யாழ்ப்பாணத்திற்குள்ளேயே குண்டுச் சட்டியில் குதிரை ஓட்ட விரும்பும் ஆசிரியர்கள் !

வவுனியா, வட மாகாணத்தில் இல்லையா? எம்பி திலகநாதன் காட்டம்!

வடக்கு மாகாண அரச உயர் அதிகாரிகள் யாழ்ப்பாணத்தை மட்டுமே மையப்படுத்தி பணியாற்றுகிறார்கள் என்பதை என்.பி.பி பா உ திலகநாதன் மறைமுகமாகச் சாடினார். வவுனியாவில் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவித்த அவர், யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய வடக்கு மாவட்டங்கள் புறக்கணிக்கப்படுகிறது என்ற பொருள்பட இடித்துரைத்தார். அத்துடன் எவ்வாறு யாழ் மாவட்டத்தில் ஆசிரியர்கள் தேவைக்கு அதிகமாக இருக்கிறார்கள் எனவும் வவுனியாவில் கிராமப்புறங்களில் ஆசிரியர் பற்றாக்குறையால் பாடசாலை மாணவர்கள் பரீட்சை எழுத முடியாமல் இருக்கிறார்கள் என சுட்டிக் காட்டினார். மேலும் அவர் கூறும் போது வவுனியா தெற்கு வலயத்தில் 23 கணித பாட ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை இருக்கும் அதேசமயம் யாழ் மாவட்டத்தில் 87 கணிதபாட ஆசிரியர்கள் மேலதிகமாக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

யுத்தத்தின் கோரமுகத்திலிருந்து சிறிது தப்பிய வவுனியா நிலமையே இப்படியென்றால் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் குறிப்பாக ஒட்டிசுட்டான் மற்றும் கற்சிலைமடுப் பகுதிகளில் விஞ்ஞான மற்றும் கணித ஆசிரியர்களே இல்லை எனலாம். அதேமாதிரி சூடுவெந்தபுலவு பாடசாலையில் தகவல் தொடர்பாடல் கற்பித்த ஆசிரியர் இடம்மாற்றம் பெற்றுச் சென்றுவிட, புதிதாக நியமிக்கப்பட்ட ஆசிரியர் இதுவரை பாடசாலைக்கு சமூகமளிக்கவில்லை. இலங்கை டிஜிற்ரலைஷேனை நோக்கி பயணிக்கும் இவ்வேளையில் தகவல் தொடர்பாடல் கற்கை என்பது மிக முக்கியமான பாடம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

செட்டிக்குளம் மகாவித்தியாலத்தில் இந்து நாகரிக பாடத்திற்கு இரண்டு வருடமாக ஆசிரியர் வெற்றிடம் காணப்படுகின்றது என்கிறார் எம்பி திலகநாதன். அதேநேரம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இந்து நாகரீகத்தை சிறப்புப் பாடநெறியாக கற்பிக்கும் தனிப்பீடமும் உள்ளது. வருடந்தோறும் இந்து நாகரீக சிறப்பு பாடநெறிப் பட்டதாரிகளும் வெளிவருகிறார்கள். அவர்கள் யாழ்ப்பாணத்திற்குள்ளேயே குண்டுச் சட்டியில் குதிரை ஓட்ட விரும்புகிறார்கள். அதைவிட இந்து நாகரீகம் போன்ற கலைப்பிரிவுப் பாடங்களுக்கு வேலைவாய்ப்புச் சந்தையில் கேள்வியும் இல்லை. எனவே இன்றைய வேலைவாய்ப்பு சந்தை நிலவரத்திற்கமைவான பாடநெறிகளை மாணவர்களுக்கு கற்பிப்பதே சிறப்பாகும்.

மேலும் தனது உரையில் திலகநாதன் குறிப்பிடும் போது, ஆசிரியர்களை இடம் மாற்றும் போது ஒரு பஸ்ஸில் பயணம் செய்யும்படியாக இடம்மாற்றம் செய்ய வேண்டும் என்றும் பரிந்துரைத்தார். எப்படியானாலும் திலகநாதனின் கோபம் நியாமானதே. எடுத்துக்காட்டாக வடமாகாண ஆளுநர் வேதநாயகனும் கூட கிளிநொச்சியை தாண்டியதாக பெரிதாக தெரியவில்லை. மாகாண பணிப்பாளர்கள் வாரத்தில் ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு மாவட்டத்திற்கு ஒதுக்கலாம். அல்லது குறைந்தபட்சம் மாதத்தில் நான்கு நாட்களை வடமாகாணத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் கிரமமாக பங்கிடலாம்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *