28

28

“இலங்கையின் கிரிக்கெட் தரத்தை அமைச்சர் நாமல் ராஜபக்சவினால் முன்னேற்ற முடியாவிட்டால் வேறு யாராலும் முடியாது” – அர்ஜூன ரணதுங்க

“விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவினால் இலங்கை கிரிக்கெட்டின் தற்போதைய நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியாவிட்டால் வேறு எந்த அமைச்சராலும் எதிர்காலத்தில் முன்னேற்றததை ஏற்படுத்த முடியாது” என முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணித்தலைவர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ,

இலங்கை கிரிக்கெட்டினை வலுப்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பில் அனைவரும் நாமல்ராஜபக்சவினை அவதானித்த வண்ணமுள்ளனர்.

ஜனாதிபதியும் பிரதமரும் நாமலின் குடும்பத்தவர்கள் என தெரிவித்துள்ள, ரணதுங்க இதன் காரணமாக இலங்கை கிரிக்கெட்டினை முன்னேற்றகரமான நிலைக்கு நாமலால் கொண்டு செல்ல முடியாவிட்டால் வேறு எவராலும் கொண்டு செல்ல முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி காலத்தில் கிரிக்கெட்டில் மாற்றங்களை கொண்டுவருவதற்கான முயற்சிகளை தடுப்பதற்காக பலர் ஜனாதிபதியினதும் பிரதமரினதும் ஆதரவை பெற்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் நாமல் ராஜபக்சவிற்கு விளையாட்டை பற்றி தெரியும் என்பதாலும் அவர் ஜனாதிபதியினதும் பிரதமரினதும் குடும்பத்தை சேர்ந்தவர் என்பதாலும் யாரும் தேவையற்ற விதத்தில் செல்வாக்கு செலுத்த முடியாது என ரணதுங்க தெரிவித்துள்ளார்.

“இந்திய வீரர்கள் ரசிகர்களின் இனவெறி பேச்சுக்கு ஆளானது உண்மை ” – மன்னிப்பு கேட்டது அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் !

அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் நேர்மை மற்றும் பாதுகாப்பு கமிட்டியின் தலைவர் சீன் காரோல் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சிட்னி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது இந்திய வீரர்கள்(முகமது சிராஜ், பும்ரா) ரசிகர்களின் இனவெறி பேச்சுக்கு ஆளானது உண்மை தான். விரும்பத்தகாத இந்த சம்பவத்துக்காக நாங்கள் மீண்டும் இந்திய அணியிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்.

இந்த விவகாரத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஸ்டேடியத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவின் பதிவுகள், டிக்கெட் விவரங்கள், ரசிகர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை அடையாளம் காண முயற்சித்து வருகிறோம்.

மைதானத்தில் இருந்து சந்தேகத்தின் பேரில் வெளியேற்றப்பட்ட 6 ரசிகர்களுக்கும் இனவெறி புகாருக்கும் தொடர்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது. நியூசவுத் வேல்ஸ் போலீசாரும் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்களது விசாரணை முடியும் வரை நாங்கள் எதுவும் சொல்ல முடியாது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.