January

January

தென்னாபிரிக்கா எதிர் இலங்கை இரண்டாவது டெஸ்ட் போட்டி – தென்னாபிரிக்காவுக்கு முதல் இனிங்சில் 302 ஓட்டங்கள் !

இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது நேற்றையதினம் ஆரம்பித்திருந்தது. போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து களமிறங்கியது.

அதனப்படையில் இலங்கை அணி தனது முதலாவது இன்னிங்ஸ்ஸில் சகல இலக்குகளையும் இழந்து 157 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளது.
துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்ப்பில் குசல் ஜனித 60 ஓட்டங்களையும் வனிது ஹசரங்க 29 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டிருந்தனர்.

பந்து வீச்சில் தென்னாபிரிக்கா அணியின் வீரரான அன்ரிச் நொக்கியா 6 இலக்குகளை வீழ்த்தியிருந்தார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி இன்றைய இடண்டாம் நாளில் சகல இலக்குகளையும் இழந்து 302 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளது. துடுப்பாட்டத்தில் தென்னாபிரிக்கா அணி சார்ப்பில் டீன் எல்கர் 127 ஓட்டங்களையும் வான் டெர் டஸ்ஸன் 67 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்ப்பில் விஷ்வ பெர்ணான்டோ 5 இலக்குகளையும், அசித பெர்ணான்டோ மற்றும் தசுன் சானக தலா 2 இலக்குகளையும் வீழ்த்தியிருந்தனர்.

அதனடிப்படையில் முதல் இன்னிங்ஸ் நிறைவில் தென்னாபிரிக்கா அணி இலங்கை அணியை விட 145 ஓட்டங்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது.

தன்னுடைய இரண்டாது இனிங்சுக்காக களமிறங்கியுள்ள இலங்கை அணி 92 ஓட்டங்களுக்கு தன்னுடைய 03 இலக்குகளை இழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

“கருணாவை தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைப்பது என்பது சாத்தியப்படாத ஒரு விடயம்” – சி.வி.கே சிவஞானம்

நேற்றைய தினம், கிளிநொச்சியில் ஊடகவியலாளர்களை சந்தித்த விநாயகமூர்த்தி முரளிதரன், தான் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படவுள்ளதாகவும் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுடன் தனக்கு நெருங்கிய தொடர்பு காணப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் “விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணாவை தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைப்பது என்பது சாத்தியப்படாத ஒரு விடயம்” என வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே சிவஞானம் தெரிவித்துள்ளார்.

இன்று (04.01.2021)) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்த சிவஞானம், கருணா கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட விரும்புவதாக தெரிவித்தாரே தவிர கூட்டமைப்பு அவரை இணைத்துக் கொள்வது தொடர்பாக எந்த ஒரு தீர்மானமும் எடுக்கவில்லை அவரை கூட்டமைப்புடன் இணைப்பது என்பது சாத்தியப்படாத ஒரு விடயம் என கூறியுள்ளார்.

“அரசு சர்வாதிகார இராணுவ ஆட்சியை நோக்கிய போக்கினை உடனடியாக கைவிட வேண்டும்” – ரவூப் ஹக்கீம்

“அரசு சர்வாதிகார இராணுவ ஆட்சியை நோக்கிய போக்கினை உடனடியாக கைவிட வேண்டும்” என  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

கொரோனா விடயங்களை கையாள்வதற்காக மாவட்ட ரீதியாக இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டமை தொடர்பாக கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

“ஆட்சி மாற்றம் இடம்பெற்றதன் பின்னரான சூழலில் நாட்டின் சிவில் நிர்வாகத் துறையில் முப்படைகளையும் சேர்ந்த முன்னாள் அதிகாரிகள் பலர் இணைத்துக் கொள்ளப்பட்டனர். நாட்டின் பாதுகாப்புத்துறை தவிர்ந்த வெளிவிவகாரம், சுகாதரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அவ்விதமான படை அதிகாரிகள் அமைச்சின் செயலாளர், பணிப்பாளர் என்று பல்வேறு பதவிகளில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

