2021

2021

இலகுவான வெற்றியை தவற விட்டது கொல்கத்தா – முதல் வெற்றியை பதிவு செய்தது மும்பை !

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த ஐ.பி.எல் 5-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. நாணயச்சுழற்சியில்  வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலில் களத்தடுப்பை  தேர்வு செய்தது.
அதன்படி மும்பை இந்தியன்ஸ் முதலில் துடுப்பெடுத்தாடச் செய்தது. ரோகித் சர்மா, குயின்டன் டி காக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்க்கு 153 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது மும்பை இந்தியன்ஸ்
குயின்டன் டி காக் 2 ஓட்டங்களில் வெளியேறினார். ரோகித் சர்மா- சூர்யகுமார் யாதவ் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி 36 பந்தில் 7 பவுண்டரி, 2 சிக்சருடன் 56 ஓட்டங்கள் விளாசினர். அடுத்து வந்த இஷான் கிஷன் 1 ஓட்டங்களில் வெளியேறினார். ரோகித் சர்மா 43 ஓட்டங்களில் வெளியேறினார்.
அதன்பின் அந்த்ரே ரஸல் பந்துவீச்சில் மும்பை அணி திணறியது. ஹர்திக் பாண்ட்யா 15 ஓட்டங்களிலும், குருணால் பாண்ட்யா 15 ஓட்டங்களிலும், மார்கோ ஜென்சன் 0 ஓட்டங்களிலும், ராகுல் சாஹர் 8 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
இறுதியில், மும்பை இந்தியன்ஸ் 20 நிர்ணயிக்கப்பட்ட ஓவரில் 152  ஓட்டங்களை மட்டுமே பெற்றது.
கொல்கத்தா அணியின் அந்த்ரே ரஸல் 4 பந்துப்பரிமாற்றங்களில் 15 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 இலக்குகளை  சாய்த்தார்.
153 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக நிதிஷ் ராணாவும், ஷுப்மான் கில்லும் இறங்கினர்.
இருவரும் இணைந்து  72 ஓட்டங்கள் சேர்த்தனர். கில் 33 ரன்னில் ஆட்டமிழந்தார். ராகுல் திரிபாதி 5 ஓட்டங்களிலும், மார்கன் 7 ஓட்டங்களிலும், ஷகிப் அல் ஹசன் 9 7 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். ஒருபுறம் இலக்குகள் வீழ்ந்தாலும் நிதிஷ் ராணா பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 57 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
கடைசி 4 பந்துப்பரிமாற்றங்களில் வெற்றிக்கு 30 ஓட்டங்கள் தேவைப்பட்டது. தினேஷ் கார்த்திக், அந்த்ரே ரஸல் ஆடினர். 17வது பந்துப்பரிமாற்றத்தில் 8 ஓட்டங்கள் கிடைத்தது. 18வது பந்துப்பரிமாற்றத்தில் 3 ஓட்டங்கள் மட்டுமே கிடைத்தது. 19வது பந்துப்பரிமாற்றத்தில் வெறும் 4 ஓட்டங்கள் மட்டுமே கிடைத்தது.
கடைசி பந்துப்பரிமாற்றத்தில் வெற்றிக்கு 15 ஓட்டங்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரில் போல்ட் 2 இலக்குகளை வீழ்த்தினார். இறுதியில் கொல்கத்தா அணி 7 இலக்குகள் இழப்புக்கு 142 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் மும்பை அணி 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் முதல் வெற்றியை பதிவு செய்தது.
 மும்பை அணியின் ராகுல் சாஹர் 4 இலக்குகளையும், டிரெண்ட் போல்ட் 2 இலக்குகளையும் வீழ்த்தினர்.

