July

July

காணொலிப் பதிவு: வாடகை ரவுடிகள்: ஒருமணி நேர இடைவெளியில் இரு வன்முறைச்சம்பவங்கள்

யாழ் நகரம் வன்முறை மிகுந்த நகரமாக மாறி வருகின்றது. வாடகைக் கொலையாளிகள் வாடகை ரவுடிகளின் கூடாரமாக யாழ்ப்பாணம் மாறிவிட்டது. யூலை 22 இரவு ஒருமணி நேர வித்தியாசத்தில் இரண்டு வன்முறைத் தாக்குதல்கள் இடம்பெற்றது. யாழ் கொக்குவில் குளப்பிட்டிச் சந்தியில் முதலாவது தாக்குதல் இடம்பெற்று குறுகிய நேர இடைவெளியில் மற்றுமொரு சம்பவம் யாழ் அராலியில் இடம்பெற்றுள்ளது. அண்மைக்காலமாக இடம்பெறும் சம்பவங்கள் சில தாக்குதல் நடத்தியவர்களுக்கும் தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கும் இடையே தனிப்பட்ட முரண்பாடுகள் இல்லாத நிலையில் கூலிக்கு அமர்த்தப்பட்டு தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது. சமூகக் கட்டுப்பாடுகள் முற்று முழுதாக செயலிழந்துள்ள நிலையில் யாழ் தமிழ் சமூகம் உள்ளுணர்வு பிறள்வுநிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

கொக்குவில் குளப்பிட்டிச் சந்திக்கு இரவு ஒன்பது மணியளவில் கடையயை மூடிவிட்டுச் சென்றதைத் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் இரு வாள்களுடன் வந்தவர்கள் பெற்றோல் குண்டுகளை எறிந்து புடவைக் கடைக்கு தீ மூட்டி உள்ளனர். இந்த தீவைப்புத் தாக்குதல் சம்பவம் ஒளிப்பதிவாகி உள்ளது. இந்த ஒளிப்பதிவில் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் தாக்குதலில் ஈடுபட்டது பதிவாகி உள்ளது.

இத்தாக்குதல் பற்றி தெரிவித்த கடையின் உரிமையாளர் தானும் தனது கணவரும் இரு மாதங்களுக்கு முன்னரேயே கடையை ஆரம்பித்ததாகவும் இத்தாக்குதல் சம்பவம் இடம்பெறுவதற்கு முதல் நாள் தலைநகர் கொழும்பில் இருந்தும் தருவிக்கப்பட்ட ஆடைகள் கடையில் இருந்தாகவும் தெரிவித்தார். இத்தீவைப்புச் சம்பவத்தால் தனக்கு அறுபது லட்சம் ரூபாய்களுக்கு மோலாக நட்டம் ஏற்பட்டதையும் கண்ணீர்மல்கத் தெரிவித்தார்.

தாக்குதலை நடத்தியவர்கள் தங்கள் பொக்கற்றினுள் இருந்து எடுத்த பெற்றோல் போத்தல்களை எறிந்து கடையின் கண்ணாடிகளை அடித்து நொருக்கி தீ வைத்துள்ளனர். இச்சம்பவங்கள் ஒளிப்பதிவாகி உள்ளது. யாழ் பொலிஸ்மா அதிபருக்கு உருக்கமான வேண்டுகோளை விடுத்துள்ள கடையின் உரிமையாளர் பொலிஸார் துரித விசாரணைகளை மேற்கொண்டு தங்களுக்கு தீர்வு பெற்றுத்தர வேண்டும் என்று கண்ணீரோடு கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுவிடயமாக கொக்குவிலைச் சேர்ந்தவரும் யாழ் மேயரின் உறவினருமான த சஞ்சீவ்ராஜ் தேசம்நெற்க்கு தெரிவிக்கையில் தமிழ் அரசியல்வாதிகளும் யாழ் மேயரும் யாழ் நகரில் இடம்பெறும் வன்முறைத் தாக்குதல் சம்பவங்கள் பற்றி மௌனமாக இருப்பது அதிர்ச்சி அளிப்பதாகத் தெரிவித்தார். பாடசாலைகளில் போதைப்பொருள் பாவனைகள் அதிகரித்து உள்ளதும் இவ்வாறான வாடகை ரவுடிகள் உருவாவதற்குக் காரணம் எனத் தெரிவித்த அவர் அரசியல் வாதிகள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