நாட்டின் ஜனாதிபதி படை அதிகாரிகளைப் பயன்படுத்தி அனைத்து விடயங்களையும் நடைமுறைச் சாத்தியமாக்கலாம் அல்லது அவர்களுடன் பணியாற்றுவது தனக்கு இலகுவானது என்று கருதமுடியும். அதற்காக, சிவில் நிர்வாகத்தில் மேலும் மேலும் படை அதிகாரிகளை இணைத்துக் கொள்கின்றமையாது நாட்டில் படைத்துறையை மையப்படுத்திய நிர்வாகமொன்று விரைவில் ஏற்படும் அபாயத்தினை உருவாக்குவதாகவுள்ளது.

விசேடமாக, கொரோனா நெருக்கடிகளிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கான பொறுப்பு, முப்படைகளின் தளபதி தலைமயிலான தேசிய செயலணியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதனை ஓரளவிற்கேனும் ஏற்றுக்கொண்டாலும் அதன்பின்னர் சுகாதார அமைச்சின் செயலாளராக முன்னாள் இராணுவ அதிகாரியை நியமித்தமை தற்போது மாவட்டந்தோறும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக இராணுவ அதிகாரிகளை நியமித்தமை பெரும் அச்சத்தினை ஏற்படுத்துவதாக உள்ளது.

எனவே இவ்விதமான சர்வாதிகார இராணுவ ஆட்சியை நோக்கிய போக்கினை உடனடியாக கைவிட வேண்டியது அவசியமாகும்” என்றார்.

“சுமந்திரன் பொய் கூறுவதை நிறுத்த வேண்டும்” – சி.வி.விக்னேஸ்வரன்

“சுமந்திரன் தனது திறமைகளைத் தமிழ் மக்களின் நன்மைகளுக்காக பயன்படுத்தாமல், அரசாங்கத்தின் நன்மைகளுக்காக பயன்படுத்தி வருவதே அவர் மீதான முரண்பாடுகளுக்கு காரணம்” என பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

ஐ. நா மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடர் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தயாரித்து என்னால் நிராகரிக்கப்பட்ட வரைபுக்கு நான் தற்போது அனுமதி வழங்கியுள்ளதாக வவுனியாவில் செய்தியாளர்கள் மத்தியில் கூறியுள்ள தாக ஊடகங்களில் வெளிவந்த செய்திகளில் எதுவித உண்மையும் இல்லை என தமிழ் மக்கள் கூட்டனியின் செயலாளர் நாயகம் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்

குறித்த விடயம் தொடர்பில் அவர் அறிக்கை ஒன்றினையும் வெளியிட்டுள்ளார் .

அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

ஐ. நா மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடர் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தான் தயாரித்து என்னால் நிராகரிக்கப்பட்ட வரைபுக்கு நான் தற்போது அனுமதி வழங்கியுள்ளதாக வவுனியாவில் செய்தியாளர்கள் மத்தியில் கூறி இருப்பதாக ஊடகங்களில் படித்தேன்.

சுமந்திரனின் இந்த கூற்றில் எந்த உண்மையும் இல்லை. இது அப்பட்டமான பொய். இந்த வரைபை தான் தயாரிக்கவில்லை என்றும் வேறு யாரோ தான் தயாரித்துள்ளார்கள் என்பதை அறிந்ததும் நான் இணக்கம் தெரிவித்துள்ளதாக வேடிக்கையான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுக்கும் என்பது போல இந்த கடித விவகாரம் தொடர்பில் சுமந்திரன் தெரிவித்துவரும் கருத்துக்கள் முன்னுக்குப் பின் முரணாக அமைகின்றன. சுமந்திரன் எனது பார்வைக்காக அனுப்பிய கடிதத்தை தான் வரையவில்லை என்றும் புலம்பெயர் அமைப்பு ஒன்றே வரைந்ததாகவும் கூறிவருகிறார்.

