May

May

இஸ்ரேலிய படைகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட பெண் பத்திரிகையாளர் !

இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையே மேற்குகரை பகுதி, ஜெருசலேம் நகரம் யாருக்குச் சொந்தம் என்பதில் மோதல் நீடிக்கிறது. இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள அப்பகுதிகளில் இன்னமும் பல லட்சம் பாலஸ்தீனர்கள் வாழ்ந்து வருகின்றனர். இஸ்ரேல் ஆக்கிரமிப்பை எதிர்த்து இவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
நான் ஷிரீன் அபு அக்லே... இஸ்ரேலால் கொல்லப்பட்ட ஊடகக் குரல்! | i am Shireen  Abu Akleh - Latest News on Politics, Movies, General News, World news
பாலஸ்தீன பயங்கரவாதிகளை களையெடுப்பதாக கூறி மேற்குகரை பகுதியில் இஸ்ரேல் வீரர்கள் அடிக்கடி தேடுதல் வேட்டையை நடத்தி வருகின்றனர். இந்த தேடுதல் வேட்டைகளில்  அப்பாவி பாலஸ்தீன மக்கள் சுட்டுக்கொல்லப்படுவது தொடர்கதையாகி வருகிறது.
இந்நிலையில், மேற்குகரை பகுதியில் ஜெனின் நகரில் உள்ள பாலஸ்தீன அகதிகள் முகாமுக்குள் நேற்று காலை இஸ்ரேல் ராணுவ வீரர்கள் அதிரடியாக நுழைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது இஸ்ரேல் வீரர்கள் துப்பாக்கியால் சுட்டதில் அல் ஜசிரா டி.வி.யின் பெண் பத்திரிகையாளரான ஷிரீன் அபு அக்லே (51), கொல்லப்பட்டார். மற்றொரு பத்திரிகையாளர் படுகாயம் அடைந்தார்.
பாலஸ்தீன அகதிகள் முகாமில் இஸ்ரேல் இராணுவ வீரர்களின் தேடுதல் வேட்டை குறித்து செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டதாக கத்தார் நாட்டின் அரசு செய்தி சேனலான அல் ஜசிரா தெரிவித்துள்ளது. இதுதொடர்பான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது என இஸ்ரேல் பாதுகாப்புத் துறை மந்திரி தெரிவித்தார்.
இந்நிலையில், இஸ்ரேலில் பெண் பத்திரிகையாளர் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டும். அவரது மரணத்திற்கு காரணமானவர்களுக்கு உரிய தண்டனை வழங்கவேண்டும் என வலியுறுத்திய ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் பெண் பத்திரிகையாளர் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளது.

மாதவிடாயின் போது மாதத்தில் 3 நாட்களுக்கு விடுமுறை – ஸ்பெயின் அரசு அறிவிப்பு !

ஸ்பெயின் நாட்டில் வசிக்கும் பெண்கள், தங்கள் மாதவிடாயின் போது மாதத்தில் 3 நாட்களுக்கு விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என்ற சிறந்த அறிவிப்பினை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது.

 

பெண்களின் மாதவிடாய் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான பிற நடவடிக்கைகளை உள்ளடக்கிய இந்த சீர்திருத்தம், வரும் செவ்வாய்கிழமை அன்று நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் நிறைவேற்றப்படும் என தெரிகிறது.

மேலும், அங்கு சமூகத்தில் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த பெண்களுக்கு, சானிட்டரி நாப்கின் பேட்கள் இலவசமாக வழங்கப்படும் என்றும் பள்ளிகளில் தேவைப்படும் பெண்களுக்கு சானிட்டரி பேடுகள் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டு பெண்களின் நீண்டகால கோரிக்கையான, சானிட்டரி பேட்கள் மற்றும் டம்பன்களின் விற்பனை விலையில் இருந்து வாட் வரியை நீக்க வேண்டும் என்பதும் நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளது.

இந்த  முடிவை இதுவரை எந்த ஐரோப்பிய நாடுகளும் எடுத்ததில்லை. இந்த பெருமையை தட்டிச் சென்ற ஒரே ஐரோப்பிய நாடு ஸ்பெயின் தான்.

