2021

2021

நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி – பதவியை இராஜினாமா செய்தார் சுவீடன் பிரதமர் !

சுவீடன் நாட்டில் புதிதாக கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான வாடகை கட்டுப்பாடுகளை எளிதாக்க அரசு திட்டமிட்டது. இதற்கு இடதுசாரி கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து, அரசுக்கான ஆதரவை திரும்ப பெற்றது. அத்துடன், பிரதமர் ஸ்டீபன் லோபன் (வயது 63) மீது பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது.
பாராளுமன்றத்தில் மொத்தம் உள்ள 349 உறுப்பினர்களில், 181 உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தனர். இதனால் தீர்மானம் வெற்றி பெற்றது. இதையடுத்து பிரதமர் ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
இராஜினாமா செய்துவிட்டு புதிய அரசு அமைக்கும் பணியை சபாநாயகரிடம் ஒப்படைக்க வேண்டும், அல்லது முன்கூட்டியே தேர்தலை நடத்தும்படி தேர்தல் ஆணையத்திடம் கூற வேண்டும்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்து ஒரு வாரம் ஆன நிலையில், பிரதமர் ஸ்டீபன் லோபன் தனது பதவியை இன்று இராஜினாமா செய்துள்ளார். புதிய தலைமையை தேர்ந்தெடுக்கும் பொறுப்பை சபாநாயகரிடம் ஒப்படைத்துள்ளார். பிரதமர் லோபன் பதவி விலகினாலும், புதிய அரசு அமையும் வரை, அவர் தலைமையிலான நிர்வாகம் வழக்கமான பணிகளை மேற்கொள்ளும்.
இதுபற்றி ஸ்டீபன் லோபன் கூறுகையில், கொரோனா தொற்று கடினமான சூழ்நிலையை ஏற்படுத்தியிருப்பதால், முன்கூட்டியே தேர்தல் நடத்துவது சிறந்த முடிவல்ல என்று கூறினார். மாற்று தலைமையை முடிவு செய்யாமல், தனக்கு எதிராக வாக்களித்ததாக ஸ்டீபன் லோபன் குற்றம்சாட்டினார்.

பின்லேடனை தியாகி என இம்ரான்கான் வாய் தவறியே சொல்லிவிட்டார் – பாகிஸ்தானின் தகவல் துறை மந்திரி

2011 ஆம் ஆண்டு, மே மாதம் 2 ஆம் தேதி, பாகிஸ்தானின் அபோட்டாபாத்தில் நுழைந்த அமெரிக்கப் படையினர், அங்கு ஒரு வீட்டில் பதுங்கியிருந்த ஒசாமா பின்லேடனை சுட்டு வீழ்த்தினர். ஒசாமா, அங்குப் பதுங்கியிருந்தது பற்றித் தங்களுக்குத் தெரியாது என்று பாகிஸ்தான் திட்டவட்டமாகத் தெரிவித்தது.
இந்தநிலையில் , பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில்  கடந்த ஆண்டு உரையாற்றிய அந்நாட்டு  பிரதமர் இம்ரான் கான், பாகிஸ்தானின் அபோட்டாபாத்திற்கு வந்த அமெரிக்கர்கள், தியாகி ஒசாமா பின்லேடனைக் கொன்றனர்” என்று  பேசியிருந்தார். இம்ரான்கானின் இந்த பேச்சு சர்வதேச அரங்கில் அதிர்வலைகளை  ஏற்படுத்தியது.
இம்ரான்கான் மேற்கண்டவாறு பேசி ஏறத்தாழ ஒரு ஆண்டு ஆன நிலையில்,  இது குறித்து பாகிஸ்தானின் தகவல் துறை மந்திரி ஃபவாத் சவுத்ரி கூறுகையில்,
“இம்ரான் கான் வாய் தவறியே அவ்வாறு பேசிவிட்டார். ஒசாமா பின்லேடனை பயங்கரவாதியாகவே பாகிஸ்தான் கருதுகிறது. அல்கொய்தா இயக்கத்தையும் பயங்கரவாத இயக்கமாகவே நாங்கள் கருதுகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

ஓராண்டுக்கு முன் நடந்த சம்பவத்தை இந்த வருடத்தில் நடந்த சம்வமாக தலைப்பில் வெளியிட்டுள்ள வலம்புரி – மோசமாகிப்போன தமிழ்பத்திரிகைகளின் தரம் – த.ஜெயபாலன்

