2024

2024

பலத்த கண்காணிப்புக்குள் விமான நிலையங்கள் – சட்டவிரோத உள்நுழைவுகளைத் தடுக்க அனுர ஆலோசனை !

பலத்த கண்காணிப்புக்குள் விமான நிலையங்கள் – சட்டவிரோத உள்நுழைவுகளைத் தடுக்க அனுர ஆலோசனை

சட்டவிரோத உள்நுழைவுகள் மற்றும் வெளியேறுதல்களைத் தடுக்க இலங்கை சுங்கத் திணைக்களம் மற்றும் விமான நிலையத்தில் நவீன கண்காணிப்பு பொறிமுறைகளை நிறுவதற்கு அதிகரிக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார். குடிவரவு குடியகல்வு திணைக்களம், இலங்கை சுங்கம் மற்றும் விமான நிலையம் மற்றும் விமான போக்குவரத்து நிறுவனத்தின் தலைவர்களுடன் சனிக்கிழமை கலந்துரையாடல் இடம்பெற்றது. போதைப்பொருள் மற்றும் பிற சட்டவிரோத பொருட்கள் நாட்டிற்குள் நுழைவதைத் தடுப்பது, விமான நிலைய வளாகத்தில் ஊழல், மோசடி மற்றும் முறைகேடுகளைத் தடுப்பது மற்றும் சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுப்பது குறித்த விடயங்கள் இதில் கலந்துரையாடப்பட்டன.

இதன்போதே மூன்று நிறுவனங்களிலும் கூட்டு கமரா அமைப்பு மற்றும் மையப்படுத்தப்பட்ட கண்காணிப்பு அறையை நிறுவுமாறு ஜனாதிபதி அறிவுறுத்தினார். மேலும், தற்போதுள்ள ஸ்கேனிங் இயந்திரங்களுக்குப் பதிலாக மேம்படுத்தப்பட்ட நவீன ஸ்கேனிங் இயந்திரங்களைப் பயன்படுத்தி இந்த நிறுவனங்களில் ஆட்கடத்தலைத் தடுப்பதற்கு நடைமுறையான புதிய செயல்முறையை ஆரம்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். அண்மைக்காலங்களில் விமான நிலையங்களில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் அதிகமாக கைதுசெய்யப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அரச சேவைத்துறைக்கு எதிரான சுனாமி உருவாகும் அமைச்சர் லால் காந்த எச்சரிக்கை !

அரச சேவைத்துறைக்கு எதிரான சுனாமி உருவாகும் அமைச்சர் லால் காந்த எச்சரிக்கை !

அரச சேவைத்துறைக்கு எதிராக பல புகார்கள் வந்துகொண்டிருப்பதாகத் தெரிவித்த விவசாய அமைச்சர் லால் காந்த, இதனை சேவைத்துறைக்கு எதிரான சுனாமியாக என்னால் மாற்ற முடியும் எனவும் எச்சரித்துள்ளார். ஜனாதிபதி அநுராவும் சேவைத்துறையில் உள்ளவர்கள் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தால், தான் அவர்களின் பக்கம் நிற்பேன் எனவும் அல்லாவிட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். சுங்கத் திணைக்கள அதிகாரிகள் சீராக நடந்துகொள்வதன் அவசியத்தையும் அவர் அண்மையில் வலியுறுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

ரச அதிகாரிகள் மீதான காட்டத்தை மக்களும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுவருவதுடன், அவர்களே ஊடகச் சந்திப்புகளை ஏற்பாடு செய்து, தங்களுக்கு ஏற்பட்ட அநீதிகளை வெளிப்படுத்தி வருகின்றனர். வட மாகாண ஆளுநர் நா வேதநாயகன் வடக்கில் உள்ள சில அதிகாரிகளை வைத்துக் கொண்டு மக்களுக்கு சேவைகளை வழங்குவதில் உள்ள கஸ்டத்தை அண்மையில் வெளிப்படுத்தி இருந்தார். பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நடந்து முடிந்த இரு மாவட்ட அபிவிருத்திச் சபைக் கூட்டத்திலும் அரச அதிகாரிகளை கேள்விக்கு உட்படுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டமை எல்லோரும் அறிந்ததே. பொதுமக்கள் பலரும் பா உ அர்சுனாவின் நடவடிக்கைகளை வரவேற்று கருத்து வெளியிட்டு வருகின்றனர். பா உ அர்ச்சுனா தனக்கு பல குற்றச்சாட்டுகள் தபாலில் வருவதையும் தனது சமூக வலைப்பதிவில் வெளியிட்டு இருந்தார். பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, கடல்தொழில் தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோரும் சில அரச அலுவலர்கள் மக்களை நடாத்தும் விதம் தொடர்பில் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

