18

18

தமிழர்களுக்கு ஆதரவு தந்த அந்த உயர்ந்த மனிதன் டேவிட் பேர்ஜஸ் க்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன் : கவுன்சிலர் போல் சத்தியநேசன்

David_Burgess_SoniaDavid_Burgessடேவிட் பேர்ஜஸ் இன் இறுதி நிகழ்வு நேற்று (நவம்பர் 17, 2010) சென் மார்டின் இன் தி பீல்ட் இல் நடைபெற்றது. முற்போக்குத் தன்மைக்கு வரலாற்றுப் புகழ்பெற்ற தேவாலயம் சென் மார்ட்டின் இன் தி பீல்ட் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தேவாலயம் தற்பால் உறவுகளை அங்கீகரிக்கின்ற தேவாலம். இங்கு டேவிட் பேர்ஜஸ், சோனியா என்ற பெயரில் சேவையில் ஈடுபட்டு இருந்தவர். இங்கு ஓலையால் வேயப்பட்ட பெட்டியில் உடலை வைத்து பாடல்களுடன் அவரது இறுதி அஞ்சலி இடம்பெற்றது. மனித உரிமை அமைப்புகள், மெடிக்கல் பவுண்டேசன், சட்ட நிறுவனங்கள், தற்பால் சமூகத்தினர், பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த சமூக அமைப்புகள் என நூற்றுக்கும் மேற்பட்ட அமைப்புகைளச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இறுதி அஞ்சலியில் டேவிட் பேர்ஜஸ் இன் பிள்ளைகள் தங்கள் இறுதி அஞ்சலியை அவர்களின் தந்தைக்குச் செலுத்தினர். அதனைத் தொடர்ந்து பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் தங்கள் அஞ்சலியைச் செலுத்தினர்.

இக்கட்டுரை சட்டத்தரணி டேவிட் பேர்ஜஸ் உடன் அரசியல் தஞ்ச வழக்குகளில் நீண்ட காலம் இணைந்து பணியாற்றிய அவரின் நண்பர் கவுன்சிலர் போல் சத்தியநேசன் வழங்கும் ஒரு அஞ்சலிக் குறிப்பு. கவுன்சிலர் சத்தியநேசன் ஒலிப்பதிவாக வழங்கிய அஞ்லியை ரி சோதிலிங்கம் கணணிப்படுத்தி உள்ளார்.

._._._._._.

‘அப்போது தமிழ் அகதிகள் லண்டனில் பெருமளவு வந்திறங்கிய காலம். தமிழ் அகதிகள் திருப்பி அனுப்பப்படுவதற்கு எதிராக குரல் எழுப்பிய பல தமிழர்கள் என்ன செய்வது என்று தெரியாது இருந்த காலம். தம்மால் ஆன எந்த உதவிகளைச் செய்தும் ஏதும் பலன் இல்லை என்றிருந்த காலம்.’ லண்டன் ஏஞ்சலில் உள்ள JCWIல் பணியாற்றிய Jane Coker இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு அப்போது உதவி வந்தவர். அவர், அகதிகள் திருப்பி அனுப்பப்படவதற்கு எதிரான அதாவது தஞ்சம் கோருவோரை மீண்டும் நாட்டுக்கு அனுப்புகின்ற பிரித்தானிய உள்நாட்டு அமைச்சின் கொள்கைகளை எதிர்த்து, உயர்நீதிமன்றில் சட்டப்படி சவால்விடுக்க, டேவிட் பேர்ஜஸ் ஜ TRAG (Tamil Refugee Action Group – Co-Ordinator Mr V Varathakumar) க்கு அறிமுகப்படுத்தினார். இன்று இந்த Jane coker ஒரு பிரித்தானிய நீதிபதிகளில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