‘கொரோனாவால் நான் இறந்தால் எனது பிள்ளையயை யார் பார்ப்பது? பெற்ற பிள்ளையயை 15 முறை குத்திக்கொன்ற யாழ்ப்பாணப் பெண்!’ என்ற தலைப்புச் செய்தியுடன் நேற்று வலம்புரி பத்திரிகை வெளியானது. இப்பத்திரிகையின் தலைப்புச் செய்தியின் படி மேற்படி சம்பவம் சிலதினங்களுக்கு முன் லண்டனில் நடைபெற்றிருக்க வேண்டும்.
May be an image of 2 people and text that says "கடழகன lampuri ஞாயிற்றுக்கிழமை (27.06.2021) தொலைபேசி 222 3378, 222 7829 ஒவி 190 கொரோனாவால் நான் இறந்தால் எனது பிள்ளையை யார் பார்ப்பது? பெற்ற பிள்ளையை 15 முறை குத்திக் கொன்ற யாழ்ப்பாணப் பெண் 4ு ழந் 15 (லண்டன்) இறந்தால் குழந்தை கொரோனா வைரஸால் தான் எப்படி வாழும் என்ற டைச் சட்டத்தின் 15 அமைச்சர் நாமல்"
ஆனால் இச்சம்பவம் ஓராண்டுக்கு முன்னதாக யூன் 30 2020 லண்டன் மிச்சத்தில் நடைபெற்றது. இச்சம்பவம் நடைபெற்ற திகதியும் பத்திரிகையின் உட்பக்கத்தில் வந்துள்ளது. ஒரு பத்திரிகையின் தலைப்புச் செய்தியயைக் கூட சரி பார்க்காமல் ஓராண்டு பழைய செய்தியை எழுதிய செய்தியாளர் அதனை சரிபார்க்காத ஒரு பத்திரிகை ஆசிரியர். இந்த நிலையில் தான் யாழ்ப்பாணப் பத்திரிகைகளின் செய்தித் தரம் உள்ளது.
May be an image of 2 people and text that says "உலகம் செய்தி விண்வெளிக்கு செல்லும் முதல் தமிழ்ப் பெண் Updated ஜன 31, 2019 © 13:26 Added ஜன 31, 2019 o 13:24 கருத்துகள் (31) You May Like Arthritis: A Simple Trick to Relieve Pain Easily (Joint Helper) Sponsored Links by Tabool 142 Shares Omaze Million Pound House Draw (Omaze) 31 Advertisement லண்டன்: முதன் முறையாக லண்டன் இலங்கை தமிழ் பள்ளி மாணவி ஒருவர் சர்வதேச விண்வெளி ஓடத்திற்கு செல்லவுள்ளார்."
ஒரு பதிப்பில் வருகின்ற செய்தியின் நிலை இதுவென்றால் இணையத் தளங்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.
‘விண்வெளிக்குச் செல்லும்முதல் தமிழ் பெண்’ என்ற தலைப்பில் தமிழக இணையத்தளம் தினமலர் யூன் 31 2019இல் ஒரு செய்தியயை வெளியிட்டு இருந்தது. இந்தச் செய்தி இலங்கையில் உள்ள பல இணையத்தளங்களிலும் வெளியாகி இருந்து. இச்செய்தி தினமலர் இணையத்தளத்தில் இன்னமும் உள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்தச் செய்தியின் அடிப்படையில் தென்மராட்சி பிரதேச சபையில் மாணவி சிபோன் ஞானகுலேந்திரன் என்ற மாணவிக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு இருந்தது. இச்செய்தி முற்றிலும் தவறானது. தமிழ் மாணவி மட்டுமல்ல எந்த மாணவியும் விண்வெளிப் பரிசோதணைகளில் ஈடுபட விண்வெளிக்கு அனுப்பப்படவில்லை.
விண்வெளி ஆராய்ச்சியில் எதிர்காலத்தில் மாணவர்களை ஊக்குவிக்க பிரித்தானிய விண்வெளி ஆராய்ச்சி மையம் மேற்கொண்ட கல்வித் திட்டத்தின் ஒரு அங்கமாக நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான மாணவர்கள் இத்திட்டத்தில் பாடசாலைகளுடாக இணைக்கப்பட்டனர். அவர்களில் சிலர் வழங்கிய நூண்ணுயிர்கள், தாவரங்கள் பரீட்சார்த்தமாக விண்வெளிக்கு கொண்டு செல்லப்பட்டு அதன் பின் மீளவும் பூமிக்கு கொண்டுவரப்பட்டு அவற்றைப் பரிசோதிப்பதே இத்திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. அதுதொடர்பில் இரு மாணவிகளுடன் பிபிசி சில நிமிடங்கள் உரையாடி அதனை ஒளிபரப்புச் செய்திருந்தது. அந்த உரையாடலில் சிபோன் ஞானகுலேந்திரன் தனக்கு நுண்ணுயிர் கற்கைகளில் ஆர்வம் என்று தெரிவித்து இருந்தாரே அல்லாமல் விண்வெளிப் பயணத்தில் ஆர்மில்லை என்பதையும் தெரிவித்து இருந்தார்.
ஆனால் தினமலர் இணையமோ தனது செய்தியில் இவ்வாறு தெரிவித்து இருந்தது: “அதீத திறமை மிக்க 2 மாணவர்களை விண்வெளிக்கு அனுப்ப பிரிட்டன் விண்வெளி ஆராய்ச்சி மையம் முடிவெடுத்தது. அதில் மிகத் திறமையாக செயல்பட்டு வெற்றி பெற்றுள்ளார் ஒரு இலங்கை தமிழ் மாணவி. அவர் பெயர் “சியோபன் ஞானகுலேந்திரன்” . இந்த மாணவி நுண்ணியல் உயிர்களைப் பற்றி கற்றுள்ளார்”. இது தான் தமிழ் ஊடகச் சூழலின் நிலை.
வலம்புரி பத்திரிகையின் ஊடகவியலாளரும் அதன் ஆசிரியரும் செய்தியின் தற்போதைய நிலையயைப் பற்றி சிறிதுகூட சிரத்தை எடுக்கவில்லை. இச்செய்தி இவ்வாரம் முக்கியத்துவம் பெறுவதற்குக் காரணம், கொலையாளியான தாய்க்கு எதிரான வழக்கின் தீர்ப்பு யூன் 24ம் திகதி நீதிமன்றத்தில் வெளியிடப்பட்டது. அது பற்றிய எந்தக் குறிப்பும் வலம்புரி பத்திரிகைச் செய்தியில் வரவில்லை. ஏதோ கொரோனா மனநிலை பாதிப்பையும் ஏற்படுத்தி பிள்ளைகளையும் கொலை செய்யத் தூண்டும் என்ற விதத்தில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் வலம்புரி க்குழு செய்தியயைச் சோடித்து இருந்தது.
