திருச்சி முகாமில் 16வது நாளாகவும் தொடரும் இலங்கைத்தமிழர்களின் போராட்டம் – போராட்டக்காரர்களில் ஒருவர் மரணம் – அறிக்கை விட்டதை தவிர வேறு ஒன்றும் செய்திராத தமிழ்தலைமைகள் !

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் குற்ற வழக்குகளில் தொடர்புடையதாக தமிழ்நாடு காவல் துறையால் கைது செய்யப்பட்ட இலங்கைத் தமிழர்கள் 78 பேர் உள்ளனர். தங்களை பொய் வழக்கில் கைது செய்தும் அந்த வழக்கிலும் தண்டனைக் காலத்திற்கே மேல் சிறப்பு முகாம் எனும் சிறையில் அடைத்து வைத்துள்ளனர். எனவே சட்டப்படி தங்களை விடுதலை செய்ய வேண்டும் கோரி பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

சிறையிலிருந்து விடுதலை செய்ய வேண்டும். இல்லையென்றால் கருணை கொலை செய்து விடக்கோரி  தொடர்ச்சியாக 16 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில்  விடுதலை செய்யுமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இலங்கை தமிழர் ஒருவர் நேற்று (வியாழக்கிழமை) உயிரிழந்துள்ளார்.

சிறப்பு முகாமில் 78 இலங்கைத் தமிழர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் மட்டக்களப்பை சேர்ந்த 52 வயதான ஒருவரும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், திடீர் சுகயீனம் காரணமாக திருச்சி அரச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து, உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சரி விடயத்திற்கு வருவோம்..,

அண்மையில் இது தொடர்பில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் தொடர்பினை ஏற்படுத்தயிருந்த தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான செ.அடைக்கலநாதன் விடுதலை தொடர்பில் தமிழக முதல்வருடன் பேசி விரைவில் தீர்வு பெற்று தருவதாக கூறியிருந்தார். பின்புஇதுகுறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு,  அவசர கடிதம் அனுப்பி வைத்திருந்தார். மக்கள் ஓட்டுக்களில் தெரிவானாலும் அவரும் – கட்சிக்காரர்களும் ரொம்ப பிஸி.  சிறிய பேரணியை நடாத்தி எதிர்ப்பை கூட அவராலோ அல்லது அவருடைய கட்சியினராலோ மேற்கொள்ள முடியவில்லை – மேற்கொள்ளவும் அவர்கள் முன்வரவில்லை என்பதே உண்மை.

 

கூட்டமைப்பினரையோ – ஏனைய தமிழ்தேசிய கட்சிகளையோ  பொருத்தவரை எந்த வேலையும் செய்யாமல் தேர்தல் காலங்களில் பிரச்சார பீரங்கி போல முழங்கித்தள்ள ஏதாவது கிடைத்தால் போதுமானது. வேறு ஒருசெயலும் இவர்களிடம் இல்லை. கூட்டாக இணைந்து விடுதலை தொர்பாக ஒரு அறிக்கை கூட வெளியிட முடியாதோர் தான் இவர்கள்.

 

இவர்கள் மக்களிடம் ஒரு விதமான மாய விம்பத்தை உருவாக்கி வைத்துள்ளனர். அதாவது அரசாங்கத்திலுள்ளோர் எல்லோரும் துரோகிகள். தாம் மட்டுமே உத்தமர்கள் என்ற ஒரு மாயத்தோற்றமே அது. தமிழ்தேசியம் பேசுகின்ற எல்லா கட்சிகளும் இதனை தவறாது செய்கின்றன – தொடர்ச்சியாக. இவர்களுடைய கருத்துக்களுக்கு இன்று வரை தமிழ் மக்கள் என்ன நம்பிக்கையில் கட்டுண்டு கிடக்கிறார்கள் என்பது தான் தெரியவில்லை.