அரச உத்தியோகங்களுக்கு 7 லட்சம் பேரே தேவைப்படும் நிலையில் அது இரட்டிப்பாக 14 லட்சம் இருந்த போதும் மக்கள் சேவைகளைப் பயன்படுத்துவதில் பெரும் நெருக்கடிகளைச் சந்திக்கின்றனர். பெருமளவில் அலைக்களிக்கப்படுகின்றனர்.

தனியார் கல்விக்கும் இறுதிப் பரீட்சைக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் கல்விச் சீர்திருத்தம் வர வேண்டும் !

தனியார் கல்விக்கும் இறுதிப் பரீட்சைக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் கல்விச் சீர்திருத்தம் வர வேண்டும் !

தனியார் கல்விக்கும் இறுதிப் பரீட்சைக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் கல்விச் சீர்திரத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என இலங்கை ஆசிரயர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. இலங்கை பிரித்தானியாவிலிருந்து 1948இல் சுதந்திரம் அடைந்த போதும் இன்றும் காலனித்துவ கல்விமுறையே இலங்கையில் உள்ளது. இலங்கை சுதத்திரம் அடைந்த பின் 1956இல் கொண்டுவரப்பட்ட ஆங்கிலத்துக்கு முன்னுரிமையற்ற கல்வி முறையால், இலங்கையில் தாய்மொழிகளான சிங்களமும் தமிழும் அபார வளர்ச்சியைக் கண்டன என இலங்கை முன்னாள் ராஜதந்திரி அய்யம்பிள்ளை தர்மகுலசிங்கம் தெரிவித்தார். தற்போதைய பரீட்சைகளை மட்டும் முன்னிலைப்படுத்தும் பிரித்தானியாவின் காலனித்துவ கல்வி முறையில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் கோரியுள்ளது.

தென் மாகாணங்களில் பாடசாலை ஆசிரியர்கள் தனியார் கல்விநிலையங்களில் கற்பிப்பதற்கு தடைவிதித்து சுற்றுநிருபம் அனுப்பி வைக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் தரம் ஒன்பது, ஒன்பதாம் வகுப்புக்கு கீழான மாணவர்களுக்கு தனியார் கல்வியை ஞாயிற்றுக் கிழமைகளில் நடத்தக் கூடாது என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அறிவித்துள்ளார்.

யாழில் மூன்று மாணவர்கள் உள்ள வீட்டில் தனியார் கல்விக்கு 50,000 ரூபாய் செலவிடப்படு வருவதாகவும் இலவசக் கல்வி என்பது பெயரளவில்தான் இருப்பதாகவும் முன்பள்ளிச் செயற்பாடுகளை முன்னெடுத்துவரும் என் சச்சிதானந்தன் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். இதனை உறுதிப்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டுள்ள இலங்கை ஆசிரியர் சங்கம் சில குடும்பங்களில் அவர்களுடைய வருமானத்தின் 60 சதவீதம் தனியார் வகுப்புகளுக்குச் செலவிடப்படுவதாகத் தெரிவித்தார்.

இதுபற்றி கருத்து வெளியிட்ட வறணி ஆரம்பப் பள்ளி அதிபர் தனியார் கல்வி என்பது ஒரு கலாச்சாரமாகிவிட்டது என்றார்.

விடாது துரத்தும் பயங்கரவாதத் தடைச்சட்டம் – முன்னாள் போராளி !

விடாது துரத்தும் பயங்கரவாதத் தடைச்சட்டம் – முன்னாள் போராளி !