மனநிலை பாதிப்புக்கு சிகிச்சை பெற்றுவந்த சுதா சிவானந்தம் (36 வயது) செய்த செயலை ஒரு பாரிய சோக நிகழ்வு என்று விபரித்த நீதிபதி வென்டி ஜோசப் அவருக்கு காலவரையறையற்ற சிகிச்சை வழங்குமாறு தீர்ப்பளித்து உள்ளார். தன்னால் மேற்கொள்ளப்பட்ட கொலை சுயநினைவுடன் மேற்கொள்ளப்பட்டது அல்லவென்ற சுதா சிவானந்தம் தரப்பின் வேண்டுகோளை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு தீர்ப்பு வழங்கியமை குறிப்பிடத்தக்கது. சுதாவின் கணவர் சிவானந்தம், சுதா ஒரு முன்ணுதாரணமான தாயாக இருந்ததை நீதிமன்றில் தெரிவித்து இருந்தார். தான் சம்பவத்தின் போது மகளைக் காயப்படுத்துவதாக துன்புறுத்துவதாக கருதவில்லை என்றும் அவர் ஆழ்ந்த உறக்கத்தில் கனவில் இருந்தாகவும் தெரிவித்தார்.
சுதா சிவானந்தத்திற்கு ஏற்பட்ட மனநோய் பற்றிய முழுமையான விபரம் அவருடைய மனநிலை மருத்துவர்களாலும் முறையாக அறியப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மோர்பிட் கொன்சேர்ன் என்ற ஒருவகை மனப்பிறழ்வுநிலையின் கட்டத்தில் சுதா சிவானந்தம் இருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி தனக்கு கடுமையான ஆபத்து அல்லது மரணம் சம்பவிக்கலாம் என்ற நிலைக்கு அவர் தள்ளப்பட்டிருந்தார். சம்பவதினத்திற்கு முதல் நாள் இரவு தனக்கு உயிராபத்து ஏற்பட்டால் பிள்ளைகளைப் பார்ப்பீர்களா என்றும் சுதா கேட்டதாக கணவர் சிவானந்தம் நீதிமன்றில் தெரிவித்து இருந்தார். இரு தாதிகளுடன் சுதாவும் நீதிமன்றுக்கு வந்திருந்தார்.
தீர்ப்பினையடுத்து சுதா சிவானந்தம் மீண்டும் மனநிலை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஒரு குடும்பத்தின் மோசமான சூழலை எவ்வித உணர்வுமின்றி ஒரு தமிழ் பத்திரிகை பரபரப்புச் செய்தியாக முயன்றதன் விளைவே இத்தலைப்பு. இப்பத்திரிகைகளின் தரம் இவ்வளவு மோசமாக இருக்கின்ற போது நாட்டில் ஜனநாயகம் சீரழிவும் தலைதூக்குவது தவிர்க்க முடியாதது. தவறுகளைத் தட்டிக்கேட்டுத் திருத்த வேண்டிய பத்திரிகைகளே தரம்தாழ்ந்து இருக்கின்ற போது இவர்களால் எவ்வாறு அரசியல்வாதிகளை கேள்விக்கு உட்படுத்த முடியும்.
இவ்வாறு தான் பொறுப்பற்ற ஊடகவியலாளர்களால் மே 31 1981இல் எரிக்கப்பட்ட யாழ்நூலகம் யூன் 1ம் திகதி எரிக்கப்பட்டதாக தவறாகப் பதிவு செய்யப்பட்டு இன்று பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றது. இந்தக் குழப்பத்தினூடாக இச்சம்பவங்களுடன் தொடர்புடைய அமைச்சர்கள் காமினி திஸ்ஸநாயக்கவும் சிறில்மத்தியூவும் குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பிக்க வழியேற்படுத்திக் கொடுக்கப்பட்டது. மே 31 இரவு எரிக்கப்பட்ட நூலகம் யூன் ஒன்று காலை வரையும் எரிந்து கொண்டிருந்தது. அதனைச் செய்தியாக்கிய ஈழநாடு பத்திரிகை நூலகம் யூன் இரவு எரிக்கப்பட்டதாக செய்தி வெளியிட்டது. யூன் அதிகாலை யூன் இரவாகி பின்னர் யூன் 2 இல் அப்பகுதிக்கு முதல் முறையாகச் சென்றவர்கள் முதல்நாள் தான் எரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்து யாழ் நூலகம் எரிக்கப்பட்ட நாளையே மாற்றி எழுத முற்பட்டுள்ளனர்.
இதேபோல் புளொட்டின் வரலாற்றை எழுதுவதாகக் கூறிக்கொண்டு ஆங்காங்கே தகவல்களைப் பொறுக்கி தனது அனுபவமாகச் சித்தரித்து ஒரு தொடரை எழுதிவருகின்றார் இந்திய உளவுத்துறையான றோவின் முகவர் வெற்றிச்செல்வன். அவர் இந்திய உளவுப் பிரிவுக்கு தனது விசுவாசத்தைகாட்ட றோவின் செயற்பாடுகளுக்கு வெள்ளையடித்து வருகின்றார். இவர் உமா மகேஸ்வரனின் கொலை, மாலை தீவு கைப்பற்றல் நடவடிக்கைகளின் போது இந்திய உளவுபடையான ரோவிற்கு எதுவுமே சம்பந்தம் இல்லாமல் அவர்கள் எல்லாம் விரல்சூப்பிக் கொண்டிருந்தனர் என்ற வகையில் பதிவுகளை எழுதிவருகின்றார். தன்னை முகவர் என்று எழுதுபவர்களை தொலைபேசியில் மிரட்டுவதும் அவர்களைப் பற்றி மோசமாக பதிவுகளை இடவதும் இவருடைய கைங்கரியமாக உள்ளது. இவருடைய பதிவுகளின் நம்பகத்தன்மையும் இவருடைய நேர்மைத்தன்மை பற்றியும் பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர். தன்னுடைய பதிவுகளிலேயே இவர் ஒன்றுக்குப்பின் ஒன்று முரணாகவும் குறிப்பான கால குறியீடுகள் இல்லாமல் சகட்டுமேனிக்கு தன் விருப்பு வெறுப்புப்படி எழுதி வருகின்றமையயை பலரும் தேசம்நெற்க்கு தெரிவித்து வருகின்றனர்.
ஊடகவியலாளனே வரலாற்றின் முதலாவது ஆசிரியன். ஆகவே பதிவுகளை மேற்கொள்வோர் வரலாற்றுக் கடமையை உணர்ந்து அதனைச் செய்ய வேண்டும்.