பெரும்பாலும் பெண்கள் மாதவிடாய் நாட்களில் அசவுகரியமாகவும், உடல்நலமின்றியும் காணப்படுவார்கள். இதனை கருத்தில் கொண்ட ஸ்பெயின் நாட்டு அரசு அந்நாட்டு பெண்களை மகிழ்விக்கவும், அவர்களது நலனில் அக்கறை கொண்டும் இந்த விடுமுறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இந்த விடுமுறை அறிவிப்பினால் அந்நாட்டில் உள்ள பெண்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ஜப்பான், தென் கொரியா, இந்தோனேஷியா மற்றும் ஜாம்பியா போன்ற நாடுகளில் மாதவிடாய் நாட்களில் பெண்கள் விடுமுறை எடுத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில், சில நிறுவனங்கள் மாதவிடாய் விடுமுறையை வழங்குகின்றன.

கடந்த ஆண்டு ஜூலை மாதம், உத்தரபிரதேசத்தில் உள்ள பெண் ஆசிரியர்களின் அமைப்பு, கல்வியாளர்களுக்கு மூன்று நாள் ‘மாதவிடாய் விடுமுறை (பீரியட் லீவ்)’ கோரி பிரச்சாரத்தைத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் காலமானார் !

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் (73) இன்று காலமானார். கடந்த 2004-ம் ஆண்டு நவம்பர் 3-ம் திகதி முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அதிபராகவும், அபுதாபியின் ஆட்சியாளராகவும் இருந்து வந்தார்.

இவரது மறைவு குறித்து அந்நாட்டின் ஜனாதிபதி விவகாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாட்டு மக்களுக்கும், இஸ்லாமிய தேசத்திற்கும், உலக மக்களுக்கும் இரங்கல் தெரிவிக்கப்படுகிறது. அதிபரின் மறைவுக்காக 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும். கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும். அமைச்சகங்கள், துறைகள், மத்திய அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது” என்று அதில் குறிப்பிட்டிருந்தது.

1971-ம் ஆண்டு முதல் ஷேக் கலீஃபாவின் தந்தை ஷேக் சயீத் பின் சுல்தான் அல் நஹ்யான் அரபு நாட்டின் முதல் அதிபராக இருந்து வந்தார். இவரது மறைவுக்குப் பிறகு ஷேக் கலீஃபா இரண்டாவது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1948-ம் ஆண்டில் பிறந்த ஷேக் கலீஃபா ஐக்கிய அரபு எமிரேட்ஸின் இரண்டாவது அதிபராகவும், அபுதாபி அரசாங்கத்தின் ஆட்சியாளராகவும் இருந்தார்.

இவரது ஆட்சியின் கீழ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஒரு விரைவான வளர்ச்சியைக் கண்டது. இது மக்களுக்கு கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்தது.

“ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைனை ஏற்க பல தசாப்தங்கள் ஆகும்.“ – பிரான்ஸ்

ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைன் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு பல தசாப்தங்கள் ஆகும் என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

ஸ்ட்ராஸ்பேர்க்கில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரையின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர்,

உக்ரைன் ஒரு இணை ஐரோப்பிய சமூகத்தில் இணையலாம் என்று பரிந்துரைத்தார். இது ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத உறுப்பினர்கள் மற்ற வழிகளில் ஐரோப்பாவின் பாதுகாப்பு கட்டமைப்பில் சேர அனுமதிக்கும் என்று ஜனாதிபதி மக்ரோன் கூறினார்.

ரஷ்யா ஆதாயங்களை அடைய முயற்சிக்கும் கிழக்கு டான்பாஸ் பகுதியில் கடுமையான சண்டை தொடரும் நிலையில், அவரது இந்த கருத்துக்கள் வந்துள்ளன.

இலங்கையை மிக உன்னிப்பாக கவனித்து வருகின்றோம் – அமெரிக்கா

இலங்கையின் தற்போதைய நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “இலங்கையின் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றோம்.