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நிறுத்தவதாகக் கோரி ஆட்சிக்கு வந்தது. ஆனால் இந்தப் பயங்கரவாத்த தடைச்சட்டம் முன்னாள் போராளிகளாகிய எங்களை விடாது துரத்துகின்றது என முன்னாள் போராளி ஒருவர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் “நாங்கள் நாட்டுக்கு எதிரானவர்கள் அல்ல விசாரணைகளுக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் எங்களை திருப்பித் திருப்பி விசாரணைக்கு அழைக்கின்றார்கள். என்னை ஒன்பது தரம் அழைத்துவிட்டார்கள். விசாரணை செய்வதை எங்கள் மாவட்டத்திலேயே வைத்துச் செய்யாமல் கொழும்புக்கு அழைக்கின்றனர். நான் கொழும்புக்கு சென்று வருவது என்றால் எனக்கு தங்குமிடம் போக்குவரத்து என 25,000 ரூபாய் தேவைப்படும். எல்லா மாவட்டங்களிலும் பொலிஸ் நிலையங்கள் புலனாய்வு பிரிவுகள் உள்ளது தானே. அங்கே வைத்ததே விசாரக்க முடியும் தானே. ஏன் எங்களை கொழும்புக்கு வரச் சொல்லிக் கேட்கிறார்கள்” எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

 

@jeevan0508

♬ original sound – jeevan0508 – jeevan0508

ஜனாதிபதி அனுராவின் இந்திய – சீனா விஜயம்: ஜேவிபி ராஜதந்திரம் வேலை செய்கின்றதா?

ஜனாதிபதி அனுராவின் இந்திய – சீனா விஜயம்: ஜேவிபி ராஜதந்திரம் வேலை செய்கின்றதா?

முன்னாள் ராஜதந்திரி, நிர்வாக சேவைப் பயிற்றுனர் அய்யம்பிள்ளை தர்மகுலசிங்கம் அவர்களுடன் கலந்துரையாடல்

யாழ்ப்பாணத்திற்குள்ளேயே குண்டுச் சட்டியில் குதிரை ஓட்ட விரும்பும் ஆசிரியர்கள் !

வவுனியா, வட மாகாணத்தில் இல்லையா? எம்பி திலகநாதன் காட்டம்!

வடக்கு மாகாண அரச உயர் அதிகாரிகள் யாழ்ப்பாணத்தை மட்டுமே மையப்படுத்தி பணியாற்றுகிறார்கள் என்பதை என்.பி.பி பா உ திலகநாதன் மறைமுகமாகச் சாடினார். வவுனியாவில் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவித்த அவர், யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய வடக்கு மாவட்டங்கள் புறக்கணிக்கப்படுகிறது என்ற பொருள்பட இடித்துரைத்தார். அத்துடன் எவ்வாறு யாழ் மாவட்டத்தில் ஆசிரியர்கள் தேவைக்கு அதிகமாக இருக்கிறார்கள் எனவும் வவுனியாவில் கிராமப்புறங்களில் ஆசிரியர் பற்றாக்குறையால் பாடசாலை மாணவர்கள் பரீட்சை எழுத முடியாமல் இருக்கிறார்கள் என சுட்டிக் காட்டினார். மேலும் அவர் கூறும் போது வவுனியா தெற்கு வலயத்தில் 23 கணித பாட ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை இருக்கும் அதேசமயம் யாழ் மாவட்டத்தில் 87 கணிதபாட ஆசிரியர்கள் மேலதிகமாக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

யுத்தத்தின் கோரமுகத்திலிருந்து சிறிது தப்பிய வவுனியா நிலமையே இப்படியென்றால் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் குறிப்பாக ஒட்டிசுட்டான் மற்றும் கற்சிலைமடுப் பகுதிகளில் விஞ்ஞான மற்றும் கணித ஆசிரியர்களே இல்லை எனலாம். அதேமாதிரி சூடுவெந்தபுலவு பாடசாலையில் தகவல் தொடர்பாடல் கற்பித்த ஆசிரியர் இடம்மாற்றம் பெற்றுச் சென்றுவிட, புதிதாக நியமிக்கப்பட்ட ஆசிரியர் இதுவரை பாடசாலைக்கு சமூகமளிக்கவில்லை. இலங்கை டிஜிற்ரலைஷேனை நோக்கி பயணிக்கும் இவ்வேளையில் தகவல் தொடர்பாடல் கற்கை என்பது மிக முக்கியமான பாடம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