தமிழ்தேசியம் பேசும் அரசியல்வாதிகள் எல்லா தரப்பினருடனும் கட்டித்தழுவி கூடிக்குழாவுவர். இதற்கு ஆகச்சிறப்பான எடுத்துக்காட்டு 2010 ஜனாதிபதி தேர்தல் . “ பொன்சேகா – மகிந்த கூட்டணி இணைந்தே 2009 போரை முடித்து வைத்தனர். ஆனால் 2010 தேர்தல் களத்தில் மகிந்த மட்டுமே குற்றவாளி. பொன்சேகா உத்தமர் என பிரச்சாரம் செய்து அவரை வட – கிழக்கில் மகிந்த நெருங்க முடியாத வாக்குகளை பெற வைத்தனர். இதே பொன்சேகா தான்  பாராளுமன்ற அமர்வு ஒன்றின் போது புரவி புயல் வடக்குக்கு வீசியிருக்க வேண்டும் என்று கூறிய நல்லுள்ளம் கொண்டவர் .” இவ்வளவு தான் இவர்களுடைய அரசியல். யாரையாவது எதிர்த்து ஏதாவது பேசிக்கொண்டிருந்தால் போதுமே தவிர வேறு ஒரு செயலும் இவர்களிடமும் இல்லை.

அரசியல் கைதிகளுடைய விடுதலை தொடர்பில் கூட இவர்கள் ஒன்றுமே செய்திருக்கவில்லை. பாவம் இவர்களை நம்பி முடியாது போய் ஒரு கட்டத்துடன் மக்களே போராட்டத்தில் இறங்கி தமக்கான தீர்வை தேட ஆரமபித்தனர். வெட்கமேயில்லாது அதிலும்  கலந்து கொண்டு அரசியல் லாபம் ஈட்ட இவர்கள் தயாரே தவிர ஆக்கபூர்வமான ஒரு செயலும் இல்லை. இவர்களிடம் இதில் எதையுமே எதிர்பார்க்கவும் முடியாது.

பாவம் மக்கள் தான் இவர்களுடைய தேர்தல் அரசியலை புரிந்து கொள்ளாது இவர்கள் கூறும் போலி வார்த்தைகளை நம்பி  ஏதோ ராஜபக்ஷக்களும் – வியாழேந்திரர்களும் – டக்ளஸ்களும் தங்களுடைய எதிரிகள் என்ற பிரம்மையிலேயே வாழ்ந்து அவர்களிடம் உதவி எதையும் எதிர்பார்க்காது இறந்தும் விடுகின்றனர். இதற்கும் ஒரு சிறப்பான எடுத்துக்காட்டு உள்ளது. யாழ்.மாநகர முதல்வராக பணியாற்றிக்கொண்டிருக்கும் வி.மணிவண்ணன் இறுதியாக நடந்த  பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரங்களின் போது அமைச்சர் டக்ளஸ் கட்சி மீது சேறு பசிக்கொண்டேயிருந்தார். அது போல அவருடைய துரோகிகள் கட்சியுடனும் தொடர்புகளோ – கூட்டோ ஏதுமில்லை எனவும் கூறியிருந்தார்.  அவர் மட்டுமல்ல. அவருடைய கட்சிக்காரரும் தான். வழமையான அதே துரோகி கான்செப்ட் தான்.  ஆனால் அவர் யாழ்.மாநகர முதல்வராவதற்கு வாக்குகளை பெறும் போது மட்டும்  டக்ளஸ் தரப்பினர் நல்லவர்களாகி அவர்கள் ஆதரவுடன் தான் அவர் பதவியேற்றுக்கொண்டார். முன்னைநாள் துரோகிகள் அவருக்கு தேவை என்றவுடன் நல்லவர்களாகி விட்டனர். இது போலத்தான் மக்களை மூளைச்சலவை செய்து வைத்துள்ளனர்.

 

இதே விடயம் தான் திருச்சி முகாமிலும் நடந்துள்ளது. பாவம் தமிழ்தேசிய கட்சிகள் தங்களை மீட்கும் என்ற நம்பிக்கையுடன் போராட்டத்தை மேற்கொண்டனர்.  அடக்கலநாதன் தொடர்பு கொண்ட போது கூட  போராட்டக்காரர்கள் அதை தான் நம்பியிருப்பர். அவர் எழுதிய கடிதத்தை தாண்டி வேறு எந்த நகர்வும் அவர்கள் மேற்கொள்ளவில்லை. இதே சமயத்தில் அண்மையில் இலங்கைக்கான இந்தியத்தூதுவருடன் சந்திப்பு இடம்பெற்ற போது கூட கூட்டமைப்பினர் இதனை வலியுறுத்தவில்லை.  தேவையில்லாத பழைய பல்லவிகளை பாடிவிட்டு ஒரு அறிக்கையை வெளியிட்டனரே தவிர வழமை போல இந்த சந்திப்பிலும் கடுகளவு கூட பயன்இல்லை. இவர்களுக்கும் ஓட்டு போட்டு தெரிவு செய்த மக்கள் பாவம்.