யாழ் இந்துக்கல்லூரியின் பழைய மாணவரான இவர் பாராளுமன்ற உறுப்பினர் எஸ் சிறீதரனின் மகன் யாழ் இந்துக்கலலூரி மாணவனாக இருந்து வன்முறைக் குழுக்களுடன் செயற்பட்டதைச் சுட்டிக்காட்டி அரசியல்வாதிகள் முன்மாதிரியாக நடக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அண்மையில் யாழ் மேயர் மணிவண்ணனின் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதேச சபை உறுப்பினர் ரஜீவன் யாழ் சித்தங்கேணி சிவன் கோவில் பிரச்சினையில் வாள்வெட்டில் உட்பட்டு தலை மறைவாக சில நாட்களின் பின் பொலிஸில் சரணடைந்தது தெரிந்ததே.

கொக்குவில்குளப்பிட்டிச் சந்தியில் வைக்கப்பட்ட தீ எரிந்து கொண்டிருக்கின்ற போதே ஒரு மணி நேரத்தில் இரவு பத்து மணியளவில் மோட்டார் சைக்கிளில் யாழ் அராலி வீதியில் உள்ள வீட்டு வளவுக்குள் நுழைந்தவர்கள் வீட்டின் கண்ணாடிகளை அடித்து நொருக்கி அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியயை அடித்து நாசம் செய்துள்ளனர். அதன் பின் அதற்கு தீ வைக்கவும் முயன்றுள்ளனர். நித்திரையில் இருந்தவர்கள் விழித்துக்கொண்டு அயலவர்களையும் அழைத்து தாக்குதல் நடத்தியவர்களை விரட்டி அடித்துள்ளனர்.

இச்சம்பவங்கள் வியாபாரப் போட்டி காரணமாகவே இடம்பெற்றிருக்கலாம் என கொக்குவில் குளம்பிட்டிச் சந்தி தாக்குதலுக்கு இலக்காண புடவைக்கடை உரிமையாளர் தெரிவிக்கின்றார். இவ்வாறான தாக்குதல்கள் பல நடைபெற்று வருகின்றன. சில மாதங்களுக்கு முன் யாழ் நியூமார்க்கற்றில் தனது கடையயை வாடகைக்கு வழங்கியது தொடர்பில் கடையின் உரிமையாளர் திருநல்வேலியில் இருந்த அவரின் வீட்டில் வைத்து தாக்கப்பட்டு பலத்த வாள் வெட்டுக்கும் இலக்கானார். இது பற்றி சம்பந்தப்பட்ட எழுபதுக்கும் மேல் வயதான உரிமையாளரின் உறவினர் தேசம்நெற்க்கு தகவல் தருகையில் குறித்த கடையை வேறொருவரும் தனக்கு கேட்டிருந்ததாகவும் அவருக்கு கொடுக்க மறுத்து இன்னுமொருவருக்கு கடையை கொடுத்ததாலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கடையை தங்களுக்கு வாடகைக்குத் தர மறுத்ததால் ஆத்திரம் அடைந்தவர் வாடகைக்கு ரவுடிகளை அமர்த்தி இத்தாக்குதலை நடத்தியதாகவே தாங்கள் நம்புவதாக பாதிக்கப்பட்டவரின் நெருங்கிய உறவினர் தெரிவித்தார். இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் பொலிஸில் முறைப்பாடும் பதிவு செய்யவில்லை.

