Multiple Page/Post

வன்னி அவலமும் ஜிரிவி, தீபம், ஐபிசி, ஒரு பேப்பர் புலிகளுடன் செய்த கூட்டுக் கலவியும்.

உயிழிழந்த பொதுமக்கள் 20 000
காயமடைந்த பொதுமக்கள் 60 000
உயிரிழந்த சிறுவர்கள் 3600 (மார்ச் வரை)
காயமடைந்த சிறுவர்கள் 7650 (மார்ச் வரை)
உயிரிழந்த இராணுவத்தினர் 6200
காயமடைந்த இராணுவத்தினர் 30 000
உயிரிழந்த வி புலிகள் ?
காயமடைந்த வி பு ?
புனர்வாழ்வு முகாம்களிலுள்ளோர் 7500
இடம்பெயர்ந்து முகாம்களிலுள்ளோர் 275000

‘300 000 வன்னி மக்களுக்கும் மரணத்துள் வாழ்வு’ என்ற தலைப்பில் பெப்ரவரி 11ல் வெளியான லண்டன் குரலில் முன் பக்கச் செய்தியை வெளியிட்டு 10 000 வரையான பொது மக்கள் கொல்லப்படலாம் என்றும் அச்சம் வெளியிட்டு இருந்தோம். அந்த அச்சம் நிஜமானது மட்டுமல்ல கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 000க்கும் அதிகம் என ஐநா செய்மதிப் புகைப்படங்களை ஆராய்ந்தும் ஏனைய தகவல்களின் மூலமும் யுகே ரைம்ஸ் பத்திரிகை ஆய்வுகளை வெளியிட்டுள்ளது.

பெப்ரவரி முற்பகுதியிலேயே விடுதலைப் புலிகள் இலங்கை இராணுவத்தின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாததைச் சுட்டிக்காட்டியதுடன் தமிழீழ விடுதலைப் புலிகள் பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துவதைச் சுட்டிக்காட்டி இலங்கை இராணுவத்தின் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் வன்னி மக்களை மரணத்தின் விளிம்புக்கு தள்ளி உள்ளது என்பதையும் எச்சரித்து இருந்தோம். யுத்தத்தில் ஈடுபட்ட இரு தரப்பினரும் பொதுமக்கள் பற்றி எவ்வித அக்கறையையும் கொண்டிருக்கவில்லை.

பெப்ரவரி முற்பகுதியிலேயே தமிழீழ விடுதலைப் புலிகள் தங்கள் ஆயுதங்களை சர்வதேச சமூகத்திடம் ஒப்படைத்து அரசியல் தீர்வுக்கு முன்வர வேண்டும் என்பதை நாம் வலியுறுத்தி இருந்தோம். ஆனால் இவைபற்றி கருத்தில் எடுக்காமல் இந்தியத் தேர்தல் முடிவுக்காக காத்திருந்து அனைத்தும் முடிவுக்கு வந்தபின் சரணடைந்து தங்கள் உயிர்களை இழந்துள்ளனர் புலிகளின் தலைமை. இவர்களின் முட்டாள்தனமான அரசியல் முடிவுகளுக்கு 20 000 பொதுமக்கள் தங்கள் உயிர்களை இழந்துள்ளனர். அதனைப் போன்று பல மடங்கினர் காயத்திற்குள்ளாகி உள்ளனர். ஒட்டுமொத்த வன்னி மக்களும் 275 000 பேர் அகதிகளாக்கப்பட்டு முகாம்களுக்குள் அடைத்து வைக்கப்பட்டு உள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் கண்ணை மூடிக்கொண்டு பாழ்ங் கிணற்றில் வீழ்தது மட்டுமல்ல அதற்கு முன் வன்னி மக்களை அப்பாழ்ங்கிணற்றில் தள்ளிவிட்டுள்ளனர். புலிகள் மட்டுமல்ல புலம்பெயர்ந்த புலி ஆதரவுக் குழுக்களும் குறிப்பாக புலி ஆதரவு ஊடகங்கள் இந்த அழிவுக்கு உடந்தையாக இருந்துள்ளனர்.