”1985 காலப்பகுதிகளில் பிரித்தானிய உள்நாட்டமைச்சு இலங்கைத்தமிழ் அகதிகளை உனடியாகவே திருப்பி அனுப்பவதில் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக இரவு, பகல் பாராது அகதிகளை ஏற்றிச்செல்லும் பொலீஸ் வாகனங்களுக்கு பின்னால் கலைத்து திரிந்தும், ஓடித்திரிந்தும் பொலிசார் அகதிகளை ஒளித்து வைத்திருக்கும் இடங்களுக்கு இரகசியமாக சென்று, அவர்களிடம் வாக்கு மூலங்களைப் பதிவுசெய்தும் அந்த அகதிகளை நாடுகடத்த விடாமல் செய்த பணிகளில் டேவிட் பேர்ஜஸ் இன் பணி அளப்பரியது. பொலீசார் டேவிட் பேர்ஜஸ் இவர்களுடைய வழக்குகளில் ஈடுபடுகிறார் என்று தெரிந்ததும், அகதிகளை Holiday Inn போன்ற ஹோட்டல்களில் ஒளித்து வைத்தபோதும் அகதிகளை ஹோட்டல்களின் வாசல்களில் சந்தித்து வாக்கு மூலங்களை பதிவு செய்து அந்த அகதிகளை திருப்பி அனுப்பவிடாது தடுத்து நிறுத்தியவர் டேவிட் பேர்ஜஸ். பிரித்தானியாவில் வாழும் தமிழர்கள் அவர்களுக்கு நன்றிக் கடமை உடையவர்கள்.” என்று TRAG – தமிழ் அகதிகள் நடவடிக்கைக் குழுவின் முன்னாள் இணைப்பாளர் திரு வி வரதகுமார் குறிப்பிடுகின்றார்.

1985 காலப்பகுதிகளில் இலங்கையில் நடைபெற்ற இனக்குரோத நடவடிக்ககைளில் பாதிக்கப்பட்டு நாட்டைவிட்டு வெளியேறும் தமிழர்கள், உண்மையிலேயே பாதிக்கப்பட்டவர்கள் என்பதை உணர்ந்து, அவர்களுக்கு தான் சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் சேவையாற்றியவர் திரு டேவிட் பேர்ஜஸ்.

இலங்கையின் இனப்பிரச்சினை முழுஅளவிலான வன்முறை வடிவம் எடுக்க ஆரம்பித்த காலங்களில் 1985ம் ஆண்டு பிரித்தானியா தனது குடிவரவுச் சட்டத்தில் கொமன்வெல்த் நாடுகளில் இருந்து வருபவர்களில் முதலாவதாக இலங்கையருக்கு விசா முறையை அமுல்ப்படுத்துகின்றனர். இதன்படி விசா இல்லாமல் வரும் அகதிகள் உடனடியாகவே திருப்பி அனுப்பப்படுவார்கள். இது இலங்கைத் தமிழர்களுக்கு பாரிய பாதிப்புக்களை கொடுத்திருந்தது.

யூலை 11 1986 உள்நாட்டு அமைச்சராக இருந்த டக்ளஸ் ஹேட், இலங்கைத் தமிழர்க்கு Exceptional Leave to Remain தரப்படும் என தெரிவிக்கிறார். இது இலங்கையில் இருந்து வரும் தமிழர்கள் இலங்கையில் இனரீதியாக பாதிப்படைந்தவர்கள் என்பதை ஏற்றுக்கொள்ளாது அகதிகளின் தனிப்பட்ட நிலைமைகளை ஆராய்ந்தே அவர்களுக்கு தங்குமிட அனுமதி வழங்குவது என்ற சட்டமாகும். இது தமிழர்கள் பாதிக்கப்பட்ட இனம் என்று பிரித்தானிய அரச ஏற்கவில்லை என்பதேயாகும்.

1987 ஹீத்துரோ விமான நிலையம் Terminal 3 அல்லது Terminal 4ல் தமிழர்கள் தமது உடுப்புக்களை கழற்றி எறிந்துவிட்டு தம்மை நாடு கடத்த வேண்டாம் எனப் போராட்டம் நடாத்திய நேரம். போராட்டம் நடத்தியவர்களை Ford House Hotelல் தடுத்து வைத்திருந்தனர். Winstanly Burgrs சட்ட நிறுவனம் சட்டத்தரணிகள் டேவிட் பேர்ஜஸ், Chris Landel ஆகிய இருவரும் தமிழர்கள் திருப்பி அனுப்பப்படுவது தொடர்பான இந்த வழக்கை உயர் நீதிமன்றுக்கு எடுக்க முன்வந்தனர். இந்த வழக்கை உயர் நீதிமன்றுக்கு எடுத்துச் செல்ல UNHCR அன்றைய உதவி உயர் ஸ்தானிகர் Irin Khan இன்றைய IOM Secretary General இதற்கான பின்புல உதவிகளை செய்ய முன்வந்திருந்தார்.

