May

May

தமிழ்ப் பொது வேட்பாளர் அர்த்தமற்றது! இலங்கைக்கான பொது வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டும்!

இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் – 2024 தொடர்பான அரசியல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ள நிலையில் இந்த தேர்தலில் தமிழர்களின் நிலைப்பாடாக பொதுவேட்பாளர் என்ற கொள்கையை தமிழ்தேசிய கட்சிகள் முன்மொழிந்து வருகின்றன. இது தொடர்பில் பல வாதப்பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் பொதுவேட்பாளர் தொடர்பிலும் அதிலுள்ள சாதக – பாதக நிலை தொடர்பிலும் எழுத்தாளரும் அரசியல் ஆர்வலருமான து.சேனன் அவர்களுடன் தேசம் ஜெயபாலன் கலந்துரையாடும் பரபரப்பான அரசியல் கலந்துரையாடல்.

தேசம் திரை காணொளியை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்..!

ரஃபா எல்லைகளை கைப்பற்றிய இஸ்ரேல் – மனிதாபிமான உதவிகள் முழுமையாக தடைப்பட வாய்ப்பு!

காசா பகுதியில் உள்ள ரஃபாஎல்லையை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

ரஃபா மூலோபாய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிஎன்பதுடன் எகிப்திலிருந்து காசாவிற்கான மனிதாபிமான உதவிகள் வருவதற்கான ஒரேயொரு பாதையாகவும் காணப்படுகின்றது.

ரஃபாவின் காசா பக்கத்தினை நாங்கள் தற்போது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளோம் எங்களது சிறப்பு படைகள் இந்த பகுதியில் சோதனை நடவடிக்கைகள் போன்றவற்றில் ஈடுபட்டுள்ளன என இஸ்ரேலின் இராணுவ அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை காசா எல்லை அதிகாரசபைக்கான பேச்சாளர் இஸ்ரேலிய டாங்கிகள் காணப்படுவதை உறுதிசெய்துள்ளார்.

அந்த பகுதி ஊடாக மனிதாபிமான உதவிகள் பயணிப்பது நிறுத்தப்பட்டுள்ளதாக மனிதாபிமான அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இதேவேளை ஹமாஸ் அமைப்பு  மூன்று கட்ட யுத்த நிறுத்தம் தொடர்பான யோசனைகளையும் கைதிகள் பணயக்கைதிகள் பரிமாற்றம் தொடர்பான யோசனைகளையும் ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ள அதேவேளை இஸ்ரேல் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என குறிப்பிட்டுள்ளது.

போர் நிறுத்த முன்மொழிவை ஏற்றுக்கொள்வதாக ஹமாஸ் அறிவிப்பு – மகிழ்ச்சியில் பாலஸ்தீனியர்கள் !

எகிப்து மற்றும் கத்தார் ஆகிய நாடுகள் முன்வைத்த போர் நிறுத்த முன்மொழிவை ஏற்றுக்கொள்வதாக ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது.

அந்த அமைப்பை மேற்கோள்காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் இதனைத் தெரிவித்துள்ளன.

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே, கத்தார் பிரதமர் மற்றும் எகிப்திய தலைவர்களுக்கு இந்த யோசனையை ஏற்றுக்கொண்டதாகத் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை ஹமாஸ் ஏற்றுக் கொண்ட போர்நிறுத்தப் பிரேரணையை இஸ்ரேல் அரசாங்கம் ஆய்வு செய்து வருவதாக இஸ்ரேலிய மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக அறிய முடிகிறது.

இதனிடையே போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்வதாக ஹமாஸ் அமைப்பு அறிவித்த நிலையில் இடம்பெயர்ந்து ரபாவில் தங்கியுள்ள பலஸ்தீன மக்கள் மகிழ்ச்சி ஆராவாரத்தில் ஈடுபட்டுள்ளதையும் அறிய முடிகிறது.

 

 

ரஃபாவில் இராணுவநடவடிக்கைகளை தீவிரமாக்கும் இஸ்ரேல் – ரஃபாவிலிருந்து வெளியேறும் பாலஸ்தீனியர்கள் !

ரஃபாவிலிருந்து பொதுமக்கள் உடனடியாக வெளியேறவேண்டும் என உத்தரவுபிறப்பித்துள்ளதை தொடர்ந்து ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் அங்கிருந்து வெளியேறிக்கொண்டிருக்கின்றனர்.

ரஃபாவின் கிழக்கு பகுதியில் வசிக்கும் மக்களை அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது.

