May

May

இலங்கை மக்கள் அரசியல் விழிப்படைந்து விட்டார்களா? அல்லது ஏனைய நாடுகளில் மக்கள் முட்டாள்களாகி விட்டார்களா?

(அமெரிக்காவில் நேற்று படுகொலை செய்யப்பட்ட 19 முன்பள்ளி மாணவர்களில் நால்வர்)

இலங்கையில் பெற்றோலும் எரிவாயுவும் இல்லை என்று கியூவில் நிற்க ஆரம்பித்ததும் ‘கோட்டா கோஓ ஹோம்’ என்று போராட்டம் தொடங்கியது. இந்தப் போராட்டத்திற்கு ஆதரவாக பிரித்தானியாவிலும் சர்வதேச நாடுகளிலும் கூடிக் கோஷம் எழுப்பினர். ஆனால் பொருளாதார நெருக்கடிக்கான காரணம் எங்கோ இருக்க அவரவர் தங்கள் முரண்பட்ட அரசியல் இலக்குகளுக்காக எதிரிக்கு எதிரி நண்பன் என்ற வகையில் போராட்டத்தை நெய்யூற்றி வளர்த்துவிட, அது இலங்கையின் 30 பாராளுமன்ற உறுப்பினர்களது வீடுகளைப் பதம்பார்த்தது. பத்து வரையானோர் கொல்லப்பட்டனர். ஒரு பாராளுமன்ற உறுப்பினர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர் அரை நிர்வாணமாக்கப்பட்டனர். அப்படியானால் இலங்கை மக்கள் அரசியல் தெளிவு பெற்றுவிட்டார்கள்? அரசியல் விழிப்படைந்துவிட்டார்களா?

மறுபக்கம் அமெரிக்கா உலகம் முழக்க ஆயதங்களை விதைத்து, யுத்தங்களை உற்பத்தி செய்து அதன் மூலம் கொள்ளை லாபமீட்டுகின்றது. கோவிட் காலத்தில் கூட அமெரிக்கர்கள் உணவுத் தட்டுப்பாடு ஏற்படுவதைப் பற்றி கவலைப்படாமல் துப்பாக்கிகளையும் தோட்டாக்களையும் வாங்கிக் குவித்தனர். அவ்வளவுக்கு துப்பாக்கிகள் மீது காதல் கொண்ட சமூகம். இரு வாரங்களுக்கு ஒருமுறை பாடசாலைகளில் துப்பாக்கிச் சூடு நடத்துவதை வானவேடிக்கை செய்தியாக அறிந்து பழக்கப்படுத்தி விட்டனர். கடந்த பத்து ஆண்டுகளில் 250 வரையான துப்பாக்கித் தாக்குதல்கள் பாடசாலைகளில் இடம்பெற்றுள்ளது.

நேற்று மே 24 ரெக்ஸஸ் மாநிலத்தில் 18 வயது இளைஞன் சிறார்கள் கற்கும் பாடசாலை வகுப்பினுள் நுழைந்து தாக்குதல் நடத்தியதில் பத்து பதினொரு வயதான 19 மாணவர்களும் இரு ஆசிரியர்களும் கொல்லப்பட்டு உள்ளனர். அமெரிக்காவில் துப்பாக்கிகள் மீதான கட்டுப்பாட்டை கொண்டு வருவதற்கு ரிப்பப்பிளிக்கன் – குடியரசுக் கட்சியினர் கடும் எதிர்ப்பைத் தெரிவிப்பது மட்டுமல்ல ஆசிரியர்களுக்கு துப்பாக்கிகள் வழங்க வேண்டும் என்றும் கோருகின்றனர். இப்பின்னணியில் கவனர் கிரேக் அப்போட் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்திக் கொண்டிருக்க பெற்ரோ ஓ ரொர்க், கவனருக்கு எதிராக தேர்தலில் போட்டியிட்டவர், மாநிலத் தலைவர்கள் துப்பாக்கி வன்முறைகளுக்கு எதிராகக் எதுவும் செய்யவில்லை என்று சத்தமிட்டார். அதற்குப் பதிலாக சத்தமிட்ட அப்பகுதியின் மேயர் டொன் மக்லவ்லின் “நீ ஒரு வருத்தம் பிடித்தவன் பெட்டை நாய்க்குப் பிறந்தவன்” என்று சத்தமிட்டதுடன் அவனைப் பிடித்து வெளியேற்றும்படியும் உத்தரவிட்டார். இத்தனை குழந்தைகள் கொல்லப்பட்டும் அதற்கு முதல் வாரம் பத்துப்பேர் இனவெறியனொருவனால் கொல்லப்பட்டும் யாரும் யாருடைய வீட்டையும் எரிக்கவும் இல்லை. யாரும் யாரையும் அரை நிர்வாணமாக்கவும் இல்லை.

இங்கு பிரித்தானியாவில் கோவிட் காலத்தின் ஒரு மூன்றுமாத காலாண்டில் பெற்ற 200 பில்லியன் பவுண் கடனில் பத்துவீதம் 20 பில்லியன் பவுண் பிரித்தானிய பிரதமர் பொறிஸ்ஜோன்சனின் சகபாடிகளுக்கு லஞ்சமாக, ஊழலாக, மோசடியாக வழங்கப்பட்டது. தினம் தினம் நூற்றுக் கணக்கில் ஆயிரக்கணக்கில் கோவிட் காரணமாக பிரித்தானிய மக்கள் உயிரிழந்துகொண்டிருக்கையில் மரணப்படுக்கையில் உள்ளவரை இரத்த உறவுகள் கூட அருகிருந்து வழியனுப்பி வைக்க முடியாமல், நாட்டை முடக்கி வைத்திருந்தார் பிரதமர் பொறிஸ்ஜோன்சன். ஆனால் அந்த முடக்கத்தின் போது மகாராணியின் கணவர் பிலிப்பின் மரணத்தின் போது கூட ஒன்றல்ல இரண்டல்ல இருபது வரையான லொக்டவுன் பட்டிகளை பிரதமரின் உத்தியோகபூர்வமான வாஸஸ் தலமான 10 டவுனிங் ஸரீற்றில் பொறிஸ் ஜோன்சன் கொண்டாடி கூத்தடித்துள்ளார். இதனை எழுதும் போது கூட பிரித்தானியாவில் சராசரியாக 200 பேர்வரை கோவிட் காரணமாக இறந்துகொண்டுள்ளனர். ஆனால் பிரித்தானியாவில் கொன்சவேடிவ் கட்சியினர் இன்னமும் கோர்ட்டும் சூட்டும் போட்டு தினாவெட்டாகத் தான் திரிகிறார்கள். யாரும் யாருடைய வீட்டையும் எரிக்கவும் இல்லை. யாரும் யாரையும் நிர்வாணமாக்கவும் இல்லை.

பிலிப்பைன்ஸில் மிக மூர்க்கத்தனமாக லஞ்சம், ஊழல், போதைவஸ்து பாவனையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பிரபலமான ஜனாதிபதி ரொட்றிகோ டுரர்ரே இம்மாதம் முற்பகுதியில் இடம்பெற்ற தேர்தலில் லஞ்சம், ஊழலுக்கு பெயர்பெற்ற தம்பதிகளின் மகனிடம் பதவியைக் கையளிக்க வேண்டியதாயிற்று. இத்தேர்தலில் லஞம், ஊழல், மோசடிக்கு பெயர் போன பேர்டினன்ட் – இமெல்டா மார்க்கோஸ் தம்பதிகளின் புதல்வன் பொங்பொங் மார்க்கோஸ் அமோக வெற்றி பெற்றுள்ளார்.