எது உண்மை எது பொய் என்பது எனக்கு தெரியாது. ஆனால், இந்த கடித்தை எனக்குத் தந்தது சுமந்திரனே. எனக்கு இந்த வரைபைத் தந்த சுமந்திரன் அதனைத் தயாரித்தது வேறு யாரோ என்று எதுவும் குறிப்பிட்டதாக எனக்கு ஞாபகமில்லை. “நாங்கள்” என்ற பதத்தைப் பாவித்ததாகவே எனக்கு நினைவு.

இந்த வரைபை படித்து பார்க்கின்ற எவருக்குமே இந்த வரைபின் நோக்கம் அரசாங்கத்துக்கு மனித உரிமைகள் சபையில் முன்னைய தீர்மானத்தினை நிறைவேற்றுவதற்கு மேலும் காலம் வழங்குவதே என்பது புலன் ஆகும். இதில் எந்த மயக்கமும் இருக்க முடியாது. சுமந்திரன் எனக்கு அனுப்பிய வரைபை நான் பகிரங்கப்படுத்தவில்லை. அதற்கு நான் அளித்த பதிலையே பகிரங்கப்படுத்தினேன். இவ்வாறு நான் பகிரங்கப்படுத்தியதனால் தான் அவரது கபடத்தனமான முயற்சி முறியடிக்கப்பட்டது.

நான் என் பதிலைப் பகிரங்கப்படுத்தியமை காரணமாக அரசாங்கம் நாம் என்ன செய்கின்றோம் என்று விழித்துக்கொண்டு விட்டது என்று நகைப்புக்கிடமான கருத்துக்களைக் கூறி வருகிறார். உண்மையில் சுமந்திரனின் வரைபு அரசாங்கத்தைக் காப்பாற்றும் ஒரு முயற்சி. இதில் அரசாங்கம் கோபப்பட என்ன இருக்கிறது என்று எனக்கு விளங்கவில்லை.

சுமந்திரனின் கருத்துடன் உடன்பட மறுத்து பெரும்பான்மையான புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் கூட்டாக ஒரு வரைபை தயாரித்து அனுப்பி இருந்தார்கள். அந்த வரைபில் சர்வதேச நீதிமன்றம் (நேரடியாக குறிப்பிடப்படாவிட்டாலும்), நீதிக்கான சர்வதேச நீதிமன்றம், சர்வதேச சுயாதீன விசாரணை போன்ற அடிப்படையான விடயங்கள் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

இந்த வரைபுக்கு நான் இணக்கம் தெரிவித்துள்ளேனே தவிர சுமந்திரனின் வரைபுக்கு அல்ல. அதேவேளை, மனித உரிமைகள் சபை ஆணையாளர் மற்றும் சபையின் உறுப்பு நாடுகளுக்கு அனுப்பும் பொருட்டு மிகவும் இறுக்கமான ஒரு வரைபை தயாரித்து ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இணக்கம் பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்.

இதேவேளை, வவுனியாவில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் சுமந்திரன், கஜேந்திரகுமார் ஆகியோர் மனித உரிமைகள் சபை தொடர்பிலான பொதுவான வரைபு ஒன்றை தயாரிப்பதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அறிகின்றேன். இது நல்ல விடயம். மூன்று கட்சிகளுக்கும் இடையே இது தொடர்பில் இணக்கப்பாடு ஏற்படுவதற்கு என்னால் ஆன ஒத்துழைப்பை வழங்குவேன். குறித்த வரைபு எது என்று இதுவரையில் தெரியாது.

ஆனால், அடிப்படை விடயங்களில் விட்டுக்கொடுப்பதற்கு நான் தயார் இல்லை. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், நீதிக்கான சர்வதேச நீதிமன்றம் ஆகியவை சாத்தியம் இல்லை போன்ற கருத்துக்களை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். இவை சாத்தியமோ? சாத்தியம் இல்லையோ? பாதிக்கப்பட்ட சமூகம் என்ற வகையில் கிடைக்கின்ற எல்லா வழிகளையும் நாம் முயற்சிக்க வேண்டும். சரிவராதுவிட்டால் பரவாயில்லை. வெற்றி தோல்விகள் என்னைப் பொதுவாகப் பாதிப்பதில்லை.