வெளிநாடுகளில் உள்ளவர்களும் இவ்வாறான வாடகை ரவுடிகளைப் பயன்படுத்தி வருவதாக தெரியவருகின்றது. அரசியல் வாதிகள் பொலிஸார் வெளிநாட்டவர்கள் என்று அனைவரது கரங்களிலும் கறைகள் உள்ளது. வெளிநாடுகளில் இருந்து கொண்டு ஊர் சென்றுவரும் சிலர் அங்கு பெண்களை பாலியல் பொருட்களாக பயன்படுத்துவதை தனது ‘ஒற்றைப் பனைமரம்’ படத்தில் இயக்குனர் புதியவன் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

“இலங்கை தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண தனி வழிகாட்டுதல் குழு.” – தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழக முகாம்களிலுள்ள இலங்கை தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை  மேற்கொள்ள வேண்டுமெனவும் இதற்காக தனியான குழு ஒன்று அமைக்கப்படவுள்ளதாகவும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் மேலும் கூறியுள்ளதாவது,

“இலங்கை தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண தனி வழிகாட்டுதல் குழுவொன்றினை அமைக்க வேண்டும்.

மேலும் முகாம் வாழ் தமிழர்களுக்கு குடிநீர், குடியிருப்பு, கழிவறை வசதி, மாதாந்திர பணக் கொடையை உயர்த்தி வழங்குதல், தெருவிளக்கு மற்றும் மின்வசதி, இலவச எரிவாயு இணைப்பு, திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன்.

இதேவேளை வெளிநாட்டு வாழ் தமிழர்களின் அடிப்படை வசதிகள் மற்றும் வாழ்வாதாரத்தை மேப்படுத்த வெளிநாட்டு வாழ் தமிழர்கள் நலத்துறை என்ற புதிய துறையை உருவாக்குதல் வேண்டும்.

அத்துடன் அவர்களின் குழந்தைகளுக்கு இணையவழி  ஊடாக தமிழை கற்பிப்பதற்கு தமிழ் இணையக் கல்விக் கழகம் அமைப்பது உள்ளிட்ட நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தென்னாபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜேக்கப் ஸூமா பிணையில் விடுதலை !

சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள தென்னாபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜேக்கப் ஸூமா, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள 79வயதான ஜேக்கப் ஸூமா, தனது சகோதரர் மைக்கேல் ஸூமாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக, கருணை அடிப்படையில் பிணையில் விடுவிக்கப்பட்டதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தென்னாபிரிக்காவின் ஜனாதிபதியாக கடந்த 2009ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை பொறுப்பு வகித்த ஜேக்கப் ஸூமா, பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளுக்குள்ளானார்.

ஆளும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் தலைவராக தற்போதைய ஜனாதிபதி சிறில் ராமபோசா தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஜேக்கப் ஸூமா கடந்த 2018ஆம் ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்தார்.

ஸூமாவுக்கு எதிராக நடைபெற்று வரும் பல்வேறு ஊழல் வழக்குகளில் அவர் நேரில் ஆஜராகாததால் நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபட்டதாக அவருக்கு கடந்த மாதம் 29ஆம் திகதி 15 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, கடந்த 7ஆம் திகதி ஜேக்கப் ஸூமா பொலிஸாரிடம் சரணடைந்தார். அவர் சிறையில் அடைக்கப்பட்டதைக் கண்டித்து அவரது ஆதரவாளர்கள் நடத்திய வன்முறைப் போராட்டத்தில் 120க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.

உலகில் 75% கடந்த டெல்டா வகை கொரோனா – உலக சுகாதார அமைப்பு கவலை !

