June

June

முதலாவது தமிழ் நூல் 1578 இல் பிரசுரிப்பு “தம்பிரான் வணக்கம்”

தமிழில் நூல் அச்சிடப்பட்டு பிரசுரிக்கப்பட்ட வரலாறு சுவாரஸ்யமானது.முதலாவது தமிழ் நூல் 1578 அக்டோபர் 20 ஆம் திகதி வெளிவந்தது. அன்றைய தினம் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கடதாசி மூலம் போர்த்துக்கேய மிசனரியான ஹென்ரிக் ஹென்ரிக்குயஸ் (அன்ரிக் அன்ரிக்குயஸ்) “தம்பிரான் வணக்கம்” என்ற நூலை பிரசுரித்துள்ளார்.

16 பக்கங்களுடன் 10   14 செ.மீ. புத்தகம் பிரசுரிக்கப்பட்டதாகவும் அதன் ஒவ்வொரு பக்கமும் 24 வரிகளைக் கொண்டதாக இருந்ததாகவும் அதில் பயன்படுத்தப்பட்ட தமிழ் எழுத்துருவானது ஓலைச்சுவடிகள், கற்களில் பயன்படுத்தப் பட்டவையெனவும் தமிழ் வரலாற்றியலாளரான புலவர் எஸ்.ராஜு கூறியதாக “இந்து” பத்திரிகை நேற்று {21.06.2010 }திங்கட்கிழமை குறிப்பிட்டுள்ளது.

பிரான்ஸிஸ் சேவியர் போர்த்துக்கேய மொழியில் எழுதிய “டொக்ரினா கிறிஸ்தம்” என்ற நூலின் மொழி பெயர்ப்பே இந்த நூலாகும். தமிழில் பிரார்த்தனை நூலொன்று இருக்க வேண்டுமென்ற அருட்தந்தை ஹென்றிகுயஸின் முயற்சியின் பெறுபேறாகவே இந்த நூல் பிரசுரிக்கப்பட்டதாக ராஜு கூறுகிறார்.

1556 இல் போர்த்துக்கல்லிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அச்சு இயந்திரத்தைப் பயன்படுத்தி கொல்லத்தில் இந்த நூல் அச்சிடப்பட்டது.இந்திய மொழியில் பிரசுரிக்கப்பட்ட முதலாவது நூல் இதுவென ராஜூ சுட்டிக்காட்டுகிறார். விஜயநகர சாம்ராஜ்யத்தின் மன்னர் முதலாம் ஸ்ரீரங்க ராயர் (15781586)இமைசூர் ஆட்சியாளர் ராஜா உடையார் (15781617), மதுரை ஆட்சியாளர் வீரப்பநாயக்கர் (15721595) தஞ்சாவூர் ஆட்சியாளர் அச்சுதப்ப நாயக்கர் (15721614) ஆகியோரின் காலகட்டத்திலேயே இந்த நூல் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அச்சமயம் தகவல்களை வெளியிடுவதற்கு செப்புத்தகடுகள், கற்களே பயன்படுத்தப்பட்டு வந்தன.

“தம்பிரான் வணக்கம்” நூலுக்கு முன்னர் தமிழ் நூலொன்று பிரசுரிக்கப்பட்டிருந்ததாயினும் அது போர்த்துக்கேய எழுத்துருவிலேயே இருந்தது. கார்த்திலா, லின்கோயா தமிழ், வோர்த்துக்கேயஸ் என்ற அந்த நூலானது போர்த்துக்கல்லின் தலைநகர் லிஸ்பனில் அச்சிடப்பட்டதாக ராஜு கூறுகிறார்.

அருட்தந்தை ஹென்ரிக்குயஸ் போர்த்துக்கல்லின் விப்பாவிகோ சாவில் 1520 இல் பிறந்தவர். போர்த்துக்கல்லிலுள்ள கொய்ம்பிரா பல்கலைக்கழகத்தில் கற்ற பின்னர் 1546 இல் அவர் இந்தியாவுக்கு வருகை தந்தார். தமிழில் மிகவும் பிரியமுடையவரான அவர் மக்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும்போது “ஆமென்” என்பதனை “ஓம்” என்று மாற்றியதாக ராஜு கூறுகிறார்.

“கிறிஸ்ரியானி வணக்கம்” (1579),”கொன்பெசனாரியோ” (1580), “அடியார் வரலாறு”(1586) ஆகிய நூல்களையும் அவர் எழுதியுள்ளார். புன்னைக்கயலில் 1600 பெப்ரவரி 6 இல் அவர் இறந்தார். அவரின் பூதவுடல் தூத்துக்குடியில் அடக்கம் செய்யப்பட்டது.

