10
10
தமிழர் பகுதிகளில் நேற்று முன்தினம்(08.01.2021) இரவு முதல் மிகப்பெரும் பிரச்சினையாக எரிந்து கொண்டிருப்பது யாழ்ப்பாண பல்கலைகழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுதூபி இரவோடு இரவாக பொலிஸ் மற்றும் இராணுவ பாதுகாப்புடன் பல்கலைகழக பராமரிப்பு பகுதியினரால் இடித்தழிக்கப்பட்ட சம்பவமாகும்.
முள்ளிவாய்க்கால் நினைவுதூபி அகற்றப்பட வேண்டியதாக காணப்பட்டடிருக்கும் பட்சத்தில் பல்கழைகழக நிர்வாகம் ஆரம்பத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுதூபி வைப்பதற்கான அனுமதி வழங்கியிருக்க கூடாது என்ற வாதத்தில் தொடங்கிய யாழ்.பல்கலைகழக துணைவேந்தருக்கு எதிரான கருத்துக்களும் கோவமும் மாற்று வடிவமெடுத்து 09 மாணவர்களின் உண்ணாவிரத போராட்டமாகவும் பூரண கடையடைப்பு போராட்டம் ஒன்றிற்கான கதவையும் திறந்து விட்டுள்ளது. இந்நிலையிலேயே உண்மையிலே யாழ்.பல்கலைகழக முள்ளிவாய்க்கால் நினைவுதூபி உடைக்கப்பட்டதற்கான பின்னணியில் யார் தான் இருக்கிறார்கள்? என்பதை தேடி கண்டறிய வேண்டிய தேவையும் உள்ளது.
2018 ஆம் ஆண்டளவில் அன்றைய யாழ். பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தினுடைய இணைவினால் உருவாக்கப்பட்டதே யாழ்.பல்கலைகழக முள்ளிவாய்க்கால் நினைவுதூபியாகும். ஆரம்பம் முதலே அதனை நிறுத்த வேண்டும் என்பதில் பல தடைகள் ஏற்பட்ட போதிலும் கூட மாணவர்கள் ஒரு வழியாக யாழ்.பல்கலைகழக உயர்மட்ட அனுமதியுடனே அதனை பல்கலைகழக பிரதான பகுதியில் நிறுவியுமுள்ளனர். இங்கு பிரச்சினை அது அழிக்கப்பட வேண்டியது எனின் அதற்கான அனுமதியையும் யாழ்.பல்கலைகழக நிர்வாகம் வழங்கியிருக்க கூடாது என்பதேயாகும். அந்து தூபி வைக்கப்பட்ட போதும் பராமரிப்பு பகுதி பல்கலைகழகத்தில் இயங்கிக்கொண்டு தான் இருந்தது. திடீரென இரவோடு இரவாக அழிக்கப்பட்ட தூபி யாழ்.பல்கலைகழக நிர்வாகம் தொடர்பாக பல கேள்விகளையும் புதிய சிக்கல்களையும் தூண்டிவிட்டுள்ளது என்பதே உண்மை.
யாழ்.பல்கலைகழக துணைவேந்தரான பேராசிரியர் சிறீ.சற்குணராஜா அவர்கள் தூபி இடிக்கப்பட்டதற்கும் தனக்கும் தொடர்பே இல்லை. அது மேலிடத்து அழுத்தம் என்பது போலவே ஆரம்பம் முதல் ஊடகங்களிடம் பேசி வந்தார். “சட்டபூர்வமற்று எது கட்டப்பட்டாலும் அது அகற்றப்படவேண்டும் என எழுத்து மூலமாக எமக்கு அனுப்பப்பட்டது. யாழ் பல்கலைக்கழகம் என்பது அரசாங்கத்தினுடைய சொத்து எனவே அரசாங்கத்தினுடைய சுற்று நிருபங்களை நடைமுறைப்படுத்த வேண்டியது துணைவேந்தர் ஆகிய எனது கடமை. அதன் அடிப்படையிலேயே நான் இந்த தூபியினை இடித்து அழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஏனெனில் குறித்த தூபி அமைப்பதற்கு அனுமதி எதுவும் பெறப்படவில்லை.