உலகம் முழுவதும் கொரோனா நோயாளிகளிடம் இருந்து சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட கொரோனா வைரசுகளில் 75 சதவீதத்திற்கும் மேற்பட்டவை டெல்டா வகையை சோந்தவையாக உள்ளன என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுபற்றி வெளியிடப்பட்டு உள்ள அறிக்கையில், இந்தியா, சீனா, ரஷ்யா, இஸ்ரேல், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் கடந்த 4 வாரங்களாக கொரோனா நோயாளிகளிடம் இருந்து சேகரிக்கப்பட்டு, டெல்டா வகை என்று உறுதி செய்யப்பட்ட கொரோனா மாதிரிகளின் எண்ணிக்கை 75% கடந்துள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் முதல்முறையாக கண்டறியப்பட்ட டெல்டா வகை கொரோனா, மற்ற வகைகளை விட அதிக வேகத்தில் பரவும் தன்மை கொண்டது.
உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி திட்டங்கள் விரிவுபடுத்தப்பட்டு வந்தாலும், சில நாடுகளில் தினசரி தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என தனது அறிக்கையில் உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

சீனாவில் வரலாறு காணாத மழை – மூன்றரை லட்சத்துக்‍கும் மேற்பட்டோர் பாதிப்பு !

சீனாவில் வரலாறு காணாத மழை பெய்த நிலையில், வெள்ள பாதிப்பில் சிக்‍கி 30க்‍கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய சீனாவின் ஹென்னான் மாகாணத்தில் கடந்த ஒரு வாரமாகப் பெய்துவரும் கனமழை காரணமாக கயங்கர வெள்ளப்பெருக்‍கு ஏற்பட்டது. ஒரு வருடத்தில் பெய்யும் மழை, மூன்று நாட்களில் கொட்டித் ​தீர்த்ததால் குடியிருப்புப் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. ஷெங்ஷெள நகரில் மட்டும் மூன்று நாட்களில் 62 சென்டி மீட்டர் மழை பதிவானது.

இந்நிலையில், மழை பாதிப்பில் சிக்‍கி உயிரிழந்தோரின் எண்ணிக்‍கை 33ஐக்‍ கடந்துள்ளது. மேலும், இப்பகுதிகளில் மூன்றரை லட்சத்துக்‍கும் மேற்பட்டோர் பாதுகாப்பான பகுதிகளுக்‍கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஷன் 2030 – அரேபியாவின் புனித தலங்களில் பாதுகாப்பு பணிக்கமர்த்தப்பட்ட பெண்கள் !

சவுதி அரேபியாவில் உள்ள இஸ்லாமியர்களின் புனிதத் தலமான மெக்கா மற்றும் மதினாவில் இராணுவத்தில் உள்ள பெண்கள் பாதுகாவலர்களாக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

சவூதி அரேபியாவின் விஷன் 2030; பெண்கள் இராணுவப்படை உருவாக்கம்!

சவுதி அரேபியாவின் இளவரசர் முஹம்மது பின் சல்மான். இவர், தனது நாட்டில் பல்வேறு சீர்திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளார். பழமைவாதத்திலிருந்து விடுபடுவதன் மூலம் சர்வதேச முதலீட்டை ஈர்க்கலாம் என அவர் நம்புகிறார். அதனால், விஷன் 2030 என்ற பெயரில் அவர் அவ்வப்போது சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

பெண்களுக்கு கார் ஓட்ட அனுமதி, 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் தங்களின் பாதுகாவலர்கள் அனுமதியில்லாமல் பயணம் செய்ய அனுமதி, சொத்துரிமையில் கூடுதல் கட்டுப்பாடு, இராணுவத்தில் பெண் படை போன்றவற்றை அறிவித்தார்.
அந்த வரிசையில் மெக்கா, மெதினா புனிதத் தலங்களின் பாதுகாப்புப் பணியில் பெண் வீராங்கனைகளைப் பணியமர்த்தும் திட்டத்தையும் செயல்படுத்தியுள்ளார்.

