கிளிநொச்சி பொதுச்சந்தை வியாபாரிகள் பல கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் ஓன்றை நடத்தவுள்ளனர். கிளிநொச்சி நகரில் முன்னர் இயங்கிய இச்சந்தை மக்கள் மீள்குடியமர்த்தப்பட்ட பின்னர் நகரிலிருரிந்து சுமார் இரண்டரை கிலோ மீற்றர் தொலைவிலுள்ள அம்பாள்குளம் என்ற இடத்திற்கு மாற்றபட்டுள்ளதால் சந்தை வியாபாரிகள் பாதிக்கபட்டள்ளனர்.
இச்சந்தையில் நிரந்தரக் கட்டங்கள் அமைக்கப்படாமல் தற்காலிக கொட்டகைகளில் வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கிளிநொச்சிக்கு தென்பகுதிகளிலிருந்து வரும் நடைபாதை வியாபாரிகள் நகரின் எல்லா இடங்களிலும் வியாபாரத்தை நடத்தி வருவதால் குறித்த சந்தைக்கு நுகர்வோர் வருவது மிகவும் குறைவாகவுள்ளதாகவும், இவ்வாறான பிரச்சினைகளுக்கு மத்தியலும் பிரதேச சபையினால் சந்தை வியாபாரிகளிடமிருந்து நாளொன்றிற்கு 50 ரூபா வரி அறவிடப்படுவதாகவும் சந்தை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இப்பிரச்சனைகளை முன்வைத்து கடந்த 23அம் திகதி போராட்டம் ஒன்றை நடத்தவிருந்ததாகவும், அது தவிர்க்க முடியாத காரணங்களால் நடைபெறவில்லை எனவும், எதிர்வரும் நாட்களில் குறித்த போராட்டம் நடைபெறும் எனவும் கிளிநொச்சி பொதுச்சந்தை வர்த்தகர் சங்கத்தைச் சேர்ந்த வியாபாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.