ஆனால், இவற்றுக்காக முயற்சிப்பது சர்வதேச ரீதியில் நீதிக்கான எமது போராட்டத்தை மேலும் முன்னெடுத்து செல்வதற்கு வலுவான ஒரு அடித்தளத்தை ஏற்படுத்தித் தரும் என்பது எனது நம்பிக்கை. அதேவேளை, நாம் கடும்போக்கு நிலையில் நின்றால், ஐ. நா மனித உரிமைகள் சபையின் பிடியில் இருந்து இலங்கை விடுபட்டுபோகும் என்ற அர்த்தம் அற்ற கருத்துக்களையும் நான் நிராகரிக்கின்றேன். நாம் கேட்பது எதுவுமே கடும்போக்கு அல்ல. அவை நீதியின் பாற்பட்ட நியாயமான கோரிக்கைகளே.

இறுதியாக, சுமந்திரன் பொய் கூறுவதை நிறுத்த வேண்டும் என்று அவரிடம் கோரிக்கை விடுக்கின்றேன். மூன்று நாட்களுக்கு முன்னர்தான் அவருக்கும் எனக்கும் இடையில் எந்தவித தனிப்பட்ட பிரச்சினை எதுவும் இல்லை என்றேன். அவருக்கு எனக்கெதிராக ஏதேனும் பிரச்சினை இருந்தால் அதைச் சொல்லட்டும். அதை விட்டு விட்டு பொய் கூற விழையக் கூடாது.

சுமந்திரன் தனது திறமைகளைத் தமிழ் மக்களின் நன்மைகளுக்காக பயன்படுத்தாமல், அரசாங்கங்களின் நன்மைகளுக்காக பயன்படுத்தி வருவதே எனக்கும் அவருக்கும் இடையிலான முரண்பாடுகளுக்கு காரணமாகும். விரைவில் அவர் இந்த நிலைமையில் இருந்து விடுபட்டு, தனது சொந்த மக்களுக்கு நடைபெற்றது இனப்படுகொலை தான் என்பதை புரிந்துகொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்காக பாடுபடுவதற்கு முன்வருவார் என்று நம்புகிறேன்.

அரசாங்கம் தமிழர்களுக்கான தீர்வை புதிய அரசியல் யாப்பினுடாகத் தரும் என்ற நம்பிக்கையில் தொடர்ந்தும் செயற்படாமல் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேரில் தன்னை ஆதரித்த மக்களுக்காகவும் தமிழ்த் தேசியத்துக்காகவும் உண்மையாக உழைக்க முன்வருமாறு அவரை அன்புடன் வேண்டுகின்றேன்” எனவும் அந்த அறிக்கையில்  குறிப்பிடப்பட்டுள்ளது.

இரவோடு இரவாக கிராமங்களுக்குள் நுழைந்த பயங்கரவாத குழுக்கள் – 80க்கும் அதிகமான பொது மக்கள் துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் கொடூரமாக கொலை !

மேற்கு ஆபிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். போலீசார் மற்றும் ராணுவத்தினரை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல்களை நடத்துவதோடு அப்பாவி மக்களையும் கொன்று குவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி இவர்கள் அண்டை நாடுகளான நைஜர், சாத் உள்ளிட்ட நாடுகளிலும் காலூன்றி பயங்கரவாதத்தை பரப்பி வருகின்றனர். குறிப்பாக நைஜர் சமீபகாலமாக பயங்கரவாத தாக்குதல்களால் கடும் பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது.