மெக்காவின் முதல் பெண் பாதுகாப்பு வீரர் என்ற அந்தஸ்த்தைப் பெற்றுள்ளார் மோனா என்ற இளம் பெண். ராணுவத்தின் காக்கி நிற சீருடை தான் அவர் அணிந்திருந்தார். ஆனால், அவரின் மேல்சட்டை இடுப்பு அளவுக்கு நீண்டிருந்தது, சற்றே தளர்வான கால்சட்டை, கறுப்பு தொப்பி, முகத்தை மறைக்க துணி என்று மோனா காட்சியளித்தார்.

மோனா அளித்தப் பேட்டியில், “நான் எனது தந்தையின் பாதையில் பயணிக்கிறேன். இன்று மிகவும் புனிதமான மெக்கா பெரு மசூதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளேன். புனித யாத்திரிகர்களுக்கு சேவை செய்வது மாண்புமிகு பணி” என்று கூறினார்.

ஹெய்டியின் புதிய பிரதமராக ஏரியல் ஹென்ரி நியமனம் !

சுட்டுக் கொல்லப்பட்ட ஜனாதிபதி ஜோவனெல் மொய்ஸ் கேட்டுக்கொண்டதற்கு இணங்க ஹெய்ட்டி நாட்டின் புதிய பிரதமராக ஏரியல் ஹென்ரி பதவியேற்றுள்ளார். எனினும், அந்நாட்களில் இடைக்கால பிரதமராகவிருந்த கிளாட் ஜோசப் உடன் காணப்பட்ட அரசியல் மோதலில் ஹென்ரி அப்பதவியை நிராகரித்திருந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் கிளாட் ஜோசப் தனது பதவியை இராஜினாமா செய்ததை அடுத்து ஹெய்ட்டின் புதிய பிரதமராக ஏரியல் ஹென் இன்று (புதன்கிழமை) பதவியேற்றுள்ளார்.

ஹெய்ட்டி நாட்டின் ஜனாதிபதி ஜோவனல் மோயிஸ், கடந்த 07ஆம் திகதி அடையாளம் தெரியாத குழுவினரால் சுட்டுக் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

“குறைந்த வருவாய் கொண்ட நாடுகளில் வெறும் 1 சதவீத மக்களே குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி பெற்றிருக்கிறார்கள்.” – உலக சுகாதார அமைப்பு கவலை !

கொரோனா வைரஸ் தொடர்ந்து மாறுபாடு அடைந்து வருகிறது. இதில் சமீபத்திய மாறுபாடாக டெல்டா மற்றும் டெல்டா பிளஸ் போன்ற தொற்றுகள் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. இதை கட்டுப்படுத்தும் பணிகளில் உலக நாடுகள் முழு மூச்சுடன் ஈடுபட்டிருக்கும் நிலையில், டெல்டா மாறுபாட்டை விட அதிக வீரியம் மற்றும் ஆபத்து நிறைந்த மற்றொரு மாறுபாடு விரைவில் ஏற்படலாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்து உள்ளது.

இந்த அமைப்பின் தலைவரான டெட்ரோஸ் கேப்ரியேசஸ், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் 138-வது அமர்வில் பேசும்போது இது தொடர்பாக கூறியதாவது:-

உலகின் பல்வேறு பகுதிகளில் தற்போது பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனாவின் டெல்டா மாறுபாட்டை விட அதிக பரவல் கொண்டதும், ஆபத்து நிறைந்ததுமான மற்றுமொரு மாறுபாட்டை மனிதகுலம் விரைவில் பார்க்கக்கூடும். கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசியின் கண்டுபிடிப்பு மற்றும் உலகம் முழுவதும் அதன் பயன்பாடுகள் மட்டுமின்றி, பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் இருந்தபோதிலும் உலகம் மற்றொரு கொரோனா அலையின் விளிம்பில் உள்ளது.

இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அதில் முக்கியமானது, அனைவருக்கும் சமமான அளவுக்கு தடுப்பூசி கிடைக்காதது ஆகும். குறிப்பாக குறைந்த வருவாய் கொண்ட நாடுகளில் வெறும் 1 சதவீத மக்களே குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி பெற்றிருக்கிறார்கள். ஆனால் வளர்ந்த நாடுகளில் மொத்த மக்கள்தொகையில் பாதிக்கு மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுள்ளனர்.

சோதனைகள் மற்றும் சிகிச்சைகள் உட்பட தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான தடுப்பூசிகள் மற்றும் பிற வழிகளைப் பகிர்ந்து கொள்வதில் தற்போதைய உலகளாவிய அநீதி ‘‘சமூக மற்றும் பொருளாதார கொந்தளிப்புக்கு’’ மட்டுமின்றி, வைரஸ் மேலும் பரவுவதற்கும் வழிவகுக்கிறது. இதில் ஒரு திருப்புமுனையை காண வேண்டுமென்றால், உலக சுகாதார அமைப்பு, சர்வதேச நிதியம் மற்றும் உலக வங்கி போன்றவை இதற்கு முன்னர் கோடிட்டுக்காட்டிய பல்வேறு இலக்குகளை அடைய வேண்டியது முக்கியம் ஆகும்.

இதில் முக்கியமாக ஒவ்வொரு நாட்டிலும் வருகிற செப்டம்பர் மாதத்துக்குள் குறைந்தபட்சம் 10 சதவீத மக்கள் தொகைக்காவது தடுப்பூசி சென்றடைந்திருக்க வேண்டும். ஆண்டிறுதிக்குள் 40 சதவீதமாகவும், அடுத்த ஆண்டு மத்திய பகுதிக்குள் 70 சதவீதமாக உயர்ந்திருக்க வேண்டும். ” இவ்வாறு டெட்ரோஸ் கேப்ரியேசஸ் கூறினார்.

வவுனியாவின் அரச அதிபராக சமன்பந்துலசேன இருந்த போது எதிர்க்காத தமிழ்தேசியவாதிகள் வடக்குக்கு நியமிக்கப்பட்ட போது ஏன் எதிர்க்கிறார்கள்..?

வடக்கின் பிரமதம செயலாளராக வவுனியா அரச அதிபர் சமன்பந்துலசேன அவர்கள் ஜனாதிபதியால் நேற்று நியமிக்கப்பட்டார். அந்தவகையில், வவுனியா மாவட்டத்தின் தற்போதைய அரச அதிபர் எஸ்.எம்.சமன்பந்துலசேன அவர்களே வடக்கின் பிரமதம செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வடக்கு மாகாணத்தின் பிரதம செயலாளராக நியமிக்கப்பட்டிருந்த அ.பத்திநாதன் கடந்த 4 ஆம் திகதி ஓய்வு பெற்றுச் சென்ற நிலையில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் பதவி வெற்றிடமாக காணப்பட்டது. வெற்றிடமான இப் பதவிக்கு வடக்கைச் சேர்ந்த பலரும் போட்டியிட்டனர். இந்நிலையிலேயே வவுனியாவின் அரச அதிபராக கடமையாற்றும் எஸ்.எம்.சமன்பந்துலசேன பிரதம செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இது தொடர்பில் தமிழ்தேசிய கட்சிகளினுடைய உறுப்பினர்கள் இது தொடர்பில் தங்களுடைய அதிருப்தியை வெளியிட்டு வருகின்றனர். தமிழ் மாகாணமான வடக்கில் பிரதம செயலாளராக சிங்களவர் ஒருவரை நியமித்துள்ளமை இலங்கை அரசாங்கத்தின் பேரினவாத ஒடுக்குமுறையின் இன்னொரு வடிவமாகும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தனது கடுமையான கண்டனத்தை வெளியிட்டிருந்தார்.

