‘கொரோனாவால் நான் இறந்தால் எனது பிள்ளையயை யார் பார்ப்பது? பெற்ற பிள்ளையயை 15 முறை குத்திக்கொன்ற யாழ்ப்பாணப் பெண்!’ என்ற தலைப்புச் செய்தியுடன் நேற்று வலம்புரி பத்திரிகை வெளியானது. இப்பத்திரிகையின் தலைப்புச் செய்தியின் படி மேற்படி சம்பவம் சிலதினங்களுக்கு முன் லண்டனில் நடைபெற்றிருக்க வேண்டும்.

ஆனால் இச்சம்பவம் ஓராண்டுக்கு முன்னதாக யூன் 30 2020 லண்டன் மிச்சத்தில் நடைபெற்றது. இச்சம்பவம் நடைபெற்ற திகதியும் பத்திரிகையின் உட்பக்கத்தில் வந்துள்ளது. ஒரு பத்திரிகையின் தலைப்புச் செய்தியயைக் கூட சரி பார்க்காமல் ஓராண்டு பழைய செய்தியை எழுதிய செய்தியாளர் அதனை சரிபார்க்காத ஒரு பத்திரிகை ஆசிரியர். இந்த நிலையில் தான் யாழ்ப்பாணப் பத்திரிகைகளின் செய்தித் தரம் உள்ளது.

ஒரு பதிப்பில் வருகின்ற செய்தியின் நிலை இதுவென்றால் இணையத் தளங்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.
‘விண்வெளிக்குச் செல்லும்முதல் தமிழ் பெண்’ என்ற தலைப்பில் தமிழக இணையத்தளம் தினமலர் யூன் 31 2019இல் ஒரு செய்தியயை வெளியிட்டு இருந்தது. இந்தச் செய்தி இலங்கையில் உள்ள பல இணையத்தளங்களிலும் வெளியாகி இருந்து. இச்செய்தி தினமலர் இணையத்தளத்தில் இன்னமும் உள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்தச் செய்தியின் அடிப்படையில் தென்மராட்சி பிரதேச சபையில் மாணவி சிபோன் ஞானகுலேந்திரன் என்ற மாணவிக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு இருந்தது. இச்செய்தி முற்றிலும் தவறானது. தமிழ் மாணவி மட்டுமல்ல எந்த மாணவியும் விண்வெளிப் பரிசோதணைகளில் ஈடுபட விண்வெளிக்கு அனுப்பப்படவில்லை.
விண்வெளி ஆராய்ச்சியில் எதிர்காலத்தில் மாணவர்களை ஊக்குவிக்க பிரித்தானிய விண்வெளி ஆராய்ச்சி மையம் மேற்கொண்ட கல்வித் திட்டத்தின் ஒரு அங்கமாக நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான மாணவர்கள் இத்திட்டத்தில் பாடசாலைகளுடாக இணைக்கப்பட்டனர். அவர்களில் சிலர் வழங்கிய நூண்ணுயிர்கள், தாவரங்கள் பரீட்சார்த்தமாக விண்வெளிக்கு கொண்டு செல்லப்பட்டு அதன் பின் மீளவும் பூமிக்கு கொண்டுவரப்பட்டு அவற்றைப் பரிசோதிப்பதே இத்திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. அதுதொடர்பில் இரு மாணவிகளுடன் பிபிசி சில நிமிடங்கள் உரையாடி அதனை ஒளிபரப்புச் செய்திருந்தது. அந்த உரையாடலில் சிபோன் ஞானகுலேந்திரன் தனக்கு நுண்ணுயிர் கற்கைகளில் ஆர்வம் என்று தெரிவித்து இருந்தாரே அல்லாமல் விண்வெளிப் பயணத்தில் ஆர்மில்லை என்பதையும் தெரிவித்து இருந்தார்.