எதிர்காலத்தில் ரஃபாவில் இஸ்ரேல் தனது  இராணுவநடவடிக்கைகளை தீவிரப்படுத்தலாம் என இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் அறிவித்த மறுநாள் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

உங்களின் பாதுகாப்பிற்காக  சோதனைசாவடிகளிற்கு அருகில் உள்ள மனிதாபிமான பகுதிக்கு உடனடியாக செல்லுமாறு கேட்டுக்கொள்கின்றோம் என இஸ்ரேலிய இராணுவத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அல்ரபாவின் அல்சவ்கா மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களை வெளியேறுமாறு இஸ்ரேலிய இராணுவம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மட்டுப்படுத்த அளவிலான நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக இஸ்ரேலிய இராணுவத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஒக்டோபர் ஏழாம் திகதிக்கு பின்னர் இடம் பெயர்ந்த மில்லியன் கணக்காண மக்கள் எகிப்து எல்லையில் உள்ள ரபாவில் தஞ்சமடைந்துள்ளனர்.

அச்சமடைந்த மக்கள் கால்நடையாகவும் அல்லது கழுதைகளின் மீதும் அல்லது தங்களின் உடமைகளை வாகனங்களில் ஏற்றியபடி வாகனங்களிலும் ரபாவிலிருந்து வெளியேறுகின்றனர்.

நேற்றிரவு இஸ்ரேல் மேற்கொண்ட விமானக்குண்டுவீச்சுகள் மக்களின் அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளதாக அங்கிருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ரஃபாவிலிருந்து நகரத்தின் மேற்கு பகுதி உட்பட நகரத்தில் கடும் பதற்றநிலை காணப்படுகின்றது பலர் வெளியேறுவதற்கு தீர்மானித்துள்ளனர் பலர் ஏற்கனவே வெளியேற ஆரம்பித்துள்ளனர் என நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்தார் என கார்டியன் தெரிவித்துள்ளது. மேலும் ரஃபா மனிதாபிமான நடவடிக்கைகளிற்கான பிரதான தளமாகவும் காணப்படுகின்றது.

அவர்கள்ரஃபாவின் கிழக்கில் உள்ளவர்களை வெளியேறுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்ரஃபா எல்லையில் மேற்கில் உள்ளவர்களையும் வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளனர் எனக்கு என்ன செய்வது என தெரியவில்iலை நான் அறிவிக்கப்பட்ட இடத்தில் இல்லாவிட்டாலும் எனது குடும்பத்தை டெய்ர் எல் பலாவிற்கு கொண்டு செல்லப்போகின்றேன் எனரஃபாவின் வடக்கில் தனது குடும்பத்துடன் தஞ்சமடைந்துள்ள அபுமுகே தெரிவித்துள்ளார்.

தற்போது கடும் மழை பெய்கின்றது எங்கு போவது என எங்களிற்கு தெரியவில்லை இந்த நாள் வரும் என நான் கவலையுடன் இருந்தேன் எனது குடும்பத்தவர்களை எங்கு கொண்டு செல்வது என சிந்திக்கவேண்டும் என ரஃபாவில்  அகதியாக உள்ள அபுரயீட் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு நிலத்தடி குழாய்கள் மூலமாக எண்ணெய் வழங்கும் திட்டம் !

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு நிலத்தடி குழாய்கள் மூலமாக எண்ணெய் வழங்கும் திட்டத்தை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோர் ஒன்றிணைந்து இன்று திருகோணமலை இந்தியன் எண்ணை நிறுவனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையத்தை திறந்து வைத்தனர்.

திருகோணமலை – புல்மோட்டை பிரதான வீதியில் சாம்பல் தீவு பாலத்திற்கு அருகாமையில் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையமானது திறந்துவைக்கப்பட்டது.

நாங்கள் ரணிலின் பக்கம் பல்டி அடிக்க மாட்டோம் – சாம் ரெலோ தொடரும் பொது வேட்பாளர் சர்ச்சை !

இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் – 2024 தொடர்பான அரசியல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ள நிலையில் இந்த தேர்தலில் தமிழர்களின் நிலைப்பாடாக பொதுவேட்பாளர் என்ற கொள்கையை தமிழ்தேசிய கட்சிகள் முன்மொழிந்து வருகின்றன. இது தொடர்பில் பல வாதப்பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் பொதுவேட்பாளர் தொடர்பிலும் அதிலுள்ள சாதக – பாதக நிலை தொடர்பிலும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் பிரித்தானிய பிரதிநிதியும் – பேச்சாளருமான நகுலேஸ்வரன் ஞானசம்பந்தனுடன் தேசம் ஜெயபாலன் கலந்துரையாடும் பரபரப்பான அரசியல் கலந்துரையாடல்.