இலங்கையினதும் சர்வதேசத்தினதும் சூழல் இலங்கை மக்கள் அரசியல் விழிப்படைந்து விட்டார்களா? அல்லது ஏனைய நாடுகளில் மக்கள் முட்டாள்களாகி விட்டார்களா? என்ற குழப்பத்தையே தருகின்றது.

அமெரிக்காவின் தொடக்க பள்ளியில் துப்பாக்கி சூடு – 19 சிறுவர்கள் பலி !

அமெரிக்காவில் அடிக்கடி துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்து வருகிறது. பள்ளி, வணிக வளாகங்கள், சூப்பர் மார்க்கெட் போன்ற இடங்களில் துப்பாக்கி சூடு நடக்கிறது.

இந்த நிலையில் அமெரிக்க வரலாற்றில் பள்ளியில் மோசமான துப்பாக்கி சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

டெக்சாஸ் மாகாணம் உவால்டே நகரில் தொடக்க பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான மாணவர்கள் படித்து வருகிறார்கள்.

இப்பள்ளியில் வாலிபர் ஒருவர் துப்பாக்கியுடன் நுழைந்தார். அவர் திடீரென்று அங்கிருந்த மாணவர்களை நோக்கி சரமாரியாக சுட்டார். இதனால் மாணவர்கள் அலறியடித்தபடி ஓடினார்கள். துப்பாக்கி சூட்டில் மாணவர்கள் பலர் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தனர்.

அதேபோல் ஆசிரியர்கள் சிலரும் காயம் அடைந்தனர். துப்பாக்கி சூடு பற்றி தகவல் அறிந்ததும் போலீசார் பள்ளிக்கு விரைந்து வந்தனர். போலீசார் பள்ளியை சுற்றிவளைத்து கண்காணிப்பில் ஈடுபட்டனர். அவர்கள் பள்ளிக்குள் நுழைந்து வாலிபரை பிடிக்க முயற்சித்தனர். அப்போது போலீசார் துப்பாக்கி சூட்டில் வாலிபர் பலியானார்.

வாலிபர் நடத்திய கொடூர துப்பாக்கி சூட்டில் 19 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் ஒரு ஆசிரியர் உள்பட 2 பேர் பலியானார்கள். படுகாயம் அடைந்த மாணவர்கள் பலரை போலீசார் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பள்ளி முன்பு பெற்றோர்கள் குவிந்தனர். உயிரிழந்த மாணவர்களின் பெற்றோர் கதறி அழுதது நெஞ்சை உலுக்குவதாக இருந்தது. பள்ளிக்குள் இருந்த மாணவர்களை போலீசார் வெளியே அழைத்து வந்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

பள்ளியில் துப்பாக்கி சூடு நடத்திய வாலிபர் அப்பகுதியை சேர்ந்த சால்வடார் ராமோஸ் என்பது தெரியவந்தது. 18 வயதான இவர் தனது பாட்டியை வீட்டில் வைத்து கொலை செய்துவிட்டு பின்னர் தொடக்கப்பள்ளிக்குள் புகுந்து துப்பாக்கி சூடு நடத்தி உள்ளார்.

துப்பாக்கி சூடு நடத்திய வாலிபரின் மற்ற விபரங்களை போலீசார் தெரிவிக்கவில்லை. இதனால் அவர் துப்பாக்கி சூடு நடத்தியதற்கான காரணம் பற்றி தெரியவில்லை. பலியான மாணவர்கள் 5 முதல் 11 வயதுக்குட்பட்டவர்கள் என்று பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு: தன்னிறைவுப் பொருளாதாரமா? திறந்த பொருளாதாரக் கொள்கையா?: மாணவர் பட்டி மன்றம்

இலங்கை தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு தன்னிறைவுப் பொருளாதாரத்திற்கு மாற வேண்டுமா? இல்லையேல் திறந்த பொருளாதாரக் கொள்கையையே கடைப்பிடிக்க வேண்டுமா என்ற தலைப்பில் லிற்றில் எய்ட் மாணவர்கள் பட்டிமன்றம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர். மே 25 பிற்பகல் 2:30 மணிக்கு கிளிநnhச்சி திருநகர் கனகராசா வீதியில் உள்ள லிற்றில் எய்ட் மண்டபத்தில் இப்பட்டி மன்றத்தோடு கலைநிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அண்மையில் வெளியிடப்பட்ட லிற்றில் எய்ட் சஞ்சிகை பற்றிய விமர்சனமும் நடனம், குழுப்பாடல், தனிப்பாடல் என்பனவும் இந்நிகழ்வில் இடம்பெறவுள்ளது.

அரசியல்வாதிகளும், பல்கலைக்கழகங்களும் கூட நாட்டின் இன்றைய பொருளாதார நெருக்கடிக்கான தீர்வு பற்றி சிந்திக்காத சூழலில் உயர்தரம் கற்கின்ற மாணவர்களின் இந்தக் கன்னி முயற்சி நிச்சயம் மற்றையவர்களையும் இவ்வாறான கருத்துப் பரிமாற்றங்களை மேற்கொள்ளவும் சிந்திக்கவும் தூண்டும் என லிற்றில் எய்ட் அமைப்பின் ஸ்தாபகர் த ஜெயபாலன் தெரிவிக்கின்றார்.

சமூக விழிப்புணர்வு விடயங்களில் ஆர்வம்காட்டி வரும் லிற்றில் எய்ட் மாணவர்கள் கற்றலுடன் நின்றுவிடாமல் தமிழ் பிரதேசங்களில் தலைதூக்கிவரும் சமூகப் பிரச்சினைகளிலும் தங்கள் கவனத்தை செலுத்தி வருகின்றனர். இதனை வெளிப்படுத்தும் வகையில் இளவயது திருமணங்கள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நாடகம் ஒன்றும் மேடையேறவுள்ளது. வீதிகளில் வேகத்தை கடைப் பிடிக்கக் கோரும் விழிப்புணர்வுப் நடவடிக்கைகளிலும் லிற்றில் எய்ட் மாணவர்கள் அண்மையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வுக்கு கணணி தொழில்நுட்பவினைஞரான செல்வி தி குகாயினி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கின்றார். பெண்கள் தொழில்நுட்பத்துறையில் கால்பதிப்பது அரிதானதொரு சூழலில் இவர் அத்துறையில் ஊன்றிப் பயணித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் காலங்களில் மாணவர்கள் கல்விக்கு அப்பால் பல்திறமைகைளயும் வளர்த்துக்கொண்டு தங்கள் ஆளுமைகளை விருத்தி செய்வதனூடாக மட்டுமே தங்கள் வாழ்க்கையில் வெற்றி பெறமுடியும் எனத் தெரிவிக்கும் லிற்றில் எய்ட் இயக்குநர் ஹம்சகௌரி சிவஜோதி, லிற்றில் எய்ட மாணவர்கள் தாங்கள் வாழும் சமூகத்தின் மீது அக்கறையோடு செயற்படுவது தனக்கும் லிற்றில் எய்ட்க்கும் பெருமை சேர்ப்பதாக தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

லிற்றில் எய்ட் நிர்வாகமும் மாணவர்களும் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோமோ அதனை அவர்கள் திறம்படச் செய்வது தங்களுக்கு மகிழ்ச்சியைத் தருவதாக லிற்றில் எய்ட் அமைப்பின் தலைவர் கதிர் நந்தகுமரன் தெரிவிக்கின்றார். அவர் தேசம்நெற்க்கு மேலும் தெரிவிக்கையில் சமூகம் சார்ந்த செயற்பாடுகள் அருகி வருகின்ற சூழலில் இவ்வாறான விவாதங்கள், சமூக விழ்ப்புணர்வு நாடகங்கள், மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் ஆடல், பாடல்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட வேண்டும். இவை பரவலாக பலரையும் இவ்வாறு செய்யத் தூண்ட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

அண்மையில் லிற்றில் எய்ட் நிறுவனத்தைச் சுற்றியுள்ள கிராமத்தவர்கள் பயன்பெறும் வகையில் லிற்றில் நூலகம் அமரர் இராசமணி பாக்கியநாதனின் ஞாபகார்த்தமாக அவருடைய மகன் சிறிகுமார் பாக்கியநாதன் திறந்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வுகளில் கலந்து சிறப்பித்து வளரும் தலைமுறையினருக்கான ஊக்கத்தை வழங்குமாறு லிற்றில் எய்ட் மாணவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஜோ பைடன் உள்ளிட்ட 963 அமெரிக்கர்களுக்கு எதிராக ரஷ்யா பயணத்தடை !

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உள்ளிட்ட 963 அமெரிக்கர்களுக்கு எதிராக ரஷ்யா பயணத்தடை விதித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 88 நாளாகிறது.

போர் தொடங்கிய நாள் முதல் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்கள் மற்றும் இராணுவ தளபாடங்களை வழங்கி வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக உக்ரைன் நாட்டின் படை வலிமையை அதிகரிக்கும் வகையில் அந்நாட்டிற்கு 4,000 கோடி டொலர் நிதியுதவி வழங்கும் மசோதாவில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கையொப்பம் இட்டுள்ளார்.

இவ்வாறான நடவடிக்கைகளால் ரஷ்யா அமெரிக்காவுடன் மோதல் போக்கை கையாண்டு வருவதுடன், தற்போது ஜோ பைடன், வெளியுறவுத் துறை அமைச்சர் அன்டனி பிளிங்கன் உட்பட 963 அமெரிக்கர்களுக்கு எதிராக பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவுஸ்ரேலியா நாடாளுமன்ற தேர்தல் – இலங்கையை பூர்வீகமாக கொண்ட தமிழ்பெண் வெற்றி!

அவுஸ்திரேலிய வரலாற்றில் முதன் முறையாக இலங்கை தமிழ் பூர்வீகத்தை கொண்ட மிஷேல் ஆனந்தராஜா பாராளுமன்ற உறுப்பினராக தெரிந்தெடுக்கப்ட்டுள்ளார்.

 

இவர் தெல்லிப்பளையை சேர்ந்த பெற்றோருக்கு தென் ஆபிரிக்காவில் பிறந்து UK ஊடாக அவுஸ்திரேலியாவுக்கு வந்தவர். இவரின் பூர்வீகம், குடும்ப விபரம் என்பன தேர்தல் முடியும் வரை மிகவும் இரகசியமாக வைக்கப்பட்டிருந்தாலும் பல பத்திரிகைகள் இவரின் பெயரை வைத்து இவர் ஒரு இந்தியர் என்று கூறி வந்தன.

இவர் ஒரு மருத்துவராகவும் மருத்துவ ஆராய்ச்சியாளராகவும்  கடமை புரிந்து வந்துள்ளார்.

இலங்கையின் நிலை ஏனைய நாடுகளுக்கும் ஏற்படலாம் – எச்சரிக்கிறது சர்வதேச நாணய நிதியம்!

அரசாங்கங்கள் வறிய மக்களிற்கு உதவமுன்வராவிட்டால் இலங்கையின் நிலை உலகின் ஏனைய நாடுகளில் உருவாகலாம் என சர்வதேச நாணயநிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா எச்சரித்துள்ளார்.

உணவு எரிபொருட்களின் விலைகளை மானிய அளவில் சமூகத்தின் வறிய மக்களிற்கு அரசாங்கங்கள் வழங்கவேண்டும்,அரசாங்கங்களின் உரிய ஆதரவு இல்லாவிட்டால் இலங்கையின் நிலை ஏனையநாடுகளில் உருவாகலாம்.

உலகம் முழுவதும் வாழ்க்கை செலவு அதிகரிப்பால் மக்கள் நெருக்கடியில் சிக்குண்டுள்ளனர்.
மக்களிற்கு அவசியமான உதவிகளை மிகவும் தெரிவுசெய்யப்பட்ட முறையில் வழங்கவேண்டும் மானியங்களை மக்களிற்கு நேரடியாக வழங்கவேண்டும்.

மேலும் வாழ்க்கை செலவு தொடர்பில் இரண்டு முன்னுரிமைகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் ஒன்று சமூகத்தின் வறிய மக்கள் – அவர்களே உணவு, எரிபொருள் விலை அதிகரிப்பினால் தற்போது நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
இரண்டாவது முன்னுரிமை உக்ரைன் யுத்தத்தினால் மோசமாக பாதிக்கப்பட்ட வர்த்தகங்களிற்கு வழங்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

‘கோட்டா கோ ஹோம்’ அல்ல ‘ஸ்றிலங்கா பெர்ஸ்ற்!’, ‘ரூறிஸ்ற் ஹம் ஹோம்!!’ அன் ‘மேட் இன் சிறிலங்கா!!!’ பணவீக்கம் என்பது அடிப்படையில் தவறான பொருளாதார புரிதல்!

‘இன்று மே 21ம் திகதி முதல் குழந்தைகளின் பால்மாவுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டு கடைகளில், சுப்பர்மாக்கற்களில் பால்மா தட்டுக்கள் காலியாகிக் கிடக்கின்றது. கைக் குழந்தைகளின் பெற்றோர் பால்மாவுக்காக கடை கடையாக ஏறி இறங்குகின்றனர். ஏற்கனவே பால்மா உற்பத்தி குறைந்திருந்த நிலையில் பால்மா அருந்திய குழந்தைகளில் பற்றீரியா தொற்று ஏற்பட்டதால் குறிப்பிட்ட நிறுவனம் தன்னுடைய பால்மாக்களை உடனடியாக மீளப்பெற்றது நிலைமையை மோசமடையச் செய்துள்ளது. அதனால் ஜனாதிபதி இராணுவத்தை உற்பத்தி மற்றும் விநியோகத்தில் ஈடுபடுத்துவதாக அறிவித்துள்ளார்’.

இந்நிலை இலங்கையில் அல்ல அமெரிக்காவில் ஏற்பட்டுள்ளது. பிரித்தானியாவில் சமையல் எண்ணைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. கோதுமை மாவுக்கான நெருக்கடி உலகத்தை நெருக்கப் போகின்றது. இந்தியா கோதுமை மற்றும் உணவுப் பொருட்களுக்கான ஏற்றுமதியை தடைசெய்துள்ளது. இன்றைய பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் நெருக்கடிகள் இலங்கைக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டது அல்ல. அவ்வாறு குறுக்கிப் பார்ப்பது மிகவும் ஆபத்தான பின் விளைவுகளுக்கு நாட்டை இட்டுச் செல்லும்.