யுத்தப் பிரதேசத்தின் யதார்த்த நிலையை விளங்கிக் கொள்ளாமல் புலிகளின் தலைமைக்கு எதுவெல்லாம் மகிழ்ச்சியைக் கொடுக்குமோ அவற்றை மட்டுமே தொலைக்காட்சியில் காட்டியும் வானொலியில் முழங்கியும் பத்திரிகையிலும் இணையங்களிலும் எழுதியும் வந்தனர். ‘வன்னி மக்கள் பெரும் அவலத்திற்குள் தள்ளப்படுகின்றனர். அவர்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்தக் கூடாது. இலங்கை அரச படைகளின் மூர்க்கத்தனமான தாக்குதலில் மக்கள் கொல்லப்படுவார்கள். அதனைத் தடுத்து நிறுத்த வேண்டும்.’ என்ற எண்ணம் இந்த ஊடகங்களிடம் இருக்கவில்லை. மாறாக கொல்லப்பட்டவுடன் அதனைப் பிரச்சாரப்படுத்தி அரசியல் செய்யவே முற்பட்டனர்.

இந்த மக்களின் குருதியில் அரசியல் பிரச்சாரம் செய்த ஜி ரிவி தீபம், ஐபிசி, ஒரு பேப்பர் மற்றும் புலிகளின் ஊது குழல்களான ஊடகங்கள் மக்களின் உயிரிழப்புகளும் அவலமும் தவிர்க்க முடியாதது என்ற வகையிலும் அவ்வாறான அழிவுகளே தமிழீழ உருவாக்கத்திற்கு வழியேற்படுத்தும் என்றும் பொய்யான பிரச்சாரங்களை மேற்கொண்டன.

வன்னி மக்கள் எதிர்நோக்கிய மரண வாழ்வுக்கும் அவலத்திற்கும் இலங்கை இராணுவமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் சம பொறுப்புடையவர்கள் என்பதே சுயாதீன அமைப்புகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை. ஆனால் இதனை முற்றாக மறைத்து வன்னி மண் பூர்வீக மண். அந்த மக்கள் அங்கிருந்து வெளியேறக் கூடாது என்று ஐரோப்பிய மற்றும் மேற்குநாடுகளில் உள்ள இந்த ஊடகங்கள் வன்னி மக்களை மரண வாழ்வுக்குள் இருக்க நிர்ப்பந்தித்தனர். இந்த மக்களின் அவலத்தில் புலிகளுக்கும் சம பொறுப்பு இருப்பதை தட்டிக் கேட்காமல் புலிக் கொடிகளையும் எங்கள் தலைவர் பிரபாகரன் என்று பிரபாகரனின் படத்தையும் தாங்கி நடத்தப்படும் ஊர்வலங்களுக்கு வக்காலத்து வாங்கினர்.

இலங்கை இராணுவம் மூர்க்கத்தனமான செல் தாக்குதலை நடத்த அதிலிருந்து தப்பி ஓடும் மக்கள் மீது புலிகள் துப்பாக்கிப் பிரயோகம் செய்கின்றனர். இங்குள்ள ஊடகங்கள் இதனைக் கண்டு கொள்ளவேயில்லை.

தமிழீழ விடுதலைப் புலிகளைத் திருப்திப்படுத்த இவர்கள் செய்த ஆய்வுகளும் விமர்சனங்களும் கானல் நீர் போலாக இன்று புலிகளின் தலைமை முற்றாக அழிக்கப்பட்டு வன்னி மக்களும் அவலத்திற்குள் தள்ளி விடப்பட்டுள்ளனர்.

புலிகளின் தலைமை அழிப்பதற்கு இருபத்திநான்கு மணிநேரத்திற்கு முன்னரும் தமிழீழத்தை அடைவதற்கு நெருங்கிவிட்டோம் என்று ஆய்வுகளும் விமர்சனங்களும் செய்த இந்த ஊடகங்களால் விடுதலைப் புலிகளின் தலைமை அழிக்கப்பட்டது என்பதைக் கூடச் சொல்ல முடியவில்லை.