இதன் பின்னர் நீண்டகாலம் சென்ற பின்பே அதிகளவு நூல்கள் பிரசுரிக்கப்பட்டதாக ராஜு கூறுகிறார். தமிழில் முதலாவதாகப் பிரசுரிக்கப்பட்ட தமிழ் நூல் திருக்குறளாகும். (1812) இதற்கான முயற்சிகளை மேற்கொண்டவர் அச்சமயம் சென்னை கலெக்டராக இருந்த பிரான்சிஸ் வைற் எலிஸ் என்பவராகும். சென்னை கல்விச் சங்கத்தை ஸ்தாபித்தவரும் அவரேயாகும்.

அச்சுக்கூடங்களை ஸ்தாபிக்க இந்தியர்களுக்கு 1835 இலேயே அனுமதி வழங்கப்பட்டது.

மீளக்குடியேறும் மக்களின் வாழ்வாதாரம் மேம்பாடு; பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படும் – முல்லைத்தீவில் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய

gotabaye.jpgமுல்லைத் தீவு மாவட்ட மக்களைத் துரிதமாக மீளக் குடியமர்த்தி, அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதோடு அவர்களின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படும் என்று பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு மக்கள் மத்தியில் சேவையாற்றும் போது அவர்களின் உள்ளத்தையும் நம்பிக்கையையும் வென்றெடுக்கக் கூடிய வகையில் செயற்படுவது ஒவ்வொருவரினதும் பொறுப்பு என்றும் அவர் குறிப்பிட்டார். பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ நேற்று முல்லைத்தீவுக்கு விஜயம் செய்தார். அவர் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் நடை பெற்ற வைபவத்தில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறினார்.

இந்நிகழ்வில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், பயங்கரவாதம் முழுமையாக ஒழிக்கப்பட்டதன் காரணமாக தற்போது நாட்டின் நிலைமையில் பாரிய மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. இதன் காரணத்தினால் இம்மாற்றத்திற்கு ஏற்றவகையில் நாமும் எமது செயற்பாடுகளை அமைத்துக்கொண்டு செயற்பட வேண்டும். மக்களின் தேவைகளைக் கேட்டறிந்து அவர்களது உள்ளங்களை வெற்றிகொள்ளக்கூடிய வகையில் சேவையாற்ற வேண்டும்.

பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்க இடமளிக்க முடியாது. அதற்கு ஏற்றவகையில் நாம் பெற்றிருக்கும் வெற்றியையும் சமாதானத்தயும் நாம் பாதுகாத்து தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும். இதற்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை நாம் மேற்கொண்டிருக்கின்றோம்.

மக்களின் உள்ளங்களையும் நம்பிக்கை யையும் வென்றெடுக்கக் கூடியவகையில் செயற்பட்டுக்கொண்டிருக்கும் எமது படை வீரர்கள் சிறு தவறுவிட்டாலும் அதனை தூக்கிப் பிடிப்பதற்கு சில வெளிநாட்டு அமைப்புக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றன. அதனால் நீங்கள் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

நாம் புலிகளிடமிருந்து மீட்டெடுத்துள்ள பெரும்பாலான ஆயுதங்கள் வெளிநாடுகளில் உற்பத்தி செய்யப்பட்டவையே. அவை கடல் வழியாகவே இங்க கொண்டு வரப்பட்டிருக்கின்றன. எதிர்காலத்தில் இவ்வாறு ஆயுதங்கள் கடல் வழியாக நாட்டுக்குள் வருவதைத் தடுக்கும் பொறுப்பு கடற்படையினரைச் சார்ந்ததே.

மக்களின் உள்ளத்தையும் நம்பிக்கையையும் வெற்றிகொள்ளும் வகையில் செயற்படும்போது புலனாய்வு தகவல்களையும் அம்மக்களிடமிருந்து பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும். இதனைப் பாதுகாப்பு படையினர் கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும்.

புலிகளின் தலைமைத்துவமும் இராணுவ கட்டமைப்பும் பயங்கரவாதமும் முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டன. என்றாலும் ஈழவாதமும் பிரிவினைவாத சிந்தனைகளும் வெளிநாடுகளில் செயற்படுகின்றன. இவற்றின் சிந்தனைகளும் செயற்பாடுகளும் நாட்டுக்குள் வராமல் இருப்பதை தடுப்பதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனடிப்படையில் எமது பாதுகாப்பு கட்டமைப்பு மறு சீரமைக்கப்பட்டு பலப்படுத்தப்படும் என்றார்.