இந்திய ஜனாதிபதியின் பயணத்துக்காக நிறுத்தப்பட்ட போக்குவரத்து – உரிய நேரத்துக்கு வைத்தியசாலை செல்ல முடியாது உயிரிழந்த பெண் !

இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்,   உத்தர பிரதேச மாவட்டத்தின் கான்பூர் மாவட்டத்தில் உள்ள தான் பிறந்த பகுதியான  கிராமத்துக்கு நேற்று முன்தினம் சென்றார். கான்பூருக்கு குடும்பத்துடன் ரயிலில் பயணம் செய்த ஜனாதிபதி, அங்கிருந்து காரில் கிராமத்துக்கு சென்றார். அவரது கார் செல்லும் வழியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவனைக்கு அழைத்துச்செல்லப்பட்ட வந்தனா மிஸ்ரா (வயது 50) என்ற பெண் உயிரிழந்தார்.  சரியான நேரத்துக்கு  மருத்துவமனைக்கு அழைத்து வந்திருந்தால் அவர் உயிர் பிழைத்திருக்கலாம்’ என, வைத்தியர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்ட ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தன்னுடைய அதிர்ச்சியை வெளியிட்டுள்ளதுடன்  வந்தனாவின் குடும்பத்துக்கு, தன் ஆழ்ந்த இரங்கலை நேரில் சென்று தெரிவிக்கும்படி போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதற்கிடையே நடந்த சம்பவத்துக்கு, கான்பூர் போலீசார் மன்னிப்பு கோரியுள்ளனர்.

கேரளாவில் நாளுக்குநாள் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் – தடுப்பதற்காக முதல் மந்திரி பினராயி விஜயன் நடவடிக்கை !

இந்தியாவின் கேரளாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சமீபத்தில் அதிகரித்து வருகின்றன.

வரதட்சணை கொடுமை, பெண்களிடம் அத்துமீறல், சிறுமிகளிடம் தகாத முறையில் நடத்தல் போன்ற குற்றங்கள் அதிக அளவு நடந்தது. கேரள காவல்துறையினருக்கு  இது தொடர்பான புகார்கள் அதிக அளவில் வரத்தொடங்கியதை அடுத்து இதுபோன்ற குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய சிறப்பு மையம் ஒன்றை கேரள அரசு தொடங்கியுள்ளது.

மேலும் இந்த மையத்தில் வாட்ஸ்-அப் மூலமும், தொலைபேசி மூலமும் புகார் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. இந்த மையம் தொடங்கிய ஒரு சில நாட்களிலேயே கேரளா முழுவதிலும் இருந்து 100-க்கும் மேற்பட்ட புகார்கள் குவிந்தது.

இதையடுத்து பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்தார்.