எனக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல் கடிதத்தின் அடிப்படையில் அனுமதி இல்லாத கட்டடங்கள் அனைத்தையும் உடனடியாக அகற்ற வேண்டும் என அறிவித்தல் வழங்கப்பட்ட தன் அடிப்படையிலேயே நான் அதனை அகற்றியிருந்தேன்.” எனக் குறிப்பிட்டிருந்தார் துணைவேந்தர்.
யாழ்ப்பாண பல்கலைகழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுதூபி சட்டவிரோதமானது எனின் இவ்வளவு காலமாக அது அழிக்கப்படாது இருந்ததற்கான காரணம் என்ன..? என்ற வினாவுக்கு அவர் விடை தர தயாரிவில்லை. அது சட்டவிரோதமானது எனின் மாணவர்கள் இருக்கின்ற பகல் போதிலேயே அதனை அகற்றியிருக்க வேண்டும். இதனை விடுத்து மாணவர்கள் இல்லாத இரவில் பொலிஸார் பாதுகாப்புடன் அதனை அழிக்க வேண்டிய தேவை ஏன் ஏற்பட்டது ..? யாருக்காக துணைவேந்தர் தன்னுடைய விசுவாசத்தை காட்ட முற்றட்டுள்ளார் ? போன்ற கேள்விகள் சற்று அகலமாக விடை தேடப்பட வேண்டியவை.
ஆரம்பம் முதலே மேலிடத்து அழுத்தம் என யாழ்.பல்கலைகழக துணைவேந்தரான பேராசிரியர் சிறீ.சற்குணராஜா குறிப்பிட்டிருந்தார். எனினும் அவரால் மேலிடம் எனக்குறிப்பிடப்பட்ட யாரும் அதனை தாம் செய்ததாகவோ அல்லது தூண்டியதாகவோ குறிப்பிடவில்லை என்பதே உண்மை. இராணுவத்தலையீட்டுடன் அது அழிக்கப்பட்டிருக்கலாம் என எண்ணி இராணுவத்தினரிடம் கேட்டால் “நினைவுத் தூபி இடிக்கப்பட்டமையானது, பல்கலைக்கழக நிர்வாகத்தின் தீர்மானம் என கூறிய அவர், அந்த விடயத்திற்கும் தமக்கும் அறவே தொடர்பு கிடையாது எனவும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தாம் இவ்விடயத்தில் தலையீட போவதில்லை” என இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.
இராணுவ ஊடகப் பேச்சாளர் சுமித் அத்தபத்து குறிப்பிடும் போது “யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் உள்ளக விடயங்களில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இராணுவம் தலையீடு செய்யாது எனவும் இந்த விவகாரத்தில் இராணுவத்தின் தலையீடு எதுவும் இல்லையெனவும் பல்கலைக்கழக நிர்வாகத்தின் தீர்மானத்திற்கு அமையவே இந்த விடயம் இடம்பெற்றுள்ளதாகவும்” குறிப்பிட்டிருந்தார்.
இராணுவம் மறுத்ததை தொடர்ந்து அரசுக்கு சார்பான தமிழ் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் யாருடைய தூண்டுதலிலாவது இதனை செய்ய துணைவேந்தர் முற்பட்டிருக்கலாம் என பேசப்பட்ட போது அமைச்சர் டக்ளஸ்தேவானந்தாவின் தலையீடு இதில் இருக்கலாம் என பலரும் முனுமுனுக்க ஆரம்பித்தனர். இந்நிலையில் யாழ்.பல்கலைகழக நினைவுத்தூபி இடிப்பு பல்கலைகழக துணைவேந்தருடைய முடிவு என அவரும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையிலேயே இறுதியாக பல்கலைகமானியங்கள் ஆணைக்குழு இந்த துணைவேந்தர் கூறிய சுற்றறிக்கையை அனுப்பியிருக்கலாம் என நினைத்துக்கொண்டிருக்கையில் பல்கலைகழக மாணியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசியரியர் சம்பத்அமரதுங்க குறிப்பிடுகின்ற போது “2018 ஆம் ஆண்டு இந்த நினைவுதூபி பல்கலைகழக வளாகத்துக்குள் அமைக்கப்பட்டுள்ளது. அது வடக்கு-கிழக்கு ஐககியத்துக்கு தடையாக அமையக்கூடும் என்பதாலும் அந்தத்தூபி இன்றையதினத்திற்கும் நாளைய தினத்திற்கும் பொருந்தாது என்பதாலும் துணைவேந்தர் அதனை அகற்றும் முடிவுக்கு வந்துள்ளார்” எனவும் குறிப்பிட்டிருந்தார். ஆணைக்குழுவினுடைய பதில் இடித்த துணைவேந்தருக்கு ஆதரவுக்குரலை வழங்கியிருந்ததே தவிர இடிப்பதற்கான ஆணையை தாம் வழங்கியதாக கூறவில்லை என்பதே உண்மை.