செட்டிக்குளம் மகாவித்தியாலத்தில் இந்து நாகரிக பாடத்திற்கு இரண்டு வருடமாக ஆசிரியர் வெற்றிடம் காணப்படுகின்றது என்கிறார் எம்பி திலகநாதன். அதேநேரம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இந்து நாகரீகத்தை சிறப்புப் பாடநெறியாக கற்பிக்கும் தனிப்பீடமும் உள்ளது. வருடந்தோறும் இந்து நாகரீக சிறப்பு பாடநெறிப் பட்டதாரிகளும் வெளிவருகிறார்கள். அவர்கள் யாழ்ப்பாணத்திற்குள்ளேயே குண்டுச் சட்டியில் குதிரை ஓட்ட விரும்புகிறார்கள். அதைவிட இந்து நாகரீகம் போன்ற கலைப்பிரிவுப் பாடங்களுக்கு வேலைவாய்ப்புச் சந்தையில் கேள்வியும் இல்லை. எனவே இன்றைய வேலைவாய்ப்பு சந்தை நிலவரத்திற்கமைவான பாடநெறிகளை மாணவர்களுக்கு கற்பிப்பதே சிறப்பாகும்.

மேலும் தனது உரையில் திலகநாதன் குறிப்பிடும் போது, ஆசிரியர்களை இடம் மாற்றும் போது ஒரு பஸ்ஸில் பயணம் செய்யும்படியாக இடம்மாற்றம் செய்ய வேண்டும் என்றும் பரிந்துரைத்தார். எப்படியானாலும் திலகநாதனின் கோபம் நியாமானதே. எடுத்துக்காட்டாக வடமாகாண ஆளுநர் வேதநாயகனும் கூட கிளிநொச்சியை தாண்டியதாக பெரிதாக தெரியவில்லை. மாகாண பணிப்பாளர்கள் வாரத்தில் ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு மாவட்டத்திற்கு ஒதுக்கலாம். அல்லது குறைந்தபட்சம் மாதத்தில் நான்கு நாட்களை வடமாகாணத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் கிரமமாக பங்கிடலாம்.

சில தமிழ் பகுதிகளில் மக்கள் இராணுவ வீதித் தடைகளைக் கோருகின்றனர் !

சில தமிழ் பகுதிகளில் மக்கள் இராணுவ வீதித் தடைகளைக் கோருகின்றனர் !

வடக்கில் இராணுவ நீக்கம் மெல்ல மெல்ல ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் இராணுவ வீதித் தடைகள் அகற்றப்பட்டு பாதைகள் திறந்துவிடப்பட்டமை தெரிந்ததே. இதனைத் தொடர்ந்து இராணுவ முகாம்கள், இராணுவ வீதித் தடைகள் நீக்கப்பட்ட பிரதேசங்களில் சட்டவிரோத நடவடிக்கைகள் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் இராணுவத் தடைகளை மீள எற்படுத்துமாறு கோருகின்றனர் என வடக்கு ஆளுநர் வேதநாயகன் அண்மையில் டான் தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் இராணுவ வீதித் தடைகள் நீக்கப்பட்ட பகுதிகளில் களவுகள், வன்முறைச் சம்பவங்கள், கள்ள மண் ஏற்றுவது, கள்ள மரம் வெட்டுவது போன்ற செயற்பாடுகள் அதிகரித்திருப்பதாலேயே இக்கோரிக்கை வைக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

தனிச் சிங்களச்சட்டம் என்பது எஸ்ஜேவி செல்வநாயகம் கிளப்பிய மாயயை ! முன்னாள் ராஜதந்திரி தர்மா

தனிச் சிங்களச்சட்டம் என்பது எஸ்ஜேவி செல்வநாயகம் கிளப்பிய மாயயை ! முன்னாள் ராஜதந்திரி தர்மா

தனிச் சிங்களச் சட்டம் என்பது ஆங்கிலம் மட்டும் தெரிந்த எஸ்ஜேவி செல்வநாயகம் கிளப்பிய மாயயை என்கிறார் முன்னாள் இலங்கை ராஜதந்திரியும் இலங்கை நிர்வாக சேவைத்துறை பயிற்றுவிப்பாளரும் பத்தி எழுத்தாளருமான அய்யம்பிள்ளை தர்மகுலசிங்கம். இவர் தேசம்நெற்றுக்கு வழங்கிய நேர்காணலில் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக தமிழ் தலைமைகளால் தவறாக வழிநடத்தப்பட்டு வந்ததாகச் சுட்டிக்காட்டி, தனிச் சிங்களச்சட்டம் என்பது அப்படியான ஒரு மாயயை தான் எனத் தெரிவித்தார். தமிழ் தெரியாத ஆங்கிலம் மட்டுமே தெரிந்த எஸ்ஜேவி செல்வநாயகம், The Official Language Act (No. 33 of 1956), என்பதை ஆங்கில மொழி நீக்கப்பட்டதால் ஏற்பட்ட வெப்பிகாரத்திலேயே, ‘தனிச் சிங்களச் சட்டம்’ என முத்திரை குத்தினார் என்ற அடிப்படையில் தர்மகுலசிங்கம் தன் கருத்தை முன்வைத்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் 1956இல் மொழிக்கொள்கை கொண்டுவரப்பட்டிருக்காவிடில் இன்றுள்ள நிலைக்குத் தமிழ் மொழி வளர்ச்சியடைந்திருக்க மாட்டாது எனத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் யாழ் பல்கலைக்கழகத்தில் நன்மதிப்பிற்குரியவராக இருந்த பேராசிரியரர் நந்தி 1956 ஆம் ஆண்டு மொழிக்கொள்கையால் தமிழ் மொழியடைந்த வளர்ச்சியைப் பெருமிதமாகக் கூறியதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

தரப்படுத்தல் கூட எந்த வகையிலும் தமிழ் மக்களுக்கு எதிரானது அல்ல எனத் தெரிவித்த தர்மகுலசிங்கம் யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் மட்டும் இருந்து பல்கலைக்கழகப் பட்டதாரிகள் உருவான நிலையை மாற்றி, இலங்கையின் சகல மாவட்டங்களிலிருந்தும் மாணவர்கள் பல்கலைக்கழகங்கள் செல்கின்ற நிலையை ஏற்படுத்தியது இந்தத் தரப்படுத்தல் தான் எனவும் அவர் தெரிவித்தார். அதனால் தான் தற்போது எல்லா மாவட்டங்களிலும் ஓரளவுக்காவது ஒரு சில வைத்தியர்கள், ஆசிரியர்கள், மற்றும் பணியாளர்கள் உள்ளனர் என்பதையும் தர்மகுலசிங்கம் சுட்டிக்காட்டினார்.

நாங்கள் தமிழர்களுடைய பிரச்சினையை இந்த அரசாங்கத்துடனேயே பேசித் தீர்ப்பதற்கான நல்ல சூழல் ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்த தர்மகுலசிங்கம், அதனால் தமிழ் தலைமைகள் விவேகமாகச் செயற்பட்டு ஜனாதிபதி அனுரவின் தலைமையிலான இந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் தமிழர்களுடைய பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் எனத் தெரிவித்தார். இலங்கையில் சிங்களவர்களும் தமிழர்களும் சகோதரங்கள். நாங்கள் இந்தியாவிடம் போய் நிக்கவேண்டிய அவசியமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழர்களுக்கு சட்ட ரீதியாகவும் அநீதிகள் இழைக்கப்பட்டுள்ளது ! எல் எஸ் எஸ் பி தலைவர் திஸ்ஸ விதாரண

தமிழர்களுக்கு சட்ட ரீதியாகவும் அநீதிகள் இழைக்கப்பட்டுள்ளது ! எல் எஸ் எஸ் பி தலைவர் திஸ்ஸ விதாரண..!

வெவ்வேறு கூட்டு முன்னணிகளில் இணைந்து கொண்டாலும், தமிழர்களின் உரிமைகள் விடயத்தில் அழுத்தம் கொடுத்துவரும் லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர் திஸ்ஸ விதாரண, தமிழர்களுக்கு சட்ட ரீதியாகவும் அநீதிகள் இழைக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் புதிய அரசியலமைப்பினூடாக தமிழர் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திஸ்ஸநாயக்க புதிய அரசியலமைப்பை உருவாக்கும் திட்டங்களை துரிதப்படுத்துவதாக தெரிவித்திருப்பதை வரவேற்றுள்ள திஸ்ஸ விதாரண, இப்புதிய அரசியலமைப்பினூடாக தமிழர்களுடைய உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை தான் வலியுறுத்தி இருப்தாகவும் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதிகள் புதிய அரசியலமைப்பைக் கொண்டுவர முயற்சிகள் எடுத்த போதும் அவர்களிடம் இதுபற்றிய புரிதல் இருக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டினார் திஸ்ஸ விதாரண. “மஹிந்த ராஜபக்சவைச் சுற்றி இருந்தவர்கள் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போது, அதற்கு எதிராகச் செயற்பட்டனர். கோட்டபாயா ராஜபக்ச அரசியலமைப்புப் பற்றிச் சிந்திக்கவேயில்லை. ரணில் புதிய அரசியலமைப்புத் தொடர்பில் முயற்சி எடுத்தார் ஆனால் அவர் சம்ஸ்டியை ஏற்கவில்லை” எனபதையும் சுட்டிக்காட்டினார் அவர்.

மஹிந்த ராஜபக்ச காலத்தில் திஸ்ஸ விதாரண தலைமையில் இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டம் வரையப்பட்டது. அதன்போது புலம்பெயர்ந்த நாடுகளுக்கு விஜயம் செய்த திஸ்ஸ விதாரண, புலம்பெயர்ந்த தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்களைச் சந்தித்தார். குறிப்பாக எழுபதுக்களில் தன்னோடு பயணித்த இடதுசாரிச் செயற்பாட்டாளர்களையும் சந்தித்து அத்தீர்வுத் திட்டத்திற்கு வலுச்சேர்க்க முற்பட்டிருந்தார். ஆனால் அத்திட்டத்தில் இருந்த சிறுபான்மையினருக்கான குறைந்தபட்ச பாதுகாப்பு அம்சங்கள் கூட பின்னர் தென்னிலங்கை அரசியல் கட்சிகளின் அழுத்தங்களினால் நீக்கப்பட்டு மிகப் பலவீனமான நிலையை எட்டியது.

இப்போது, தமிழ் மக்களையும் இணைத்து பயணிக்கும் ஒரு பொதுத் தலைமைத்துவமாக தேசிய மக்கள் சக்தி மாறியுள்ளது. அனைவருக்குமான இலங்கை, அதில் எல்லோரும் சரி சமானமாக நடத்தப்படுவார்கள் என்ற கோரிக்கையின் அடிப்படையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைத்துள்ளது. அதனால் இப்புதிய அரசியலமைப்பு நடைமுறைக்கு வரும் என்பதில் யாருக்கும் எவ்வித ஐயப்பாடும் இல்லை. ஆனால் இந்த அரசியல் அமைப்பில் சிறுபான்மையினங்களுடைய பாதுகாப்பு, அவர்களுடைய அரசியல் உரிமைகள் எவ்வாறு பாதுகாக்கப்படும் என்பது பற்றிய தீர்மானங்கள், அனைத்து சமூகங்களுடனும் கலந்தாலோசித்தே எடுக்கப்படும் என ஜனாதிபதி அனுரா தெரிவித்துள்ளார். அதே கருத்தையே ஜேவிபி இன் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவும் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியவாதக் கட்சிகளைப் பொறுத்த வரை, தமிழரசுக் கட்சி சமஸ்டித் தீர்வைக் கோருகின்றது, தீர்வின் பெயரில் சர்ச்சைப்படவில்லை, தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஒற்றையாட்சி முறைக்குள் தீர்வு சாத்தியமில்லை என்கிறது. ஜனநாயகத் தமிழ் தேசிய முன்னணிக்கு அரசியல் கொள்கை என்று ஏதும் இல்லை. இந்தியாவின் 13வது திருத்தம், மாகாணசபையோடு அவர்கள் திருப்திப்பட்டுள்ளனர். முன்னாள் முதலமைசசர் வரதராஜப் பெருமாளும் இதே நிலைப்பாட்டையே கொண்டுள்ளார். இந்தியாவைப் பொறுத்தவரை தேசிய மக்கள் சக்தி தமிழ் மக்களின் அமோக ஆதரவோடும் ஆட்சிக்கு வந்துள்ளது. அதனால் அவர்களுக்கு தமிழ் மக்களின் உரிமைகள் பற்றி பேச வேண்டிய தேவை இருப்பதாக அவர்கள் கருதவில்லை.