முடிந்திருக்குமாயின் அமைச்சராக உள்ள டக்ளஸ்தேவானந்தாவிடமோ – இராஜாங்க அமைச்சராகவோ உள்ள வியாழேந்திரனிடமோ அல்லது அங்கஜன் இராமநாதனிடமோ இவர்கள் பேசியிருந்தாலோ அல்லது தொடர்பு கொண்டிருந்தாலோ அரச ம்டத்தில் சரி பிரச்சினையை தீர்க்க ஏதாவது செய்திருப்பார்கள் போலத்தோன்றுகிறது. சரி அவர்களால் முடியாது இங்கே இருந்து ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருந்த அடைக்கலநாதனும் அவருடைய கட்சிக்காரரும் கூட மக்களுடைய பிரச்சினையை தீர்க்க மனதுள்ளோராக இருந்திருப்பின் தங்களுடைய கருத்துநிலைகளை கைவிட்டு அரச தரப்பிடம் அவர்கள் விடுதலைக்காக ஏதாவது முயற்சி எடுத்திருக்கலாம்.  அப்படி ஒரு முடிவுக்கான நகர்வை மேற்கொண்டிருந்தால் கூட  போராட்டத்தை தற்காலிகமாக கைவிடச்செய்து அந்த ஒரு உயிரை காப்பாற்றியிருக்கலாம்.  அவையொன்றுமே செய்யமாட்டார்கள். ஆனால் பூகோள அரசியல்வியாக்கியானங்கள் எல்லாம் மணியாக பேசுவார்கள் . பயனற்ற தலைவர்களையே நாம் பாராளுமன்றம் அனுப்பிக்கொண்டிருக்கின்றோம்.

 

முன்னைய நிலையோடு ஒப்பிடும் போது மக்கள் ஓரளவுக்கு தங்களை சுதாகரித்து போலித்தேசியவாதிகளை தோலுரிக்க ஆரம்பித்து விட்டனர் என்பதை அண்மைய பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டியுள்ளன.  தமிழ்தேசிய கட்சிகளை விட அதிக வாக்குகளில் அரசு சார்பான வேட்பாளர்கள் பாராளுமன்றம் நுழைந்துள்ள தன்மையானது மக்கள் ஓரளவு மாயவிம்பத்தில் இருந்து வெளிவர ஆரம்பித்துள்ளதையும் போலி அரசியலில் இருந்து மக்கள் வெளிவர துடிப்பதையும் காட்டுகின்றது.

மக்கள் தெளிவாக சிந்திக்க ஆரம்பித்துவிட்டார்கள். அரசு சார்பானவர்கள் என்ன செய்கிறார்கள் என தமிழ்தேசிய கட்சியினர் குற்றஞ்சாட்ட தகுதியுள்ளவர்களாக இருக்க வேண்டுமாயின் கொஞ்சமாவது தமிழ்மக்கள் போட்ட ஓட்டுக்களுக்காக அவர்களுக்காக இயங்க ஆரம்பியுங்கள்.  இல்லையேல் இம்முறை தேர்தலில்  மாவை தூக்கியெறியப்பட்டது போல நீங்கள் ஒவ்வொருவராக தூக்கியெறியப்பட்டு நீங்கள் துரோகிகள் எனக்கூறியோர் முழுமையாக உங்கள் வட்டாரங்களை ஆக்கிரமிக்கலாம்.

பழைய கதைகளை பேசிக்கொண்டு  சர்வதேசம் – இந்தியா போன்ற பழைய சரக்குகளை இனியும் விற்க முயற்சிக்காது மக்களை போராட தூண்டாது உங்களுக்கு பின்னால் மக்களை திரட்டுங்கள்.  மக்களுடைய பிரச்சினைகளுக்காக இதய சுத்தியுடன் செயலாற்ற முன்வாருங்கள் . மக்கள் தாங்கிப்பிடிப்பார்கள் உங்களை..!

 

 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *