November

November

வெள்ளம், மண்சரிவு – 16 ஆயிரத்து 681 பேர் பாதிப்பு.

கடந்த சில தினங்களாகப் பெய்த மழை, மற்றும் மண்சரிவு காரணமாக 3768 குடும்பங்களைச் சேர்ந்த 16 ஆயிரத்து 681 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தோடு 62 வீடுகள் முழுமையாகவும், 239 வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

வெள்ளம், மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கவென 225 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்றுத் தெரிவித்தார்.

வெள்ளம், மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் மாவட்ட செயலாளர்களுக்கு இந்நிதி அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக வும் அவர் கூறினார். குருநாகல், புத்தளம், கொழும்பு, மாத்தளை, கம்பஹா, ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களின் மாவட்ட செயலகங்களுக்கு அனுப்பி வைக்கப் பட்டிருக்கும் இந்நிதி மூலம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சமைத்த உணவு மற்றும் உலர் உணவு நிவாரணம் பிரதேச செயலகங்கள் ஊடாக வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஆபாச இணையத் தளங்களை வடிவமைப்போர் மீது தண்டனை

அறியாமையால், விருப்பமின்றி அல்லது காட்சிப்படுத்தும் நோக்கமின்றி ஆபாச இணையத்தளங்களில் தோற்றியுள்ள நபர்களின் இரகசியத் தன்மையினைப் பேணி அவர்களை அந்த நிலைக்கு ஆளாக்கியவர்களுக்கு எதிராக சட்ட ரீதியில் நடவடிக்கை எடுப்பதாக சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் கொழும்பு கோட்டை நீதவான் செல்வி லங்கா ஜயரத்னவிடம் நேற்று (25) தெரிவித்தது. அந்த நபர்களின் புகைப்படங்கள் பிரசித்தி ப்படுத்தப்பட மாட்டாது எனவும் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் மேலும் குறிப்பிடுகின்றது. ஆபாச இணையத் தளங்களிற்கு காட்சியளிக்கும் புகைப்படங்களை பிரசித்தப்படுத்துவதற்கு முன்னர் தேவையானவர்களுக்கு அந்தப் புகைப்படங்களை வந்து பார்வையிடுவதற்காக சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் தலைமையகம் மற்றும் காலி, கண்டி, நீர்கொழும்பு, மாத்தறை, இரத்தினபுரி, அநுராதபுரம், அம்பாறை ஆகிய தொகுதி காரியாலயங்களில் இரகசியமாக வைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ள தாகவும் பணியகம் மேலும் குறிப்பிடுகின்றது.

ஆபாச இணையத் தளங்களில் காட்சிப்படுத்தப்படுகின்ற நபர்களின் புகைப்படங்களை நீதிமன்ற அனுமதியின் மீது பத்திரிகைகளில் பிரசுரித்ததன் பின்னர் மூன்று பெண்களும் இரண்டு ஆண்களும் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்திடம் ஆஜரானதாகவும், மேலும் ஒன்பது பேர் தொடர்பாக அனாமதேய அழைப்புக்கள் மூலம் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் பணியகம் நேற்று (25) நீதவானிடம் தெரிவித்தது.

ஆபாச இணையத் தளங்களை வடிவமைத்து இணையத்தில் சேர்த்து பணம் உழைப்போர் தொடர்பாக தொடர்ந்தும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பணியகம் கூறுகிறது. இவ்வாறான செயற்பாடுகளில் கூட்டாக அல்லது தனிப்பட்ட முறையில் நிறுவனங்களை நடத்திச் செல்வது அல்லது பங்களிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும் எனவும் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் மேலும் கூறுகின்றது.

இந்திய அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணாவை தமிழ் கட்சிகளின் அரங்கம் சந்திக்கும்.

இலங்கை வரும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணாவை தமிழ் கட்சிகளின் அரங்கம் எதிர்வரும் 28ஆம் திகதி சந்திக்கவுள்ளதாக இந்த அமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழ்தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் தலைவர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

இன்று வியாழக்கிழமை இலங்கைக்கு வருகை தரும் இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்து கலந்துரையாடுவதற்கான ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும். அதன்படி 28ஆம் திகதி முற்பகல் 11மணிக்கு கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரின் இல்லத்தில் சந்திப்பு இடம்பெறும் எனவும் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கான தீர்வு, இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் அவர்களுக்கான புனர்வாழ்வு, அபிவிருத்திப் பணிகள், வடக்கிலுள்ள உயர்பாதுகாப்பு வலயம் தொடர்பான பிரச்சினை, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும், காணாமல் போனவர்கள் தொடர்பான பிரச்சினை போன்ற விடயங்கள் இச்சந்திப்பின் போது கலந்துரையாடப்பட உள்ளதாகவும், அத்துடன் மேற்குறித்த விடயங்கள் குறித்து தமிழ் கட்சிகளின் அரங்கம் விரிவான மனுவொன்றையும் இந்திய அமைச்சரிடம் கையளிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி பொதுச்சந்தை வியாபாரிகள் போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளனர்.

கிளிநொச்சி பொதுச்சந்தை வியாபாரிகள் பல கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் ஓன்றை நடத்தவுள்ளனர். கிளிநொச்சி நகரில் முன்னர் இயங்கிய இச்சந்தை மக்கள் மீள்குடியமர்த்தப்பட்ட பின்னர் நகரிலிருரிந்து சுமார் இரண்டரை கிலோ மீற்றர் தொலைவிலுள்ள அம்பாள்குளம் என்ற இடத்திற்கு மாற்றபட்டுள்ளதால் சந்தை வியாபாரிகள் பாதிக்கபட்டள்ளனர்.

இச்சந்தையில் நிரந்தரக் கட்டங்கள் அமைக்கப்படாமல் தற்காலிக கொட்டகைகளில் வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கிளிநொச்சிக்கு தென்பகுதிகளிலிருந்து வரும் நடைபாதை வியாபாரிகள் நகரின் எல்லா இடங்களிலும் வியாபாரத்தை நடத்தி வருவதால் குறித்த சந்தைக்கு நுகர்வோர் வருவது மிகவும் குறைவாகவுள்ளதாகவும், இவ்வாறான பிரச்சினைகளுக்கு மத்தியலும் பிரதேச சபையினால் சந்தை வியாபாரிகளிடமிருந்து நாளொன்றிற்கு 50 ரூபா வரி அறவிடப்படுவதாகவும் சந்தை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இப்பிரச்சனைகளை முன்வைத்து கடந்த 23அம் திகதி போராட்டம் ஒன்றை நடத்தவிருந்ததாகவும், அது தவிர்க்க முடியாத காரணங்களால் நடைபெறவில்லை எனவும், எதிர்வரும் நாட்களில் குறித்த போராட்டம் நடைபெறும் எனவும் கிளிநொச்சி பொதுச்சந்தை வர்த்தகர் சங்கத்தைச் சேர்ந்த வியாபாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

யாழ்.பல்கலைக்கழகத்தில் பகிடிவதை நடைபெறுவதில்லை என மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் தெரிவிப்பு.

பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினால் பகிடி வதை தடைசெய்யப்பட்ட பின்னர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பகிடிவதை சம்பவங்கள் எதுவும் நடைபெறுவதில்லை எனவும் மாணவர்கள் மத்தியில் ஏற்படும் சிறு சிறு முரண்பாடுகள் காரணமாக சில மோதல் சம்பவங்கள் இடம்பெறுவதாகவும் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார்.

வன்னியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் அண்மையில் தாக்கப்பட்டமை குறித்து அவர் குறிப்பிடுகையில் மாணவர்கள் மத்தியில் எவ்வித பாகுபாடுகளும் இல்லை எனவும், அவர்கள் புரிந்துணர்வுடன் நடந்து கொள்வதாகவும் ஆனால். வெளிமாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் விடுதியில் ஒன்றாக தங்கியிருப்பதன் காரணமாக சில சமயங்கள் முரண்பாடுகள் எற்பட்டு அவை மோதல்களில் முடிவடைகின்றதாகவும், அண்மையில் இடம்பெற்ற சம்பவமும் இவ்வாறானதே எனவும் அவர் தெரிவித்தார்.

முல்லைத்தீவு வங்கியில் அடகு வைக்கப்பட்டு யுத்தத்தின் போது தொலைந்து போன நகைகளுக்கு நட்டஈடு வழங்கப்படவுள்ளது.

முல்லைத்தீவு மக்கள் வங்கியில் நகைகள் அடகு வைத்து, யுத்தத்தின்போது அவை தொலைந்து போனவர்களுக்கு பவுண் ஒன்றிற்கு 32 ஆயிரம் ரூபா வீதம் வழங்கப்படும் என அவ்வங்கி அறிவித்துள்ளது.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது எற்பட்ட இடப்பெயர்வுகள் மற்றும், சேதங்கள் காரணமாக குறித்த வங்கியில் அடகு வைக்கப்பட்ட பொதுமக்களின் நகைகள் தொலைந்து போய்விட்டதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்டஈட்டினை வழங்க வங்கி முன்வந்துள்ளது.

அடகு வைத்த மக்கள் அதற்கான ஆவணங்களை சமர்ப்பித்து இந்த நட்டஈட்டினைப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. யுத்தம் நடைபெற்ற காலம் வரையும் இந்த நகைகளுக்கான வட்டி அறவிடப்படும் எனவும் வங்கி தெரிவித்துள்ளது.

ஏழு சிறுமிகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக தொண்டராசிரியர் கைது.

மலையகம் நோட்டன் பகுதியிலுள்ள தமிழ் பாடசாலையொன்றில் ஏழு சிறுமிகளை பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தியதான சந்தேகத்தின் பேரில் 25 வயது தொண்டர் ஆசிரியர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த ஆசிரியரால் தரம் ஐந்தில் கற்கும் ஒன்பது தொடக்கம் பத்து வயதிற்குட்பட்ட ஏழு சிறுமிகளே பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபரின் இந்த நடவடிக்கை குறித்து நோட்டன் பொலிசாருக்க கிடைத்த முறைப்பாட்டையடுத்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த தொண்டராசிரியரிடம் விசாரணைகள் மேற்கொள்ளபட்டு வரும் நிலையில், மருத்துவ பரிசோதனைக்காக குறித்த ஏழு சிறுமிகளும் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம்

2008ம் ஆண்டில் இத்தினத்தை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் விடுத்திருந்த செய்தியில், ‘உலகில் உள்ள பெண்களில் மூன்றில் ஒருவர் தமது வாழ்நாளில் ஏதாவது ஒரு விதத்திலாவது துஷ்பிரயோகத்தை சந்தித்து இருக்கலாம்” என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் பல நாடுகள் பெண்களைப் பாதுகாக்க சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் கூட இவற்றை விட மேலதிக நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளதாகவும், வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் புதிய பிரச்சாரத்தை முன்நின்று செய்யப்போவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பான விரிவான கட்டுரையைப் படிக்க….
நவம்பர் 25ம் திகதி பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினமாகும்.
International Day for the Elimination of Violence Against Women – புன்னியாமீன்

http://puniyameen.blogspot.com

கிருஷ்ணா இன்று வருகை; சர்தாரி ஞாயிறன்று கொழும்பில்

ind-pak.jpgபாகிஸ்தான் ஜனாதிபதி, இந்திய அமைச்சர் ஆகியோரின் இலங்கை விஜயத்தால் நாட்டுக்கு பலகோடி பெறுமதியான நன்மைகள் கிடைக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார். இது தவிர இலங்கையில் முதலீடு செய்வதற்காக பெல்ஜியம் மற்றும் மலேசிய நாட்டு உயர் மட்ட வியாபாரிகள் குழுக்களும் இலங்கை வருவதாக அமைச்சர் கூறினார்.

வரவு – செலவுத்திட்ட இரண்டாவது நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் மேலும் கூறியதாவது:- இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா இன்று (வியாழன்) இலங்கைக்கு வருகிறார். அவர் வெறும் கையுடனன்றி நாட்டுக்கு பல்வேறு நன்மைகளை எடுத்து வருகிறார்.  யாழ்ப்பாணம், ஹம்பாந்தோட்டை, மதவாச்சி ஆகிய பகுதிகளுக்கும் அவர் விஜயம் செய்வார். 250 அமெரிக்க டொலர் செலவில் இடம்பெயர்ந்த மக்களுக்காக 50 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்தையும் கிருஷ்ணா ஆரம்பித்து வைக்க உள்ளார். கடனாக அன்றி உதவியாகவே இந்த வீடமைப்புத் திட்டம் இலங்கைக்கு வழங்கப்படுகிறது.

இது தவிர 800 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் வடக்கில் மூன்று ரயில் பாதைகளை நிர்மாணிக்கும் பணியையும் அவர் ஆரம்பித்துவைப்பார்.

அத்தோடு காங்கேசன்துறை துறைமுகம், பலாலி விமான நிலையம் என்பவற்றை அபிவிருத்தி செய்யவும் இந்தியா விசேட திட்டங்களை முன்னெடுக்க உள்ளது. தனது விஜத்தின் போது இந்திய வெளிவிவகார அமைச்சர் யாழ்ப்பாணத்திலும் ஹம்பாந்தோட்டையிலும் இரு கொன்சூலர் அலுவலகங்கள் திறந்து வைக்கப்படும்.

பாக். ஜனாதிபதி விஜயம்

இந்திய வெளிவிவகார அமைச்சர் நாடு திரும்பும் தினத்தில் பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அல் சர்தாரி இலங்கைக்கு வருகை தருகிறார். அவரும் இலங்கையின் பொருளாதாரத்தை பலப்படுத்தும் பல திட்டங்களை எடுத்து வருகிறார். சீனி, சீமெந்து கைத்தொழிற்சாலைகள் சிறுமத்திய கைத்தொழிற் துறைகள் ஆரம்பிப்பது குறித்து அவரின் விஜயத்தின் போது கவனம் செலுத்தப்படும்.

இங்கிலாந்து பிரஜை பலி

இங்கிலாந்து நாட்டவர்கள் பயணம் செய்த கார் ஒன்று கெப் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் இங்கிலாந்து நாட்டு பிரஜை ஒருவர் உயிரிழந்தும் அவரது மனைவி காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நேற்று முன்தினம் 5.00 மணியள வில் இடம்பெற்ற ரந்தெனிய விபத்தில் பிரிஸ்டியன் ஏம் வயது (59) என்பவரே உயிரிழந்தவர் ஆவார். அவரது மனைவி ஜோன் பவுன்ரி என்பவர் படுகாயமடைந்தவராவார்.