79 இலங்கையர்கள் இஸ்ரேலில் தொழில்செய்யப் பயணம் ! இந்த முடிவு சரியானதா ?

79 இலங்கையர்கள் இஸ்ரேலில் தொழில்செய்யப் பயணம் ! இந்த முடிவு சரியானதா ?

79 இலங்கையர்கள், இஸ்ரேலில் தொழில் செய்வதற்காக நேற்றுப் பயணப்பட்டனர் என வெளிநாட்டு தொழில் வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவி கோசலா விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். குறிப்பாக விவசாயம் மற்றும் கட்டிட நிர்மாணங்களில் இவர்கள் பணியாற்ற உள்ளனர். உலகத்தின் மிகப் பதட்டமான பிராந்தியமாக மாறியுள்ள மத்திய கிழக்கிற்கு குறிப்பாக இஸ்ரேலுக்கு இவர்கள் தொழில்பெற்று சொந்த விருப்பில் அல்லது தேவைகளின் அழுத்தங்களால் இவ்வேலைக்குச் செல்கின்றனர். இஸ்ரேல் மத்திய கிழக்கு யுத்தத்தின் காரணியாகவும் மையப்புள்ளியாகவும் இருக்கையில், இலங்கையர்களை அந்நாட்டுக்கு வேலைக்கு அனுப்புவது, மனித உரிமைவாதிகள் தங்கள் புருவத்தை உயர்த்தும்படி செய்துள்ளது.

கடந்த காலங்களில் காஸாவில் உள்ள பாலஸ்தீனியர்களே இஸ்ரேலின் விவசாய, கட்டிடத் துறைகளில் பணியாற்றி வந்தனர். ஆனால் கடந்த ஆண்டு ஓக்ரோபர் 7 தாக்குதலும் அதனைத் தொடர்ந்து இஸ்ரேல் மேற்கொண்டு வரும் இனவாதத் தாக்குதலாலும் இஸ்ரேலில் பணியாற்றிய பாலஸ்தீனியர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். இவர்களின் இடத்தை நிரப்புவதற்கே இஸ்ரேல் வெளிநாடுகளில் குறிப்பாக இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் இருந்து தொழிலாளர்களை வரவழைக்கின்றது. இந்தியாவிலிருந்து இராணுவத்திற்கும் இஸ்ரோல் ஆட்சேர்ப்பில் ஈடுபட்டுள்ளது. பாலஸ்தினிய மக்களுக்கு தோளோடு தோள் கொடுக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அவர்களுடைய பறிக்கப்பட்ட உரிமைகளை கவனத்தில் கொள்ளாது, அவர்களுக்கு மாற்றீடாக தொழிலாளர்களை இலங்கையிலிருந்து அனுப்பி வைப்பது சரியான அரசியல் முடிவல்ல, என பாலஸ்தினியர்களுக்காகக் குரல் கொடுத்துவருபவர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது காஸாவில் உள்ள பலஸ்தீனியர்களின் காணிகளை அபகரித்து தனது குடியேற்றத் திட்டங்களை விஸ்தரிப்பதற்கான நடவடிக்கைகளுக்கும் இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. ஜனவரியில் டொனால் ட்ரம் அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவி ஏற்றதும், அவருடைய மருமகன் ஜெராட் குஷ்னர் காஸா கடற்கரையில் புதிய கட்டுமானங்களை அமைத்து, பாலஸ்தீனியர்கள் அல்லாதவர்களை குடியேற்றத் திட்டமிட்டுள்ளார். அதற்கான ‘கிளீன் காஸா’ திட்டமே காஸாமீதான இனப்படுகொலைத் தாக்குதல். இதற்கும் ஒக்ரோபர் 7 தாக்குதலுக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது. கிளீன் காஸா திட்டம் ஒக்ரோபர் 7, 2023க்கு முன்பு 2019ற்கு முன்னரே திட்;டமிடப்பட்டுள்ளது.