அமைதியான போராட்டக்காரர்கள் மற்றும் அப்பாவி மக்கள் மீதான வன்முறைளுக்கு எதிராக ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளோம்.

பொருளாதார மற்றும் அரசியல் சவால்களுக்கு நீண்டகால தீர்வுகளைக் கண்டறிவதிலும் செயல்படுத்துவதிலும் கவனம் செலுத்துமாறு அனைத்து இலங்கையர்களையும் கேட்டுக்கொள்கிறோம்“ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“முக்கியமான வேலை இல்லை என்றால் வீட்டிலேயே இருங்கள்.”- ஆப்கான் பெண்களுக்கு தலிபான்கள் உத்தரவு !

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியப் பிறகு பெண்களுக்கு கடுமையான விதிகளை விதித்து வருகிறது. இந்நிலையில், பொது இடங்களில் வரும் பெண்கள் தலை முதல் கால் வரை முழுவதுமாக மறைத்தபடி பர்தா அணிய வேண்டும் என்று தலிபான் அதிரடி கட்டளையை விதித்துள்ளது.

இதுகுறித்து தலிபானின் உச்ச தலைவர் ஹிபத்துல்லா அகுந்த்சாதா பிறப்பிட்ட ஆணையில் கூறியிருப்பதாவது:-

பெண்கள் அனைவரும் தலை முதல் கால் வரை மறைக்கும் பர்தாவை பொது இடங்களில் அணிய வேண்டும். அது பாரம்பரியமானது மற்றும் மரியாதைக்குரியது.

வாலிபர்களை சந்திக்கும்போது தேவையில்லாத கோபங்களைத் தவிர்ப்பதற்காக ஷரியா உத்தரவுகளின்படி, மிகவும் வயதான அல்லது இளைமையாக இல்லாத பெண்கள் கண்களைத் தவிர முகத்தை மறைக்க வேண்டும். பெண்களுக்கு வெளியில் முக்கியமான வேலை இல்லை என்றால் வீட்டிலேயே இருங்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

“உலக மக்களின் நலனுக்காக போரை முடித்துக் கொள்ளுங்கள்.”- ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தல் !

ஐக்கிய நாடுகள் சபையும், பல்வேறு நாடுகளும் உக்ரைனில் ரஷ்யாவின் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

சீனா, அமெரிக்கா, அயர்லாந்து, பிரான்ஸ் மற்றும் மெக்சிகோ உள்ளிட்ட பெரும்பாலான பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்கள் பல மாதங்களாக நீடித்து வரும் போருக்கு முடிவு கட்ட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இதுகுறித்து  ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கூறியதாவது:-

உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பு அதன் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தை மீறுவதாகும். உக்ரைன், ரஷியா மக்களுக்கு மட்டுமல்லாமல் உலக மக்களின் நலனுக்காக போர் முடிவுக்கு வர வேண்டும்.” இவ்வாறு அவர் கூறினார்.

பெண்களுக்கு டிரைவிங் லைசென்சஸ் வழங்க தடை – தலிபான்களின் தொடரும் அடக்குமுறை !

ஆப்கானிஸ்தான் தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்த பிறகு பெண்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. தனியாக பெண்கள் பயணம் செய்யக்கூடாது என அறிவிக்கப்பட்டு உள்ளது. மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கும் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. எந்த நேரமும் தலீிபான்கள் வீதிகளில் துப்பாக்கியுடன் ரோந்து சுற்றி வருகிறார்கள்.
இதனால் ஒரு வித பீதியுடன் பொதுமக்கள் உள்ளனர். இந்த நிலையில்  ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சில பெண்கள் வாகனங்களை ஓட்டி வந்தனர். இதையறிந்த தலிபான்கள் தற்போது அங்கு பெண்களுக்கு டிரைவிங் லைசென்சஸ் வழங்க தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

“நான் ஒன்றும் அண்ட்ராய்டு இயந்திரம் கிடையாது. எனக்கும் உணர்ச்சி இருக்கிறது.”- எலான் மஸ்க் கவலை !