இந்நிகழ்வில் முப்படைகளின் தளபதியும், விமானப்படைத் தளபதியுமான எயார் சீப் மார்ஷல் ரொஷான் குணத்திலக்க, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் திஸ்ஸ சமரசிங்க, பொலிஸ் மாஅதிபர் மகிந்த பாலசூரிய, முல்லைத்தீவு மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா உட்பட பாதுகாப்பு படையதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

“லப்டொப்” பென செங்கட்டி; இலங்கை வர்த்தகரை ஏமாற்றிய சென்னை வியாபாரி

லப்டொப் கணினி வழங்குவதாக 15 ஆயிரம் ரூபாவைப் பெற்றுக்கொண்டு செங்கட்டி வைத்துள்ள பொதியை இலங்கை வர்த்தகருக்கு கொடுத்து ஏமாற்றிய குற்றச்சாட்டுகளுக்காக சென்னை விமான நிலையப் பொலிஸார் மண்ணடியைச் சேர்ந்த வர்த்தகரொருவரை கைது செய்துள்ளனர்.

மொஹமட் ஹசன், மொஹமட் றபீ, மொஹமட் பௌஸி ஆகியோர் கொழும்பைச் சேர்ந்த வர்த்தகர்களாகும்.அவர்கள் புடவை மற்றும் பாதணிகள் வியாபாரத்திற்காக அடிக்கடி சென்னைக்கு வந்து செல்வது வழக்கமாகும். கடந்த வியாழக்கிழமை அவர்கள் சென்னைக்கு வந்திருந்தனர். வெள்ளிக்கிழமை அவர்கள் திரும்பிச் செல்லவிருந்தனர். அவர்கள் மண்ணடியிலுள்ள மொஹமட் ஷாபீர் என்ற வர்த்தகருடன் தொடர்பு கொண்டனர். குறைந்த விலையிலான லப்டொப் கணினிகளை தன்னால் வழங்க முடியுமெனவும் அதனை இலங்கையில் அதிக விலையில் விற்கலாம் என்றும் ஷாபீர் ஹசனுக்கு கூறியுள்ளார். ஹசனிடமிருந்து பின்னர் ஷாபீர் 15 ஆயிரம் ரூபாவைப் பெற்றுள்ளார். ஹசன் சென்னை விமான நிலையத்திற்கு வந்தபோது அவருடைய பொதி சோதனையிடப்பட்டது. அதற்குள் சந்தேகமான பொருள் இருந்தது அவதானிக்கப்பட்டது.

சோதனையில் கணினிப்பை பொதிக்குள் வெறும் செங்கட்டியொன்று இருந்துள்ளது. தான் செங்கட்டியைக் கொண்டு செல்வது குறித்து ஹசன் அறிந்திருக்கவில்லையென்று பொலிஸார் இந்து பத்திரிகை நிருபருக்குக் கூறியுள்ளனர். பொதிக்குள் இருந்தது லப்டொப் என அவர் கருதியிருந்தார். கடந்த இரு நாட்களாக விசாரணை இடம்பெற்றபோது மண்ணடி வியாபாரி இலங்கை வர்த்தகரை ஏமாற்றியமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஷாபீர் சனிக்கிழமை இரவு கைதுசெய்யப்பட்டுள்ளார்.3 இலங்கை வர்த்தகர்களும் விடுவிக்கப்பட்டு வீடு செல்ல அனுமதி வழங்கப்படவுள்ளனர்.

ஷாபீர் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் எனவும் பாடசாலையை விட்டு விலகிய பின் இலங்கையில் பல வருடம் இருந்து விட்டு பின்னர் சென்னையிலுள்ள மண்ணடிக்கு வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன், அவருக்கு பல மொழிகள் தெரியும் எனவும் பொலிஸார் கூறினர்.

