மீனவர்களின் பாதுகாப்பை வலியுறுத்தி போராட்டம் !
முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டவிரோத கடற்றொழில்களை கட்டுப்படுத்த முனைப்புடன் செயல்பட்டு வந்த மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் மாவட்ட இணையத்தலைவர் அன்னலிங்கம் நடனலிங்கத்தின் மோட்டார் சைக்கிள், சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்ட குழுவினரால் எரியூட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம், சட்ட விரோத கடற்றொழிலை எதிர்த்து போராடுபவர்களின் பாதுகாப்பை கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது.
இச்சம்பவத்தை கண்டித்து, மீனவ சங்கங்கள் மற்றும் சமூக இயக்கங்களின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக மக்கள் திங்கட்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனும் பங்கேற்று, மக்களிடம் இருந்து மகஜர் ஒன்றையும் பெற்றுக்கொண்டார். அவர், இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாதது குறித்து கண்டனம் தெரிவித்தார்.
அரசாங்கம் சட்ட ஒழுங்கைப் பாதுகாக்கும் பொறுப்புடன் இருக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், மே மாதம் நடைபெறும் பாராளுமன்ற அமர்வில் இதனை எதிரொலிக்க செய்வதோடு, ஜனாதிபதி செயலகம், பிரதமர், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், மற்றும் கடற்றொழில் அமைச்சரிடம் இது தொடர்பான உரிய நடவடிக்கைகளை வலியுறுத்துவதாக தெரிவித்தார்.