புலிகளை தட்டிக்கொடுக்கும் இடத்தில் தட்டிக்கொடுத்து இடித்துரைக்க வேண்டிய இடத்தில் இடித்துரைத்து இருந்தால் புலிகளின் தலைமையும் காப்பாற்றப்பட்டு இருக்கும் வன்னி மக்களும் இந்த அவலத்திற்கு உட்பட்டிருக்க மாட்டார்கள்.

ஆனால் காட் விற்பனையையும் விளம்பரத்தையும் மட்டும் நோக்காகக் கொண்டு சிற்றின்பத்திற்காக ஜி ரிவி தீபம் ஐபிசி ஒரு பேப்பர் போன்ற ஊடகங்கள் புலிகளுடன் செய்த கூட்டுக்கலவியே புலிகளுக்கு உயிராபத்தான நோயை ஏற்படுத்தியது. இறுதியில் சடுதியான அழிவையும் ஏற்படுத்தியது.

இந்நோய் புலிகளின் மூளையின் நரம்புத் தொகுதியைத் தாக்கி அவர்களின் சிந்தனைத் திறனை அழித்து கற்பனையுலகில் உலாவிட்டது.

இந்நோய்குரிய அறிகுறிகள் ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலில் நிற்கும் வேட்பாளர் ஜனனி ஜனநாயகத்திலும் தென்படுகிறது. ஊடகங்களுடனான இந்தக் கூட்டுக் கலவியில் இருந்து விலத்தி யதார்த்தை புரிந்துகொண்டு செயற்படுவது ஜனனியின் அரசியல் எதிர்காலத்திற்கு நன்மை பயக்கும்.

சர்வதேச நாணய நிதியக்கடன் மாத இறுதியில் கிடைக்கும் சாத்தியம்

சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை விண்ணப்பித்திருந்த 1.9 பில்லியன் டொலர் கடனுக்கான அனுமதி ஜூன் இறுதியில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் கூறியுள்ளார். நாம் பெற்றிருக்கும் தரவுகளின் பிரகாரம் இந்த மாத இறுதிக்கு முன்பாக அது இடம்பெறும் என்று கப்ரால் நேற்று புதன்கிழமை ராய்ட்டர் செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளார்.

தற்போது சர்வதேச நாணய நிதியக்கடன் தொடர்பான அவசர நிலைமையானது சிறிதுசிறிதாக குறைவடைந்து வருகிறது. இதனால் அது தேவையில்லை என்று நாம் கூறவில்லை. யுத்தம் முடிவடைந்த பின்னர் பொருளாதாரப்பின்னடைவால் ஏற்பட்ட அச்சுறுத்தலிலிருந்தும் இலங்கை சிறிதளவு விடுபட்டுக் கொண்டிருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடனுக்காக காத்திருக்கும் அதேசமயம், இருதரப்பு ரீதியான கடன் பெறும் பேச்சு வார்த்தையை மத்தியவங்கி ஏற்கனவே ஆரம்பித்திருக்கிறது. லிபியாவிடமிருந்து 500 மில்லியன் டொலர் கடன் பெறுவதற்கான பேச்சுவார்த்தையை தற்போது மேற்கொண்டு வருகிறோம். மற்றொரு நாட்டிடமிருந்து மேலும் 500 மில்லியன் டொலர் வசதிகளை பெற்றுக் கொள்வதற்கான செயற்பாட்டில் நாம் ஈடுபட்டு வருகிறோம் என்றும் கப்ரால் கூறியுள்ளார். சர்வதேச நாணய நிதியம் இது தொடர்பாக உடனடியாக கருத்து எதனையும் தெரிவிக்கவில்லை. ஆனால் இது தொடர்பான தீர்மானம் விரைவில் எடுக்கப்படும் என்று கடந்த மாதம் தெரிவித்திருந்தது.

ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்ட 14 நாட்களுக்குள் தமது கடமையைப் பொறுப்பேற்காதவர்களின் நியமனங்கள் ரத்து

11edu-min.jpgஅரசாங் கத்தினால் ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்ட 14 நாட்களுக்குள் தமது கடமையைப் பொறுப்பேற்காதவர்களின் நியமனங்கள் உடனடியாக ரத்துச் செய்யப்படுமென கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அண்மையில் பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கப்பட்ட 957 பேரில் 200 பேரே கடமைக்குச் சமூகமளித்துள்ளமை தெரியவந்துள்ளது. தமக்கு வசதியான பாடசாலைகளைத் தேடி ஏனையோர் அலைந்து திரிகின்றனர். எனினும் எக்காரணத்திற்காகவும் இவர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட மாட்டாதெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் பத்து இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் மொழி மூல மாணவர்களுக்கு கற்பிக்கும் நடவடிக்கைகளில் 49824 தமிழ் மொழி மூல ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனரெனவும் அமைச்சர் தெரிவித்தார். இம்முறை க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு ஆங்கில மொழி மூலம் தோற்றிய மாணவர்களுள் 80 சதவீதமானோர் சித்தியடைந்துள்ளதாகவும், க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில் இம்முறை 4,000 பேர் தோற்றியதுடன் இவர்களில் 80 வீதமானோர் சித்தியடைந்துள்ளமை மகிழ்ச்சியளிப்பதாகவும் அமை ச்சர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று ஜே.வி.பி. எம்.பி. ரணவீர பதிரன எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். பாராளுமன்றம் நேற்றுக்காலை 9.30 மணிக்கு சபாநாயகர் டபிள்.யூ.ஜே.எம். லொக்கு பண்டாரவின் தலைமையில் கூடியது.

வாய்மூல விடைக்கான வேளையில் ரணவீர பதிரண எம்.பி. தமில் மொழிமூலம் கற்பிக் கும் ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்பாகக் கேள்வியெழுப்பினார்.

இக்கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர்:-

தமிழ் மொழிமூல ஆசிரியர்கள் 13,213 பேர் சேவையில் உள்ளதுடன் கடந்த ஜூன் மாதம் நியமனம் வழங்கப்பட்ட 959 பட்டதாரி ஆசிரி யர்களிலும் 150 தமிழ் பட்டதாரிகள் உள்ளனர். அத்துடன் 110 ஆங்கில மொழிமூல ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இரண்டு வாரங்களுக்குள் ஆராய்ந்து தேவைப்படும் ஆசிரியர்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான விளம்பரங்களை பிரசுரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதெனவும் அமைச் சர் தெரிவித்தார்.அதேவேளை கடந்த ஜூன் முதலாம் திகதி 957 பேர் பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் பெற்றுள்ளனரெனினும் அதில் இருநூறு பேரே கடமைக்குச் சமுகமளித்துள்ளனரென்பதையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

நிவாரணக் கிராமங்களில் கண் சிகிச்சை முகாம் – ஸ்டாண்டட் சார்ட்டட் வங்கி ஒரு மில். அமெ. டொலர் உதவி

வடக்கு வசந்தத்தின் கீழ் வவுனியா நிவாரணக் கிரா மங்களில் தங்கியுள்ள மக்களுக்கென இலவச கண் சிகி ச்சை முகாம்களை நடாத்துவதற்கு ஸ்டேண்டட் சார்ட்டட் வங்கி ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்குவதற்கு முன்வைத்துள்ளது.

இது தொடர்பாக சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சுடன் ஸ்டேன்டட் சார்ட்டட் வங்கிப் பிரதி நிதிகள் இணக்கப்பாட்டு உடன்படிக்கையிலும் கைச் சாத்திட்டுள்ளார்கள்.