மேலும் இது தொடர்பாக அவர் நேற்று திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

பெண்களுக்கு எதிரான குற்றங்களை யார் செய்தாலும் அவர்கள் மீது அரசு பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கும். பெண்கள் அளிக்கும் புகார்கள் மீது விரைந்து விசாரணை நடத்த போலீசாருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

மேலும் இக்குற்றங்கள் தொடர்பான வழக்குகளை விரைந்து விசாரித்து குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்க சிறப்பு கோர்ட்டுகள் அமைக்கப்பட உள்ளது.

இதன்மூலம் குடும்ப வன்முறை மற்றும் பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு விரைவில் நீதி கிடைக்கும். பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க மாநிலம் முழுவதும் பஞ்சாயத்து அளவில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இதில் உள்ளாட்சி அமைப்புகள் முக்கிய பங்கு வகிக்கும்.

விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

தடுப்பூசி போட்டுக்கொள்ள விருப்பமில்லா விட்டால் இந்தியாவுக்கு செல்லுங்கள் – பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ காட்டம் !

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டுடெர்டே, கொவிட் தடுப்பூசி போட மறுப்பவர்களை கைது செய்யப்போவதாக எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் அந்நாட்டு  ‘தடுப்பூசி வேண்டாம் என்பவர்கள், இந்தியாவுக்கோ அல்லது வேறு நாட்டுக்கோ செல்லுங்கள்’ எனக் கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

இது தொடர்பில் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டுடெர்டே தெரிவித்துள்ளதாவது:

நாடு முழுவதும் கொவிட் தொற்று மோசமாகப் பரவி வருகிறது. கொவிட் பரவலைத் தடுக்க தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம். ஆனால் பலரும் தடுப்பூசி போட மறுக்கின்றனர். தடுப்பூசி போடாதவர்களைக் கைது செய்ய நேரிடும். கைது செய்து, தடுப்பூசி போடுவோம். ஏற்கெனவே பெருந்தொற்று பேரிடரால் அவதியுற்றிருக்கும் எங்களுக்கு, தடுப்பூசி போட மாட்டேன் எனக் கூறுபவர்கள் மேலும் மேலும் சுமை கொடுக்கின்றீர்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

நான் இவ்வளவு எடுத்துரைத்த பிறகும், உங்களுக்கு தடுப்பூசி வேண்டாமென்றால், இந்த நாட்டை விட்டு வெளியேறிவிடுங்கள். இந்தியாவுக்குச் செல்லுங்கள், அல்லது உங்களுக்கு வேறு ஏதேனும் நாட்டுக்குச் செல்ல வேண்டுமென்றாலும் செல்லுங்கள், அமெரிக்காவுக்குக் கூட செல்லுங்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சுகாதார விதிமுறைகளை மீறி முத்தமிட்டதால் வந்த அபத்தம் – பதவி துறந்தார் பிரித்தானிய சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் !

தனது சக ஊழியரை முத்தமிட்டதன் ஊடாக சமூக இடைவெளியை மீறிய காரணத்தால் பிரித்தானிய சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் தான் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

Who Is Matt Hancock's Aide Gina Coladangelo? - Todayuknews

கொவிட் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த பிரித்தானியாவில் கடுமையான சட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ள நேரத்தில், அந்நாட்டு சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் தனது சக ஊழியர்களில் ஒருவருடன் மிக நெருக்கமாக இருக்கும் காணொளி வெளியாகி இருந்தது.

இந்த காணொளி வெளியானதன் பின்னர் சுகாதார செயலாளருக்கு எதிராக மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து அவர் இவ்வாறு பதவி விலகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவத்தின் மூலம் நாட்டின் உயர்மட்ட சுகாதார அதிகாரி பொதுமக்களுக்கு தவறான முன்னுதாரணத்தை காட்டிநிற்பதாக பலர் குற்றம் சாட்டி இருந்தனர்.

சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் தனது முக்கிய சகாக்களில் ஒருவரான ஜினா கோலாடங்கேலோ(Gina Coladangelo )உடன் நெருக்கமாக இருக்கும் காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

இந்த சம்பவத்திற்கு பிரித்தானிய எதிர்க்கட்சியான தொழிற்கட்சியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது, உடனடியாக சுகாதார செயலாளரை பதவி நீக்குமாறு பிரதமருக்கு கோரிக்கை விடுத்திருந்தது.

பிரித்தானியா மக்கள் சமூக ரீதியாக இடைவெளியை பேணி, முககவசம் அணிந்து, கடுமையான சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றும் நேரத்தில் சுகாதார செயலாளரின் செயலுக்கு பலரும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். எவ்வாறாயினும், இந்த சம்பவம் தொடர்பாக சுகாதார செயலாளர் பகிரங்கமாக மன்னிப்பு கோரியதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சம்பவத்தின் மூலம் தான் பிரித்தானிய மக்களை அவமானப்படுத்தியதாகவும், அந்த சம்பவத்தின் மூலம் சமூக இடைவெளியை மீறியதாகவும் சுகாதார செயலாளர் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது

முடிவின்றி வேட்டையாடும் கொரோனா – 40 இலட்சத்தை நெருங்கும் உயிரிழப்பு எண்ணிக்கை

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஒரு ஆண்டு கடந்திருந்தாலும் கூட உலகம் இன்று வரை முடங்கிப்போய்தான் இருக்கின்றது.
கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.
இந்நிலையில், உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 18.11 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 16.57 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.
மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 39.24 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
வைரஸ் பரவியவர்களில் 1.14 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 80 ஆயிரத்து 500-க்கும் அதிகமானோர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

அமெரிக்காவுக்கு உதவிய 50,000 ஆப்கானியர்களை வெளியேற்ற அமெரிக்கா திட்டம் !

ஆப்கானிஸ்தானில் இருந்து செப்டம்பர் மாதம் துருப்புக்கள் திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில்  அமெரிக்க இராணுவத்துக்கு உதவிய ஆயிரக்கணக்கான ஆப்கானியர்களை வெளியேற்ற அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

இந்தத் திட்டத்தில் 50,000 பேரை அவர்களது குடும்பங்களுடன் மற்ற நாடுகளுக்கு நகர்த்துவது அடங்கும் என மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பல ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் அமெரிக்க இராணுவ படைகளுக்கு மொழிபெயர்ப்பு உள்ளிட்ட பணிகளில் உதவிய ஆப்கானியர்களே இவ்வாறு வெளியேற்றப்படவுள்ளனர்.

துருப்புக்கள் திரும்பப் பெற்றப் பின்னர், அமெரிக்க படைகளுக்கு உதவிபுரிந்த ஆப்கானியர்களுக்கு தலிபான்களால் ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

18,000 ஆப்கானியர்கள் அமெரிக்க விசாக்களுக்கு விண்ணப்பித்துள்ளனர். ஆனால் அது நீண்ட கால செயல்முறை என்பதால் தாமதமாகியுள்ளது.

வெள்ளை மாளிகையில் நேற்று (வியாழக்கிழமை) பேசிய ஜனாதிபதி ஜோ பைடன், ‘எங்களுக்கு உதவியவர்களுக்கு உதவ நாங்கள் பின்வாங்கப் போவதில்லை. எங்களுக்கு உதவ தங்கள் உயிரைப் பணயம் வைத்த வேறு எவரையும் போலவே அவர்கள் இங்கு வரவேற்கப்படுகிறார்கள்’ என கூறினார்.

இதேபோல முன்னதாக ஆப்கானிஸ்தானில் பிரித்தானிய படைகளுக்கு மொழிபெயர்ப்பு உள்ளிட்ட பணிகளில் உதவிய ஆப்கானியர்களுக்கு குடியுரிமை வழங்கவுள்ளதாக பிரித்தானியா அறிவித்திருந்தது.

மீள் குடியேற்றத் திட்டத்தின் கீழ் ஏற்கெனவே 1,400 மொழிபெயர்ப்பாளர்களும் அவர்களது உறவினர்களும் பிரித்தானியாவில் குடியமர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

திருச்சி முகாமில் 16வது நாளாகவும் தொடரும் இலங்கைத்தமிழர்களின் போராட்டம் – போராட்டக்காரர்களில் ஒருவர் மரணம் – அறிக்கை விட்டதை தவிர வேறு ஒன்றும் செய்திராத தமிழ்தலைமைகள் !

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் குற்ற வழக்குகளில் தொடர்புடையதாக தமிழ்நாடு காவல் துறையால் கைது செய்யப்பட்ட இலங்கைத் தமிழர்கள் 78 பேர் உள்ளனர். தங்களை பொய் வழக்கில் கைது செய்தும் அந்த வழக்கிலும் தண்டனைக் காலத்திற்கே மேல் சிறப்பு முகாம் எனும் சிறையில் அடைத்து வைத்துள்ளனர். எனவே சட்டப்படி தங்களை விடுதலை செய்ய வேண்டும் கோரி பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

சிறையிலிருந்து விடுதலை செய்ய வேண்டும். இல்லையென்றால் கருணை கொலை செய்து விடக்கோரி  தொடர்ச்சியாக 16 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில்  விடுதலை செய்யுமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இலங்கை தமிழர் ஒருவர் நேற்று (வியாழக்கிழமை) உயிரிழந்துள்ளார்.

சிறப்பு முகாமில் 78 இலங்கைத் தமிழர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் மட்டக்களப்பை சேர்ந்த 52 வயதான ஒருவரும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், திடீர் சுகயீனம் காரணமாக திருச்சி அரச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து, உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சரி விடயத்திற்கு வருவோம்..,

அண்மையில் இது தொடர்பில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் தொடர்பினை ஏற்படுத்தயிருந்த தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான செ.அடைக்கலநாதன் விடுதலை தொடர்பில் தமிழக முதல்வருடன் பேசி விரைவில் தீர்வு பெற்று தருவதாக கூறியிருந்தார். பின்புஇதுகுறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு,  அவசர கடிதம் அனுப்பி வைத்திருந்தார். மக்கள் ஓட்டுக்களில் தெரிவானாலும் அவரும் – கட்சிக்காரர்களும் ரொம்ப பிஸி.  சிறிய பேரணியை நடாத்தி எதிர்ப்பை கூட அவராலோ அல்லது அவருடைய கட்சியினராலோ மேற்கொள்ள முடியவில்லை – மேற்கொள்ளவும் அவர்கள் முன்வரவில்லை என்பதே உண்மை.

