2021

2021

அமெரிக்க – பிரித்தானிய கூட்டு வக்சீன் உற்பத்தியை தடுக்கின்றது!!!

பிரித்தானியாவில் சுதந்திர நாள்! வறுமைப்பட்ட நாடுகளில் மரண ஓலம்!
அமெரிக்க – பிரித்தானிய கூட்டு வக்சீன் உற்பத்தியை தடுக்கின்றது!!!

தனது நாட்டு மக்களுக்கு வக்சீனை வழங்கி கோவிட்-19 தாக்கத்தை கட்டுப்படுத்தி உள்ள அமெரிக்க – பிரித்தானியா அரசுகள் வக்சீனை ஏனைய நாடுகள் உற்பத்தி செய்வதற்கான உரிமத்தை சிறிது காலத்திற்கு விட்டுக்கொடுப்பதற்கு மறுத்து வருகின்றது. அதனால் உலகில் பல்லாயிரம் கோவிட் மரணங்கள் சம்பவிக்க உள்ளது. இன்று முற்றிலும் களியாட்டங்களுக்கு நாட்டைத் திறந்துவிட்டுள்ள பிரித்தானிய அரசு உலகின் பல்வேறு பாகங்களிலும் பல்லாயிரக்கணக்கானவர்கள் மரணமாவதைப் பற்றி எவ்வித கரிசனையும் கொள்ளவில்லை.

நுனிநாக்கில் மனித உரிமை பேசி தங்களை மனித உரிமைகளின் ஜனநாயகத்தின் காவலர்களாகக் காட்டிக்கொள்ளும் அமெரிக்க – பிரித்தானிய நாடுகள் கோவிட் வக்சீன் உரிமத்தை முற்றிலும் லாபநோக்கத்திற்காக தனியார் நிறுவனங்களிடம் கையளித்து உற்பத்தியை தடுப்பதன் மூலம் பல்லாயிரக்கணக்கான மரணங்களுக்கு வழிகோலுகின்றனர். எவ்வித மனிநேயமும் அற்று செயற்படுகின்ற அமெரிக்க – பிரித்தானிய கூட்டு எதிர்காலத்தில் உலக நாடுகளுக்கு வழிகாட்டவோ தலைமையேற்கவோ தகுதயற்றவையாகி வருகின்றன.

பிரித்தானியா ப்ரீடம்டே – சுதந்திரநாள் என்று அறிவிப்பதற்கு 48 மணிநேரங்களிற்கு முன்னரே சுகாதார அமைச்சர், நிதி அமைச்சர், பிரதம மந்திரி மூவருமே தனிமைப்படுத்தலுக்கு செல்ல வேண்டியேற்பட்டு விட்டது. தற்போதைய டெல்டா வேரியன் மிகவேகமாகப் பரவி வருகின்றது. ஆனால் நாட்டில் வயது வந்தவர்களுக்கு பெரும்பாலும் வக்சீன் போடப்பட்டு இருப்பதால் பாதிப்பு வீதம் மிக மிகக் குறைவான நிலையிலேயே காணப்படுகிறது. மேலும் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும் வரும் இரு மாதங்களுக்குள் வக்சீன் போடப்பட்டு விடும் என பிரதமர் பொறிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். இந்த வக்சீன் காரணமாக கோவிட் பாதிப்பும் மரணங்களும் பெரும்பாலும் முற்றாக தடுக்கப்படுகின்ற நிலைக்கு மேற்கு நாடுகள் வந்துகொண்டிருக்கின்றன. ஆனால் சனத்தொகை அதிகமான வறிய மற்றும் வளர்ந்துவரும் நாடுகளில் கோவிட் பாதிப்பும் மரணமும் அதிகரித்து வருகின்றது.

இதனைத் தடுப்பதற்கு தேவையான வக்சீனை உற்பத்தி செய்வதற்கு வக்சீன் உற்பத்தி உரிமத்தை அமெரிக்க – பிரித்தானிய அரசுகள் தற்காலிகமாகவேனும் வழங்கினால் உற்பத்தியயை வேறுநாடுகளிலும் வக்சீன் உற்பத்தி செய்து கோவிட் பாதிப்பையும் மரணத்தையும் கட்டுப்படுத்தலாம். வறிய நாடுகளில் ஒரு வீதமான சன்தொகைக்கு கூட வக்சீன் போடப்படவில்லை. அமெரிக்க – பிரித்தானிய அரசுகளின் சுயநலமிக்க முற்றிலும் லாபத்தையீட்டும் நிறுவனங்களுக்கு சாதகமாகச் செயற்படுவது மனித குலத்தை பெரும் அவலத்திற்குள் தள்ளவுள்ளது.

