தார். வெளிநாட்டு கடனைத் திருப்பிச் செலுத்தும் தேவையை முன்னிட்டு 2025 முதல் 2028 வரை 5%க்கும் மேற்பட்ட வளர்ச்சி விகிதத்தை நாடு அடைய வேண்டியுள்ளது என்றார். ஆனால் தற்போதைய அரசாங்கத்திடம் எந்தவொரு தெளிவான திட்டமும் இல்லையென அவர் சுட்டிக்காட்டினார். உள்ளூராட்சி மன்றங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யாததற்கான ஜனாதிபதியின் அறிவிப்பும் சட்ட விரோதமானது எனக் கூறிய அவர், மக்கள் அரசாங்கத்தின் பொய்களை இனியும் ஏற்றுக் கொள்வார்களா என்பது அவர்களது தீர்மானமாகும் என வலியுறுத்தினார்.

 

முடிச்சு அவிழ்க்கப்படாத உயிர்த்த ஞாயிறு தாக்குதல் !

முடிச்சு அவிழ்க்கப்படாத உயிர்த்த ஞாயிறு தாக்குதல் !

ஆறு ஆண்டுகளுக்குப் பின் முன்னைய ஆட்சியாளர்களுடன் தொடர்பில்லாத அரசு உருவாகியுள்ளதால் இவ்விசாரணைகள் நியாயமான முறையில் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனாலும் முன்னைய ஆட்சியாளர்கள் கைது செய்யப்பட்ட பிள்ளையானை சந்திக்க எடுக்கின்ற முயற்சிகள் நிலைமைகள் எவ்வளவு சிக்கலானதாகி இருக்கின்றது என்பதை வெளிப்படுத்துகின்றது.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவடைகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி கொழும்பு, நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பில் காலை 8.45 மணியளவில் கட்டுவாப்பிட்டி, சியோன் மற்றும் கொச்சிக்கடை தேவாலயங்களையும் கொழும்பில் உள்ள மூன்று ஹோட்டல்களையும் இலக்கு வைத்து வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. மேலும், அதே நாளில் தெமட்டகொட பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் தெஹிவளையில் உள்ள தங்கும் விடுதியில் வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றன. இத்தாக்குதலில் வெளிநாட்டவர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் உட்பட 270இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதுடன் 500இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இவ்வாண்டு ஞாயிறு அன்றுக்கு முன்னதாக குற்றவாளிகள் பற்றிய அறிக்கையை ஜனாதிபதி விசாரணைக் குழு குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் கையளிக்கும் என்பதாலும் தேசிய மக்கள் சக்தி அரசு இத்தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர் என்று குற்றம்சாட்டப்பட்ட பிள்ளையானைக் கைது செய்து விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளதாலும் இந்த ஈஸ்டர் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தாக்குதல் இடம்பெற்று 6 வருடங்கள் கடந்துள்ள நிலையில், மேற்படி தாக்குதல் சம்பவங்களில் உயிரிழந்தவர்களை நினைவு கூறும் வகையில் நாடு முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் விசேட சமய நிகழ்வுகள் இடம் பெற்றன. இதன் பிரதான நிகழ்வு கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித்தின் தலைமையில் கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் காலை 8.30 மணியளவில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சர்வமத தலைவர்கள், வௌிநாட்டுத் தூதுவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் பங்ககேற்றனர். இதேவேளை, தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் காலை 8.45 மணிக்கு அனைத்து மத ஸ்தலங்களிலும் மணி அடிக்கப்பட்டு, 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

பயங்கரவாதத் தடைச்சட்டமும் ஜனாதிபதி ஆட்சி முறையும் முடிவுக்கு வருகின்றது ! மாகாண சபைக்கான அதிகாரப் பரவலாக்கலும் மேற்கொள்ளப்படும் !

பயங்கரவாதத் தடைச்சட்டமும் ஜனாதிபதி ஆட்சி முறையும் முடிவுக்கு வருகின்றது ! க்கான அதிகாரப் பரவலாக்கலும் மேற்கொள்ளப்படும் !

தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வருமுன் குறிப்பிட்டது போல பயங்கரவாதத் தடைச்சட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரும் என தேசிய மக்கள் சக்திக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அத்தோடு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி வரிச்சலுகையைப் பெறுவதற்காக அரசாங்கம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை பயன்படுத்துவதற்கு தற்காலிகத் தடையை விதிக்கலாம் எனவும் அவ்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவின் வரிச்சலுகையால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையை மேலும் நெருக்கடிக்குள் தள்ளாது ஜிஎஸ்பி வரிச்சலுகையை வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒரு சமிஞ்ஙையை வழங்கியுள்ளது. இந்தி சமிஞ்ஙையை இலங்கை அரசாங்கம் வரவேற்கும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்க முடிவெடுத்துள்ள நிலையில் தற்காலிகமாக ஒரு தடையைக் கொண்டுவருவதில் அரசு எவ்வித பிரச்சினையும் இருக்க வாய்ப்பில்லை என தேசிய மக்கள் சக்திக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதிலும் ஆர்வமாகவும் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் தெரியவருகின்றது. ஜேவிபியோடு கூட்டிணைந்துள்ள கல்வியியலாளர் மற்றும் அமைப்புகள் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் அடுத்த தேர்தலுக்குச் செல்வதற்கு முன்னதாக நிறைவேற்றப்பட வேண்டும் என்பதில் மிகக்கவனமாக இருப்பதாக தேசம்நெற்க்குக் கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவ்வாறு நிறைவேற்றுவதன் மூலம் மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்துவதுடன் மேலும் 5 ஆண்டுகளுக்கான ஆணையை மக்களிடம் இருந்து பெற்றுவிடலாம் என்ற நம்பிகையுடன் ஜேவிபி உள்ளது.

யாழ் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரங்களில் தேசிய மக்கள் சக்தி அடுத்த பத்து ஆண்டுகளுக்கு ஆட்சியில் இருக்கும் என்பதை கடல்தொழில் அமைச்சர் சந்திரசேகரும் ஏனைய ஜேவிபி மைய அமைச்சர்களும் வெளிப்படையாக இதனைத் தெரிவிப்பதன் பின்னணி இதுவே என தேசிய மக்கள் சக்திக்கு நெருங்கியவர்கள் தேசம்நெற்க்குத் தெரிவிக்கின்றனர்.

மேலும் கடும்போக்குவாதக் கொள்கைகளைத் தளர்த்தி கூட்டுச்சேர்ந்துள்ள அமைப்புகளோடு தேசிய மக்கள் சக்தியாக பயணிப்பதன் மூலம் மட்டுமே இந்த அரசியல் தளத்தில் தக்க வைக்கமுடியும் என்பதை ஜேவிபியும் உணர்த்துள்ளதாக அவ்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் பின்னணியில் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைத் தீர்ப்பதற்கான மூலோபாயமாக உள்ள மாகாணசபைக்கான தேர்தலை 2026 இல் நடத்துவதற்கு தட்டமிட்டுள்ளனர். அந்த மாகாணசபைக்கான நான்காவது தேர்தலிலும் தாங்களே வெற்றிபெறுவோம் என்ற உறுதியோடு தேசிய மக்கள் சக்தி உள்ளது. அந்த மாகாண சபைக்கான உண்மையான அதிகாரப் பரவலாக்கத்தை செய்யவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன.

உக்ரைன் படைகள் பின்வாங்குகின்றன: ரஸ்யாவுக்கு சீனா ஆயுத விநியோகம் – உக்ரைன் ஜனாதிபதி குற்றச்சாட்டு !

உக்ரைன் படைகள் பின்வாங்குகின்றன: ரஸ்யாவுக்கு சீனா ஆயுத விநியோகம் – உக்ரைன் ஜனாதிபதி குற்றச்சாட்டு !

கடந்த மார்ச் மாதம் முதல் ரஸ்யாவின் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றது. அமெரிக்கா உக்ரைன் யுத்தத்திலிருந்து தள்ளியே நிற்கின்றது. உக்ரைனுக்கு ஆயுதங்களோ புலனாய்வுத் தகவல்களோ வழங்கப்படவில்லை. அதனால் உக்ரைன் படைகள் பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளன. அதனால் உக்ரைன் தனது நிலப்பிரதேசங்களை வேகமாக இழந்து வருகின்றது. ரஸ்யா திட்டமிட்டது போல் உக்ரைனில் ரஸ்யர்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களை விரைவில் கைப்பற்றிவிடும் என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. உக்ரைன் படைகள் தாக்குதலின் உக்கிரத்தால் சரணடைவதாகவும் உறுத்திபடுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன.

சீனா ரஸ்யாவிற்கு ஆயுதங்களை வழங்கி வருவதாகவும், சீன அரசின் பிரதிநிதிகள் ரஷ்யாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்டுள்ளதாகவும் உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் ஜெலென்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த தகவல்களுக்கு ஆதாரங்கள் உண்டு என்றும், அதனை எதிர்வரும் நாட்களில் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதன் தொடர்ச்சியாக, ரஷ்யாவிற்கு ஐஎஸ்காண்டர் ஏவுகணைகளை தயாரிக்கின்றதாக கூறப்படும் மூன்று சீன நிறுவனங்களுக்கு உக்ரைன் தடைகளை அறிவித்துள்ளது.

ஆனால், ஜெலென்ஸ்கியின் குற்றச்சாட்டுகளை சீனா முற்றிலும் நிராகரித்துள்ளது. இது ஆதாரமற்ற குற்றச்சாட்டாகும் எனவும், சீனாவின் நிலைப்பாடு தெளிவானது எனவும் சீன வெளிவிவகார அமைச்சக பேச்சாளர் லின்ஜியான் கூறினார். மேலும், யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரவும், சமாதான பேச்சுவார்த்தைகளை ஊக்குவிக்கவும் சீனா முயற்சித்து வருகின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் உலகின் முதல் குழந்தை !

AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் உலகின் முதல் குழந்தை !

மெக்சிக்கோவில் செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தின் உதவியுடன் உலகின் முதல் குழந்தை பிறந்து வரலாற்று சாதனையை படைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மெக்சிகோ நாட்டில் உள்ள செயற்கை கருத்தரிப்பு மையமொன்றில், ஏ.ஐ மற்றும் ரோபோ உதவியுடன் விந்தணுவை கருமுட்டையினுள் ஊசியின் மூலம் செலுத்தி வெற்றிகரமாக கருவுறச்செய்து அதனை 40 வயதான பெண்மணியின் கருப்பையினுள் பொருத்தி, குழந்தையை வளரச் செய்து கடந்த மார்ச் மாதம் ஆரோக்கியமாக ஒரு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.

இந்தநிலையில், இந்த ஏ.ஐ தொழில்நுட்பத்தால் கருத்தரிக்க இயலாத தம்பதிகளுக்கு குழந்தை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு மிக மிக அதிகமான சாத்தியக்கூறுகள் இருக்கிறது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை குறித்த சிகிச்சை முறை தொடர்பில் வைத்தியர்கள் கருத்து தெரிவிக்கையில், ஒட்டுமொத்தமாக ஒவ்வொரு முட்டையையும் கருத்தரிக்க ஒன்பது நிமிடங்கள் 56 வினாடிகள் ஆனது. ஏ.ஐ உதவியுடன் பிறந்த உலகின் முதல் குழந்தை ஆரோக்கியமாக பிறந்துள்ளமையானது மருத்துவ உலகில் பெரும் திரும்புமுனையாக அமையும் என ஆய்வாளர்கள் கருதுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

அயல்வீட்டு ஆச்சியை அடித்துக் கொன்று திருட்டு !

அயல்வீட்டு ஆச்சியை அடித்துக் கொன்று திருட்டு !

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பகுதியில் களவுக்கு சென்ற இளைஞன் தாக்கியதில் 69 வயதுடைய மூதாட்டி ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் ஏப்ரல் 20 ஆம் திகதி காலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, இரண்டு வயோதிப பெண்கள் குறித்த வீட்டில் வசித்து வருகின்றனர். அவர்களின் ஒருவர் ஈஸ்டர் ஆராதனைக்காக காலை தேவாலயத்திற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் இருவரும் தேவாலயத்திற்கு சென்றிருப்பார்கள் என்ற எண்ணத்தில் 20 வயதான, அயல்வீட்டு இளைஞன் திருடுவதற்தாக அங்கு சென்றுள்ளார். வயோதிப பெண் இளைஞனை கண்டவேளை கொட்டன் ஒன்றினால் மூதாட்டியை தாக்கி கொலை செய்துள்ளார். தேவாலயத்திற்கு சென்ற மற்றைய மூதாட்டி வீட்டிற்கு வந்த போது மூதாட்டி இரத்த வெள்ளத்தில் சடலமாக காணப்பட்டதனை அவதானித்து அயலவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.