இஸ்ரேலுடனான அனைத்து வர்த்தக உறவுகளையும் நிறுத்த துருக்கி நடவடிக்கை !

இஸ்ரேலுடனான அனைத்து வர்த்தக உறவுகளையும் நிறுத்த துருக்கி நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயத்தை  துருக்கியின் வர்த்தக அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “இஸ்ரேல் தொடர்பான ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பரிவர்த்தனைகள் நிறுத்தப்பட்டுள்ளன, அனைத்து தயாரிப்புகளையும் உள்ளடக்கியது.

காசாவிற்கு மனிதாபிமான உதவிகள் தடையின்றி போதுமான அளவு வருவதற்கு இஸ்ரேலிய அரசாங்கம் அனுமதிக்கும் வரை துருக்கி இந்த புதிய நடவடிக்கைகளை கண்டிப்பாகவும் தீர்க்கமாகவும் செயல்படுத்தும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மட்டும் இரு நாடுகளுக்கும் இடையே ஏழு பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான வர்த்தக பரிவர்த்தனைகள் நடந்துள்ளன.

இந்த தீர்மானத்திற்கு பதிலளித்துள்ள இஸ்ரேல் வெளிவிவகார அமைச்சர், துருக்கி ஜனாதிபதி  ரிசெப் தையிப் எர்டோகன் சர்வாதிகாரியாக செயற்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் எர்டோகன் “துருக்கி மக்கள் மற்றும் வணிகர்களின் நலன்களைப் புறக்கணித்து, சர்வதேச வர்த்தக ஒப்பந்தங்களை புறக்கணிக்கிறார்” என்று இஸ்ரேல் காட்ஸ் எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், உள்ளூர் உற்பத்தி மற்றும் பிற நாடுகளின் இறக்குமதியை மையமாகக் கொண்டு துருக்கியுடனான வர்த்தகத்திற்கான மாற்று வழிகளைக் கண்டறியுமாறு வெளியுறவு அமைச்சகத்திற்கு அறிவுறுத்தியதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

உலக ஊடக சுதந்திர குறிகாட்டி – இலங்கைக்கு 150ஆவது இடம் !

எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பின் ஊடக சுதந்திர குறிகாட்டியின் பிரகாரம் 180 நாடுகளின் வரிசையில் இலங்கை 35.21 புள்ளிகளுடன் 150 இடத்தில் இருக்கின்றது. கடந்த ஆண்டு ஊடக சுதந்திர குறிகாட்டியுடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் இலங்கை பாரிய பின்னடைவை சந்தித்துள்ளது.
உலக ஊடக சுதந்திர தினத்தை (3) முன்னிட்டு எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பினால் 2024 ஆம் ஆண்டுக்கான ஊடக சுதந்திர குறிகாட்டியை அடிப்படையாகக்கொண்டு வரிசைப்படுத்தப்பட்ட 180 நாடுகளின் பட்டியல் நேற்று வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.
இப்பட்டியலின் பிரகாரம் மொத்தமாக 180 நாடுகளில் கடந்த ஆண்டு 45.85 புள்ளிகளுடன் 135 ஆவது இடத்தில் இருந்த இலங்கை, இவ்வருடம் 35.21 புள்ளிகளுடன் 150 ஆவது இடத்துக்குப் பின்தள்ளப்பட்டிருக்கின்றது. அரசியல் குறிகாட்டி, பொருளாதார குறிகாட்டி, சட்டக் குறிகாட்டி, சமூக குறிகாட்டி மற்றும் பாதுகாப்பு குறிகாட்டி ஆகிய 5 விடயப்பரப்புகளுக்குத் தனித்தனியாகப் புள்ளியிடப்பட்டு, ஊடக சுதந்திரக் குறிகாட்டி தயாரிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை இலங்கையில் ஊடக சுதந்திரம் சார்ந்த நெருக்கடிகள் பெருமளவுக்கு 2009 ஆம் ஆண்டு முடிவுக்குக்கொண்டுவரப்பட்ட யுத்தத்துடன் நெருக்கமான பிணைப்பைக் கொண்டிருப்பதாக சுட்டிக்காட்டியிருக்கும் எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு, ஊடகவியலாளர்கள் பலருக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட குற்றங்கள் மற்றும் மீறல்கள் தொடர்பில் இன்னமும் நீதி நிலைநாட்டப்படவில்லை என விசனம் வெளியிட்டுள்ளது.
அதுமாத்திரமன்றி இலங்கையின் ஊடகத்துறையானது அரசியல் தரப்புக்களில் பெரிதும் தங்கியிருப்பதாகவும், இந்நாட்டில் ஊடகத்துறை இன்னமும் அச்சுறுத்தல்மிகு நிலையிலேயே இருப்பதாகவும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும் 2022 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகி, நாட்டைவிட்டு வெளியேறியபோது ஊடக சுதந்திரத்தின் மீதான அவரது ஒடுக்குமுறைகள் முடிவுக்குவந்துவிட்டதாகக் கருதப்பட்டதாகவும், இருப்பினும் இன்னமும் ஊடகத்துறை மீதான அரசியல் ரீதியான துருவமயப்படுத்தல் நடவடிக்கைகள் தொடர்வதாகவும் எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