உலக வங்கியும் சர்வதேச நாணய நிதியமும் சர்வதேச பொருளாதார பயங்கரவாதிகள்:

பின்விளைவுகளை ஆழமாக நோக்காமல், இலங்கையில் அரசியல் மாற்றத்தை கொண்டுவரப் போவதாகக் கூறி நடக்கும் போராட்டங்கள்; உலகப் பொருளாதாரப் பயங்கரவாதிகளான உலக வங்கியிடமும் சர்வதேச நாணய நிதியத்திடமும் இலங்கையைத் தள்ளிவிட்டுள்ளன. பழைய ஆனால் மீண்டும் புதிதாகப் பதவியேற்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சர்வதேச நாணய நிதியத்தை திருப்திப்படுத்துவதற்கு ஏற்ற வகையில் இலங்கை மக்களை தயார்படுத்த ஆரம்பித்துவிட்டார். நிலைமைகள் மோசமடையும் என்பதை மெல்ல மெல்ல அவிழ்த்து வருகின்றார். ஆனால் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளைப் பற்றி அவர் வாய் திறக்கவில்லை. ஆனால் அரையும் குறையுமாக தங்களுக்கே புரியாமல் செய்தி வெளியிடும் ஊடகங்கள், சர்வதேச நாணய நிதியம் கோத்தபாய ராஜபக்ச பதவி விலகினால் தான் தாங்கள் உதவமுடியும் என அறிவித்திருப்பதாக செய்தியை வெளியிட்டு வருகின்றன. சர்வதேச நாணய நிதியமும் உலக வங்கியும் நாட்டை சூறையாடுவதற்கு யார் அனுமதித்தாலும் அந்நாடுகளுக்கு தங்கள் ‘உதவிக் கரத்தை’ நீட்டும். உலகில் இருந்த சர்வதிகாரிகள், கொடுங்கோலர்கள் எல்லோருக்கும் வாரி இறைத்து அந்நாடுகளைச் சுரண்டுவது தான் உலக வங்கியும் சர்வதேச நாணய நிதியத்தியமும் இதுவரை செய்து வந்தது. அதனை அவர்கள் பசுத்தோல் போர்த்திக் கொண்டு செய்வார்கள்.

ஏப்ரல் 23இல் சர்வதேச நாணய நிதியமும் உலகவங்கியும் இளவேனிற்கால சந்திப்பை வோஷிங்டனில் மேற்கொண்டன. அதில் இலங்கையின் நிதியமைச்சர் அலி சபாரி, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கேயும் கலந்துகொண்டனர். இச்சந்திப்பின் பின் சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட செய்தி அறிக்கை: Going forward, the IMF team will support Sri Lanka’s efforts to overcome the current economic crisis by working closely with the authorities on their economic program, and by engaging with all other stakeholders in support of a timely resolution of the crisis. – முன்நோக்கிச் செல்ல சர்வதேச நாணய நிதியக் குழு இலங்கை தனது பொருளாதார நெருக்கடியில் இருந்து வெளிவருவதற்கு ஏனைய பங்குதாரர்களோடும் இணைந்து அதிகாரிகளின் பொருளாதாரத் திட்டத்திற்கு ஆதரவு அளித்து தக்க தருணத்தில் நெருக்கடியை முடிவுக்கு கொண்டுவரும்”. இந்தச் செய்தி அறிக்கை வெளியிடப்பட்டு மூன்று வாரங்களில் மேற்குலகுக்கு சார்பான ரணில் விக்கிரமசிங்க பதவிக்குக் கொண்டுவரப்பட்டார். ஆயினும் பொருளாதார நெருக்கடிக்கு உதவத்தயார்; பாதிக்கப்படும் ஏழை பாளைகளின் நெருக்கடியை கருத்தில் கொண்டு அவர்களுக்கு உதவத் தயார் என்றெல்லாம் அறிக்கை வெளியிட்டு ஒரு மாதமாகியும் பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு எட்டப்படவில்லை.

அவ்வாறு உடன்பாடு எட்டப்படாத விடயம் என்ன? யார் அந்த ஏனைய பங்கு தாரர்கள்? சர்வதேச நாணய நிதியமும் உலக வங்கியும் உலகெங்கும் சோசலிசக் கொள்கைகள் உருவாகிவிடக்கூடாது, நாடுகள் தங்கள் எல்லைகளை தங்கள் நாட்டு (அமெரிக்க – பிரித்தானிய மற்றும் நாடுகளுக்கு இவர்கள் தான் ஏனைய பங்குதாரர்கள்) நிறுவனங்களுக்கு திறந்துவிட்டு திறந்த சந்தைப் பொருளாதாரத்தை கடைப்பிடிக்க வேண்டும். இந்நாடுகள் தொடர்ந்தும் நவகாலனிகளாக இருக்க வேண்டும். அதற்காக இந்த மக்களின் அடிப்படைத் தேவைகளில் கை வைத்தாலும் கேள்வி எழுப்பக்கூடாது. எரிபொருள், மின் சக்தி, விவசாயத்திற்கு வழங்கப்படும் மானியங்கள் குறைக்கப்பட வேண்டும் அல்லது முற்றாக நிறுத்தப்பட வேண்டும். இலவசக் கல்வி மற்றும் இலவச சுகாதாரம் என்பனவற்றுக்கு படிப்படியாக முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். இந்நாடுகளில் மக்கள் எவ்வளவு சுரண்டப்பட்டாலும் வறுமைப்பட்டாலும் பரவாயில்லை ஆனால் தாங்கள் அறவிடும் அறாவட்டியை ஒரு சதம் பாக்கி இல்லாமல் செலுத்த வேண்டும். இவை தான் இந்த பொருளாதார பயங்கரவாதிகளின் நிபந்தனை. இவர்கள் ஒன்றும் கோல்பேஸில் காற்று வாங்கவரும் போராளிகள் எதிர்பார்ப்பது போல் தேவதூதர்கள் அல்ல.

போராட்டகாரர்களுக்கு தமிழ் சொலிடாரிட்டியின் வேண்டுகோள் கேட்குமா:

உறுதியாக இருந்த இடதுசாரிகளின் நீண்ட போராட்டங்களினால் இலங்கை மக்கள் பல்வேறு அடிப்படை உரிமைகளைப் பெற்றிருந்தனர். இதனால் இலங்கை, அமெரிக்கா பிரித்தானியா போன்ற நாடுகளினால் கூட வழங்கமுடியாத இலவசக் கல்வியை பல்கலைக்கழகம் வரை வழங்குகின்றது. இலங்கையில் இலவச அடிப்படைச் சுகாதார கட்டமைப்புகள் குறிப்பிடத்தக்கன. விவசாயிகளுக்கான மானியங்கள், எரிபொருள் மானியங்கள் அடித்தட்டு மக்களுக்கும் குறைந்தபட்ச பாதுகாப்பையாவது வழங்கி இருந்தது.

ஆனால் அடுப்பில் இருந்து நெருப்பில் வீழ்ந்த கதையாக இலங்கையின் நிலைமை மாறி வருகின்றது. பொருளாதார நெருக்கடியில் இருந்த இலங்கை தற்போது சர்வதேச பொருளாதார பயங்கரவாதிகளின் பொறிக்குள் வீழ்ந்துகொண்டிருக்கிறது. காலிமுகத்திடல் போராட்டம் சர்வதேச நாணய நிதியத்திற்கும் உலக வங்கிக்கும் இலங்கையை தாரைவார்த்து கொடுப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டது போலவே தெரிகின்றது.

பிரித்தானியாவில் இருந்து இயங்கும் இடதுசாரி அமைப்பான தமிழ் சொலிடாரிட்டி என்ற அமைப்பு காலிமுகத்திடல் போராட்டத்திற்கு கொள்கையளவான ஆதரவை வழங்கிய போதும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நோக்கி பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துள்ளது. அவை அனைத்துமே சர்வதேச நாணய நிதியத்த்தினதும் உலக வங்கியினதும் கொள்கைகளுக்கும் அவர்களுடைய நிபந்தனைகளுக்கும் முற்றிலும் எதிரானதாக உள்ளது. அனைத்து கடன்களையும் இரத்து செய்யுமாறு கோருவதோடு பெரு முதலாளிகளின் சொத்துக்கள் உட்பட ராஜபக்ச குடும்பத்தின் சொத்துக்களையும் பறிமுதல் செய்யக் கோருகின்றது. விவசாயிகளுக்காக மானியங்களை வழங்குவதுடன் மலையக தொழிலாளர்களின் நிலவுரிமையை உறுதி செய்யவும் கோருகின்றது. ஆனால் காலிமுகத்திடல் போராட்டம் இந்த நிபந்தனைகளைப் பற்றி எவ்வித கரிசனையும் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை.

கடன்களை திருப்பிச் செலுத்த முடியாது என இலங்கை அறிவிக்க வேண்டும்:

இலங்கை அனைத்து கடன்களையும் இரத்து செய்ய வேண்டும். கடன்களை மீளக் கட்ட முடியாது என்பதை வெளிப்படையாகக் அறிவிக்க வேண்டும் என என்னுடைய முன்னைய பதிவுகளிலும் ஆணித்தரமாகக் குறிப்பிட்டு இருந்தேன். ஏற்கனவே பல தனிப்பட்ட கடன்களை கட்ட முடியாத நிலையில் அக்கடன்களை இலங்கை இரத்துசெய்துள்ளது. ஆனால் நாடுகளுக்கு இடையிலான பன்நிலைக் கடன்களை செலுத்த முயற்சிக்கின்றனர். இக்கடன்களையும் இலங்கை உடனடியாக இரத்து செய்ய வேண்டும். புதிதாகப் பதவியேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்க மேலும் கடன் வாங்கி, கடன்களை திருப்பிச் செலுத்த முயற்சிக்கின்றார். உலக வங்கியினதும் சர்வதேச நாணய நிதியத்தினதும் முகவராக இயங்கும் ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் நலன்களை முன்னிலைப்படுத்தவில்லை.

அவர் அமெரிக்க தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் ‘உல்லாசப் பயணிகள் இலங்கைக்கு வருவது பாதுகாப்பானதா என்று கேட்கப்பட்ட போது, “அவர்களும் காலிமுகத்திடலில் வந்து போராட்டத்தில் கலந்து கொள்ளலாம்” என்று குறிப்பிட்டார். அவருக்கு கேள்வியின் ஆழம் புரியவில்லை என்பதால் அதே கேள்வி திருப்பிக் கேட்கப்பட்ட போதும் ரணில் விக்கிரமசிங்க உல்லாசப் பயணிகளின் வருகையை வரவேற்று கருத்துத் தெரிவிக்கவில்லை. இலங்கை மக்கள் மீது அழுத்தங்களை இறுக்கி அவர்களை இயலாமையின் விழிம்பில் பணயம் வைத்து, தங்கள் நிபந்தனைகளுக்கு பணிய வைக்கவே அனைத்து முயற்சிகளையும் ரணிலும் – சர்வதேச நாணய நிதியமும் மேற்கொள்கின்றது.

இலங்கை ஆண்டுக்கு 7 முதல் 9 பில்லியன் டாலர்களை 51 பில்லியன் வெளிநாட்டு கடன்களை கட்டுவதற்கு செலுத்துகின்றது. அறவட்டிக்கு வாங்கப்பட்ட இக்கடன்களை தொடர்ந்தும் செலுத்தினால் பெற்றோல், மருந்து மற்றும் அத்தியவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கான டொலர் கையிருப்பு இருக்காது. அதனால் அரசு உடனடியாக அனைத்து கடன்களையும் ரத்து செய்ய வேண்டும். கடன்களை மீளச்செலுத்துவதற்கான மீள்வரையறை செய்வது இப்போதுள்ள நெருக்கடியை சற்றுத் தள்ளிப்போடவே வழிவகுக்கும். அரசு தற்போது கூட்டு முடிவை எடுப்பதாக இல்லை. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களின் நலனிலும் பார்க்க உலக வங்கியினதும் சர்வதேச நாணய நிதியத்தினதும் நலனிலேயே கூடுதலாக அக்கறைகொள்கின்றார்.

‘பணவீக்கம்’ மிகத் தவறான சொற்பாவனை – விலை வீக்கம் என்பதே சரியானது:

தமிழில் தற்சமயம் அடிக்கடி பயன்படுத்தப்படும் சொற்களில் ஒன்று ‘பணவீக்கம்’ இந்தச் சொல்லானது அடிப்படையிலேயே மிகத் தவறான சொல். ஆங்கிலத்தில் இன்பிளேஷன் – inflation என்ற சொல் பொருளாதாரத்தில் மிக முக்கியமானது. அது குறித்த காலப்பகுதியில் பொருட்களின் விலையுயர்வை குறிக்கும். இன்பிளேஷன் – inflation என்பது வீக்கத்தை குறிக்கும். எமது உடலில் ஏற்படும் வீக்கம் முதல் பலூனை ஊதுவது எல்லாமே இன்பிளேயர் – inflare என்ற லத்தீன் சொல்லில் இருந்து ஆங்கிலத்திற்குச் சென்றது. ‘காற்றடித்து பெரிதாவது’ என்பதை அது குறிக்கும். இதனை தமிழில் ‘பணவீக்கம்’ என்கின்றனர். அதன் தமிழாக்கத்தின்படி வீக்கம் என்பது ‘பெரிதாவது’. அதாவது ‘பணவீக்கம்’ என்பது பணத்தின் பெறுமதி அதிகரிப்பது என்றே அர்த்தப்படும். பணத்தின் பெறுமதி அதிகரிப்பது ஒரு பொருளாதாரத்திற்கு சாதகமான விடயம். ஆனால் அதனை புரிதல் இல்லாமல் பாவிக்கின்றனர். பணவீக்கம் என்பது ஆங்கிலத்தில் அப்பிரிசியேஷன் – appreciation என்பார்கள். அதாவது பணத்தின் பெறுமதி அதிகரிப்பது. பணத்தின் பெறுமதி ஒடுங்கினால் அல்லது வீழ்ந்தால் அதனை டிப்பிரிசியேஷன் – depreciation என்பார்கள். பதங்களின் உண்மையான அடிப்படையில் இலங்கையில் தற்போது ஏற்பட்டு இருப்பது பணஒடுக்கமும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட விலைவிக்கமும் ஆகும். இதனைப் புரியாமல் விலையுயர்வை பணவீக்கம் என்று குறிப்பிடுவதன் மூலம் பொருளாதாரத்தின் அடிப்படை விதிகளையே போட்டுக் குழப்புகின்றனர். பல்கலைக்கழகங்கள் இவை தொடர்பில் சொற்களஞ்சியத்தில் மாற்றத்தை கொண்டு வரவேண்டும்.