பிரெட்றிக்காவின் LapTop நீதிமன்ற பாதுகாப்பில்.

pratrika.jpgஜெனரல் சரத் பொன்சேகா வழங்கிய பேட்டி பற்றிய குறிப்புகள் உள்ளடக்கிய குறிப்பேட்டை ‘சண்டே லீடர்’ பத்திரிகையின் பிரதம ஆசிரியர் பிரெட்ரிகா ஜான்ஸ் நேற்று நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

கொழும்பு பிரதான மாஜிஸ்திரேட் சம்பா ராஜரட்னவின் உத்தரவின் பேரில் பிரெட்ரிகா ஜான்ஸ் நேற்று நீதிமன்றத்துக்கு சமுகமளித்திருந்தார். சம்பந்தப்பட்ட குறிப்பேட்டை நீதிமன்றத்தின் பாதுகாப்பில் வைத்துக் கொள்ளுமாறு உத்தரவிட்ட நீதவான் பிரதம ஆசிரியர் வெளியேறுவதற்கு அனுமதி வழங்கினார்.

சம்பந்தப்பட்ட விடயம் தொடர்பாக பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ஷவிடம் இருந்து ரகசிய பொலிஸார் அறிக்கையொன்றை பெற்றுக் கொண்டுள்ளதாக பிரதி சட்டமாஅதிபர் வசந்த நவரட்ன நீதிமன்றத்துக்கு கூறினார்.

‘சண்டே லீடர்’ பத்திரிகைக்கு வழங்கப்பட்டதாக கூறப்படும் ஜென ரல் பொன்சேகாவின் நேர்காணல் தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அந்த சமயத்திலேயே பிரதி சட்டமா அதிபர் மேற்கூறியவாறு தெரிவித்தார். ‘சண்டே லீடர்’ பத்திரிகையின் ஆசிரியர் சார்பாக வாதாடிய சட்டத்தரணி என். எம். சஹீட் குறிப்பேட்டை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். சம்பந்தப்பட்ட நேர்காணல் உள்ளடக்கிய குறிப்பேடு மூல ஆவணம் என்பதால் அதனை நீதிமன்றத்தின் பாதுகாப்பில் வைக்குமாறு அவர் கூறினார்.

நேர்காணல் இடம்பெற்ற குறிப்பேடு தொடராக இலக்கமிடப்படவில்லை என்று பிரதி சட்டமா அதிபர் கூறியதையடுத்து குறிப்பேட்டில் தொடர்ச்சியாக இலக்கமிடுமாறு நீதவான் உத்தரவிட்டார். ஜெனரல் பொன்சேகாவின் சார்பாக வாதாடிய சட்டத்தரணி நளின் லத்துவ ஹெட்டி குறிப்பேடு மீது நம்பிக்கை இல்லையென்று கூறினார்.

சண்டே லீடர் பத்திரிகையின் செயற்பாடுகள் அவ்வாறான நிலையை தோற்றுவித்துள்ளதாகவும் அப்பத்திரிகை பல்வேறு அரசியல் கட்சிகளிடம் இருந்து பணம் பெற்றுக் கொண்டு சர்ச்சைக்குரிய செய் திகளை பிரசுரிப்பதாகவும், இவ்வாறான ஒரு அறிக்கையை அப்பத்திரிகை வெளியீட்டின் நோக்கம் என்ன என்பதை தனக்கு விளங்கிக் கொள்ள முடியாமல் இருப்பதாகவும் அவர் கூறினார்.

நேர்காணல் இடம்பெற்ற பக்கங்களுக்கு இடையே குறிப்பேட்டில் சில காலி பக்கங்களை காண முடிவதாகவும், பத்திரிகைக்கு வெளியாரிடம் இருந்து பணம் கிடைக்கும் போது ஏதேனும் தேவையானளவு நிறைப்பதற்கு அவை காலியாக விடப்பட்டுள்ளனவா என்று அவர் கேள்வி எழுப்பினார்.

அவ்வாறான காலிப் பக்கங்கள் குறிப்பேட்டில் உள்ள விடயத்தை நீதிமன்றம் கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். மேலதிக விசாரணையை எதிர்வரும் ஜுலை 12ம் திகதிக்கு ஒத்திவைத்த நீதவான் ஜெனரல் பொன்சேகாவை தொடர்ந்து இராணுவ பாதுகாப்பில் வைக்குமாறும் உத்தரவிட்டார்.

மீள்க்குடியேற்றப்பட்ட குடும்பங்களில் இருந்து காவற்துறைக்கு ஆட்சேர்ப்பு

வடக்கில் மீள்க்குடியேற்றப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 300 இளைஞர் யுவதிகளை காவற்துறை பணிக்கு இணைத்து கொள்வது குறித்து பாதுகாப்பு அதிகாரிகள் கவனம் செலுத்தி வருகின்றனர். கிளிநொச்சி, முல்லைதீவு, மன்னார் மாவட்டங்களில் மீள்க்குடியேற்றப்பட்ட குடும்பங்களில் உள்ள தகுதியான இளைஞர், யுவதிகள் இதற்காக தெரிவு செய்யப்படவுள்ளனர்.

தமிழ்ச்செம்மொழி மாநாடு நாளை கோவையில் ஆரம்பம் – மாநாட்டில் மலையக காமன் கூத்து

semmoli.jpgஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நாளை கோயம்புத்தூரில் (கோவையில்) கோலாகலமாக ஆரம்பமாகிறது. நாளை ஆரம்பமாகும் மாநாடு எதிர்வரும் 27ம் திகதி வரை நடைபெறவுள்ளது. நாளைய தினம் காலை 10.30 மணிக்கு ஜனாதிபதி பிரதீபா பட்டீல் செம்மொழி மாநாட்டைத் தொடக்கி வைக்கிறார்.

முதலமைச்சர் மு. கருணாநிதி தலைமையில் நடைபெறும் இம்மாநாட்டிற்கு உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து தமிழ் அறிஞர்கள் கலந்து கொள்கின்றனர். 49 நாடுகளைச் சேர்ந்த 536 தமிழறிஞர்கள் பங்குபற்றுகின்றனர். இந்தியாவிலிருந்து 5000 அறிஞர்கள் பங்குபெறுகின்றனர். தமிழ் மொழிக்குச் சிறப்புகள் சேர்க்கும் வகையில் தமிழ்ச் சமுதாயம் உலக அரங்கில் உன்னத நிலை பெற வேண்டும். இந்த மண்ணில் பிறக்கும் எல்லா உயிர்களுக்கும் சமதர்மம் கிடைக்க திருவள்ளுவர் சொன்ன மணிமொழியாம் தமிழ்மொழி வழிவகை செய்ய வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, செம்மொழி என்ற சிறப்பைச் சங்க இலக்கியங்கள் மூலம் தமிழ் அடைந்திருந்தாலும், அதற்கு முறையான ஒப்புதல் 2004 ஆம் ஆண்டில்தான் கிடைக்கப் பெற்றது. இந்தப் பெருமையைக் கொண்டாடும் வகையிலேயே உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்தப்படுகிறது. இந்த மாநாட்டிற்கு உலகெங்கிலுமிருந்து தமிழறிஞர்கள் பலர் வருகை தரவுள்ளனர் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்த்துறைத் தலைவராக விளங்கும் பேராசிரியர் முனைவர் ஜார்ஜ் ஹார்ட் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளார் எனவும் அவர் கூறினார்.

செம்மொழி மாநாட்டில் மலையக காமன் கூத்து

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் மலையக பாரம்பரிய கலையான காமன் கூத்து அரங்கேற உள்ளது. எதிர்வரும் 24ம் திகதி கலாசார நிகழ்வின் போது காமன்கூத்து அரங்கேறவுள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை இலங்கை குழுவில் இடம்பெற்றுள்ள ஹட்டன் தமிழ்ச் சங்கத் தலைவரும், கவிஞருமான சு. முரளிதரன் மேற்கொண் டுள்ளார். இலங்கை குழுவின் தலைவரான பேராசிரியர் கா. சிவதம்பியின் வேண்டுகோளின்படி முரளிதரன் இதனை ஏற்பாடு செய்துள்ளார்.

மலையக மக்கள் கலை அரங்க ஏற்பாட்டில் 14 கலைஞர்கள் இடம்பெறுகின்றனர். மலையகத்தைச் சேர்ந்த நாடக கலைஞர் இரா. பிரான்ஸிஸ், ஹெலன் நெறியாள்கையில் என் சாம்பசிவன் மூர்த்தி, எஸ். சிறிவேதா, பி. விஜயகோபால், எஸ். பிரேமகுமார், எம். தியாகராஜா, வி. இராமர், எஸ். போல் பெரேரோ, வசந்தி ஹெலன், கிறிஸ்டிலா இராமர், பி. டலாதேவி உட்பட 14 பேர் குழுவில் செல்கின்றனர்.

செட்டிக்குளத்தில் சட்டவிரோத மின்சாரம் பெற்ற 155 பேர் கைது

வவுனியா செட்டிகுளம் பொலிஸ் பிரிவிலுள்ள பல கிராமங்களில் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்று வந்த 155 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  வவுனியா மாவட்ட பதில் நீதிவான் எம்.சிற்றம்பலம் முன்னிலையில் நேற்று {20.06.2010) ஆஜர்ப்படுத்தப்பட்ட இவர்களுக்கு, சரீரப் பிணையில் செல்வதற்கான அனுமதியளிக்கப்பட்டிருந்தது.