 

கூட்டமைப்பினரையோ – ஏனைய தமிழ்தேசிய கட்சிகளையோ  பொருத்தவரை எந்த வேலையும் செய்யாமல் தேர்தல் காலங்களில் பிரச்சார பீரங்கி போல முழங்கித்தள்ள ஏதாவது கிடைத்தால் போதுமானது. வேறு ஒருசெயலும் இவர்களிடம் இல்லை. கூட்டாக இணைந்து விடுதலை தொர்பாக ஒரு அறிக்கை கூட வெளியிட முடியாதோர் தான் இவர்கள்.

 

இவர்கள் மக்களிடம் ஒரு விதமான மாய விம்பத்தை உருவாக்கி வைத்துள்ளனர். அதாவது அரசாங்கத்திலுள்ளோர் எல்லோரும் துரோகிகள். தாம் மட்டுமே உத்தமர்கள் என்ற ஒரு மாயத்தோற்றமே அது. தமிழ்தேசியம் பேசுகின்ற எல்லா கட்சிகளும் இதனை தவறாது செய்கின்றன – தொடர்ச்சியாக. இவர்களுடைய கருத்துக்களுக்கு இன்று வரை தமிழ் மக்கள் என்ன நம்பிக்கையில் கட்டுண்டு கிடக்கிறார்கள் என்பது தான் தெரியவில்லை.

தமிழ்தேசியம் பேசும் அரசியல்வாதிகள் எல்லா தரப்பினருடனும் கட்டித்தழுவி கூடிக்குழாவுவர். இதற்கு ஆகச்சிறப்பான எடுத்துக்காட்டு 2010 ஜனாதிபதி தேர்தல் . “ பொன்சேகா – மகிந்த கூட்டணி இணைந்தே 2009 போரை முடித்து வைத்தனர். ஆனால் 2010 தேர்தல் களத்தில் மகிந்த மட்டுமே குற்றவாளி. பொன்சேகா உத்தமர் என பிரச்சாரம் செய்து அவரை வட – கிழக்கில் மகிந்த நெருங்க முடியாத வாக்குகளை பெற வைத்தனர். இதே பொன்சேகா தான்  பாராளுமன்ற அமர்வு ஒன்றின் போது புரவி புயல் வடக்குக்கு வீசியிருக்க வேண்டும் என்று கூறிய நல்லுள்ளம் கொண்டவர் .” இவ்வளவு தான் இவர்களுடைய அரசியல். யாரையாவது எதிர்த்து ஏதாவது பேசிக்கொண்டிருந்தால் போதுமே தவிர வேறு ஒரு செயலும் இவர்களிடமும் இல்லை.

அரசியல் கைதிகளுடைய விடுதலை தொடர்பில் கூட இவர்கள் ஒன்றுமே செய்திருக்கவில்லை. பாவம் இவர்களை நம்பி முடியாது போய் ஒரு கட்டத்துடன் மக்களே போராட்டத்தில் இறங்கி தமக்கான தீர்வை தேட ஆரமபித்தனர். வெட்கமேயில்லாது அதிலும்  கலந்து கொண்டு அரசியல் லாபம் ஈட்ட இவர்கள் தயாரே தவிர ஆக்கபூர்வமான ஒரு செயலும் இல்லை. இவர்களிடம் இதில் எதையுமே எதிர்பார்க்கவும் முடியாது.

பாவம் மக்கள் தான் இவர்களுடைய தேர்தல் அரசியலை புரிந்து கொள்ளாது இவர்கள் கூறும் போலி வார்த்தைகளை நம்பி  ஏதோ ராஜபக்ஷக்களும் – வியாழேந்திரர்களும் – டக்ளஸ்களும் தங்களுடைய எதிரிகள் என்ற பிரம்மையிலேயே வாழ்ந்து அவர்களிடம் உதவி எதையும் எதிர்பார்க்காது இறந்தும் விடுகின்றனர். இதற்கும் ஒரு சிறப்பான எடுத்துக்காட்டு உள்ளது. யாழ்.மாநகர முதல்வராக பணியாற்றிக்கொண்டிருக்கும் வி.மணிவண்ணன் இறுதியாக நடந்த  பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரங்களின் போது அமைச்சர் டக்ளஸ் கட்சி மீது சேறு பசிக்கொண்டேயிருந்தார். அது போல அவருடைய துரோகிகள் கட்சியுடனும் தொடர்புகளோ – கூட்டோ ஏதுமில்லை எனவும் கூறியிருந்தார்.  அவர் மட்டுமல்ல. அவருடைய கட்சிக்காரரும் தான். வழமையான அதே துரோகி கான்செப்ட் தான்.  ஆனால் அவர் யாழ்.மாநகர முதல்வராவதற்கு வாக்குகளை பெறும் போது மட்டும்  டக்ளஸ் தரப்பினர் நல்லவர்களாகி அவர்கள் ஆதரவுடன் தான் அவர் பதவியேற்றுக்கொண்டார். முன்னைநாள் துரோகிகள் அவருக்கு தேவை என்றவுடன் நல்லவர்களாகி விட்டனர். இது போலத்தான் மக்களை மூளைச்சலவை செய்து வைத்துள்ளனர்.