விலைகள் ஏன் உயர்கின்றது:

ஒரு நாட்டில் பொருட்களின் விலை அதிகரிப்பதற்கு மூன்று முக்கிய காரணங்கள் உண்டு: 1) பொருட்களின் சேவைகளின் உற்பத்திக்கான மூலப்பொருட்களின் (போக்குவரத்துச் செலவு உட்பட) விலை அதிகரிக்கின்ற போது – cost push inflation 2) பொருட்களுக்கான தேவை கேள்வி அதிகரிக்கின்ற போது – demand pull inflation 3) நாட்டின் பணத்தின் பெறுமதி வீழ்ச்சி அடையும் போது அதாவது பணஒடுக்கம் – currency depreciation ஏற்படும் போது (இறுக்குமதி செய்கின்ற) பொருட்களின் விலை அதிகரிக்கும். இலங்கையில் மட்டுமல்லாது கோவிட் தாக்கத்தில் இருந்து வெளிவரும் உலகின் பெரும்பாலான நாடுகளின் நிலை இதுவே.

கோவிட் காலத்தில் பெரும் வேலையிழப்புகள் ஏற்படும் என்று எதிர்பார்த்த போதும் அமெரிக்கா, பிரித்தானியா, இலங்கை போன்ற நாடுகளில் குறிப்பிடத்தக்க அளவுக்கு வேலையிழப்புகள் ஏற்படவில்லை. பெரும்பாலும் சம்பளம் வழங்கப்பட்டது. மேலும் அரச உதவிகளும் மற்றும் உதவிகளும் மக்களுக்கு கிடைத்தது. ஆனால் சாதாரண காலத்து செலவீனங்கள் அளவுக்கு அவர்களுக்கு செலவீனங்கள் ஏற்படவில்லை. நாடுகள் முடக்கத்தில் இருந்ததால் செலவழிப்பதற்கான வாய்ப்பும் இருக்கவில்லை. அதனால் முடக்கத்தில் இருந்து நாடுகள் தங்களைத் திறக்க ஆரம்பித்ததும் மக்கள் தாராளமாகவே செலவழிக்க ஆரம்பித்தனர். அதனால் பொருட்களுக்கான தேவையும் கேள்வியும் அதிகரித்தது. ஆனால் நாடுகள் திறக்கப்பட்ட வேகத்திற்கு தொழிற்காலைகள் திறக்கப்படவில்லை. உற்பத்திகள் குறைந்தது. உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் விநியோகத்திலும் தடங்கல் ஏற்பட்டது. குறிப்பாக உலகின் தொழிற்சாலையாக இருக்கும் சீனாவின் சில பகுதிகள் மாறி மாறி தொடர்ந்தும் முடக்கத்திலேயே இருக்கின்றது. அதனால் விநியோகத்தில் தடை அது பொருட்களின் விலையை மேலும் அதிகரித்தது. – Demand pull inflation.

கோவிட் முடிவில் ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்தன் மூலம் உலகில் எரிபொருட்களின் தட்டுப்பாடு ஏற்பட்டது. அனைத்து உற்பத்திக்கும் விநியோகத்திற்கும் எரிபொருள் தவிர்க்க முடியாதவொன்று. அதனால் பொருட்களின் விலை மேலும் எகிறியது. Cost push inflation.

ஒரு நாட்டின் நாணயத்தின் பெறுமதி இன்னுமொரு நாட்டின் நாணயத்தின் பெறுமதியோடு ஒப்பிட்டே தீர்மானிக்கப்படுகின்றது. இந்நிலையில் இலங்கை மத்திய வங்கி நிதி நிலையைச் சமாளிக்க ஒரு சோம்பேறித்தனமான முடிவை எடுத்தது. பணத்தை அச்சிட்டு (quantitative easing) புழக்கத்தில் விட்டது. இது பணத்தின் பெறுமதியை மேலும் வீழ்ச்சியடையச் செய்தது. பணத்தின் பெறுமதி வீழ்ச்சியடைய பணஒடுக்கம் (currency depreciation) ஏற்பட இறுக்குமதிப் பொருட்களுக்கு நாங்கள் செலுத்தவேண்டிய பணத்தின் அளவு அதிகரித்தது. பொருட்களின் விலைவீக்கமடைந்தது (விலையுயர்வு).

இலங்கையின் ஏற்றுமதி – இறக்குமதி வர்த்தகம்:

பணத்தின் பெறுமதி வீழ்ச்சி அடைவது அல்லது பணஒடுக்கம் முற்றிலும் மோசமானது அல்ல. இலங்கை ஏற்றுமதி வர்த்தகத்தை கூடுதலாக செய்யும் நாடாக இருந்திருந்தால் எமது பொருட்களின் விலை உலக சந்தையில் குறைந்திருக்கும். அதனால் ஏற்றுமதி அதிகரித்து இருக்கும். ஆனால் இலங்கை கூடுதலாக இறக்குமதியையும் மிகக் குறைந்தளவில் ஏற்றுமதியையும் செய்வதால் அதுவும் இலங்கைக்கு பாதகமானதாகி உள்ளது. ஒவ்வொரு நாடும் இறக்குமதியைக் குறைத்து ஏற்றுமதியை அதிகரிப்பதையே செயற்திட்டமாகக் கொண்டுள்ளது. முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனாலட் ட்ரம், சீனா அமெரிக்காவினுடைய பொருட்களை இறக்குமதி செய்யும் அளவைக் கூட்ட வேண்டும் என்று அந்நாட்டோடு ஒரு வர்த்தக யுத்தத்தையே மேற்கொண்டார். உலகமயமாதல் – globalization மூலம் தங்களை வளர்த்துக்கொண்ட பெரு முதலாளித்துவ நாடுகளான அமெரிக்காவும் பிரித்தானியாவும் அவற்றின் நட்பு நாடுகளும் தற்போது அதே உலகமயமாதல் தங்களுக்கு சாதகமாக இல்லை என்றதும் திறந்த சந்தைப் பொருளாதாரத்தோடு (open market economy) தங்கள் நாடுகளில் பொருளாதார பாதுகாப்பு கொள்கையை (protectionism) கொண்டு வருகின்றனர். அவர்கள் கோருவதெல்லாம் தாங்கள் உலகெங்கும் சென்று சுரண்டுவதற்கான உரிமையை மட்டுமே. ஆனால் ஆசிய, ஆபிரிக்க நாடுகள் தங்கள் நாடுகளுக்குள் பொருட்களை கொண்டுவரக்கூடாது.

அதனால் சர்வதேச நாணய நிதியமும் உலக வங்கியும் இலங்கை போன்ற நாடுகள் ஏற்றுமதி செய்வதை செய்வதை ஒரு போதும் ஊக்கப்படுத்தாது. அவர்களை இறக்குமதியாளர்களாகவும் கடன்காரர்களாகவுமே வைத்திருக்கும். சிறிமாவோ பண்டாரநாயக்க பிரதமராக இருந்த 1970க்களில் கொண்டுவரப்பட்ட கடுமையான தன்னிறைவுப் பொருளாதாரக் கொள்கையால் 1977இல் மட்டும் இலங்கையில் ஏற்றுமதி – இறக்குமதி வர்த்தகத்தில் ஏற்றுமதி கூடுதலாக இருந்தது. ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம் சக 3.6 வீதமாக இருந்தது. அதனைத் தொடர்ந்து ஜே ஆர் ஜெயவர்த்தனாவின் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்ததும் 1980இல் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தக விகிதாசாரம் சய (எதிர்மறையானது) 22.5 வீதமானது. இன்று வரை இந்த ஏற்றுமதி இறக்குமதி வர்த்தக விகிதாசாரம் எதிர்மறையாகவே உள்ளது. தற்போது இது சய மூன்று வீத்திலும் குறைந்திருக்கும்.

இப்பொழுது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை நாங்கள் பயப்படும் அளவுக்கு ஆபத்தானது அல்ல. இச்சூழலை சாதகமாக்கவும் வாய்ப்பு உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகள் வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடந்த வெளிநாட்டவர், தற்போது உலகம் சுற்ற விரும்புகின்றனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள நாணய ஒடுக்கும் அல்லது நாணயத்தின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி இலங்கையின் உல்லாசப் பயணத்துறைக்கு ஒரு வரப்பிரசாதம். இலங்கைக்கு அந்நியச் செலவாணியை ஈட்டித்தரும் முக்கியமான துறை இது. போராடுகிறோம் என்ற பெயரில் சர்வதேச நாயண நிதியத்திற்கும் உலக வங்கிக்கும் நாட்டை தாரைவார்க்காமல், எங்கள் நாட்டுக்கு வந்து குறைந்த செலவில் எம் நாட்டின் அழகை ரசியுங்கள். எங்கள் கலை கலாச்சாரங்களை அறியுங்கள் என்று உல்லாசப் பயணிகளுக்கு செங்கம்பள வரவேற்பளிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு போராடுகிறோம், எரிக்கிறோம், கொழுத்துகிறோம் என்பதெல்லம் கஞ்சி ஊத்தாது.

இப்பொருளாதார நெருக்கடியை ஒவ்வொருவரும் நாட்டிற்கு சாதகமானதாக்க வேண்டும். நாட்டினை தற்சார்புப் பொருளாதாரத்தை நோக்கி நகர்த்த வேண்டும். உள்ளுர் உற்பத்திகள் ஊக்குவிக்கப்பட வேண்டும். அதரிக்கப்பட வேண்டும். தரமாக்கப்பட வேண்டும். அத்தியவசியமற்ற சர்வதேச பொருட்களை கொக்கோ கோலா முதல் பஜ்ரோ வரை மக்கள் நிராகரிக்க வேண்டும். இவற்றின் இறக்குமதிகள் தடுக்கப்பட வேண்டும். ‘மேட் இன் சிறிலங்கா – made in Sri Lanka’ என்ற சொல்லுமளவிற்கு பல்கலைக்கழகங்கள் உள்ளுர் உற்பத்தியை நோக்கி நாட்டை நகர்த்த வேண்டும்.

யாழ் பல்கலைக்கழக உப வேந்தரின் ஆதங்கம்:

இது பற்றி யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எஸ் சற்குணராஜா தனது ஆழமான விசனத்தை வெளிப்படுத்தி உள்ளார். தமிழ் அரசியல் தலைவர்களை பிச்சைக்கராரர் என்றும் முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரனை ‘கொழும்பு செவன்’ இறக்குமதி என்றும் கடுமையாகத் தாக்கி உள்ளார். வடக்கு – கிழக்கு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் ஒருவர் இவ்வளவு துணிச்சலாக தனது கருத்தை வெளிப்படுத்தி இருப்பது இதுவே முதற் தடவை என நினைக்கிறேன். சில வாரங்களுக்கு முன் அவர் ஆற்றிய உரையில்: “இப்போது வோஷிங்டனில் இருந்து பத்தரமுல்ல வரை பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்பவர்கள் ஆண்களோ பெண்களோ most of them GCE(O/L) qualified இல்லை. அவர்களால் எப்படி எங்களை lead பண்ண இயலும். blind serve the blind என்று சொல்வார் என்னுடைய மாஸ்டர். நாங்கள் தான் எங்களை lead பண்ண வேண்டும். எங்கட பலம் strength என்ன என்று பார்க்க வேண்டும். எங்களுடைய பலவீனம் weakness என்ன என்று பார்க்க வேண்டும். எங்கட தமிழ் கலாசாரத்தில தமிழ் கலாசாரத்தில, சுதந்திரத்தைப் பற்றி கதைக்கிறத விட துரோகிய பற்றி கதைக்கிறதுதான் கூட. Parliment வேண்டாம் pajero வேண்டாம் permit வேண்டாம் extra disel வேண்டாம் என்றெல்லாம் சும்மா சொல்றது. எங்களுடைய அரசியல்வாதிகள் எல்லாம் beggars (பிச்சைக்காரர்கள்). ஏன் நீங்கள் பங்ளோவில இருக்கிறியல்.

இன்றைக்கு ஆயிரம் விதவைகள் இருக்கிறார்கள் கிளிநொச்சி மாவட்டத்தில் மாத்திரம். Women lead families எங்களிடம் ஒரு பிளானும் இல்ல. நாங்கள் அடுத்த மாகாண சபை வருதென்றால் உடனே வேர்த்து விறுவிருத்து statementவிடத் தொடங்கிடுவோம். மோடி, அம்பேத்கர் அவங்க தங்கட ambassador இல்ல வாராங்க. நாங்க அந்நியத்தை நாடுறம்.

இன்றைக்கு மினி யாழ்ப்பாணம் எங்கிருக்கு. வெள்ளவத்தையில் இருக்கு. விட்ட நிலத்தில் சீவிக்க ஆட்களில்லை. எங்களுக்கு நாட்டம் அங்க. கொழும்பு செவன் வடக்கையும் கிழக்கையும் கண்டுகொள்ளயில்ல. ஆனால் எங்களுடைய weakness ஆடி… அடி… அடி… அடிச்சால் எல்லாத்தையும் weak ஆக்கிக் கொடுத்தால் எதிரிக்கு சுகம். இப்ப நாங்கள் politicianனையும் கொழும்பில் இருந்து import பண்ணற அளவுக்கு போய்ட்டம். நாங்க அந்நியத்தை நாடினால் என்ன நடக்கும்? இப்ப இருக்கும் economic இந்த problem எங்க கொண்டு போய் முடிக்கும் என்று தெரியாது. ஒருவர் ஒருவர் அடிச்சுக் கொல்லலாம், இன்னும் கொஞ்ச நாளில். Body guard போட்டுத் தடுக்க இயலாது. நடக்கலாம். இதெல்லாம் கன நாடுகளில் நடந்திருக்கு. இப்படியே போனால் என்ன நடக்குமோ எங்களுக்கு தெரியாது. எங்களுக்கு மார்ட்டின் லூதர் கிங் வேணும். மொரார்ஜி தேசாய் வேணும். மாவோ சேத்துங் வேணும், லெனின் வேணும்” என்று தமிழ் மக்களிடம் சீரான ஒரு அரசியல் தலைமையில்லாத ஆதங்கத்தைக் கொட்டினார்.