இந்நிதியுதவியின் மூலம் இலவச கண் சிகிச்சை முகாம்களை நடாத்துவதற்கான நடவடிக்கைகளை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மேற்கொண்டுள்ளார். கண் சிகிச்சை முகாம்களில் கண் பரிசோதனை, மூக்கு கண்ணாடி வழங்குதல் உட்பட கண்ணோடு தொடர்பான குறைபாடுகளுக்குத் தேவையான சிகிச்சைகளை மேற்கொள்ளவும் அமைச்சர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

பிரான்ஸின் பல மில்லியன் ரூபா உதவியில் ஏ15 வீதி புனரமைப்பு பணிகள் ஆரம்பம்

trincomalee.jpgஏ15 என அழைக்கப்படும் திருகோணமலை மட்டக்களப்பு நெடுஞ்சாலை புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பிரான்ஸ் அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் ஒருங்கிணைந்த திருகோணமலை உட்கட்டமைப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் பல மில்லியன் ரூபா இதற்கென ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

திருகோணமலை கொழும்பு வீதியிலுள்ள 4 ஆம் மைல் கல் சந்தியிலிருந்து ஓட்டமாவடியிலுள்ள திருக்கொண்டியா மடு சந்தி வரையான வீதிப் புனரமைப்பும், அதன் கீழ் வருகின்ற 5 பாலங்கள் நிர்மாணமும் இத்திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன.

தற்போது 4 ஆம் கட்டைச் சந்தியிலிருந்தும், திருக்கொண்டியாமடு சந்தியிலிருந்தும் வீதிப் புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இறால்குழி பால நிர்மாணத்துக்கான ஆரம்பக் கட்ட வேலைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கிண்ணியா, மூதூர், வெருகல், வாகரை ஊடாகவே ஏ15 நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த அபிவிருத்தித் திட்டம் நிறைவடைந்ததும் இப்பகுதிகள் அதிக வளர்ச்சி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. சைனா ஹாபர் பொறியியல் நிறுவனம் இந்தப் புனரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றது.

சவூதி அரேபியாவைச் சேர்ந்தவர் மருதானை விடுதியில் தற்கொலை

மருதானையிலுள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த சவூதி அரேபியாவைச் சேர்ந்தவர் ஒருவர் அதிகளவு மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவரது சடலம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மருதானையிலுள்ள விடுதியிலிருந்து மருதானை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சவூதியைச் சேர்ந்த 50 வயதுடைய அல்சாரி இப்ராஹிம் என்பவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டதாகத் தெரியவருகிறது.

இந்தச் சவூதி பிரஜை கடந்த 7 ஆம் திகதி இலங்கைக்கு வந்துள்ளார். தனது பிள்ளைகள் மற்றும் மனைவி தன்னை கொலை செய்ய முயற்சிப்பதால் தான் இலங்கைக்கு வந்ததாக உயிரிழந்த சவூதி அரேபிய பிரஜை தான் தங்கியிருந்த விடுதி அறைக்கு அடுத்த அறையில் தங்கியிருந்த மருத்துவர் ஒருவரிடம் தெரிவித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அத்துடன் இலங்கையில் பெண்ணொருவரை தேடியே தாம் இங்கு வந்த தாகவும் அவர் கூறியுள்ளார். விடுதி அறையில் சவூதி பிரஜை விழுந்து கிடப்பதைக் கண்ட விடுதி ஊழியர்கள் அது குறித்து பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து மருதானை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அமல் எதிரிமான தலைமையில் விசாரணை நடைபெறுகின்றது.