“ஒரு சிங்களவரை பிரதம செயலாளராக நியமனம் செய்வதென்பது நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விடயமாகும். இன்னும் சொல்லப்போனால் அவருக்கு தமிழை எழுதவோ வாசிக்கவோ தெரியாத சூழ்நிலையில் வடக்கு மாகாணத்தில் உள்ள மக்கள் அவருக்கு சிங்களத்திலோ ஆங்கிலத்திலோ கடிதம் எழுதவேண்டிய சூழ்நிலையும் இல்லாவிட்டால் அவர் உடனடியாக அதை வாசித்து அறிந்து கொள்ளமுடியுமா என்ற பல்வேறான பிரச்சினைகளை இந்த நியமனம் என்பது உருவாக்கியிருக்கின்றது.”  என சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்திருந்தார்.

இவர்கள் அதிருப்தி வெளியிட்டிருக்கும் எஸ்.எம்.சமன்பந்துலசேன வவுனியாவின் அரச அதிபராக கடமையாற்றிய போது எந்த எதிர்ப்பையும் இந்த தமிழ்தேசியவாதிகள் வெளியிடவில்லை. ஆனால் யாழ்ப்பாணமும் உள்ளடங்கியதாக ஏதாவது பிரச்சினை என்றால் துள்ளிக்குதிக்கிறார்கள். ஏன் வவுனியாவும் இவர்கள் கூறிய தமிழ்தேசிய எல்லைக்குள் தானே வருகிறது. இவர்கள்  எஸ்.எம்.சமன்பந்துலசேன வடமாகாணத்துக்குரிய பிரதம செயலாளராக நியமிக்கப்பட்டதால் கோவப்படுகிறார்களா..? அல்லது யாழ்ப்பாணத்துக்குள்ளும் சிங்கள ஆதிக்கம் வந்துவிடுமோ என்பதால் கோபப்படுகிறார்களா என தெரியவில்லை.

 

இங்கு மாற்றப்படவேண்டியது இந்த மனோநிலைதான். யாழ்ப்பாணத்துக்கு ஏதாவது பிரச்சினை வந்தால் தான் இலங்கை வாழ் தமிழர்கள் எல்லோருக்கும் பிரச்சினை என போல காட்டி  கூக்குரலிடுவதை முதலில் நிறுத்துங்கள். உண்மையிலேயே பிரச்சினை என்றால் அந்த பிரச்சினை ஒரு பகுதிக்கு வரும்போதே எதிர்த்திருக்க வேண்டும். அதை விடுத்து உங்களுடைய தலைக்கு பிரச்சினை வந்தால் மட்டும் தான் எதிர்ப்போம் என்றால் என்ன மாதிரியான மனோநிலை என்று தான் விளங்கவில்லை.

உண்மையான மக்கள் தலைவர்கள் என்றால் முதலில் மக்களுக்கான அரசியலை இதய சுத்தியுடன் மேற்கொள்ள ஆரம்பியுங்கள். முதலில் ஒரு பகுதியை மையப்படுத்திய அரசியல் நீரோட்டத்தில் இருந்து விலகி மக்களுக்கான தேசிய நீரோட்டத்தில் இயங்க முன்வாருங்கள். அப்படி இயங்கியாவது ஏதேனும் மக்களுக்காக ஆக்கபூர்வமாக செய்யுங்கள்.

அமெரிக்க – பிரித்தானிய கூட்டு வக்சீன் உற்பத்தியை தடுக்கின்றது!!!

பிரித்தானியாவில் சுதந்திர நாள்! வறுமைப்பட்ட நாடுகளில் மரண ஓலம்!
அமெரிக்க – பிரித்தானிய கூட்டு வக்சீன் உற்பத்தியை தடுக்கின்றது!!!

