யாழ்ப்பாணத்தில் மாணவர்களின் நடத்தைகள் சீரழிந்து வருவதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் இணையம் எனபனவற்றினால் யாழ். பாடசாலை மாணவர்கள் தவறான நடத்தைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ். அரசஅதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தலைமையில் மாவட்ட சிறுவர் அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டபோது இத்தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீருடையுடன் பாடசாலைக்குச் செல்லும் மாணவர்கள் மாற்றுடைகளையும் அவர்களின் பைகளில் எடுத்துச் செல்வதாகவும், பாடசாலை விட்டதன் பின்னர் மாற்றுடையுடன் தவறான நடத்தைகளில் ஈடுபடுவதாகவும், இணைய வசதிகள் வழங்கும் (நெற்கபே) நிலையங்களுக்குச் சென்று ஆபாச இணையத்தளங்களைப் பார்வையிடுவதாகவும், கையடக்கத் தொலைபேசி மூலம் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாகவும், ஆள்நடமாட்டமற்ற பகுதிகளில் – கட்டடங்களில் துஸ்பிரயோக நடவடிக்கைகளில் மாணவர்கள் ஈடுபடுவதாகவும் குறித்த கூட்டத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
நடைபெற்ற இக்கூட்டம் தொடர்பாக அரசாங்க அதிபர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். மாணவர்களின் செயற்பாடுகள் தொடர்பாக அதிபர்களும் ஆசிரியர்களும் விழிப்பாக இருக்க வேண்டும். அவர்களின் புத்தகப் பொதிகளை தேவைப்பட்டால் சோதனையிட வேண்டும். பெற்றோர் தங்களின் பிள்ளைகளின் செயற்பாடுகள் குறித்து கவனமாகவும் அக்கறையாகவும் இருக்க வேண்டும். இணைய நிலையங்களின் உரிமையாளர்கள் 18 வயதிற்கு குறைந்த மாணவர்களை இணையத் தளங்கள் பார்வையிட அனுமதிக்கின்ற போது தடுப்புகளற்ற திறந்த வெளியமைப்பில் அவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மற்றும், சிறுவர்களை வேலைக்கமர்த்துதல் உள்ளிட்ட சிறுவர் துஸ்பிரயோக நடவடிக்கைகளை பொலிஸாரின் உதவியுடன் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