இந்த வழக்கில் டேவிட் பேர்ஜஸ் வெற்றிபெற்று தமிழர்கள் நாடு கடத்தலை தடுத்து நிறுத்தினார். இந்த வழக்கின் வெற்றியில் இன்று வரையில் இலங்கைத் தமிழ் அகதிகள் மட்டுமல்ல பல்வேறுபட்ட நாட்டு அகதிகளும் பயன்பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றி இலங்கைத் தமிழ் மக்களால் அகதிகள் சமூகத்திற்கு வழங்கிய பெரிய விடயமாகும்.

1987 கீத்துரோ விமான நிலையத்தில் நாடுகடத்த முற்பட்ட வேளை தம்மை நாடு கடத்த வேண்டாம் என போராட்டம் நடாத்தியவர்களை Ford House Hotel ல் இருந்து தடுப்புக்காவல் முகாமிற்கு மாற்றப்பட்டனர் பின்னர் இவர்கள் படிப்படியாக நாட்டுக்குள் வசிக்க அனுமதிக்கப்பட்டனர். இதே காலகட்டத்தில் ஆறு எகிப்தியர்களை நாடுகடத்தப்பட இருந்ததும் அவர்களும் இந்த தமிழ் அகதிகளின் நீதிமன்றின் வெற்றியினால் பலன் பெற்றனர். இந்தக் காலகட்டத்தில் சனல் 4 இந்த விடயங்களை Black Back Series என்ற தொடரில் நிகழ்ச்சிகளாக ஒளிபரப்பப்பட்டது.

நீதிமன்றில் பெற்ற வெற்றியின் பின்னர் டேவிட் பேர்ஜஸ் இலங்கைத் தமிழ் அகதிகள் பிரச்சினைகளில் மிகவும் அக்கறையுடன் செயற்பட ஆரம்பித்தார். இதன் காரணமாகத் தான் இலங்கைக்குச் சென்று நிலமைகளை ஆய்வுசெய்து வந்தும், வேறு சில சட்டத்தரணிகளை அனுப்பி நிலைமைகளை அவதானித்தும் தமிழ் மக்களுக்கான மனிதாபிமான உதவிகளை தொடர்ந்திருந்தார். பிரித்தானிய உள்நாட்டு திணைக்களம் முன்னர் எப்போதும் இப்படியான ஒரு சட்டச் சவாலை எதிர்கொள்வில்லை. பிற்காலங்களில் அகதிகளை ஏற்றி வரும் விமான நிறுவனங்களுக்கு 2000 பவுண்ஸ் அபராதம் போன்ற சட்ட நடவடிக்கைகளை உருவாக்கி இருந்த காலத்திலும், டேவிட் பேர்ஜஸ் வெற்றிபெற்றார். இந்த வெற்றி பலருக்கு நின்மதி அளித்திருந்தது.

பிரித்தானிய சட்டத்துறைக்கும் பிரித்தானிய அரசுக்கும் அதன் சட்டவாக்க கொள்கை வகுப்புக்களுக்கு டேவிட் பேர்ஜஸ் இன் நீதிமன்ற வெற்றி உதவியது. இது பிரித்தானியாவின் சட்டத்துறையில் மாற்றங்களை உருவாக்கியது. டேவிட் பேர்ஜஸ் ஒவ்வொரு அகதியையும் தனது முழுமையான அர்ப்பணிப்புடனும் உத்தியோக சிறப்புடனும் அணுகினார். அகதிகளிடம் வாக்கு மூலம்பெறுவதற்கும் இலங்கை பற்றி அறிவதற்கும் மிகுந்த நேரத்தைச் செலவிட்டார். டேவிட் பேர்ஜஸின் கடுமையான உழைப்பின் பயனை தனிப்பட்ட அகதிகள் மட்டுமல்லாமல், அகதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணிகளும் கூட வெற்றியின் பயனைப்பெற்றனர். இந்தக் காலத்தில் லண்டனில் இருந்த பல தமிழ் சட்டத்தரணிகளில் அனுபவம், சட்டத்தேர்ச்சி பெற்றவர்கள் ஒருசிலரே. பல சட்டத்தரணிகள் தமது தொழில் ரீதியாக தங்கள் தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தை டேவிட் பேர்ஜஸ் உருவாக்கி இருந்தார்.
டேவிட் பேர்ஜஸ் உடைய வழக்கு வெற்றியினை ஆதாரமாகக் கொண்டு தமது வழக்குகளை வெல்ல அவர்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. இதனை இலங்கைத் தமிழ் சட்டத்தரணிகள், தங்களுக்கு பெரும் பணமீட்டும் உழைப்பாக்கிக் கொண்டனர். அதிலும் சாதாரணமாக உள்ளுராட்சி திணைக்களத்துடன் தொடர்பு கொண்டால் கிடைக்கக்கூடிய Exceptional Leave to Reamin ஜ கூட பல நூறு பவுண் பணங்களை வாங்கிக் கொண்டே தமிழ் அகதிகளுக்கு உதவி செய்வோர் என்ற பெயரையும் பெற்றுக் கொண்டனர்.