த.தே. கூட்டமைப்பு எம்.பிக்கள் 4 பேருக்கு மீண்டும் விடுமுறை வழங்க சபையில் எதிர்ப்பு

parliament.jpgதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் நால்வருக்கு மீண்டும் விடுமுறை வழங்குவதற்கு சபையில் நேற்று (10) எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. சபைக்கு வருகை தராமல் இருப்பதற்கான காரணத்தை ஆராயாமல் விடுமுறை வழங்கக் கூடாதெனத் தெரிவிக்கப்பட்டதால், விடுமுறை கோரிக்கைகளை விசாரணை செய்து பரிசீலிப்பதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கூட்டமைப்பு உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மூன்று மாதத்திற்குப் பாராளுமன்றம் வராதிருக்க அனுமதிக்கும் வகையில் அவர் சார்பிலான விடுமுறை கோரிக்கையை சிவசக்தி ஆனந்தன் முன்வைத்தார். இதற்கு உடனடியாகவே ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் சுகவீனம்போன்ற காரணங்களுக்காக சபைக்கு வருகை தர இயலாத நிலை ஏற்படின், அவருக்கு விடுமுறை வழங்குவதை சம்பிரதாயமாகக் கொண்டுள்ளோம். ஆனால், கூட்டமைப்பு உறுப்பினர்கள் நாட்டுக்கும் அரசியலமைப்புக்கும் எதிராகப் பிரசாரம் செய்வதற்கு வசதியாக விடுமுறை வழங்க வேண்டுமா? என்று ஆளுந்தரப்பு பிரதம கொறடாவான அமைச்சர் தினேஷ் குணவர்தன கேள்வி எழுப்பினார்.

இதற்கு முன்பும் ஓர் உறுப்பினருக்கு கடந்த மார்ச் 19 ஆம் திகதி விடுமுறை கோரியபோது இந்த விடயத்தைச் சுட்டிக்காட்டியதை நினைவு கூர்ந்த அமைச்சர் குணவர்தன சம்பிரதாயத்துக்காகச் சமர்ப்பிக்கப்படும் கடிதமொன்றுக்காக விடுமுறை வழங்கிவிடுவதா என்பதைத் தீர்மானிக்க வேண்டும் என்று கூறினார்.

இவரின் கருத்தை தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, அமைச்சர்கள் ஹேமகுமார நாணயக்கார, ஜகத் புஷ்பகுமார ஆகியோரும் ஆதரித்துப் பேசினர். எனினும், கூட்டமைப்பினரோ, எதிர்க்கட்சியினரோ எந்தப் பதில் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

இதன் போது, சபையின் தீர்மானத்துக்கமையவே தம்மால் எதனையும் தீர்மானிக்க முடியுமென சபாநாயகர் டபிள்யூ. ஜே. எம். லொக்கு பண்டார தெரிவித்தார். இறுதியாக, இந்தப் பாராளுமன்ற அமர்வுக்குள், விடுமுறை விண்ணப்பங்கள் தொடர்பில் விசாரணை செய்து விடுமுறை வழங்குவதா, இல்லையா என்பதைத் தீர்மானிக்கலாம் என சபை தீர்மானித்தது.

செல்வம் அடைக்கலநாதனைப் போன்று செல்வராசா கஜேந்திரன், சேனாதிராசா ஜெயானந்தமூர்த்தி, பத்மினி சிதம்பரநாதன் ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் விடுமுறை கோரப்பட்டது. நால்வர் தொடர்பிலும் அதே அணுகுமுறை பின்பற்றப்படுமென சபாநாயகர் அறிவித்தார். மேற்குறிப்பிடப்பட்ட உறுப்பினர்கள் ஏற்கனவே விடுமுறை பெற்று வெளிநாடுகளில் தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதியின் பதவிக்காலத்தை நீடிக்க கோரி தம்புள்ள பிரதேச சபையில் ஏகமனதாக தீர்மானம்

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் உத்தியோக பூர்வமான ஆட்சிக் காலத்தை மேலும் ஆறு வருடங்களுக்கு ஜனாதிபதி தேர்தலோ, பொதுசன அபிப்பிராய வாக்கெடுப்போ இன்றி நீடிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றிய தம்புள்ள பிரதேச சபையின் தலைவர் உட்பட அரச தரப்பு மற்றும் எதிர்க்கட்சித் தரப்பு உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் நேற்று தெரிவித்தார்.