“சிரியா மற்றும் பிற இடங்களில் கடந்த காலங்களில் நடந்த கொடிய தவறுகளை மியன்மாரிலும் செய்ய சர்வதேச சமூகம் மீண்டும் அனுமதிக்கக்கூடாது.” – ஐ.நா. தூதர் மைக்கேல் பேச்லெட்

“சிரியா மற்றும் பிற இடங்களில் கடந்த காலங்களில் நடந்த கொடிய தவறுகளை மியன்மாரிலும் செய்ய சர்வதேச சமூகம் மீண்டும் அனுமதிக்கக்கூடாது.” என ஐ.நா. தூதர் மைக்கேல் பேச்லெட் கவலை தெரிவித்துள்ளார்.

மியன்மாரில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் திகதி ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்து விட்டு இராணுவம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. அப்போது முதல் அந்த நாட்டு மக்கள் இராணுவ ஆட்சிக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

மக்களின் இந்த தன்னெழுச்சி போராட்டத்தை இராணுவம் ஆயுதபலம் கொண்டு ஒடுக்கி வருகிறது. இராணுவ ஆட்சி தொடங்கியதில் இருந்து இப்போது வரை 600-க்கும் அதிகமான போராட்டக்காரர்கள் இராணுவ வீரர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இதனால் மியன்மாரில் தொடர்ந்து அசாதாரண சூழ்நிலை நீடிக்கிறது.

இந்த நிலையில் மியன்மாரின் தற்போதைய நிலைமை 2011-ம் ஆண்டு சிரியாவில் உள்நாட்டு போர் தொடங்கியதை எதிரொலிப்பதாக சர்வதேச மனித உரிமைகளுக்கான ஐ.நா. தூதர் மைக்கேல் பேச்லெட் கவலை தெரிவித்துள்ளார்.

சிரியாவில் 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் அரசுக்கு எதிரான மக்களின் போராட்டம் வன்முறையால் அடக்கப்பட்டதால் அங்கு உள்நாட்டு போர் வெடித்ததை சுட்டிக்காட்டி மைக்கேல் பேச்லெட் இதனை தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “சிரியாவில் 2011-ம் ஆண்டு அமைதியான ஆர்ப்பாட்டங்கள் மீது மிருகத்தனமான அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டது சில தனிநபர்கள் ஆயுதங்களை எடுக்க வழி வகுத்தது. பின்னர் அது நாடு முழுவதும் விரிவடைந்து உள்நாட்டு போராக மாறியது. அப்போது சர்வதேச சமூகம் முறையான பதிலை வழங்காதது சிரியாவுக்கு பேரழிவை ஏற்படுத்தியது. தற்போது மியன்மாரின் நிலைமை ஒரு முழுமையான மோதலை நோக்கி நகர்கிறது. சிரியா மற்றும் பிற இடங்களில் கடந்த காலங்களில் நடந்த கொடிய தவறுகளை செய்ய சர்வதேச சமூகம் மீண்டும் அனுமதிக்கக்கூடாது” என கூறினார்.

தேசத்தினுடைய வாசகர்களுக்கு பிறந்துள்ள  பிலவ வருட தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்..!

தேசத்தினுடைய வாசகர்களுக்கு பிறந்துள்ள  பிலவ வருட தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்..!

செல்வம் பட்டம் பதவிகளுக்காக எமது உள்ளார்ந்த மகிழ்ச்சியயைத் தொலைத்துவிடாமல் உள்ளக்களிப்புடன் வாழ அனைவருக்கும் நமது சிங்கள  – தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
We Luv Coimbatore's tweet - "அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு  வாழ்த்துக்கள்!! #தமிழ்ப்புத்தாண்டு #TamilNewYear " - Trendsmap
மனிதகுல வரலாற்றின் மிக இக்கட்டான காலகட்டத்தின் சாட்சியங்களாக நாமெல்லாம் ஆகியிருக்கின்றோம். சமூகத்தின் மனிதத்துவத்தின் அவசியத்தை உணர்த்துகின்ற ஆண்டாக கடந்து செல்கின்ற ஆண்டு அமைந்துள்ளது. அதனால் தனி மனித சிந்தனையோடு சற்று சமூக சிந்தனையயையும் இணைத்து நமக்கும் நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கும் நன்மை விளைவிக்கும் வகையில் எமது வாழ்க்கைப் பயணத்தை அமைத்துக்கொள்வோம். உள்ளார்ந்த மகிழ்ச்சி மட்டுமே வாழ்க்கையின் இலக்கு. வழிபிறப்பதற்கு தை பிறந்தால் மட்டும் போதாது. நம் உள்ளங்களில் நல் எண்ணங்களும் பிறக்க வேண்டும்! செல்வம் பட்டம் பதவிகளுக்காக எமது உள்ளார்ந்த மகிழ்ச்சியயைத் தொலைத்துவிடாமல் உள்ளக்களிப்புடன் வாழ அனைவருக்கும் நமது சிங்கள – தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