தனது நாட்டு மக்களுக்கு வக்சீனை வழங்கி கோவிட்-19 தாக்கத்தை கட்டுப்படுத்தி உள்ள அமெரிக்க – பிரித்தானியா அரசுகள் வக்சீனை ஏனைய நாடுகள் உற்பத்தி செய்வதற்கான உரிமத்தை சிறிது காலத்திற்கு விட்டுக்கொடுப்பதற்கு மறுத்து வருகின்றது. அதனால் உலகில் பல்லாயிரம் கோவிட் மரணங்கள் சம்பவிக்க உள்ளது. இன்று முற்றிலும் களியாட்டங்களுக்கு நாட்டைத் திறந்துவிட்டுள்ள பிரித்தானிய அரசு உலகின் பல்வேறு பாகங்களிலும் பல்லாயிரக்கணக்கானவர்கள் மரணமாவதைப் பற்றி எவ்வித கரிசனையும் கொள்ளவில்லை.

நுனிநாக்கில் மனித உரிமை பேசி தங்களை மனித உரிமைகளின் ஜனநாயகத்தின் காவலர்களாகக் காட்டிக்கொள்ளும் அமெரிக்க – பிரித்தானிய நாடுகள் கோவிட் வக்சீன் உரிமத்தை முற்றிலும் லாபநோக்கத்திற்காக தனியார் நிறுவனங்களிடம் கையளித்து உற்பத்தியை தடுப்பதன் மூலம் பல்லாயிரக்கணக்கான மரணங்களுக்கு வழிகோலுகின்றனர். எவ்வித மனிநேயமும் அற்று செயற்படுகின்ற அமெரிக்க – பிரித்தானிய கூட்டு எதிர்காலத்தில் உலக நாடுகளுக்கு வழிகாட்டவோ தலைமையேற்கவோ தகுதயற்றவையாகி வருகின்றன.

பிரித்தானியா ப்ரீடம்டே – சுதந்திரநாள் என்று அறிவிப்பதற்கு 48 மணிநேரங்களிற்கு முன்னரே சுகாதார அமைச்சர், நிதி அமைச்சர், பிரதம மந்திரி மூவருமே தனிமைப்படுத்தலுக்கு செல்ல வேண்டியேற்பட்டு விட்டது. தற்போதைய டெல்டா வேரியன் மிகவேகமாகப் பரவி வருகின்றது. ஆனால் நாட்டில் வயது வந்தவர்களுக்கு பெரும்பாலும் வக்சீன் போடப்பட்டு இருப்பதால் பாதிப்பு வீதம் மிக மிகக் குறைவான நிலையிலேயே காணப்படுகிறது. மேலும் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும் வரும் இரு மாதங்களுக்குள் வக்சீன் போடப்பட்டு விடும் என பிரதமர் பொறிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். இந்த வக்சீன் காரணமாக கோவிட் பாதிப்பும் மரணங்களும் பெரும்பாலும் முற்றாக தடுக்கப்படுகின்ற நிலைக்கு மேற்கு நாடுகள் வந்துகொண்டிருக்கின்றன. ஆனால் சனத்தொகை அதிகமான வறிய மற்றும் வளர்ந்துவரும் நாடுகளில் கோவிட் பாதிப்பும் மரணமும் அதிகரித்து வருகின்றது.

இதனைத் தடுப்பதற்கு தேவையான வக்சீனை உற்பத்தி செய்வதற்கு வக்சீன் உற்பத்தி உரிமத்தை அமெரிக்க – பிரித்தானிய அரசுகள் தற்காலிகமாகவேனும் வழங்கினால் உற்பத்தியயை வேறுநாடுகளிலும் வக்சீன் உற்பத்தி செய்து கோவிட் பாதிப்பையும் மரணத்தையும் கட்டுப்படுத்தலாம். வறிய நாடுகளில் ஒரு வீதமான சன்தொகைக்கு கூட வக்சீன் போடப்படவில்லை. அமெரிக்க – பிரித்தானிய அரசுகளின் சுயநலமிக்க முற்றிலும் லாபத்தையீட்டும் நிறுவனங்களுக்கு சாதகமாகச் செயற்படுவது மனித குலத்தை பெரும் அவலத்திற்குள் தள்ளவுள்ளது.