புலி உறுப்பினர்கள் மூவர் தமிழகத்தில் கைது

தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் தமிழகத்தில் மூன்று பேர் கியூவ் பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சிவா, தமிழ் மற்றும் செல்வம் ஆகிய மூன்று பேருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

வடக்கில் இடம்பெயர்ந்தோருக்கு அத்தியாவசிய பொருட்களை மேலும் 6 மாதங்கள் வழங்க உலக உணவுத் திட்டம் இணக்கம்

உலக உணவுத் திட்டமானது வடக்கில் இடம்பெயர்ந்த மற்றும் மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்களுக்கு மேலும் ஆறு மாதங்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட் களை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது.

உலக உணவுத் திட்ட நிறுவனத் திடம் விடுக்கப்பட்ட வேண்டு கோளுக்கிணங்க இவ்விணக்கப் பாட்டினை அந்நிறுவனம் அறிவித்துள்ளதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ் தெரிவித்தார். இது பற்றி அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இடம்பெயர்ந்த மக்களுக்கு கடந்த ஆறுமாத காலங்களுக்கான அத்தியாவசிய உணவுப் பொருட்களை உலக உணவுத் திட்டம் வழங்கி வந்துள்ளதுடன் அப்பொருட்கள் மக்களுக்குப் பகிர்ந்த ளிக்கப்பட்டு வந்துள்ளன.

கடந்த மாதத்துடன் ஆறு மாதகால ஒப்பந்தம் நிறைவடைவதுடன் அவ்வுதவியினை மேலும் ஆறுமாத காலத்திற்கு நீடிக்குமாறு நாம் வேண்டுகோள் விடுத்திருந்தோம். அதற்கிணங்க மேலும் ஆறு மாத காலத்திற்கு உணவுப் பொருட்களை வழங்க அந்நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் மிக முன்னேற்றகரமான நகராக யாழ்ப்பாணம் மாற்றப்படும்

இலங்கையில் மிகவும் முன்னேற்றகரமான நகராக யாழ். நகரை மாற்றுவதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சர் சம்பிக ரணவக்க கூறினார். யாழ். மாவட்டத்திற்கு நேற்று விஜயம் மேற்கொண்ட அவர், யாழ். பல்கலைக்கழகத்திற்கு மூன்று மில்லியன் ரூபா பெறுமதியான பெருமளவு இலக்கிய நூல்களை அன்பளிப்புச் செய்தார். இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது:

சிறந்த சமூகமொன்றை கட்டியெழுப்புவதற்கு சமூகத்தின் மனித வளங்களை மட்டுமன்றி பெளதீக வளங்களையும் மேம்படுத்த வேண்டும். பல வருடங்கள் நீடித்த யுத்தத்திற்கும் இனவாதத்திற்கும் முற்றுப்புள்ளிவைத்து நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு அடித்தளமிடப்பட்டுள்ளது. அபிவிருத்தியை மேலும் வேகப்படுத்துவதற்கு மனித வள முகாமைத்துவம் மிகவும் முக்கியமாகும்.

பல வருடங்களாக பயங்கரவாதத்தின் பிடியில் சிக்கியிருந்த யாழ். மாவட்டம் இன்று சுதந்திர பூமியாக மாறியுள்ளது. எதிர்வரும் காலங்களில் யாழ். மாவட்டம் நாட்டில் முன்னேறிய நகரமாக முன்னேற் றப்படும். இன, மத அடித்தளத்தில் இருந்து ஒதுங்கி செயற்படுவதன் மூலமே நாட்டை முன்னேற்ற முடியும்.

வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் கல்வி நிலையை மேம்படுத்த கூடுதல் கவனம் செலுத்தப்படும். சிங்கள மற்றும் தமிழ் கலாசார பெறுமானங்களை மதித்து நாட்டை அபிவிருத்திப் பாதையில் முன்னேற்ற சகலரும் தமது ஒத்துழைப்பை நல்க வேண்டும் என்றார். அமைச்சர், சுண்ணாகம் மின் உற்பத்தி நிலையம், யாழ் மின்சார சபை என்பவற்றிற்கும் விஜயம் செய்தார். இந்த நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்ரகுமார், ஹெல உருமய தலைவர் ஓமல்பே சோபித தேரர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.