பாலஸ்தீனுக்கு ஆதரவாக அமெரிக்க பல்கலைகழக மாணவர்கள் போராட்டம் – 2000பேர் கைது !

பலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டங்களை முன்னெடுத்தள்ள அமெரிக்க கல்லூரி வளாகங்களில் காவல்துறையினரின் கைது நடவடிக்கைள் 2,000 ஐ கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கல்லூரி வளாகங்களில் 300க்கும் மேற்பட்ட பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் புதன்கிழமை இரவு முதல் வியாழன் பகல் வரையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கைதானவர்களின் எண்ணிக்கை 2000 கடந்துள்ளதாகவும் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்தோடு, காவல்றையினரால் அவர்களின் கூடாராங்களும் அகற்றப்பட்டுள்ளது.

மேலும், நியூ ஹாம்ப்ஷயரில் உள்ள டார்ட்மவுத் கல்லூரியில் 90க்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், நாட்டில் எவருக்கும் போராட உரிமை உள்ளது என்றும், ஆனால் கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்த எவருக்கும் அதிகாரம் இல்லை என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கோவெக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது – பாரத் பயோடெக் நிறுவனம்

கோவெக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது என அதனை தயாரித்த பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

 

கொவிஷீல்டு தடுப்பூசி போட்டுக் கொண்டதால், பக்க விளைவுகள் ஏற்பட்டு பாதிக்கப்பட்டதாகவும், அதில் பலர் மரணம் அடைந்ததாகவும் சமீபத்தில் பிரிட்டிஷ் நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன.

 

அவை விசாரணைக்கு வந்தபோது, “கொவிஷீல்டு தடுப்பூசியால் டி.டி.எஸ் எனப்படும் இரத்தம் உறைவு மற்றும் இரத்த தட்டணுக்கள் குறைதல் போன்ற பக்கவிளைவு மிக மிக அரிதாக ஏற்படும்” என அஸ்ட்ராஜெனகா நிறுவனம் இங்கிலாந்து நீதிமன்றத்தில் கூறியிருந்தது. கொரோனாவிற்கு தடுப்பூசி செலுத்திய அனைவரிடமும் இச்செய்தி பெரும் அச்சத்தினை ஏற்படுத்தியது.

 

மேலும், ‘இந்தியாவில் கொவிஷீல்டு தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளதா’ என ஆய்வு செய்யக்கோரி இந்திய உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

இதனையடுத்து, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ‘கோவெக்சின்’ தடுப்பூசி குறித்தும் பலருக்கு சந்தேகம் கிளப்பியது. இந்நிலையில், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமான கோவெக்சின் தயாரிப்பு நிறுவனமான பாரத் பயோடெக் நிறுவனம் தனது அறிக்கையில், இது குறித்து விளக்கம் கொடுத்துள்ளது.

 

அதில், “பலமுறை சோதனை செய்த பிறகே கோவெக்சின் தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்தது. ஆகவே, இரத்தம் உறைதல் உள்ளிட்ட எந்த பக்கவிளைவுகளும் இந்த தடுப்பூசியால் ஏற்படாது. மக்களின் பாதுகாப்புதான் முதன்மையானது. எனவே, கோவெக்சின் எவ்வித எதிர்மறையான பாதிப்புகளையும் கொடுக்காது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது இந்த செய்தி கோவெக்சின் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பெருமூச்சை அளித்துள்ளது.