74-வது கேன்ஸ் திரைப்பட விழா – சிறந்த நடிகராக காலேப் லாண்ட்ரி ஜோன்ஸ் தெரிவு !

உலக புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் நடைபெறும். கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக கேன்ஸ் திரைப்பட விழா ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், கடந்த 6-ம் திகதி தொடங்கிய 74-வது கேன்ஸ் திரைப்பட விழா 17-ம் திகதி வரை நடைபெற்றது.  இந்த விழாவில் சிறந்த நடிகருக்கான விருது அமெரிக்காவின் காலேப் லாண்ட்ரி ஜோன்சுக்கு வழங்கப்பட்டது.சிறந்த நடிகைக்கான விருதை நோர்வே நாட்டை சேர்ந்த ரெனடா ரீன்ஸ்வே வென்றார்.
2021 கான்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த விருதை வென்றது டைட்டான்
புகழ்பெற்ற பால்ம் டோர் விருது டைடேன் எனும் பிரான்ஸ் திரைப்படத்துக்கு  வழங்கப்பட்டது. அந்தத் திரைப்படத்தை இயக்கிய ஜூலிய டோகோர்னோ விருதைப் பெறும் இரண்டாவது பெண் இயக்குநர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார்.

தலிபான்கள் நடத்திய தாக்குதலில் இறந்த டேனிஷ் சித்திக் – ஐ.நா இரங்கல் – மன்னிப்புக்கேட்ட தலிபான்கள் !

ஆப்கானிஸ்தானில் காந்தகார் பிராந்தியத்தில் பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள ஸ்பின் போல்டாக் பகுதியை தலிபான்களிடம் இருந்து மீட்பதற்காக அரசு படைகள் கடும் சண்டையை நடத்தி வருகின்றன.
இரு தரப்புக்கு இடையிலான இந்த மோதல் குறித்த செய்திகள் மற்றும் படங்களை சேகரிக்கும் பணியில், ராய்ட்டர் செய்தி நிறுவனத்தில் பணியாற்றி வந்த இந்திய புகைப்பட பத்திரிகையாளரான டேனிஷ் சித்திக்கி ஈடுபட்டிருந்தார். அப்போது தலிபான்கள் நடத்திய தாக்குதலில் சிக்கி டேனிஷ் சித்திக் மற்றும் ஆப்கன் அதிகாரி ஒருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
40 வயதை கடந்துள்ள டேனிஷ் சித்திக் மும்பையைச் சேர்ந்தவர். ஊடகத் துறையில் சிறந்து விளங்குவோருக்கு வழங்கப்படும் புலிட்சர் விருதை கடந்த 2018-ம் ஆண்டு அவர் பெற்றிருந்தார்.
இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், புகைப்பட பத்திரிகையாளர் சித்திக்கின் மரணம் ஆப்கானிஸ்தானில் ஊடகங்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களை வெளிக்காட்டியுள்ளது. ஆப்கானிஸ்தானில் பணியாற்றி வரும் ஊடகத்தினர் தொடர்ந்து அச்சுறுத்தல்களுக்கு ஆளாகி வருகின்றனர். தலிபான்களின் தாக்குதலால் பலியான சித்திக் மறைவிற்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் எனத் தெரிவித்துள்ளது.
மேலும், ஐ.நா. சபை பொது செயலாளர் ஆண்டோனியோ குட்டரஸ் டேனிஷ் மறைவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தற்போது தாலிபன்கள் தரப்பிலிருந்து டேனிஷின் மரணம் தொடர்பாக அதிகாரபூர்வ இரங்கல் வெளியாகியிருக்கிறது. டேனிஷ் சித்திக் கொல்லப்பட்டது குறித்து செய்தி நிறுவனங்களுக்குப் பேட்டியளித்துள்ள தாலிபன் செய்தி தொடர்பாளர் சபிமுல்லா முஜாகிதீன், “புகைப்படப் செய்தியாளர் யாருடைய தாக்குதலின்போது துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார் என்பது எங்களுக்குத் தெரியாது. அவர் எப்படி இறந்தார் என்பதும் எங்களுக்குத் தெரியாது. டேனிஷ் எப்படி இறந்தார் என்று தெரியவில்லை. எங்களை மன்னித்துவிடுங்கள். போர்ப் பகுதிகளில் நுழையும் பத்திரிகையாளர்கள் எங்களிடம் அதனைத் தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் அந்த தனிப்பட்ட நபருக்கான பாதுகாப்பில் நாங்கள் கவனம்கொள்ள இயலும். முறையாக அறிவிக்காமல் போர் பகுதிகளுக்கு வருவதால் தான் இது போன்ற சம்பவங்கள் நடந்து விடுகிறது” என்று கூறியிருக்கிறார்.

தவறான தெரிவுகளால் சிதைவுறும் உள்ளூராட்சி கட்டமைப்புகள்

செய்தி 1- பாலியல் தேவைக்காக 15 வயது சிறுமி விற்பனை
மிகிந்தலை பிரதேச சபை உப தவிசாளர் உள்ளிட்ட மூவர் கைது.
செய்தி 2 – ஆலய முன்றலில் வாள்வெட்டு – வலி மேற்குப் பிரதேச சபை உறுப்பினர் கைது
செய்தி 3 – சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் தற்கொலை!

இவையெல்லாம் கடந்த சில வாரங்களில் கண்ணில் பட்ட செய்திகள்.  இவற்றில் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி சபை பிரதிநிதிகள். அதிலும் இறுதி இரண்டு செய்திகளும் யாழ்ப்பாண மாவட்டத்தோடு தொடர்புபட்டவை.

பொதுவாகவே மக்கள் பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதில் மக்கள் மிகுந்த அசமந்தப் போக்குடன் செயற்படுவது வழமை. அதிலும் உள்ளூராட்சி சபை பிரதிநிதிகளைத் தெரிவதில் அது மிகவும் அதிகம்.

உள்ளூராட்சி சபைகளின் முக்கியத்துவம் அவற்றின் வகிபங்கு தொடர்பில் அவர்கள் கரிசனை கொள்வதில்லை. அவை தொடர்பில் அவர்கள் அறிந்துள்ளனரா என்பதும் கேள்விக்குரிய விடயமே.

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மக்கள் வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் போது வேட்பாளருடைய தகமை, திறமை, அவர் தன்னுடைய சமூகத்துக்கு என்ன செய்வார், சமூகப் பொறுப்புள்ளவரா, தனிப்பட்ட ரீதியில் சிறந்த நடத்தையைக் கொண்டிருப்பவரா என்று எல்லாம் யோசிப்பதில்லை.

மாறாக அவர் தெரிந்தவரா, சொந்தக்காரரா, எந்த சமூகத்தைச் சேர்ந்தவர், எந்தக் கட்சியைச் சேர்ந்தவர், வேலை எடுத்துத் தருவாரா, செலவு இல்லாமல் வேலை முடித்துத் தருவாரா என்று சிந்தித்தே பெரும்பாலான மக்கள் தமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்கின்றனர்.

உள்ளூராட்சி சபைகள் நாட்டின் மிக அடிப்படைக் கட்டமைப்புகள். மக்களுடன் நேரடித் தொடர்பைக் கொண்டிருப்பவர்கள் இவற்றின் பிரதிநிதிகளே. மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள், சமூக அபிவிருத்தி தொடக்கம் கழிவகற்றல் முகாமைத்துவம் வரை நாட்டில் அடிப்படை வசதிகளுடன் தொடர்புபட்டு பணியாற்றுபவர்கள் இவர்களே. பிரதேசத்தின் சகல விதமான அபிவிருத்திகள், தேவைகள் என்பவற்றைக் கண்டறிந்து அவற்றை தீர்ப்பதற்குரிய வழிமுறைகளைக் கண்டறிந்து செயற்படுத்த வேண்டியவர்கள் இவர்களே.

உள்ளூராட்சி சபைகள் மக்கள் நலன் சார்ந்து உரிய வகையில் செயற்பட்டால் மட்டுமே குறித்த பிரதேசம் வளம் பெற முடியும். ஆனால் எமது சமூகத்தில் மட்டுமல்ல இலங்கையிலும் உள்ளூராட்சி சபைகளை மக்கள் தெரிவு செய்வதில் காட்டிய அசமந்தப் போக்கு ஒட்டுமொத்த சமூகத்தின், நாட்டின் வளர்ச்சிக்கு இடையூறாக உள்ளது.

ஒரு மக்கள் பிரதிநிதி தன்னுடைய தனிப்பட்ட வாழ்வில் உள்ள பிரச்சினையை எதிர்கொள்ள முடியாது உயிரை மாய்த்துக்கொள்கின்றார் என்றால் அவரால் எவ்வாறு சமூகத்தின் பிரச்சினைகளை கண்டறிந்து தீர்வு காண முடியும்? இங்கு சுட்டிக் காட்ட வேண்டிய மற்றொரு விடயம் ஒரு வருடத்துக்கு முன்பும் வலிகிழக்கு பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். அவருடைய மரணமும் தற்கொலை என்றே தெரிவிக்கப்பட்டது.

ஒருவரால் தன் ஊரில் ஒரு கோவில் பிரச்சினையைக் கூட சுமூகமாகக் கையாள முடியாமல் வாளெடுத்து வெட்டப் போகிறார் எனில் அவரால் சமூகத்தில் நிநோக்கற்றகழும் வன்முறைகளை எவ்வாறு கட்டுப்படுத்த முடியும்? அதற்குப் பதிலாக இவர்களே வன்முறைகளைத் தூண்டுவோராக உள்ளனர். தம்முடைய மனவெழுச்சிகளையே கையாள முடியாத கையறு நிலையில் உள்ளவர்கள் எப்படி சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்த தகுதி உடையவர்களாக இருக்க முடியும்? இவ்வாறானவர்களைத் தெரிவு செய்தது மக்களின் தவறல்லவா?

நாட்டில் மீண்டுமொரு தேர்தலுக்கான ஆயத்தங்கள் திரைமறைவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மக்களும் தம் மாகாண சநோக்கற்றபைகளுக்கான பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கு தயாராக வேண்டிய காலம் நெருங்கியுள்ளது. வெறுமனே தேர்தல் கால பிரச்சாரங்களை மட்டும் கொண்டு வாக்களிக்காமல், நீண்ட கால அவதானத்தின் அடிப்படையில் சரியானவர்களைத் தெரிவு செய்ய மக்கள் முன்வரவேண்டும்.

ரிஷார்ட் பதியுதீன் வீட்டில் இறந்து போன சிறுமியும் – கண்டு கொள்ளாத ஊடகங்களும்  !

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் கொழும்பு பௌத்தாலோக்க மாவத்தை வீட்டில் , வீட்டு வேலைகளுக்கு அமர்த்தப்பட்டிருந்த ஜூட் குமார் ஹிஷாலினி எனும் 16 வயது சிறுமி , உடலில் தீ பரவி பலத்த காயங்களுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

இறக்கும் போது 16 வயதும் 8 மாதங்களும் பூர்த்தியான குறித்த அட்டன் – டயகம மேற்கு பகுதியைச் சேர்ந்த குறித்த சிறுமி ஒரு வருடகாலத்துக்கும் மேலாக அங்கு பணியாற்றியுள்ளார்.
 கடந்த 3 ஆம் திகதி வெள்ளியன்று உடலில் தீ பரவியமை காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஹிஷாலினி அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் , வைத்தியசாலை பொலிஸ் பொறுப்பதிகாரி இது தொடர்பில் பொரளை பொலிசாருக்கு அறிவித்து முறையிட்ட நிலையில் , இந்த விவகாரத்தில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன . இது தொடர்பில் கடந்த 7 ஆம் திகதி கொழும்பு மேலதிக நீதிவான் லோச்சனீ அபேவிக்ரம முன்னிலையில் பொரளை பொலிஸாரால் விடயங்கள் தெளிவுபடுத்தப்பட்டு , இரசாயன பகுப்பாய்வுக்கான உத்தரவுகள் பெற்றுக்கொள்ளப்பட்டிருந்தன . இந் நிலையில் பலத்த தீ காயங்களுக்குள்ளான ஹிஷாலினி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 73 ஆவது சிகிச்சை அறையில் தீவிர சிகிச்சைப் பிரிவு 2 இல் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் கடந்த 15 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
பிரேத பரிசோதனைகளை முன்னெடுத்த நிலையில் , வெளிப்புற தீக்காயங்கள் , கிருமி தொற்றினால் ஏற்பட்ட அதிர்ச்சி மரணத்துக்கான காரணமாக அதில் கண்டறியப்பட்டுள்ளது . விஷேடமாக குறித்த பிரேத பரிசோதனை அறிக்கையின் படி ,  ஹிஷாலினியின் உடலில் 72 வீதமான பகுதி தீயினால் முற்றாக எரிந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார் . அத்துடன் ஹிஷாலினி எந்தவிதமான சித்திரவதைகள் , கொடுமைகளுக்கும் உள்ளாக்கப்பட்டதற்கான சான்றுகள் இல்லை என குறிப்பிட்டுள்ள நிலையில் நாற்பட்ட பாலியல் ஊடுருவல் தொடர்பிலான சான்றுகள் உள்ளதாக சுட்டிக்கட்டப்பட்டுள்ளது.
மலையக சிறுமி என்பதாலோ அல்லது அரசியல்வாதி ஒருவரின் பெயர் நேரடியாக தொடர்புபடுவதாலோ என்னமோ பெரிதாக இதைப்பற்றி ஊடகங்கள் எவையுமே பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை போலும்.
இலங்கையில் 16 வயதுக்கு கீழ் கட்டாய கல்விக்கான வயது என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த வயதுடையோர் வேலைக்கமர்த்தப்படுதல் சட்டப்படி குற்றமாகும் என வலியுறுத்தப்பட்டுள்ள நிலையில் ஒரு சிறுமி வேலைக்கமர்த்தப்பட்ட குற்றத்தில் இருந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்படுதல் வேண்டும். ரிஷாட்பதியுதீன் நாடாளுமன்ற உறுப்பினர் என்பதுடன் முன்னாள் அமைச்சர் – இது போக மொறட்டுவை பல்கலைக்கழக பட்டதாரி வேறு. இவருக்கு தெரியாதா சிறுவர்களை வேலைக்கமர்த்தக்கூடாது..? என்று.
இதே வேளை சிறுமி 15ம்திகதி இறந்துள்ள நிலையில் மேலதிகமான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ரிஷார்ட் பதியுதீன் நேற்றையதினம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஒரு கல்வி கற்றவர் – நாடாளுமன்ற அரசியல்வாதி பல்லாயிரக்கணக்கான மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு தலைவர் என்ற வகையில் எவ்வளவு முன்மாதிரியாக நடந்து கொண்டிருக்க வேண்டும் அவர்.
ஒரு சிறுமி வேலைக்கமர்த்தப்பட்ட போது உன்னுடைய வயது என்ன..? என்ன படித்திருக்கிறாய் என கேட்டு அடுத்த கட்டம் பற்றி செயலாற்றியிருக்க வேண்டும். அந்த பொறுப்பு அவருக்கிருந்தது.  ஆனால் அப்படியாக அவர் செய்யவில்லை. பாவம் முஸ்லீம் சிறுவர்களை மட்டுமே தன்னுடைய பிள்ளைகளாக ரிஷார்ட் பதியுதீன் நினைத்துவிட்டார் போலும்.
சிலர் வழமை போல அரசியல்வாதிகளுக்கு பல்லக்கு தூக்கும் மனோநிலையில் நின்று கொண்டு பிள்ளையை வேலைக்கு அமர்த்திய பெற்றோரை கேளுங்கள். ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் வீட்டில் வேலை செய்வோர் விபரங்களை எல்லாம் கவனிக்க முடியுமா..?  அது தீக்காயங்கள். பிள்ளை தீ வைத்துக்கொண்டாள் என்றெல்லாம் சமூக வலைத்தளங்களில் ஏதோவெல்லாம்  பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
01. சிறுமியை வேலைக்கு செல்ல விட்ட  பெற்றோரில் பிழை இருக்கின்றது. அவர்கள்  விசாரிக்கப்பட வேண்டும். ஆனால் சாதாரணமாக தன்னுடைய வீட்டையே கவனிக்க முடியாத ஒருவர் எப்படி சமூகத்தை கவனிக்கப்போகிறார்..?
02.சமைக்கும் போது ஏற்பட்ட தீ விபத்து – பிள்ளை தற்கொலைக்கு முயற்சித்தால் என்றெல்லாம் ஒரு பக்கத்தால் கூறப்படுகின்றது. சற்று  யோசித்துப்பாருங்கள். ஒரு முன்னாள் அமைச்சருடைய வீட்டில் விறகு அடுப்பா பயன்படுத்தப்போகிறார்கள்…?
இது போக சிறுமியின்யின் உடலில் நாட்பட்ட பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கப் பட்டுள்ளமைக்கான தடயங்கள் உள்ள நிலையில் ; அதற்கு காரணமானவர்கள் யார்..? என்பது தீர விசாரிக்கப்பட வேண்டும். அதே நேரம் குறித்த சிறுமி வேலைக்கமர்த்தப்பட்ட நாள் முதல் அவள் தன்னுடைய வீட்டுக்கு அனுப்ப அனுமதி வழங்கப்படவில்லை. காரணங்கள் ஆழமாக தேடப்பட வேண்டியன.
விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதும் ரிசாட்பதியுதீன் வைத்தியசாலையில் தஞ்சமடைந்துள்ளார். பொருத்திருந்து பார்ப்போம் ஏழை சொல் அம்பலம் ஏறாது என்பது போல இந்த வழக்கில் சாட்சியங்கள் மறைக்கப்பட்டு –  யார் கேள்வி கேட்கப்போகிறார்கள் என வழக்கை கிடப்பில் போட்டு  அதிகாரவர்க்கம் தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ளுமா..? அல்லது நீதிமன்றம் இன்னமும் உயிர்ப்புடன் உள்ளது என்பதை நிரூபிப்பார்களா என்று.
இலங்கையில் நாளுக்கும் நாள் சிறுவர்கள் மீதான வன்முறைகளும் பாலியல் துஷ்பிரயோகத்துகங்களும் அதிகரித்துள்ள நிலையில் இந்த வழக்கில் வழங்கப்படப்போகின்ற தீர்ப்பு சிறுவர் பாதுகாப்பு தொடர்பான முக்கியமான திருப்புமுனையாக அமையும்.

பிரித்தானியாவில் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரே நாளில் 50000+ தொற்றாளர்கள் !

பிரித்தானியாவில் ஜனவரி மாத நடுப்பகுதிக்கு பிறகு, நாளொன்றுக்கான கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பாதிப்பு உச்சத்தை தொட்டுள்ளது.

இதன்படி கடந்த 24 மணித்தியாலத்தில் வைரஸ் பெருந் தொற்றினால், 51ஆயிரத்து 870பேர் பாதிக்கப்பட்டதோடு 49பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கு முன்னதாக கடந்த ஜனவரி 15ஆம் திகதி 55,553பேர் பாதிக்கப்பட்டதற்கு பிறகு பதிவான நாளொன்றுக்கான அதிகப்பட்ச பாதிப்பு எண்ணிக்கை இதுவாகும்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ஏழாவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில், இதுவரை மொத்தமாக 53இலட்சத்து 32ஆயிரத்து 371பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஒரு இலட்சத்து 28ஆயிரத்து 642பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட எட்டு இலட்சத்து 18ஆயிரத்து 421பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 551பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக, 43இலட்சத்து 85ஆயிரத்து 308பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

தடுப்பூசி போடாதவர்களுக்கு ஊதியமற்ற விடுமுறை – கிறீஸில் பதற்றம் !

கொரோனா வைரஸ் தடுப்பூசிக்‍கு எதிர்ப்புத் தெரிவித்து கிரீஸ் நாட்டில் நடைபெற்ற போராட்டத்தில் பல்லாயிரக்‍கணக்‍கானோர் பங்கேற்றனர்.

கிரீஸ் நாட்டு மொத்த மக்‍கள் தொகையில் இதுவரை 41 சதவிகிதம் பேருக்‍கு கொரோனா வைரஸ் இரண்டு தவணை மருந்து செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது மருத்துவத் துறையில் பணியாற்றும் பணியாளர்களிடையே நோய் பரவல் அதிகரித்துள்ளது.

அதனால் மருத்துவப் பணியாளர்கள் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி செலுத்திக்‍கொள்ளவேண்டும் என அந்நாட்டு அரசு உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஏதென்ஸ் நகரில் நடைபெற்ற போராட்டத்தில் ஐந்தாயிரத்துக்‍கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தடுப்பூசி செலுத்திக்‍கொள்வது தனிநபர் விருப்பம் என்றும், மதச் சட்டங்களுக்‍கு அது எதிரானது என்றும் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.

 

முன்னதாக மருத்துவப் பணியாளர்களுக்‍கு அரசு பிறப்பித்த உத்தரவில், தடுப்பூசி போடாத பணியாளர்கள் கண்டிப்பாக ஊதியமற்ற விடுமுறையில் வீட்டுக்‍கு அனுப்பப்படுவார்கள் என எச்சரிக்‍கப்பட்டிருந்தது. இந்த உத்தரவுக்‍கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

தலிபான்களுக்கு பாகிஸ்தான் உதவுகின்றது – ஆப்கானிஸ்தான் குற்றச்சாட்டு !

ஆப்கானிஸ்தான் நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி நடந்து வந்த போதிலும் பல பகுதிகளை தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றி வருகின்றனர். அவர்களை ஒடுக்குவதற்காக அமெரிக்க படைகள் 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தான் மண்ணில் இருந்து வந்தது. ஆனால் இப்போது அமெரிக்காவுக்கும், தலிபான்களுக்கும் ஏற்பட்ட ஒப்பந்தத்தை அடுத்து அமெரிக்க படை வாபஸ் பெறப்பட்டு வருகிறது. அக்டோபர் மாதத்திற்குள் முழு படையும் வெளியேறி விடும்.

அமெரிக்கா வெளியேறியதை அடுத்து தலிபான்கள் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக பல இடங்களையும் கைப்பற்றி வருகிறார்கள்.

இதுவரை நாட்டில் 85 சதவீத நிலப்பரப்பை கைப்பற்றிவிட்டதாக தலிபான்கள் கூறுகிறார்கள். ஆனால் மொத்தமுள்ள 400 மாவட்டத்தில் 3-ல் ஒரு பகுதி மட்டுமே தலிபான்களிடம் இருப்பதாக அரச  தகவல்கள் கூறுகின்றன.

ஆங்காங்கே அரசு படைகளுக்கும், தலிபான்களுக்கும் இடையே தீவிரமாக சண்டை நடந்து வருகிறது. இதற்கிடையே தலிபான்கள் நாட்டை முழுமையாக கைப்பற்றுவதற்கு பாகிஸ்தான் உதவி வருவதாக ஆப்கானிஸ்தான் குற்றம்சாட்டி வருகிறது.

போரில் ஈடுபட்டு வரும் தலிபான்களுக்கு ஆயுத உதவி, உணவு, வழிகாட்டு தகவல்கள் போன்றவற்றை வழங்கி வருவதாகவும், பாகிஸ்தானின் விமானப்படை தலிபான்களுக்கு உதவு வதாகவும் ஆப்கானிஸ்தான் குற்றம்சாட்டி இருக்கிறது.

பிரித்தானியாவில் பதிவுகள் இல்லாமல் 1.2 மில்லியன் பேர்: இவர்ளைப் பதிவு செய்ய பொதுமருத்துவர்கள் முன்வருகின்றார்கள் இல்லை!!!

பிரித்தானியாவில் குடியுரிமை மற்றும் ஆவணங்கள் ஏதும் இன்றி 1.2 மில்லியன் பேர் இருப்பதாகவும், 80வீதமான பொது மருத்துவர்கள் இவர்களை தங்கள் மருத்துவ மையத்தில் பதிவு செய்ய மறுக்கின்றனர் எனவும் தெரியவருகின்றது. தற்போது மிக வேகமாக பரவி வருகின்ற டெல்டா வெரியன்ரும், இனி வரும் குளிர் காலத்தில் ஏற்படப் போகும் வைரஸ் தொற்றுக்களாலும் இந்த மக்கள் பிரிவினர் கூடுதலாகப் பாதிக்கப்படுவர் என அஞ்சப்படுகின்றது.

தற்போதைய கொன்சவேடிவ் அரசு குடிவருவோருக்கு எதிராக கடந்த பல ஆண்டுகளாக கடும் நடவடிக்கைகளை எடுத்து வந்ததால்; வீடுவாடகைக்கு விடுபவர்கள் முதல் பொதுமருத்துவர்கள் வரை உள்துறை அமைச்சின் முகவர்கள் போலவே செயற்பட நிர்ப்பந்திக்கப்பட்டனர். தற்போது பொது மருத்துவர்களுக்கு அவ்வாறான நிர்ப்பந்தங்கள் எதுவும் இல்லாத போதும், பொது மருத்துவர்கள் குடிவரவுப் பத்திரங்கள் இல்லாதவர்களை தங்கள் சுகாதார மையங்களில் பதிவு செய்ய மறுக்கின்றனர்.

தற்போது ஜெனரல் மெடிக்கல் கவுன்சில் குடிவரவு பத்திரங்கள் மற்றும் ஆவணங்கள் இல்லாதவர்களையும் பொது மருத்துவர்கள் தங்கள் மருத்துவ சுகாதார மையங்களில் பதிவுசெய்து; அவர்களுக்கான கோவிட் வக்சினை வழங்குமாறு வலியுறுத்தி வருகின்றது. அரசும் பொது மருத்துவர்கள் எவ்வித குடிவரவு மற்றும் ஆவணங்கள் இல்லாமலேயே பொதுமருத்துவர்கள் தங்கள் மையங்களில் யாரையும் பதிவு செய்யலாம் என்பதையும் வலியுறுத்தி உள்ளது. அரசுக்கு எத்தனை பேர் கோவிட் வக்சீன் போட்டுள்ளார்கள் என்று தெரியுமே அல்லாமல் எத்தனை பேர் வக்சீன் போட்டுக் கொள்ளாமல் உள்ளனர் என்ற விபரம் தெரியாது.

மேலும் பொது மருத்துவர்களின் கீழ் பதிவு செய்பவர்களின் விபரங்கள் குடிவரவுத் திணைக்களத்துடன் பரிமாறப்படாது என்ற உறுதியையும் ஜெனரல் மெடிகல் கவுன்சில் வழங்கி உள்ளது. மேலும் ஆவணங்கள் இல்லாதவர்கள் வக்சீன் போடுவதற்கு வசதியாக நடமாடும் வக்சீன் மையங்கள் சிலவற்றையும் அரசு இயக்கிவருகின்றது.

பல லட்சம் ரூபாய் ஆலய ஊழல்: வாள் வெட்டில் ஈடுபட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் நேற்று சரணடைந்தார்!

யாழ் சித்தங்கேணியில் வாள்வெட்டில் ஈடுபட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் ரஜீவன் நேற்று யூலை 14 இல் சரணடைந்தார். யுலை 11 இல் வாள் வெட்டு இடம்பெற்றது முதல் தலைமறைவாக இருந்த இவர் நேற்று மாலை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார். இவரினால் வாள்வெட்டுக்கு உள்ளான குலசிங்கம் குலரத்தினம் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று தற்போது வீட்டுக்கு வந்துள்ளார்.

சித்தங்கேணி பிள்ளையார் கோவிலில் இடம்பெற்ற மாகும்பாபிஷேகத்தையொட்டி உலகெங்கும் இருக்கும் ஆலயத்தின் அடியவர்களிடம் சேகரிக்கப்பட்ட பல இலட்சம் ரூபாய் பெறுமதியான நிதி மோசடி செய்யப்பட்டது தொடர்பான வாக்கு வாதத்திலேயே ரஜீவன் வாள்வெட்டில் ஈடுபட்டதாக தெரியவருகிறது. மகா கும்பாபிஷேகத்திற்கு ஊரில் நிதிப் பங்களிப்புசெய்தவர்களின் பட்டியல் வெளியிடப்பட்ட போதும் வெளிநாடுகளில் இருந்து நிதிப்பங்களிப்பு செய்த பலரின் பெயர்கள் வெளிவரவில்லை. வெளிநாட்டில் இருந்து நிதிப்பங்களிப்புச் செய்தவர்கள் ஆலயத்துடன் தொடர்புகொண்டு தாங்கள் நிதிப் பங்களிப்புச் செய்ததை நிர்வாகத்திடம் தெரிவித்து உள்ளனர். இது தொடர்பாக கும்பாபிஷேக நிதி கணக்குகளுக்கு பொறுப்பாக இருந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதேசசபை உறுப்பினர் ரஜீவன் குழுவினருக்கும் ஆலயத்தின் நிர்வாகத் தலைவராக இருந்த குலரத்தினம் குலசிங்கத்திற்கும் இடையே சிறிதுகாலமாக முறுகல் நிலை காணப்பட்டது.

யூன் 11 மாலை வாள்வெட்டு நடப்பதற்கு முன்னரும் இவர்கள் தொலைபேசியில் வாக்குவாதப்பட்டு நேரடியாக பார்த்துக்கொள்வதாக ரஜீவன் குலரத்தினத்திற்கு சவால்விட்டுள்ளார். அதனைத் தொடர்ந்தே அன்றைய தினம் மாலை 3:30 மணியளவில் அருகில் இருற்த சித்தங்கேணி சிவன் கோவில் வளாகத்தில் ரஜீவன் வாள் கொண்டுவந்து குலரத்தினத்தை தாக்கி உள்ளார்.