நேற்று புதன்கிழமை தம்புள்ள பிரதேச சபையின் விசேட கூட்டம் ஒன்று அதன் தலைவர் கே.ஜீ.சோமதிலக்கவின் தலைமையில் பிரதேச சபைக் கேட்போர் கூடத்தில் நடைபெற்று முடிந்த பின் சபை உறுப்பினர்களையும் குழுமியிருந்தோர் மத்தியில் விளித்துப் பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு அமைச்சர் கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது;

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலம் நிறைவடைவதற்கு இன்னும் இரண்டு வருடங்களே உள்ள நிலையில் ஜனாதிபதி தேர்தலோ அன்றி பொது சன அபிப்பிராய வாக்கெடுப்போ இல்லாமல் மேலும் ஆறு வருடங்களுக்குத் தொடர்ந்தும் அவரையே ஜனாதிபதியாக வைத்திருக்க மக்கள் பிரதிநிதிகள் இங்கு தீர்மானம் நிறைவேற்றியுள்ளமை சிறந்த முன்மாதிரியாகும். இது காலத்தின் தேவையுமாகும்’.

“இத்தகைய தீர்க்க தரிசனம் மிக்க தீர்மானங்களை நாட்டின் பல்வேறு தாபனங்களும் மேற்கொள்ளும் என்பதும் எனது எதிர்பார்ப்பாகும். இன்று தம்புள்ள பிரதேச சபையால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட வரலாற்றுப் புகழ்மிக்க இத்தீர்மானம் தொடர்பாக இச்சபையின் எதிர்க்கட்சித் (ஐ.தே.க.) தலைவர் ஏ.ஜீ.சிறிசேன எதிர்ப்புத் தெரிவிப்பார் அல்லது மாற்றுக் கருத்துகளை முன்வைப்பார் என்று எதிர்பார்த்தேன். எனினும், தாய் நாட்டின் சுபிட்சம் கருதி அவரும் ஐ.தே.க. உறுப்பினரான கே.ஜீ.ரணசிங்ஹ பண்டாரவும் இத் தீர்மானத்திற்குத் தமது முழுமையான ஆதரவைத் தெரிவித்திருப்பது நாட்டிற்கு நல்ல சகுனமாகும்.

முன்னைய ஆட்சியாளர் பலரும் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்குப் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்த போதிலும் 30 வருட காலம் நிலவிய கொடூர யுத்தத்தை மூன்றே வருடங்களில் முடிவிற்குக் கொண்டு வந்த பெருமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையே சாரும்.  இனி நாட்டின் அபிவிருத்தியையும் பொருளாதார மேம்பாட்டையும் மேற்கொள்வதற்கும் சர்வதேச நாடுகளின் தலையீடுகளையும் அழுத்தங்களையும் சமாளிப்பதற்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலம் நிறைவுறும் 2010 ஆம் ஆண்டிலிருந்து மேலும் ஆறுவருடங்களுக்கு நீடிக்கப்படுவது இன்றைய தேவையாகும்.

இதேவேளை, நாட்டில் ஜனாதிபதித் தேர்தல் ஒன்றோ அல்லது பொது சன அபிப்பிராய வாக்கெடுப்பு நிகழ்வொன்றோ நடத்தப்படுமாயின் அதற்கென பல கோடி ரூபா நிதியை வீண் விரயம் செய்து பின்னர் மகிந்த ராஜபக்ஷவையே மீண்டும் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். எனவே, தேர்தலுக்குச் செலவாகும் கோடிக்கணக்கான நிதியை நாட்டின் அபிவிருத்தியின் பொருட்டு பயன்படுத்தலாம் அல்லவா? மக்களின் சேம நலன்களை மேம்படுத்தலாம் அல்லவா.

இதுதவிர, இன்றைய காலகட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவோ போட்டியில் வெற்றி கொள்ளவோ எவரும் இல்லை என்பதாலும் அவ்வாறு எவரும் போட்டியிடும் பட்சத்தில் வரலாற்றுச் சாதனை மிக்க பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று ஜனாதிபதி ராஜபக்ஷவே வெற்றி பெறுவார் என்பதும் யதார்த்தமாகும்.