ஆனால் தினமலர் இணையமோ தனது செய்தியில் இவ்வாறு தெரிவித்து இருந்தது: “அதீத திறமை மிக்க 2 மாணவர்களை விண்வெளிக்கு அனுப்ப பிரிட்டன் விண்வெளி ஆராய்ச்சி மையம் முடிவெடுத்தது. அதில் மிகத் திறமையாக செயல்பட்டு வெற்றி பெற்றுள்ளார் ஒரு இலங்கை தமிழ் மாணவி. அவர் பெயர் “சியோபன் ஞானகுலேந்திரன்” . இந்த மாணவி நுண்ணியல் உயிர்களைப் பற்றி கற்றுள்ளார்”. இது தான் தமிழ் ஊடகச் சூழலின் நிலை.
வலம்புரி பத்திரிகையின் ஊடகவியலாளரும் அதன் ஆசிரியரும் செய்தியின் தற்போதைய நிலையயைப் பற்றி சிறிதுகூட சிரத்தை எடுக்கவில்லை. இச்செய்தி இவ்வாரம் முக்கியத்துவம் பெறுவதற்குக் காரணம், கொலையாளியான தாய்க்கு எதிரான வழக்கின் தீர்ப்பு யூன் 24ம் திகதி நீதிமன்றத்தில் வெளியிடப்பட்டது. அது பற்றிய எந்தக் குறிப்பும் வலம்புரி பத்திரிகைச் செய்தியில் வரவில்லை. ஏதோ கொரோனா மனநிலை பாதிப்பையும் ஏற்படுத்தி பிள்ளைகளையும் கொலை செய்யத் தூண்டும் என்ற விதத்தில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் வலம்புரி க்குழு செய்தியயைச் சோடித்து இருந்தது.
மனநிலை பாதிப்புக்கு சிகிச்சை பெற்றுவந்த சுதா சிவானந்தம் (36 வயது) செய்த செயலை ஒரு பாரிய சோக நிகழ்வு என்று விபரித்த நீதிபதி வென்டி ஜோசப் அவருக்கு காலவரையறையற்ற சிகிச்சை வழங்குமாறு தீர்ப்பளித்து உள்ளார். தன்னால் மேற்கொள்ளப்பட்ட கொலை சுயநினைவுடன் மேற்கொள்ளப்பட்டது அல்லவென்ற சுதா சிவானந்தம் தரப்பின் வேண்டுகோளை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு தீர்ப்பு வழங்கியமை குறிப்பிடத்தக்கது. சுதாவின் கணவர் சிவானந்தம், சுதா ஒரு முன்ணுதாரணமான தாயாக இருந்ததை நீதிமன்றில் தெரிவித்து இருந்தார். தான் சம்பவத்தின் போது மகளைக் காயப்படுத்துவதாக துன்புறுத்துவதாக கருதவில்லை என்றும் அவர் ஆழ்ந்த உறக்கத்தில் கனவில் இருந்தாகவும் தெரிவித்தார்.
சுதா சிவானந்தத்திற்கு ஏற்பட்ட மனநோய் பற்றிய முழுமையான விபரம் அவருடைய மனநிலை மருத்துவர்களாலும் முறையாக அறியப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மோர்பிட் கொன்சேர்ன் என்ற ஒருவகை மனப்பிறழ்வுநிலையின் கட்டத்தில் சுதா சிவானந்தம் இருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி தனக்கு கடுமையான ஆபத்து அல்லது மரணம் சம்பவிக்கலாம் என்ற நிலைக்கு அவர் தள்ளப்பட்டிருந்தார். சம்பவதினத்திற்கு முதல் நாள் இரவு தனக்கு உயிராபத்து ஏற்பட்டால் பிள்ளைகளைப் பார்ப்பீர்களா என்றும் சுதா கேட்டதாக கணவர் சிவானந்தம் நீதிமன்றில் தெரிவித்து இருந்தார். இரு தாதிகளுடன் சுதாவும் நீதிமன்றுக்கு வந்திருந்தார்.