தமிழ் அகதிகள் பெருமளவு பிரித்தானியாவுக்கு வந்த காலத்தில் அகதிகளுக்கு சேவை செய்து கொண்டிருந்த British Refuge Council, UKIAS, AI, UNHCR போன்ற பல அமைப்புக்களுக்கும் இந்த டேவிட் பேர்ஜஸ் இன் வெற்றி உதவிக்கரமாக இருந்தது.

மேலும் பல தமிழ்அகதிகள் அமைப்புக்கள் அரசிடமிருந்து நிதி உதவிகளையும் பெற்று மேலும் பல அகதிகளுக்கு உதவும் வாய்ப்பும் கிட்டியது. இந்தப் பரீட்சார்த்த வழக்கு வெற்றிகளினால் வேறு பல நாட்டு அகதிகளின் வழக்குகளும் வெற்றி வாகை சூடிக்கொண்டது. பங்களாதேஸில் இருந்த வந்திருந்த அகதிகள் திருப்பி அனுப்பப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு டேவிட் பேர்ஜஸ் இனால் கிடைத்த சட்ட வெற்றியைப் பயன்படுத்தி, அடுத்த தொகுதி பங்களாதேஸ் அகதிகள் திருப்பி அனுப்பப்படாமல் தடுக்க இந்த வழக்கு வெற்றி உதவியது. இன்று பிரித்தானியாவில் தமிழ் சமூகம் வல்லமையும் ஆளுமையும் கொண்ட சமூகமாக இருப்பதற்கு டேவிட் பேர்ஜஸ் செய்த உதவிகள் முக்கியமானவை.

டேவிட் பேர்ஜஸ் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்திற்கும் தனது சேவையினை மனப்பூர்வமாக வழங்கியுள்ளார். டேவிட் பேர்ஜஸ் தமிழ் மக்களுக்கும் ஏனைய அகதி மக்களுக்கும் ஒரு பாதுகாக்கும் கரமாக இருந்துள்ளார். இன்று பிரித்தானியாவில் தமிழர்களும் மற்றைய நாட்டவர்களும் அகதிகளாக வந்து பயனை அடைந்திட டேவிட் பேர்ஜஸ் ன் பங்களிப்பு அளப்பரியது.

பாதிக்கப்பட்ட இனமான தமிழ் இனம் சர்வதேச அகதிகளுக்கான மனித உரிமைகளுக்கான சட்டங்களான 1951 Convetion, 1967 Protocol ஆகியவற்றின் கீழ் பாதுகாப்பு தரப்படவில்லையானாலும் பிரித்தானிய சட்டதிட்டங்களில் மாற்றங்களை உருவாக்கி தமக்கான சட்டப் பாதுகாப்பினை இலங்கைத் தமிழர்கள் பெற்றுள்ளனர். டேவிட் பேர்ஜஸ் பணத்தையும் பெருமையயும் முதன்மைப்படுத்தாமல் பிரித்தானிய உள்நாட்டு சட்டத்துக்கு சவாலாகவும் பாதிக்கப்பட்ட இனத்திற்காக உதவி செய்வதையும் முதன்மைப்படுத்தி தமிழர்களுக்கு ஆதரவு தந்த அந்த உயர்ந்த மனிதனுக்கு நான் எனது அஞ்சலியை செலுத்துகிறேன்.

டேவிட் பேர்ஜஸ் தொடர்பான முன்னைய பதிவுகள்:

தமிழர்களுக்கு ஆதரவு தந்த அந்த உயர்ந்த மனிதன் டேவிட் பேர்ஜஸ் க்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன் : கவுன்சிலர் போல் சத்தியநேசன்

டேவிட் பேர்ஜஸ் உடைய இறுதி நிகழ்வு இன்று நவம்பர் 17ல்

தஞ்சம் கோரிய பல நூற்றுக்கணக்கான தமிழர்களின் வாழ்வுக்கு வழிகாட்டிய சட்டத்தரணி டேவிட் பேர்ஜஸ் மரணத்தைத் தழுவினார்! அவருடைய மரணம் தொடர்பாக தமிழ்ப் பெண் கைது!

சட்டத்தரணி டேவிட் பேர்ஜஸ் கொலைச் சந்தேக நபர் பெண்ணாக மாறிய ஆண்!

யாழ். பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்படவுள்ள பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் குறித்து அமைச்சர் எஸ். பி. திசாநாயக்க.

DD_and_SPDissanayakkaயாழ். பல்கலைக்கழகத்தில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் வருகை தந்த அமைச்சர் நேற்று புதன்கிழமை யாழ்.பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தை உலகின் முதற்தரப் பல்கலைக்கழகங்களில் ஒன்றாக உயர்த்தவுள்ளதாக அவர் தெரிவித்தார். மாணவர்களுக்கு இரு விசாலமான விடுதிகள் விரைவில் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் யாழ்.பல்கலைக்கழகத்தின் அழகியல், கலைத்துறையினை தனியொரு பீடமாக்க திட்டமிட்டுள்ளதாகவம், பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறும் மாணவர்கள சிறந்த அங்கில அறிவுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதற்காக ஆங்கில மொழிக் கல்வியை சிறந்த முறையில் அபிவிருத்தி செய்யவும் திட்டமிடப்பட்டள்ளது எனவும் அத்துடன் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பினைப் பெற்றுக் கொடுத்தல், பல்தேசிய ஆளுமை மிக்கதான கற்கை நெறிகளை அறிமுகப்படுத்தல் என பல்வேறு திட்டங்கள் குறித்தும் அவர் தெரிவித்தார். பல்கலைக்கழக பரீட்சை முறையிலும் மாற்றங்கள் கொண்டு வரப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

“யாழ்.சிங்களக் குடியேற்றத்தின் பின்னணியில் தென்னிலங்கை அமைப்பொன்று செயற்படுகின்றது” கூட்டமைப்பு எம்.பி அ.விநாயகமூர்த்தி

யாழ்.குடாநாட்டில் சிங்கள மக்கள் குடியேற்றத்தின் பின்னணியில் தென்னிலங்கையிலுள்ள அமைப்பு ஒன்று செயற்படுவதாகவும், தற்போது எற்பட்டுள்ள சுமுகநிலையை குழப்பி இனமோதல்களை தோற்றுவிக்க அந்த அமைப்பு யாழ்.குடாநாட்டில் சிங்களக் குடியேற்றங்களை நெறிப்படுத்தி வருவதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான அ.விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். தற்போது யாழ். வந்து குடியமர்ந்துள்ள சிங்கள மக்களுக்கு யாழ்ப்பாணத்தில் காணிகள் எவையும் இல்லை. இந்நிலையில் அவர்கள் இங்கு குடியேற்றம் செய்யப்படுவது சட்டவிரோதமானது என அவர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் முன்னர் வாழ்ந்த முஸ்லிம்கள் இங்கு வந்து மீள்குடியேறுவது வரவேற்கத்தக்கது. ஏனெனில், அவர்களுக்கு சொந்தமாக காணிகள், வீடுகள் இங்கு உள்ளன. ஆனால், வியாபார நோக்கத்திற்காக முன்னர் இங்கிருந்த சிங்கள மக்களுக்கு காணிகள் வீடுகள் இல்லை. அவர்களை அரசாங்க காணிகளில் குடியேற்றம் செய்வது சட்டவிரோதமானதாகும். தற்போது நிலவுகின்ற சுமுகமான சூழ்நிலையை குழப்புவதற்காகவே இவ்வாறான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நெதர்லாந்து உதவியுடன் யாழ். கோட்டை புனரமைப்பு.

Jaffna_Fordநெதர்லாந்து அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நடைபெற்று வரும் யாழ்.கோட்டைப் புனரமைப்பு பணிகளை இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் லியோனி குலென்றே பார்வையிட்டுள்ளார். அதன் புனரமைப்பு வேலைகள் தொடர்பாக அவர் யாழ். அரசஅதிபரிடம் திருப்தி தெரிவித்துள்ளார்.