எனவே, ஜனாதிபதியின் எஞ்சியுள்ள இரண்டு வருட ஆட்சிக் காலத்துடன் மேலும் ஆறு வருடங்கள் என மொத்தமாக எட்டு வருடங்கள் போட்டியெதுவுமின்றி ஜனாதிபதியாக சேவை செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை முழுமனதுடன் வரவேற்கின்றேன்’ என்றார்.

வவுனியா அகதி முகாம்களில் 60 ஆயிரம் மாணவர்கள், 1956 ஆசிரியர்கள் – சபையில் கல்வி அமைச்சர் சுசில்

06arliament.jpgவவுனி யாவிலுள்ள அகதிமுகாம்களில் 60 ஆயிரம் மாணவர்களும் 1956 ஆசிரியர்களும் உள்ளதாக தெரிவித்த கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, அகதிமுகாம்களாகவுள்ள 17 பாடசாலைகள் இன்னும் இரு வாரங்களில் விடுவிக்கப்படுமெனவும் கூறினார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;

தமிழ் மக்கள் இன்று அகதிகளாக முகாம்களில் வாழும் நிலை ஏற்பட்டதற்கு பிரபாகரனே காரணம். அரசு அந்த மக்களுக்கு மீண்டும் இயல்பு வாழ்வை ஏற்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மிகத்துரிதமாக எடுத்துவருகின்றது.

வவுனியாவிலுள்ள அகதிமுகாம்களில் 60 ஆயிரம் மாணவர்கள் உள்ளனர். இவர்களில் 337 பேர் உயர்தரப் பரீட்சை எழுதவுள்ள மாணவர்கள்.

இந்த மாணவர்களுக்கு தேவையான பாடசாலை உபகரணங்களை வழங்கியுள்ளோம். அவர்கள் கல்வியைத் தொடருவதற்காக கொழும்பிலிருந்து தமிழ் மொழி மூல ஆசிரியர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். அங்குள்ள 12 முகாம்களில் 60 ஆசிரியர்கள் கல்வி கற்பிக்கின்றனர்.

இந்த முகாம்களில் இடம்பெயர்ந்த 1956 ஆசிரியர்கள் உள்ளனர். இவர்களுக்கான சம்பளத்தை வழங்கி வருகின்றோம்.

அகதிமுகாம்களாகவுள்ள 17 பாடசாலைகள் இன்னும் இரு வாரங்களில் விடுவிக்கப்படும். நான் அண்மையில் அந்த அகதிமுகாம்களுக்குச் சென்று மாணவர்கள், ஆசிரியர்களுடன் கலந்துரையாடல்களை நடத்தினேன்.

அவர்களின் கல்விக்குத் தேவையான சகல விடயங்களும் அரசினாலும் எனது அமைச்சினாலும் செய்துகொடுக்கப்படும்.

ராஜீவ்காந்தியுடன் பலியான பொலிசாருக்கு நினைவு தூண்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டபோது, பாதுகாப்புப் பணியில் இருந்த 9 பொலீசாரும் இறந்தனர்.

அவர்களுக்கு ராஜீவ் காந்தி நினைவிடம் அருகில் 7 லட்சத்தில் நினைவு தூண் அமைக்கப்பட்டு வருகிறது. நினைவுத்தூணில்,  பலியான எஸ்பி முகமது இக்பால், இன்ஸ்பெக்டர்கள் ராஜகுரு, எட்வர்ட் ஜோசப், தமிழக சப் இன்ஸ்பெக்டர் எத்திராஜ், டெல்லி சப் இன்ஸ்பெக்டர் குப்தா மற்றும் பொலிஸ்காரர்கள் தர்மன், முருகன், ரவி, பெண் காவலர் சந்திரா ஆகிய 9 பேரின் பெயர்கள் பதிக்கப்படுகின்றன.