19

19

நாம் வெற்றி பெற்றால் சீதை பிறந்த சீதாமர்ஹியில் சீதைக்கு பாஜக பிரம்மாண்ட கோயிலை கட்டும். – அமித் ஷா

என்டிஏ கூட்டணி மூன்றாவது முறையாக வெற்றி பெற்றால், சீதை பிறந்த சீதாமர்ஹியில் சீதைக்கு பிரம்மாண்ட கோயில் கட்டுவோம் என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.

பீகாரில் சீதாமர்ஹி நகரில் நேற்று (மே 16) நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அமித் ஷா,

“அதிகார அரசியலுக்காக, தனது மகனை முதலமைச்சராக்க லாலு பிரசாத் யாதவ், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோரை எதிர்ப்பதிலேயே தன் வாழ்நாள் முழுவதையும் கழித்த காங்கிரஸ் கட்சியின் மடியில் போய் அமர்ந்துள்ளார். பீகார் முன்னாள் முதலமைச்சர் கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது வழங்குவது பற்றி காங்கிரஸும், ஆர்ஜேடியும் ஒருபோதும் நினைக்கவில்லை. மோடி அரசுதான் அதை செய்தது. பீகாருக்கு வளர்ச்சி அரசியல்தான் தேவை, காட்டுராஜ்ஜியம் அல்ல.

நாங்கள் வாக்கு வங்கியைக் கண்டு பயப்படுவதில்லை. அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் அவருக்கு பிரம்மாண்ட கோயிலை கட்டியவர் பிரதமர் மோடி. தற்போது, சீதை பிறந்த இடத்தில் மிகப் பெரிய கோயில் கட்டும் பணிதான் எஞ்சியிருக்கிறது. சீதாமர்ஹியில் சீதா தேவிக்கு பாஜக பிரம்மாண்ட கோயிலை கட்டும். ராமர் கோயிலுக்குச் செல்லாமல், ஒதுங்கியவர்களால் (எதிர்க்கட்சிகள்) நிச்சயமாக சீதா தேவிக்கு கோயில் கட்ட முடியாது. சீதைக்கு யாராவது கோயில் கட்ட முடியும் என்றால், அது பாஜக மற்றும் பிரதமர் நரேந்திர மோடியால் தான் முடியும்” என தெரிவித்தார்.

பீகாரில் மொத்தம் 40 மக்களவைத் தொகுதிகள் உள்ள நிலையில், சீதாமர்ஹி தொகுதிக்கு மே 20-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் பீகாரில் மொத்தமுள்ள 40 இடங்களில் 39 இடங்களில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

கோவேக்ஸின் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களில் சுமார் 30% பேருக்கு உடல்நலக் கோளாறுகள் !

கொரோனாவிற்கு எதிராக கோவேக்ஸின் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களில் சுமார் 30% பேருக்கு ஓராண்டுக்குப் பின்னர் உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டதாக ஆய்விதழ் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘ஸ்பிரிங்கர் நேச்சர்’ என்ற ஆய்விதழில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

“கொரோனா வைரஸ்க்கு எதிராக செலுத்திக்கொள்ளப்பட்ட பிபிவி152 கோவேக்ஸின் தடுப்பூசியின் பக்கவிளைவுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தடுப்பூசி செலுத்திக்கொள்ளப்பட்டு ஓராண்டான பின்னர் ஏற்பட்ட நீண்டகால பக்கவிளைவுகள் குறித்து 2022-ம் ஆண்டு ஜனவரி முதல் 2023-ம் ஆகஸ்ட் வரை, உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.

வளரிளம் பருவத்தைச் சேர்ந்த 635 பேர், 18 வயதுக்கு மேற்பட்ட 291 பேர் என மொத்தம் 926 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், சுமார் 50% பேர் கோவேக்ஸின் செலுத்திக்கொண்ட பின்னர், தங்களுக்கு தொற்று பாதிப்புகள் ஏற்பட்டதாகத் தெரிவித்தனர். அவர்களில் பெரும்பாலானோருக்கு மேல் சுவாசக் குழாய் தீநுண்மி தொற்று ஏற்பட்டுள்ளது. கோவேக்ஸின் செலுத்திக்கொண்டவா்களில் சுமார் 30% பேருக்கு ஓராண்டுக்குப் பின்னர் உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டுள்ளன.

இந்தத் தடுப்பூசி செலுத்திக்கொண்ட வளரிளம் பருவத்தைச் சோ்ந்தவர்களில் 10.5% பேருக்கு தோல் சார்ந்த பிரச்னைகளும், 10.2% பேருக்கு பொதுவான உடல்நலக் கோளாறுகளும், 4.7% பேருக்கு நரம்பு மண்டல கோளாறுகளும் ஏற்பட்டுள்ளன. 18 வயதுக்கு மேற்பட்டவா்களில் 8.9% பேருக்கு பொதுவான உடல்நலக் கோளாறுகள், 5.5% பேருக்கு நரம்பு மண்டல கோளாறுகள் ஏற்பட்டுள்ளது. 5.8% பேர் தசைகள், எலும்புகள், மூட்டுகள், தசைநாண்கள், தசைநார்கள் மற்றும் குருத்தெலும்பு மண்டலம் சார்ந்த கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோவேக்ஸின் செலுத்திக்கொண்ட பெண்களில் 4.6% பேருக்கு மாதவிடாய் பாதிப்புகளும், 2.7% பேருக்கு கண்விழி பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளது. கேடயச் சுரப்பியில் (தைராய்டு கிளாண்ட்) இருந்து சுரக்கக் கூடிய ஹார்மோன் குறைவாக சுரப்பதன் மூலம் உடலில் ஏற்படக் கூடிய பிரச்னைகள் 0.6% பேருக்கு ஏற்பட்டுள்ளது. ஒரு சதவீதம் பேருக்கு கோவேக்ஸின் செலுத்திக்கொண்ட பின்னர் கில்லன் பாரே சின்ட்ரோம் என்ற அதிவிரைவான நரம்பு தளா்ச்சி, பக்கவாதம் உள்ளிட்ட தீவிர பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

கோவேக்ஸின் செலுத்திக்கொண்ட பின்னா் 3 பெண்கள் உள்பட 4 போ் உயிரிழந்தனர். அவா்களுக்கு சர்க்கரை நோய் இருந்துள்ளது. அவா்களில் இருவருக்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.