 

இதே விடயம் தான் திருச்சி முகாமிலும் நடந்துள்ளது. பாவம் தமிழ்தேசிய கட்சிகள் தங்களை மீட்கும் என்ற நம்பிக்கையுடன் போராட்டத்தை மேற்கொண்டனர்.  அடக்கலநாதன் தொடர்பு கொண்ட போது கூட  போராட்டக்காரர்கள் அதை தான் நம்பியிருப்பர். அவர் எழுதிய கடிதத்தை தாண்டி வேறு எந்த நகர்வும் அவர்கள் மேற்கொள்ளவில்லை. இதே சமயத்தில் அண்மையில் இலங்கைக்கான இந்தியத்தூதுவருடன் சந்திப்பு இடம்பெற்ற போது கூட கூட்டமைப்பினர் இதனை வலியுறுத்தவில்லை.  தேவையில்லாத பழைய பல்லவிகளை பாடிவிட்டு ஒரு அறிக்கையை வெளியிட்டனரே தவிர வழமை போல இந்த சந்திப்பிலும் கடுகளவு கூட பயன்இல்லை. இவர்களுக்கும் ஓட்டு போட்டு தெரிவு செய்த மக்கள் பாவம்.

முடிந்திருக்குமாயின் அமைச்சராக உள்ள டக்ளஸ்தேவானந்தாவிடமோ – இராஜாங்க அமைச்சராகவோ உள்ள வியாழேந்திரனிடமோ அல்லது அங்கஜன் இராமநாதனிடமோ இவர்கள் பேசியிருந்தாலோ அல்லது தொடர்பு கொண்டிருந்தாலோ அரச ம்டத்தில் சரி பிரச்சினையை தீர்க்க ஏதாவது செய்திருப்பார்கள் போலத்தோன்றுகிறது. சரி அவர்களால் முடியாது இங்கே இருந்து ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருந்த அடைக்கலநாதனும் அவருடைய கட்சிக்காரரும் கூட மக்களுடைய பிரச்சினையை தீர்க்க மனதுள்ளோராக இருந்திருப்பின் தங்களுடைய கருத்துநிலைகளை கைவிட்டு அரச தரப்பிடம் அவர்கள் விடுதலைக்காக ஏதாவது முயற்சி எடுத்திருக்கலாம்.  அப்படி ஒரு முடிவுக்கான நகர்வை மேற்கொண்டிருந்தால் கூட  போராட்டத்தை தற்காலிகமாக கைவிடச்செய்து அந்த ஒரு உயிரை காப்பாற்றியிருக்கலாம்.  அவையொன்றுமே செய்யமாட்டார்கள். ஆனால் பூகோள அரசியல்வியாக்கியானங்கள் எல்லாம் மணியாக பேசுவார்கள் . பயனற்ற தலைவர்களையே நாம் பாராளுமன்றம் அனுப்பிக்கொண்டிருக்கின்றோம்.

 

முன்னைய நிலையோடு ஒப்பிடும் போது மக்கள் ஓரளவுக்கு தங்களை சுதாகரித்து போலித்தேசியவாதிகளை தோலுரிக்க ஆரம்பித்து விட்டனர் என்பதை அண்மைய பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டியுள்ளன.  தமிழ்தேசிய கட்சிகளை விட அதிக வாக்குகளில் அரசு சார்பான வேட்பாளர்கள் பாராளுமன்றம் நுழைந்துள்ள தன்மையானது மக்கள் ஓரளவு மாயவிம்பத்தில் இருந்து வெளிவர ஆரம்பித்துள்ளதையும் போலி அரசியலில் இருந்து மக்கள் வெளிவர துடிப்பதையும் காட்டுகின்றது.

மக்கள் தெளிவாக சிந்திக்க ஆரம்பித்துவிட்டார்கள். அரசு சார்பானவர்கள் என்ன செய்கிறார்கள் என தமிழ்தேசிய கட்சியினர் குற்றஞ்சாட்ட தகுதியுள்ளவர்களாக இருக்க வேண்டுமாயின் கொஞ்சமாவது தமிழ்மக்கள் போட்ட ஓட்டுக்களுக்காக அவர்களுக்காக இயங்க ஆரம்பியுங்கள்.  இல்லையேல் இம்முறை தேர்தலில்  மாவை தூக்கியெறியப்பட்டது போல நீங்கள் ஒவ்வொருவராக தூக்கியெறியப்பட்டு நீங்கள் துரோகிகள் எனக்கூறியோர் முழுமையாக உங்கள் வட்டாரங்களை ஆக்கிரமிக்கலாம்.

பழைய கதைகளை பேசிக்கொண்டு  சர்வதேசம் – இந்தியா போன்ற பழைய சரக்குகளை இனியும் விற்க முயற்சிக்காது மக்களை போராட தூண்டாது உங்களுக்கு பின்னால் மக்களை திரட்டுங்கள்.  மக்களுடைய பிரச்சினைகளுக்காக இதய சுத்தியுடன் செயலாற்ற முன்வாருங்கள் . மக்கள் தாங்கிப்பிடிப்பார்கள் உங்களை..!