30

30

பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்தது ஸ்பெயின், அயர்லாந்து மற்றும் நோர்வே நாடுகள்!

ஸ்பெயின், அயர்லாந்து மற்றும் நோர்வே ஆகிய நாடுகள் கூட்டாக பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளன.

இதனுடன், பலஸ்தீனத்தை தனி அரசாக அங்கீகரிப்பதில் தமக்கும் எவ்வித பிரச்சினையும் இல்லை என பிரான்ஸும் அறிவித்துள்ளது.

அதன்படி, தகுந்த நேரத்தில், பலஸ்தீனத்தை தனி அரசாக அங்கீகரிக்க தான் தயாராக இருப்பதாக, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன் தெரிவித்துள்ளார்.

ஜேர்மனியில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் காசா குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே இதனை தெரிவித்தார்.

பலஸ்தீனத்துக்கான அங்கீகாரம் சரியான தருணத்தில் கொடுக்கப்பட வேண்டும் என தான் கருதுவதாகவும், உணர்ச்சிவசப்பட்டு இந்த முடிவை தான் உடனடியாக எடுப்பதை ஒப்புக்கொள்ள மாட்டேன்” என்றும் பிரான்ஸ் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

உத்தியோகபூர்வமாக கலைக்கப்பட்டது பிரித்தானிய நாடாளுமன்றம் !

பிரித்தானிய நாடாளுமன்றம் உத்தியோகபூர்வமாக இன்று (வியாழக்கிழமை) கலைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய பொதுத் தேர்தல் எதிர்வரும் ஜூலை மாதம் 4ஆம் திகதி நடத்தப்படும் என அந்நாட்டின் பிரதமர் ரிஷி சுனக் அண்மையில் அறிவித்திருந்தார்.

இதன்படி பிரித்தானிய நாடாளுமன்றத்தின் செயற்பாடுகள் கடந்த 24ஆம் திகதி முதல் இடைநிறுத்தப்பட்டதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அண்மையில் பிரித்தானியாவில் நடைபெற்ற இடைத்தேர்தல் மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றதுடன் பொதுத் தேர்தல் தொடர்பான பெரும்பாலான கருத்துக் கணிப்புகளில், பிரதமர் ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி தோல்வியடையும் என்று கூறப்பட்டிருந்தது

இதனைத் தொடர்ந்து 5 வாரங்களின் பின்னர் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

“All eyes on Rafah” -பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக கோடிக்கணக்கான மனிதர்கள் !

காசாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வெளியான “All eyes on Rafah” என்ற ஹேஷ்டெக் கொண்ட புகைப்படம் சமூகவலைத்தளங்களில், அதிகளவாக பகிரப்பட்டு கவனம் பெற்றுள்ளது.

அதன்படி, AI தொழில்நுட்ப உதவியுடன் உருவாக்கப்பட்ட “All eyes on Rafah” வாசம் பொருந்திய புகைப்படம் வேகமாகப் பரவி வருகிறது.

இது, இஸ்டாகிராமில் மட்டும் இதுவரை 4.4 கோடிக்கும் அதிகமான முறை பகிரப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன், All eyes on Rafah என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் 2.75 கோடிக்கு மேல் பகிரப்பட்டுள்ளது.

காசா நகரில் நடைபெற்று வரும் படுகொலையை கண்டிக்கும் வகையில், “All eyes on Rafah” என்ற ஹேஷ்டேக் நேற்று முதல் வைரலாகி வருகின்றது.

குறித்தப் புகைப்படத்தில் மிக நெருக்கமாக அமைந்துள்ள தற்காலிக கூடாரங்கள் இடம்பெற்றுள்ளன.

பாலைவனப் பின்னணியில், மலைகளுக்கு இடையே தற்காலிகக் கூடாரங்களில் இருக்கும் பலஸ்தீனர்களின் துயரமான நிலையை எடுத்துரைப்பது போல் அந்தப் புகைப்படம் அமைந்தது.

All eyes on Rafah என்ற புகைப்படத்தை, சர்வதேசக பிரபலங்கள் தங்கள் இன்ஸ்ட்ராகிராம் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.