தீர்ப்பினையடுத்து சுதா சிவானந்தம் மீண்டும் மனநிலை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஒரு குடும்பத்தின் மோசமான சூழலை எவ்வித உணர்வுமின்றி ஒரு தமிழ் பத்திரிகை பரபரப்புச் செய்தியாக முயன்றதன் விளைவே இத்தலைப்பு. இப்பத்திரிகைகளின் தரம் இவ்வளவு மோசமாக இருக்கின்ற போது நாட்டில் ஜனநாயகம் சீரழிவும் தலைதூக்குவது தவிர்க்க முடியாதது. தவறுகளைத் தட்டிக்கேட்டுத் திருத்த வேண்டிய பத்திரிகைகளே தரம்தாழ்ந்து இருக்கின்ற போது இவர்களால் எவ்வாறு அரசியல்வாதிகளை கேள்விக்கு உட்படுத்த முடியும்.
இவ்வாறு தான் பொறுப்பற்ற ஊடகவியலாளர்களால் மே 31 1981இல் எரிக்கப்பட்ட யாழ்நூலகம் யூன் 1ம் திகதி எரிக்கப்பட்டதாக தவறாகப் பதிவு செய்யப்பட்டு இன்று பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றது. இந்தக் குழப்பத்தினூடாக இச்சம்பவங்களுடன் தொடர்புடைய அமைச்சர்கள் காமினி திஸ்ஸநாயக்கவும் சிறில்மத்தியூவும் குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பிக்க வழியேற்படுத்திக் கொடுக்கப்பட்டது. மே 31 இரவு எரிக்கப்பட்ட நூலகம் யூன் ஒன்று காலை வரையும் எரிந்து கொண்டிருந்தது. அதனைச் செய்தியாக்கிய ஈழநாடு பத்திரிகை நூலகம் யூன் இரவு எரிக்கப்பட்டதாக செய்தி வெளியிட்டது. யூன் அதிகாலை யூன் இரவாகி பின்னர் யூன் 2 இல் அப்பகுதிக்கு முதல் முறையாகச் சென்றவர்கள் முதல்நாள் தான் எரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்து யாழ் நூலகம் எரிக்கப்பட்ட நாளையே மாற்றி எழுத முற்பட்டுள்ளனர்.
இதேபோல் புளொட்டின் வரலாற்றை எழுதுவதாகக் கூறிக்கொண்டு ஆங்காங்கே தகவல்களைப் பொறுக்கி தனது அனுபவமாகச் சித்தரித்து ஒரு தொடரை எழுதிவருகின்றார் இந்திய உளவுத்துறையான றோவின் முகவர் வெற்றிச்செல்வன். அவர் இந்திய உளவுப் பிரிவுக்கு தனது விசுவாசத்தைகாட்ட றோவின் செயற்பாடுகளுக்கு வெள்ளையடித்து வருகின்றார். இவர் உமா மகேஸ்வரனின் கொலை, மாலை தீவு கைப்பற்றல் நடவடிக்கைகளின் போது இந்திய உளவுபடையான ரோவிற்கு எதுவுமே சம்பந்தம் இல்லாமல் அவர்கள் எல்லாம் விரல்சூப்பிக் கொண்டிருந்தனர் என்ற வகையில் பதிவுகளை எழுதிவருகின்றார். தன்னை முகவர் என்று எழுதுபவர்களை தொலைபேசியில் மிரட்டுவதும் அவர்களைப் பற்றி மோசமாக பதிவுகளை இடவதும் இவருடைய கைங்கரியமாக உள்ளது. இவருடைய பதிவுகளின் நம்பகத்தன்மையும் இவருடைய நேர்மைத்தன்மை பற்றியும் பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர். தன்னுடைய பதிவுகளிலேயே இவர் ஒன்றுக்குப்பின் ஒன்று முரணாகவும் குறிப்பான கால குறியீடுகள் இல்லாமல் சகட்டுமேனிக்கு தன் விருப்பு வெறுப்புப்படி எழுதி வருகின்றமையயை பலரும் தேசம்நெற்க்கு தெரிவித்து வருகின்றனர்.
ஊடகவியலாளனே வரலாற்றின் முதலாவது ஆசிரியன். ஆகவே பதிவுகளை மேற்கொள்வோர் வரலாற்றுக் கடமையை உணர்ந்து அதனைச் செய்ய வேண்டும்.