நைஜர், மாலி மற்றும் புர்கினா பாசோ இடையே முத்தரப்பு எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள நைஜரின் தில்லாபுரி பிராந்தியத்தில் அதிக அளவில் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்து வருகின்றன. இந்தநிலையில் தில்லாபுரி பிராந்தியத்தில் உள்ள சோம்பாங்கவ் என்ற கிராமத்துக்குள் நேற்றுமுன்தினம் இரவு பயங்கரவாதிகள் ஆயுதங்களுடன் வந்தனர். மோட்டார் சைக்கிளில் வந்து இறங்கிய பயங்கரவாதிகள் அங்கிருந்த வீடுகளை சூறையாடினர்.

பின்னர் அவர்கள் வீடுகளுக்குள் இருந்த நபர்களை தரதரவென வெளியே இழுத்து வந்து துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் கொடூரமாக கொலை செய்தனர். இப்படி பெண்கள், சிறுவர்கள் உட்பட 50 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். மேலும் 17 பேர் படுகாயம் அடைந்தனர்.

நைஜரில் கிராமங்களுக்குள் புகுந்து பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் – 80 பேர்  கொன்று குவிப்பு – Makkal Osai – மக்கள் ஓசைஇந்த கொடூர தாக்குதல் நிகழ்ந்த அடுத்த சில மணி நேரத்துக்குள் தில்லாபுரி பிராந்தியத்தில் உள்ள ஸாரூம்டேரே என்ற மற்றொரு கிராமத்துக்குள் பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினர். அங்கு அவர்கள் தங்கள் கண்ணில் பட்டவர்களையெல்லாம் துப்பாக்கியால் சுட்டும் கத்தியால் குத்தியும் படுகொலை செய்தனர். இதில் 30 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.

ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து 2 கிராமங்களுக்குள் புகுந்து பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 80 பேர் கொல்லப்பட்ட சம்பவம் நைஜரில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

இதனிடையே தாக்குதல் நடந்த 2 கிராமங்களிலும் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு தப்பியோடிய பயங்கரவாதிகளை பிடிப்பதற்கான தேடுதல் வேட்டையை முடுக்கி விடப்பட்டுள்ளதாக நைஜரின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நைஜரில் அதிபர் தேர்தல் நடந்து வரும் சமயத்தில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. முதல்கட்ட தேர்தல் முடிவுகளை நேற்று முன்தினம் வெளியிட்ட தேர்தல் ஆணையம் அடுத்த கட்ட தேர்தல் பிப்ரவரி மாதம் நடைபெறும் என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் இந்துக்கோவில் இடிப்பு விவகாரம் – கடமையை செய்ய தவறிய 8 போலீஸ் அதிகாரிகள் பணியிடை நீக்கம் !

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள கைபர் பக்துங்கவா மாகாணம் கரக் மாவட்டம் தெர்ரி என்ற கிராமத்தில் பழமையான இந்து கோவில் ஒன்று உள்ளது.

இந்த கோவிலை புதுப்பிக்க உள்ளூரைச் சேர்ந்த இந்துக்கள் அதிகாரிகளிடம் அனுமதி பெற்றனர். இதை அறிந்த அந்தப் பகுதியைச் சேர்ந்த குறிப்பிட்ட ஒரு மதத்தைச் சேர்ந்த கும்பல் நேற்று முன்தினம்(02.01.2021) கோவிலை இடித்து தீ வைத்து கொளுத்தியது. இதில் கோவில் முற்றிலும் சேதமடைந்தது.

இந்த சம்பவத்துக்கு பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மை அமைப்புகள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்து கோவில் இடிக்கப்பட்டது தொடர்பாக, இந்தியாவும், பாகிஸ்தானிடம் தனது கண்டனத்தை பதிவு செய்தது.

இந்த சம்பவம் தொடர்பாக சுமார் 350 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எஞ்சியவர்களையும் கைது செய்ய மாகாண அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் இந்து கோவில் இடிக்கப்பட்ட விவகாரத்தில் தங்கள் கடமையை செய்ய தவறிய 8 போலீஸ் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

“பேரினவாத செயற்பாடுகளுக்கு மத்தியில், பலமிழந்திருக்கும் சமூகங்களுக்கு ஒரே குரலான ஊடகங்களை அடக்கவே ‘உதயன்’ மீதான வழக்குத்தாக்கல் நிகழ்ந்துள்ளது” – இரா.சாணக்கியன் கண்டனம் !