யாழ்.கோட்டையின் புனரமைப்பிற்காக நெதர்லாந்து அரசாங்கம் 62 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கியுள்ளது. இதற்கு மேலதிகமாக இலங்கை அரசாங்கமும் 43.4 மில்லியன் ருபாவை ஒதுக்கியுள்ளது.

நேற்று மாலை யாழ்.மாவட்டச்செயலகத்தில் நெதர்லாந்து தாதுவர் அரசாங்க அதிபரைச் சந்தித்து கலந்துரையாடினார். அதன்போது யாழ்.மாவட்டத்தின் அபிவிருத்திப் பணிகள் குறித்தும், நெதர்லாந்து அரசாங்கம் அதற்கு வழங்கவுள்ள உதவிகள் குறித்தும் நெதர்லாந்து தூதுவர் அரசஅதிபருக்கு விளக்கினார்.

யாழ்ப்பாணத்தில் இந்தியத் துணைத் தூதரகத்தை இந்திய அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா திறந்து வைப்பார்.

Indian_Flagயாழ்ப் பாணத்தில் எதிர்வரும் 27ஆம் திகதி இந்தியத் துணைத்தூதரகம் திறந்து வைக்கப்படவுள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா இதனைத்திறந்து வைக்கவுள்ளார். அமைச்சர் எஸ்எம்.கிருஸ்ணா எதிர்வரும் 25ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளார் எனவும், அம்பாந்தோட்டையில் அமைக்கப்பட்டுள்ள இந்தியத் தூதரகத்தையும் அவர் திறந்து வைப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, யாழ்ப்பாணம் வருகைதரவுள்ள அவர் வடக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நூறு உழவு இயந்திரங்களை நேரடியாக கையளிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உழவு இயந்திரங்கள் யாழ்ப்பாணத்திற்கு தற்போது கொண்டுவரப் பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

வலிகாமம் வடக்கில் 27ஆம் திகதி மீள்குடியேற்றம்.

வலிகாமம் வடக்கில் முன்று கிராமசேவையாளர் பிரிவுகளில் எதிர்வரும் 27ஆம் திகதி மக்கள் மீள்குடியேற்றப் படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. வலிகாமம் வடக்கில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதாக சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள குறித்த மூன்று பிரிவுகளிலும் பொதுமக்கள் மீள்குடியேற்றப்படவுள்ளதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அதனை ஒரு வைபவரீதியாக மேற்கொள்ளும் விடயத்தில் ஏற்பட்ட இழுபறிகள் காரணமாக அது பிற்போடப்பட்டது.

இளவாலை வடமேற்கு, இளவாலை வடக்கு, வித்தகபுரம், ஆகிய பகுதிகளிலேயே மக்கள் மீள்குடியமர்த்தப் படவுள்ளனர். இந்த நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச கலந்து கொள்ளவுள்ளார். அத்துடன் அன்றைய தினம் யாழ்ப்பாணம் வருகை தரவுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஸ்ணாவும் அதில் கலந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் மக்களிடம் பணம் பறிக்க முற்பட்ட மோசடிக் கும்பலில் பிடிபட்ட நால்வருக்கு விளக்கமறியல்.

காணாமல் போனதாகக் கருதப்படும் புலிச்சந்தேக நபர்களை விடுவிப்பதாகக்கூறி கிளிநொச்சியில் பொதுமக்களிடம் பணம் பறிக்க முயன்ற நால்வர் கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு அவர்களை விளக்க மறியலில் வைக்குமாறு நீதவானால் உத்தரவிடப்பட்டுள்ளது.

இவர்களில் மூவர் கனகபுரம் பாடசாலையில் வைத்து மக்களிடம் பணம் பெறவந்த போது பாடசாலை அதிபரின் பொலிஸாருக்கும் இராணுவத்தினருக்கும் அறிவித்ததையடுத்து பிடிபட்டமை தெரிந்ததே. மேஜர் சீலன் என்பவருடன் அவரது முகவர்களாக செயற்பட்ட நால்வர் நேற்று புதன்கிழமை பொலிஸாரினால் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு நீதவானால் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

நீதிமன்றில் பொலிஸார் சமாப்பித்த அறிக்கையில் மேஜர் சீலன் எனத் தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டவருக்கும் இராணுவத்தினருக்குமிடையில் சம்மந்தம் எதுவுமில்லை எனவும், பொதுமக்களை ஏமாற்றிப் பணம் பறிப்பதற்காக தன்னை அவர் அவ்வாறு அறிமுகம் செய்துகொண்டார் எனவும் தெரிவிக்கபட்டுள்ளது.