“வீரர்களின் திறமைகளை சரியான முறையில் பயன்படுத்தாமையே தற்போதைய கிரிக்கெட் வீழ்ச்சிக்கான முக்கிய காரணம்.” – சனத் ஜயசூரிய

இலங்கை கிரிக்கெட் அணியின் சில வீரர்களின் திறமைகளை சரியான முறையில் பயன்படுத்தாமையே தற்போதைய கிரிக்கெட் வீழ்ச்சிக்கான முக்கிய காரணம் என முன்னாள் இலங்கை அணித்தலைவர் சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தங்களுக்கு எதாவது செய்வதற்கான வாய்ப்பு கிடைக்குமாயின் நூற்றுக்கு நூறு வீதம் தங்களது உழைப்பை வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

“கொரோனாவில் இருந்து இப்போதைக்கு மீட்சி இல்லை.” – உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு !

கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் கண்டறியப்பட்ட  கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி உலகத்தையே முழுதாக முடக்கி வருகின்றது. வைரஸ் பரவ ஆரம்பித்து  சுமார் 5 மாதங்களுக்கு பிறகு பாதிப்பு குறைய தொடங்கியது. மேலும் தடுப்பு மருந்துகளும் பயன்பாட்டுக்கு வந்தன. இதனால் கொரோனா விரைவில் கட்டுக்குள் வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் வைரசின் தாக்கம் வேகமெடுத்துள்ளது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று இன்னும் அதிவேகமாக வளர்ந்து வருகிறது என்றும் அது முடிவுக்குவர நீண்ட காலம் ஆகலாம் என்றும் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதாளோம் கூறியதாவது:-

கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் பல்வேறு நாடுகளில் ஆஸ்பத்திரியின் அவசர சிகிச்சை பிரிவுகள் நிரம்பி வழிகின்றன. பல நாடுகளில் தொற்று பாதிப்பு அதிகரித்தாலும் மக்களின் அலட்சியம் காரணமாக தொடர்ந்து பரவி வருகிறது. இளம் வயதினர் தங்களுக்கு தொற்று வராது என்று நம்புகின்றனர். ஆனால் அது தவறானது.

கொரோனா பரவல் குறித்து பல்வேறு குழப்பங்கள், சிகிச்சையில் உள்ள சிக்கல்களால் வைரஸ் முடிவுக்கு வர நீண்டகாலம் ஆகும்.

பொதுமக்களின் ஒத்துழைப்பு மூலம் தொற்றை கட்டுக்குள் கொண்டு வருவது சாத்தியம் என்பது நமக்கு தெரியவந்துள்ள உண்மை என்றார்.

உலக சுகாதார அமைப்பின் உயர்அதிகாரி மரியாவான் கெர்கோவ் கூறும்போது, தொடர்ந்து 7 வாரமாக வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் உலகளவில் கொரோனா தொற்று 9 சதவீதம் அதிகரித்துள்ளது. அதே போல் இறப்பு எண்ணிக்கை ஒரே வாரத்தில் 5 சதவீதம் அதிகரித்து இருக்கிறது என்றார்.