“அடக்கு முறை, பௌத்த மேலாதிக்க, பேரினவாத செயற்பாடுகளுக்கு மத்தியில், பலமிழந்திருக்கும் சமூகங்களுக்கு ஒரே குரலாக ஊடகங்களே உள்ளன. இத்தகைய குரலை நசுக்கவே ‘உதயன்’ மீதான வழக்குத்தாக்கல் நிகழ்ந்துள்ளது.” என  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

‘உதயன்’ மீதான யாழ். பொலிஸாரின் வழக்குத் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“உதயன் பத்திரிகை வடபுல மக்களுக்காக மட்டுமன்றி தமிழ் பேசும் மக்களின் குரலாக மிக நீண்டகாலமாக உரிமைக் குரல் எழுப்பிவருகின்றது. தற்போது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் ஒளிப்படத்தையும், அவரது சொற்களையும் வெளியிட்டமைக்காக ‘உதயன்’ பத்திரிகைக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை விசனிக்கத்தக்கதும், கவலை தரும் விடயமுமாகும்.

ஜனநாயகத்தின் நான்காவது தூண் என முக்கியத்துவம் பெற்றுள்ள ஊடகத்துறையின் பணிகளைக் கேள்விக்குறியாக்கும் வகையிலேயே இந்த விடயம் அமைந்துள்ளது. தமிழ்த் தேசியத்துக்கான தமிழ் ஊடகங்களின் பெரும்பங்களிப்புகளுக்கு மத்தியில், உதயனின் சேவை கடந்த காலங்களிலும், தற்போதும் சிறப்புற அமைந்துள்ளது. உதயனின் குரல் வளையை நசுக்கி, மௌனிக்கச் செய்யும் செயற்பாடாகவே இதனைக் கருத வேண்டியுள்ளது.

கடந்த காலங்களில் ஊடக அடக்கு முறையின் கீழ் பல தடவைகள் உதயன் அலுவலகம், தாக்கப்பட்டும், எரியூட்டப்பட்டும் நெருக்குதல்களை உதயன் சந்தித்து வந்தபோதிலும், நெஞ்சுரமும், தமிழ் பேசும் மக்களின் பேராதரவும் காரணமாக வீரியத்துடனேயே மீண்டெழுந்து வந்து அது மக்கள் குரலாக வீறுநடை போடுகின்றது.

எரிப்பு, துப்பாக்கிச் சூடுகள், தாக்குதல்கள் என்ற நிலைமாறி உதயனின் குரலை ஒடுக்கும் செயற்பாடுகள் புதிய வடிவம் பெற்றுள்ளமையே உதயன் மீதான வழக்குத் தாக்கலாகும். மக்களுக்குத் தகவல் வழங்குவது ஊடகங்களின் உரிமை எனும் அடிப்படையில் ஊடக தர்மத்துடன் செயற்பட்ட உதயன் மீதான வழக்கை அரசு மீளப்பெறவேண்டும்” – என்றார்.

“கொரோனாவினால் உயிரிழந்தவர்களை தகனம் செய்வது தொடர்பான பரிந்துரைகளை வழங்க எந்தக்குழுவும் நியமிக்கப்படவில்லை” – அரசு திட்டவட்டம் !

கொரோனாவினால் உயிரிழந்தவர்களை தகனம் செய்வது தொடர்பான விவகாரத்தில் பரிந்துரைகளை வழங்க ஒரு குழுவை நியமிப்பது குறித்து வெளியான செய்திகளில் எந்த உண்மையும் இல்லை என அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை தகனம் செய்தல் அல்லது அடக்கம் செய்வது குறித்து ஆராய்வதற்கு ஆரம்ப சுகாதார இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே, குழு ஒன்றினை நியமித்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில் கொவிட் -19 கட்டுப்பாடு எப்போதும் அறிவியலை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும் என ஆரம்ப சுகாதார இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே குறிப்பிட்டுள்ளார்.