மாகம்புர சர்வதேச துறைமுகம் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது

jetliner.jpgமுதலாவது கட்ட நிர்மாணப் பணிகள் நிறைவு பெற்று முதலாவது கப்பல் துறைமுகத்தை வந்ததையடுத்து இன்று அம்பாந்தோட்டை, மாகம்புர சர்வதேச துறைமுகம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வால் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இத்துறைமுகம் 2000 ஏக்கர் நிலப்பரப்பில் 390 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதோடு இதில் மூன்று கப்பல்களை நங்கூரமிடக்கூடிய வசதிகள் செய்யப்பட்டுள்ளதோடு, இரண்டாம் கட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொன்சேகாவுக்கு சுகவீனம் சிறைச்சாலை மருத்துவமனையில்

sarath-in-court.jpgமுன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா வெலிக்கடைச் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். செவ்வாய்க்கிழமை இரவு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் வி.ஆர்.டி.சில்வா தெரிவித்துள்ளார். பொன்சேகா சுகவீனமடைந்திருப்பதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தியிருப்பதாக வி.ஆர்.டி.சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை உயர்நீதிமன்றத்தில் இடம்பெற்ற வெள்ளைக்கொடி வழக்கு விசாரணைக்கு சமுகமளித்திருந்த பின்னர் சிறைச்சாலைக்குத் திரும்பிச் சென்ற பொன்சேகா பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பில் விசேட போக்குவரத்து ஏற்பாடு

ஜனாதிபதியின் பதவியேற்பு வைபவம் நடைபெறுவதை முன்னிட்டு நாளை 19ஆம் திகதி காலை 6.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை கொழும்பு கோட்டை, முதல் கொள்ளுப்பிட்டி சந்திவரை வீதிகள் மூடப்படவுள்ளன. காலி வீதியூடாக கொழும்பு நோக்கி வரும் கனரக வாகனங்கள் டிக்மன் வீதியூடாக சென்று ஹெவ்லோக் வீதி வழியாக கொழும்பு நகரை அடைய முடியும். இலகு ரக வாகனங்கள் கொள்ளுபிட்டி சந்தி வரை வந்து தர்மபால வீதி வழியாக கொழும்பு நகரை அடையமுடியும். மாற்று வழிகளை சாரதிகளுக்கு சுட்டிக்காண்பிப்பதற்காக பொலிஸ் அதிகாரிகள் கடமையிலீடு படுத்தப்பட்டுள்ளனர்.

மூடப்படவுள்ள வீதிகள் வருமாறு,

காலி வீதியில் கொள்ளுப்பிட்டி சந்தி முதல் ஜனாதிபதி செயலகம் வரையிலான வீதி, கோட்டை ரயில் நிலையம் முதல் லேக்ஹவுஸ் சுற்றுவட்டம் வரையிலான வீதியும், ஜனாதிபதி செயலகம் வரையிலான வீதியும்,

புறக்கோட்டை விமலதர்ம பிரதர்ஸ் முன்பாகவுள்ள மணிக்கூட்டு கோபுர சுற்றுவட்டம் முதல் பெஸ்டியன் வீதி, சதாம் வீதி, லோட்டஸ் வீதி, பிரிஸ்டல் வீதி, யோர்க் வீதி, லோட்டஸ் வீதியுடன் வங்கி வீதி, கொம்பனித்தெரு பொலிஸ் நிலையம் முதல் லேக்ஹவுஸ் சுற்றுவட்டம் வரையிலான வீதி,

கொம்பனித்தெரு முதல் ஜஸ்டிஸ் அக்பர் மாவத்தை, மாக்கான் மாக்கார் வீதி வழியாக காலிமுகத்திடல் நோக்கிச் செல்லும் வீதி,

சேர் ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தை நவம் மாவத்தை வீதி,

ஹோர்டன் சுற்றுவட்டம் முதல் பொதுநூலக சுற்றுவட்டம் வரையிலான வீதி,

எப்.ஆர். சேனாநாயக்க மாவத்தை வீதி தர்மபால மாவத்தை சந்தியிலிருந்து சீ. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கரா மாவத்தை முதல் கொழும்பு மாநகர சபை வரையிலான வீதிகள் என்பன நாளை காலை 6.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை மூடப்பட்டிருக்கும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.