இலங்கையில் தீவிரவாத செயற்பாடுகளுக்கான தடையின் எதிரொலி – பலப்படுத்தப்பட்டுள்ள தமிழ்நாட்டின் பாதுகாப்பு !

இலங்கையில் தீவிரவாத செயற்பாடுகளுக்கான தடைகளை தொடர்ந்து சர்வதேச வருகை மற்றும் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் உள்ள விமான நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

அல்கொய்தா மற்றும் ஐ.எஸ். உட்பட 11 பயங்கரவாத குழுக்களை தடை செய்யும் நடவடிக்கையை இலங்கை ஆரம்பித்த நிலையில் இந்த அச்சுறுத்தல் உணரப்பட்டதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் குறித்த தடையை அடுத்து ஏற்படக்கூடிய அச்சுறுத்தல் தொடர்பாக அனைத்து மாநில ஆணையர்கள் மற்றும் பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையிலிருந்து மத அடிப்படைவாதிகள் விமானம் அல்லது கடல் வழியாக சட்டவிரோதமாக குடியேறுவதற்கான வாய்ப்பு குறித்தும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் மத அடிப்படைவாதிகள் தமிழ்நாட்டில் தளம் அமைப்பதைத் தடுக்க உளவுத்துறையை பலப்படுத்தவும் மாநிலம் முழுவதும் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் பொலிஸாருக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கடந்த வாரம், தீவிரவாத நடவடிக்கைகள் தொடர்பாக அல்கொய்தா, ஐ.எஸ். உள்ளிட்ட 11 குழுக்களை தடை செய்ய சட்டமா அதிபர் அங்கீகாரம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வலைப்பயிற்சி அதிகமாக இல்லாததாலேயே கேன் வில்லியம்சன் களமிறக்கப்படவில்லை – தலைமை பயிற்சியாளர்

ஐ.பி.எல் கிரிக்கெட்டில் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் வெளிநாட்டு வீரர்களில் பேர்ஸ்டோ, டேவிட் வார்னர், முகமது நபி, ரஷித் கான் ஆகியோர் களம் இறங்கினர்.
கடந்த வருடத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஆபத்தான நிலையில் இருந்தபோதெல்லாம் தனியொரு மனிதனாக துடுப்பெடுத்தாடி  அசத்தி அணியின் வெற்றிக்கு உதவியது கேன் வில்லியம்சன் தான்.
தலைசிறந்த வீரரரான அவருக்கு இடம் கொடுக்காதது குறித்து ரசிகர்கள் அணி நிர்வாகத்தை சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சனம் செய்தனர்.
இந்ந நிலையில் அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் டிரேவர் பெய்லிஸ் கேன் வில்லியம்சனை களம் இறக்காதது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
கேன் வில்லியம்சன் குறித்து டிரேவர் பெய்லிஸ் கூறுகையில்
‘‘போட்டியில் விளையாடுவதற்கான தகுதியை பெற கேன் வில்லியம்சனுக்கு இன்னும் கொஞ்சம் நேரம் தேவை என் நாங்கள் எண்ணுகிறோம். வலைப்பயிற்சியில் கொஞ்சம் அதிகமாக பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இது நடந்திருந்தால் பேர்ஸ்டோவிற்குப் பதிலாக கேன் வில்லியம்சன் இடம் பிடித்திருப்பார். ஆனால் பேர்ஸ்டோ இந்தியாவிற்கு எதிரான தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். போட்டி சென்று கொண்டிருக்கும்போது கட்டாயம் கேன் வில்லியம்சன் அணியில் இடம் பிடிப்பார்’’ என்றார்.
பேர்ஸ்டோ நேற்றைய போட்டியில் 40 பந்தில் 55 ஓட்டங்கள் அடித்தார். இந்த போட்டியில் ஐதராபாத் அணி தோல்வியடைந்தததும் குறிப்பிடத்தக்கது.

தொடரும் கொரோனா உயிர்ப்பலி – 29.48 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலி !

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா, பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 13.66 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 10.98 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.
மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 29.48 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
வைரஸ் பரவியவர்களில் 2.38 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1.02 லட்சத்துக்கு மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

சென்னை அணி தலைவர் டோனிக்கு ரூ.12 லட்சம் அபராதம் !

14-வது ஐ.பி.எல் தொடரில்  சென்னை அணி நேற்று நடந்த தொடக்க ஆட்டத்தில் டெல்லி அணியிடம் தோற்றது. 188 ரன் குவித்தும் சென்னை அணி  அணியால் வெற்றி பெற முடியவில்லை. அந்த அளவுக்கு அணியின் பந்து வீச்சு பலவீனமாக இருந்தது.

இந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் மெதுவாக பந்துவீசினார்கள். குறிப்பிட்ட நேரத்தில் அவர்கள் பந்துவீசாமல் கூடுதல் நேரத்தை எடுத்துக்கொண்டனர்.

இதற்காக ஐ.பி.எல். விதிமுறைப்படி சென்னை அணி தலைவர் டோனி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு ரூ.12 லட்சம் (இந்திய ரூபாய்)  அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஐ.பி.எல். விளையாட்டு விதிப்படி 20 ஓவரை 90 நிமிடங்களில் வீச வேண்டும். அதாவது ஒரு மணி நேரத்தில் 14.1 ஓவரை வீசி முடிக்க வேண்டும். சென்னை அணி பந்து வீசுவதற்கு அதிக நேரம் எடுத்து கொண்டதால் டோனிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

“இந்த நாட்டில் ராஜபக்ஷக்களைப் போன்ற நல்லதொரு தலைவர்களைக் எப்போதும் காண முடியாது.” – இசாக் ரஹ்மான்

“இந்த நாட்டில் ராஜபக்ஷக்களைப் போன்ற நல்லதொரு தலைவர்களைக் எப்போதும் காண முடியாது.” என அநுராதபுர மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இசாக் ரஹ்மான் தெரிவித்தார்.

நாட்டை திறம்பட அபிவிருத்திக்கு இட்டுச் செல்கின்றவர்களே இவர்கள் என இசாக் ரஹ்மான் மேலும் தெரிவித்தார்.

கிண்ணியாவில் நேற்று (10.04.2021) இடம் பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

சமூகமே ஏமாந்து விடாதீர்கள். கல்வி மார்க்கத்தில் அக்கறை கொண்ட நாங்கள் சிலரின் இனவாத பேச்சுக்களுக்கு ஏமாறக்கூடாது. இனவாதம், மதவாதம் ஒழிய வேண்டும். கண்ணியமாகவும் கௌரவமாகவும் நாம் சிறுபான்மைச் சமூகமாக வாழவேண்டுமானால் தற்போது இருக்கின்ற ஆட்சியாளர்களுடனே இணைந்து வாழவேண்டும். அவர்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தக்கூடாது.

பசில் ராஜபக்ச போன்ற நல்லதொரு தலைவனை யாராலும் கண்டு கொள்ள முடியாது. எங்கள் ஏழுபேரையும் பாரிய அபிவிருத்தி ஊடாக இணைத்துக் கொண்டு செல்லும் நிமால் லான்சா போன்ற இராஜாங்க அமைச்சரும் இங்கு இருக்கிறார்.

அண்மையில் நாட்டுக்கு வருகை தந்த பாகிஸ்தான் நாட்டு பிரதமர் எங்களிடம் கூறியதாவது கன்னியமாக வாழவேண்டுமானால் இருக்கின்ற ஆட்சியாளர்களுடன் இணைந்து கொள்ளவேண்டும் என்று தான்.

உலகின் பாரிய அபிவிருத்திக்கு இட்டுச் செல்லக்கூடிய வளமான நாட்டை கட்டியெழுப்பக்கூடிய தலைமைகளுடன் தற்போது இணைந்தால் தான் நாம் நிம்மதியாக வாழ முடியும்.”என்றார்.