ஆக துணைவேந்தர் கூறிய மேலிடத்தோர் யாருமே அதனை இடிக்க நாம் வலியுறுத்தவில்லை என கூறியாகிவிட்ட நிலையில்.. , ஏன்..? எதற்காக ..? யாரை திருப்திப்படுத்துவதற்காக..? துணைவேந்தர் இந்தச்செயலை செய்து முடித்துள்ளார் என்பதே கேள்வி. தன்னுடைய விசுவாசத்தை யாருக்கோ காட்டுவதற்காக துணைவேந்தர் சற்குணராஜா மேற்கொண்ட செயல் அவருக்கான ஆதரவுத்தளத்தை நிர்மூலமாக்கியுள்ளது என்பதே உண்மை.
உண்மையிலேயே இந்த முள்ளிவாய்க்கால் நினைவுதூபி இனவாதத்தை தூண்டி விட்டது என்பது முற்றிலும் ஏற்க முடியாத வாதமாகும். சிங்கள மாணவர்கள் பெரும்பான்மையாக கற்கின்ற பல்கலைக்கழகங்களில் அரசுக்கு எதிராக போராட்டங்களை மேற்கொண்ட ஜே.வி.பியினருக்கான நினைவுதூபிகள் கம்பீரமாக காட்சியளிக்கின்றன. அங்கு அரசுக்கு எதிராக செயற்பட்ட ரோகண விஜயவீர உள்ளிட்டோரின் நினைவு தினங்கள் தொடர்சியாக அனுஷ்டிக்கப்படுகின்றன. அதற்கெல்லாம் தடைவிதிக்காத மேலிடம் இறந்தவர்களை நினைவுகூர்வதற்கான நினைவுத்தூபியை அழிக்ககூறியதாகவும் அதை உடனடியாக அழித்து விட்டோம் எனவும் பொறுப்பு வாய்ந்த ஒரு பதவியில் உள்ள பேராசிரியரும் துணைடவேந்தருமான சிறீசற்குணராஜா அவர்கள் கூறுவது வேடிக்கையானது.
இது போன்ற நினைவுத்தூபிகள் அவசியமானவை. இந்த யுத்த வலிகள் கடத்தப்பட வேண்டும். குறிப்பாக சிங்கள மாணவர்கள் குறிப்பிடத்தக்களவு யாழ்.பல்கலைகழகத்திலும் கற்க ஆரம்பித்துள்ள நிலையில் எங்களுடைய வலிகளையும் வேதனைகளையும் இனியொரு அடக்குமுறை எம்மீது வேண்டாம் என்ற நிலையினையும் தென்னிலைங்கைக்கு எடுத்துக்கூற இந்தத்தூபிகள் மூலம் அவசியமானவை. அதனை ஆக்கபூர்வமாக கையாள துணைவேந்தர் முற்பட்டிருக்கலாம்.
அத்துடன் பல்கலைகழக மாணவர்களுக்கு பல்கலைகழகத்துக்குள் அனுமதியளிக்காது இராணுவத்தையும் பொலிஸாரையும் குவித்து மாணவர்களை அச்சுறுத்துவது எல்லாம் எக்காலத்திலும் நியாயப்படுத்த முடியாதது. முதலில் பல்கலைகழகம் மாணவர்களுக்கானது என்பதை யாழ்பல்கலைகழக நிர்வாகம் புரிந்துகொள்ள வேண்டும். அது முழுக்க இராணுவத்தினரை குவித்து மாணவர்களை பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்தால் சுட்டுவிடுவோம் என்ற தோரணையில் மிரட்டுவது , கைது செய்து விடுவோம் என்பது எல்லாம் ஏற்கமுடியாததது. இந்த மனோ நிலையிலிருந்து பல்கலைகழக நிர்வாகம் விடுபட்டு மாணவர்களுக்கான இயங்க முன்வர வேண்டும். அந்தத்தூபியை உடைப்பதாயின் முதலில் அதனுடன் தொடர்புடைய மாணவர் ஒன்றியத்துடன் துணைவேந்தர் கலந்துரையாடலை மேற்கொண்டிருக்க வேண்டும். அதனை விடுத்து இராணுவத்தினரை அழைத்து பல்கலைகழக விடயங்களை கையாள்வது என்பது மாணவர்களுக்கும் – நிர்வாகத்துக்குமிடையிலான தூரத்தை தெளிவுபடுத்துகின்றது.