அதே நேரத்தில் நோய் கட்டுப்பாடு குறித்த முடிவுகளை எடுக்கும்போது மதம், இனம், அரசியல், சமூக மற்றும் புராண நம்பிக்கைகள் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கொரோனா தொற்று ஒரு புதிய நோய் என்பதால் உலக சுகாதார அமைப்பின் ஆரம்ப பரிந்துரைகள் மாற்றமடைவதாகவும் இந்நிலையில் இந்த நோய் குறித்து அவ்வப்போது பரிந்துரைகளை வழங்குமாறு நிபுணர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகளிடம் அவர் கேட்டுக்கொண்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருணா அம்மானை சந்திக்க கூரிய ஆயுதங்களுடன் சென்றவர் கைது !

கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனை கத்திகளுடன் சந்திக்க சென்ற நபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முரசுமோட்டை பகுதியில் தங்கியிருந்த கருணாவை , நேற்றைய தினம்(03.01.2021)சந்திக்க சென்ற நபரை கடமையில் நின்ற பொலிஸார் சோதனைக்குட்படுத்திய வேளை அவரிடமிருந்து கூரிய ஆயுதங்கள் இரண்டை பொலிஸார் மீட்டுள்ளனர்.

குறித்த நபர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வயலிற்கு பசளைகளை  இடுவதற்காக செல்கையில், கத்தி மற்றும் அரிவாள் ஆகியவற்றை எடுத்து சென்றதாகவும் வயலில் இருந்து திரும்புகையில் கருணாவை  சந்தித்து செல்வதற்காகவே வந்ததாகவும் குறித்த சந்தேக நபர் தெரிவித்துள்ளார் எனத் தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்தனர்.

“தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாம் உருவாக்கிய கட்சி.தமிழ்த் தேசிய கூட்டமைப்புடனும் இணைந்து தேர்தலில் போட்டியிடுவதற்கும் தயாராகவே உள்ளோம்” – கருணா

“தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாம் உருவாக்கிய கட்சி.தமிழ்த் தேசிய கூட்டமைப்புடனும் இணைந்து தேர்தலில் போட்டியிடுவதற்கும் தயாராகவே உள்ளோம்” என  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தொிவித்துள்ளாா்.

கிளிநொச்சியில், நேற்று (03.01.2021) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளாா்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தொடர்பில் தொடர்ச்சியாக விமர்சனங்களை முன்வைத்து வருகின்றீர்கள் இந்த நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்புடனும் இணைந்து போட்டியிட தயாராக உள்ளீர்களா?  என அவரிடம் ஊடகவியலாளர் வினவினார்,

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாம் உருவாக்கிய கட்சி. அவர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டியும், விமர்சித்தும் உள்ளோம். அந்த வகையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடனும் இணைந்து தேர்தலில் போட்டியிடுவதற்கும் தயாராகவே உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தமிழ் கட்சிகள் ஒற்றுமையாக செயற்பட வேண்டும். அந்த ஒற்றுமைக்காக தமிழ்த் தலைவர்கள் முன்வர வேண்டும்.

நாங்கள் பல தேர்தல்களுக்கு முகம்கொடுத்து பல வெற்றிகளை கண்டுள்ளோம். இதனால் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் போன்ற இடங்களில் எமது கட்சியின் செயற்பாடுகளை விரிவுபடுத்தி வருகிறோம். இம்முறை வடக்கில், முதன் முறையாக யாழ்ப்பாண தேர்தல் தொகுதியில் எமது கட்சி போட்டியிடுவது தொடர்பாக எனது அமைப்பாளர் உடன் இன்று சந்திக்க உள்ளோம்.

தமிழ்த் தலைமைகளின் கடந்த கால செயற்பாடுகள் அரசியல்களை விட்டு தற்போது காணப்படும் சூழலை கருத்தில் கொண்டு ஒற்றுமையாக செயற்பட முன்வர வேண்டும் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.