துணைவேந்தர் எஸ் சற்குணராஜா தொடர்ந்தும் குறிப்பிடுகையில்: “எத்தனை சாம்ராஜ்யங்கள் உலகத்தில் இருந்திருக்கு. பாபிலோனியா சாம்ராஜ்யம். இன்றைக்கு பாருங்கள் ஈராக் எப்படி இருக்கிறதென்று? எகிப்திய சாம்ராஜ்யம் எப்படியிருக்கு? இன்றைக்கு பிரிட்டன் மூன்றாம் உலக நாடாக போயிருக்கும், Northsea oil கண்டுபிடிக்காட்டி. நாம் deserving ஆக இருந்தால் எம்மை யாரும் அடிமைப்படுத்த இயலாது. இது natural law. இதில் பெண் என்றால் என்ன? ஆண் என்றால் என்ன?

சுதந்திர சரித்திரத்தை இவர்கள் சுதந்திரத்திற்கு பின்தான் கதைக்கிறார்கள். எமக்கு 2000 ஆண்டு 3000 ஆண்டு history இருக்கிறது. நல்லுரடிக்கு போனால் ஆட்கள் தரிசனத்திற்கு போகிறார்கள். பெரிய பெரிய தலங்களுக்கு எல்லாம் தரிசனத்திற்கு போகிறார்கள். ஆனால் அதில பிச்சைக்காரரகள் எப்பொழுதும் அங்கு இருக்கிறார்கள். 24 மணித்தியாலயமும். ஆனால் அவர்களுக்கு ஏதாவது ஆத்ம சித்தி கிடைத்ததா என்றால் இல்லை. 24 மணித்தியாலயமும் அந்தத் தளத்தில் இருக்கிறார்கள். ஏன் என்றால் அவர்களின் சிந்தனை முழுவதும் ரொட்டித் துண்டும் பிளேன் டீ யும். உயர்ந்த சிந்தனை இல்லை. Vision தான் முதல் எங்களுடைய பலம். எங்களுக்கு ஒரு பாரம்பரியம் இருக்கிறது. எங்களுக்கு ஒரு கலை இருக்கு, எங்களுக்கு ஒரு அழிவில்லா மொழி இருக்கு. அழிவில்லாத மொழி எங்களுக்கு. அப்படி பொக்கிஷங்கள் இருக்கு. இன்றைக்கு எங்களுக்கு knowledge நிறைய வேணும்” என்று சொல்லி தமிழ் மக்களில் மாற்றத்தை வேண்டி எஸ் சற்குணராஜா தன்னுரையை முடித்தார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அமைச்சர்கள் காலிமுகத்திடல் போராளிகள் உட்பட அனைவரும் ஒரே குரலில் சிறிலங்கா பெஸ்ற் – Sri Lanka First, ருறிஸ்ற் ஹம் ஹோம் – Tourists Come Home, மேட் இன் சிறிலங்கா – Made in Sri Lanka என்ற கோசங்களை முன் வைக்க வேண்டும். எந்தக் கடனையும் மீளச் செலுத்த முடியாது என அறிவிக்க வேண்டும். இலவசக் கல்வியை வழங்கும் பல்கலைக்கழகங்கள் அந்நாட்டை தோள்களில் தாங்கக் கூடிய கல்விச் சமூகத்தை உருவாக்க வேண்டுமெயொழிய பட்டத்தை பெற்றபின் வேலையையும் வாங்கித் தரச்சொல்லி போராடும் சோம்பேறிக் கூட்டத்தை உருவாக்கக் கூடாது. அப்படிச் செய்தால் நிச்சயம் இலங்கை சுபீட்சமான எதிர்காலத்தை நோக்கிச் செல்லும்.

விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு – எலான் மஸ்க் மீது குற்றச்சாட்டு !

உலகப் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்று எழுந்துள்ளது.
கடந்த 2016-ஆம் ஆண்டு அவர் தனி விமானத்தில் பறந்தபோது அங்கு இருந்த பணிப்பெண்ணிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்துகொண்டார் என்று பிரபல செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டது. இதையடுத்து அந்த தவறை மறைப்பதற்காக 2018-ஆம் ஆண்டு எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மூலம் 1.93 கோடி ரூபாய் தொகையும் கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த செய்தியை எலான் மஸ்க் மறுத்துள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்த அவர் கூறியதாவது:-
நாம் கருத்து சுதந்திரம் பற்றி பேசி வருகிறேன். அதில் ஒருபகுதியாக பைடன் அரசாங்கத்தையும் விமர்சித்து வருகிறேன். இதனால் என்மீது அரசியல் ரீதியான தாகுதல்கள் தொடங்கப்பட்டுள்ளன.  ஆனால் இந்த அவதூறுகள் எல்லாம் என்னை சிறந்த எதிர்காலத்திற்காக போராடுவதில் இருந்தும், சுதந்திர பேச்சு உரிமை குறித்து பேசுவதில் இருந்தும் தடுக்க முடியாது.
எழுதி வைத்துகொள்ளுங்கள். என் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு உண்மை இல்லை.
இவ்வாறு எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு உதவுவதாக ஜி7 நாடுகள் அறிவிப்பு – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வரவேற்பு !

கடன் நிவாரணத்தைப் பெறுவதற்கு இலங்கைக்கு உதவுவதாக ஜி7 நாடுகள் அறிவித்துள்ளதை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வரவேற்றுள்ளார்.

இலங்கையுடன் சர்வதேச சமூகத்தின் தொடர்ச்சியான ஈடுபாடு பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கு முக்கியமானது என டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான கடன் நிவாரணம் வழங்குவதற்கான முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதாக G7 நிதித் தலைவர்கள் நேற்று ஜேர்மனியில் நடைபெற்ற கூட்டத்தின் வரைவு அறிக்கையில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

பிரித்தானியாவில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பணவீக்கம் !

பிரித்தானியாவில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பணவீக்கம் அதிகரித்துள்ளதாக பிரித்தானிய தேசிய புள்ளியியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் 2022 நிலவரப்படி பிரித்தானியாவின் நுகர்வோர் விலை குறியீடு, 9 சதவீதமாக அதிகரித்துள்ளது. அங்கு கடந்த 12 மாதங்களில் மின்சார கட்டணங்கள் விலை உயர்வு 53.5 சதவீதமாகவும், எரிவாயு விலை 95.5 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது.

மின்சாரம், எரிவாயு ஆகியவற்றின் விலை அதிகரிப்பால் கடந்த ஏப்ரல் மாதத்தில் பணவீக்கம் கடுமையாக உயர்ந்துள்ளதாக தேசிய புள்ளியியல் நிறுவனத்தின் மூத்த பொருளாதார நிபுணர் கிராண்ட் பிட்ஸ்னர் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் உயர்ந்து வரும் இந்த பணவீக்கத்தின் காரணமாக குறைந்த வருமானத்தை உடைய குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனை கட்டுப்படுத்த பிரித்தானிய அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.