இதே துணைவேந்தர் முன்னைய நாட்களில் பல்கலைகழகத்தில் மேற்கொள்ளப்பட்ட திலீபன் நினைவு நாட்கள் நிகழ்வுகள் தொடங்கி பல நிகழ்வுகளில் பங்குபற்றியுள்ளார். துணைவேந்தருடைய கொள்கை தான் என்ன..? பதவியை பெறுவதற்கு முன்னர் ஒருமுகமும் பதவியை பெற்ற பின்னர் ஒருமுகமாக செயற்படுவோராகவே இவர்களை அடையாளப்படுத்த வேண்டியுள்ளது.
உண்மையிலேயே மேலிடத்து அழுத்தம் இல்லாமல் துணைவேந்தர் இதை செய்ய முற்பட்டிருக்கமாட்டார். இங்கு கேள்வியையும் கோவத்தையும் ஏற்படுத்தியது துணைவேந்தருடைய பதில்களும் மாணவர்களை பொலிஸார் துணையுடன் பல்கலைகழக வளாகத்தினுள் நுழைய விடாது செய்தமையுமேயாகும். மாணவர்களுடைய தீர்க்கப்பட வேண்டிய எத்தனையோ குறைகள் இருக்க அதனை எல்லாம் தீர்க்க முற்படாத துணைவேந்தர் இதனை மட்டும் இரவோடு இரவாக செய்து முடித்துள்ளார். ஒரு சில துறைகளுக்கு மாணவர்களுடைய தொகைக்கு ஏற்ப வகுப்பறைகள் இல்லை, பெறுபேறுகள் வெளியாவதிலுள்ள காலதாமதம் , ஏனைய பல்கலைகழகங்களை விட புதிய வருட அனுமதிகளிலுள்ள தாமதம், நிர்வாகத்திலுள்ள குறைபாடுகள், யாழ்.பல்கலைகழகத்திலிருந்து வெளியேறிய மாணவர்களுக்கு தொழில்வாய்ப்புக்களுக்கான சிக்கல் தீர்க்கப்படாமை, பட்டமளிப்பு விழா நடத்தப்படாமை, பரீட்சை பெறுபேறு குழப்பங்கள், சுட்டுக்கொல்லப்பட்ட மாணவர்களுக்கான முறையான தீர்வு இன்மை , முறையாக பகிடிவதை கட்டுப்படுத்தப்படாமை, விரிவுரையாளர்களுக்கிடையேயான போட்டி நிலை , உயர் கல்வி நிலையம் என்ற ரீதியில் போரினால் பின்தங்கியுள்ள சமூகத்தை முன்னேற்ற ஆக்கபூர்வமாக இயங்க முடியாமை என எத்தனையோ பிழைகளும் குறைகளும் யாழ்.பல்கலைகழகத்தில் காணப்பட அவற்றையெல்லாம் தீர்க்க பல யுகங்கள் எடுத்துக்கொள்ளும் இந்த துணைவேந்தர்கள் இவற்றை இடிப்பதிலும் நினைவு நாட்களைகட்டுப்படுத்துவதிலும் காட்டும் அக்கறையும் கடமையுணர்ச்சியுமே இன்றைய பல்கலைகழக சூழல் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகளுக்கான அடிப்படை.
உடனடியாக இடிப்பதற்கும், கேள்வி கேட்கும் மாணவர்களை கட்டுப்படுத்தவும் ஆயிரம் வழிவகைகளை கையாண்ட துணைவேந்தர் பேராசிரியர் சிறீ சற்குணராஜா அவர்கள் அதனை காப்பதற்கு ஏதாவது செய்திருக்கலாம் என்பதே பலருடைய ஆதங்கமும். பொருத்திருந்து பார்ப்போம் துணைவேந்தர் துணைபோனாரா..? அல்லது தன்னுடைய தவறை திருத்தி மீள அந்த நினைவுத்தூபியை அமைக்க வழிசெய்வாரா என்று..?