“நடை பெறவுள்ள யாழ் மாநகர சபை மற்றும் வவுனியா நகர சபைத் தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடாவிடில் எமது ரெலோ அமைப்பு தணித்தோ, அல்லது வேறு தமிழ்க் கட்சிகளுடன் இணைந்தோ போட்டியிடவுள்ளோம்” என்று வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் கூறியுள்ளதாக சில பத்திரிகைகள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன.
யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள், வாழ்விடங்கள், மீள்குடியேற்றம் என்பனவற்றைக் கருத்தில் கொண்டுதான் இந்த முடிவுக்கு வந்ததாகவும் அவர் தெரிவித்தார். இது பற்றி வினோ மேலும் கூறுகையில்,
வடக்குக் கிழக்கைச் சேர்ந்த தமிழ் அரசியல் கட்சிகளுடன் இணைந்து தமிழ் மக்களின் எதிர்கால வாழ்க்கைக்கு உதவவேண்டும் என்பதே ஒட்டுமொத்தத் தமிழர்களின் நீண்டகால விருப்பதாகும். ஆயுதப் போராட்டத்தின் ஆரம்ப காலங்களிலும் அரசியல் ரீதியான செயற்பாடுகளிலும் நாம் தொடர்ந்து தமிழ் இனத்திற்கு விமோசனங்களைப் பெற்றுக்கொடுக்காது ஏமாற்றி வந்திருக்கின்றோம.
எனவே, தவறுகளை உணர்ந்து நாம் திருந்தாவிடின் எமது இனம் எம்மைக் குப்பைக் கூடைக்குள் வீசிவிடும் நாள் வெகு தொலைவில் இல்லை. எனவே நடைபெறவுள்ள வட மாகாண உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டணி போட்டியிடாவிட்டால் நாம் தனித்தோ அல்லது மிதவாதக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்தோ போட்டியிடவுள்ளோம்.
குறிப்பாக எமது இயக்கத்திலிருந்து சமீபத்தில் பிரிந்து சென்ற ‘ஸ்ரீ டெலோ’ இயக்கத்தையும் இணைத்துக்கொண்டு ஓரணியில் போட்டியிட முயற்சி செய்வோம். அத்துடன் இனி வருங்காலங்களில் ஒன்றுபட்ட ‘ரெலோ’ அமைப்பாகச் செயல்படும் விருப்பத்தை ‘ஸ்ரீ டெலோ’ விடம் தெரிவித்துள்ளோம். எதிர்வரும் வாரங்களில் எமது செயற்குழு இது சம்பந்தமாக விரிவான பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.
ஏனைய அமைப்புகளுடன் இராணுவ, அரசியல் ரீதியான முரண்பாடுகளைக் கொண்டிருந்த நாம் ஏன் எமது இயக்கத்துடன் இணையக் கூடாது. எமது முயற்சியானது வெறும் தேர்தலை அடிப்படையாகக் கொண்டதல்ல ஆயினும் இரு தேர்தல்களையும் ஆரம்பப் புள்ளிகளாகக் கொண்டு செயல்பட ஆயத்தமாகின்றோம் எனத் தெரிவித்த அவர், இதனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பை நிராகரித்து பழமையைக் கிண்டிக்கிளறுவது தனது நோக்கமல்ல. இது ஆரோக்கியமான தலைமைக்கு அழகல்ல எனவும் அவர் தனது கருத்தை முன்வைத்தார்