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் சமீபத்தில் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கினார். இதையடுத்து டுவிட்டரை அவர் சீரழைத்துவிடுவார் என்று பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. தற்போதைய டுவிட்டர் சி.இ.ஓவாக இருக்கும் பராக் அகர்வால் இனி ட்விட்டரின் எதிர்காலம் இருண்டதாக இருக்கும் என்று கூறி எலான் மஸ்கை நேரடியாக தாக்கியிருந்தார்.
பொதுவாக உற்சாகமான மனிதராக காணப்படும் எலான் மஸ்க் பிறர் விமர்சனங்களை கண்டுக்கொள்வது கிடையாது. தனக்கு பிடித்ததை மட்டும் தான் செய்வார் என்று கூறப்பட்டு வந்தது. தன் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் தனக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
சில சமயம் என் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் என்னை பாதிக்கும். நான் ஒன்றும் எதை பற்றியும் கவலைப்படாமல் இருப்பதற்கு நான் அண்ட்ராய்டு இயந்திரம் கிடையாது. எனக்கும் உணர்ச்சி இருக்கிறது. ஆனால் நான் அவற்றை பெரிதாக கண்டுகொள்ளாமல் கடக்க பார்க்கிறேன்.
பொதுவாக நரகத்திற்கான பாதையே நல்ல நோக்கத்துடன் அமைக்கப்படுகிறது என்ற வாக்கியம் உண்டு. என்ன பொறுத்தவரை கெட்ட நோக்கங்களுடன் தான் நரகத்திற்கான சாலை அமைக்கப்படுகிறது. ஆனால் அதிலும் நல்ல எண்ணங்கள் இருப்பதற்கான சாத்தியம் உண்டு. என்னுடைய நல்ல எண்ணம் நரகத்திற்கு உங்களை அழைத்து செல்லாது.
டுவிட்டரில் உள்ள ட்ரோல்களும், போட்களும் பயனர்களின் அனுபவத்தை குறைக்கின்றன. அவற்றை எடுத்து நான் போராடுவேன். பலதரப்பட்ட கருத்துக்களையும் உள்ளடக்கிய அமைப்பை தான் டுவிட்டரில் நான் நிறுவ உள்ளேன். அனைவருக்கும் சிறந்த சேவையை வழங்கும் நிறுவனமாக டுவிட்டர் இருக்கும்.
சாதாரண பயனர்கள் டுவிட்டரை இலவசமாக பயன்படுத்தலாம். ஆனால் வணிக நோக்கத்துடன் உள்ள பயனர்களுக்கும், அரசாங்க பயனர்களுக்கும் டுவிட்டரில் கட்டணம் வசூலிக்கப்படும்.” இவ்வாறு எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்திக்க போப் பிரான்சிஸ் கோரிக்கை !

உக்ரைன் போர் தொடர்பாக மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்திக்க கோரிக்கை விடுத்துள்ளதாக போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் நடைபெறுவது கொடூரமான மற்றும் புத்தியில்லாத போர் என்றும் போப் பிரான்சிஸ் பலமுறை  கண்டித்துள்ளார்.

இதுகுறித்து போப் பிரான்சிஸ் கூறியதாவது:-

“உக்ரைன் போர் தொடர்பாக ரஷிய அதிபர் விளாடிமிர் புடினை சந்திக்க நான் மாஸ்கோ செல்ல தயாராக இருக்கிறேன். இதற்காக 20 நாட்களுக்கு முன்பாக தகவல் அனுப்பினேன். எங்களுக்கு இன்னும் பதில் வரவில்லை. இருப்பினும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். புதின் இந்த நேரத்தில் சந்திப்பை நடத்த விரும்பவில்லை என தெரிகிறது.

நான் இப்போதைக்கு கீவ் செல்லவில்லை. நான் போக வேண்டிய இடம் கீவ் இல்லை. நான் முதலில் மாஸ்கோ தான் செல்ல வேண்டும். புதினை சந்திக்க வேண்டும்.” இவ்வாறு அவர் கூறினார்.