June

June

‘புறக்கோட்டைக் குண்டு வெடிப்பிற்கும் புலிகளுக்கும் தொடர்பில்லை.’ பொலிஸ் பேச்சாளர்

கொழும்பு புறக்கோட்டையில் நேற்று (June 24 2010) இடம்பெற்ற கைக்குண்டுத் தாக்குதலில் விடுதலைப் புலிகளுக்குத் தொடர்பில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவத்துள்ளார். கடந்த வருடம் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் அவர்களால் எந்தவொரு தாக்குதல்களும் மேற்கொள்ளப்பட வில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

புறக்கோட்டை போதிராஜ மாவத்தையில்  நேற்று அதிகாலை நடைபெற்ற கைக்கண்டுத் தாக்குதலினால் ஐந்து படையினர் உட்பட ஒன்பது பேர் காயமடைந்தனர். இக்கைக்குண்டு வெடிப்பிற்கு எவரும் காரணமா அல்லது தற்செயல் விபத்தா என்பது குறித்து பொலிசார் ஆராய்ந்து வருகின்றனர். நேற்று மாலை வரை இது தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

‘போர்குற்ற விசாரணைகளில் அரசாங்கத்தின் சாட்சியாக கே.பி!’ கெஹலிய ரம்புக்வெல

minis-kahali.jpgபோர் குற்ற விசாரணைகளின் போது அரசாங்கத்தின் சாட்சியாளராக கே.பி பயன்படுத்தப்படுவாராம்

சர்வதேச அமைப்புக்களாலும் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களினாலும் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக சுமத்தப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பாக அரசாங்கத்தின் சாட்சியாளராக கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன் பயன்படுத்தப்படுவார் என அமைச்சரவைப் பேச்சாளரும், ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவத்துள்ளார்.

அரசாங்கத்தின் பொறுப்பில் தற்போது இருக்கும் கே.பி கடந்தவாரம் வவுனியாவிலுள்ள இடம்பெயர்ந்தோர் நிவாரண முகாம்களுக்குச் சென்றதாகவும், இடம்பெயர்ந்த மக்களையும், விடுதலைப் புலிகள் சந்தேக நபர்களையும் அவர் சந்தித்ததாகவும், அவர் வடமாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்படவுள்ளதாக வெளிவந்துள்ள செய்திகள் குறித்தும், கே.பி தொடர்பாக அரசாங்கம் எதிர்காலத்தில் என்ன நடவடிக்கை எடுக்கவுள்ளது என்பது தொடர்பாகவும் செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கே.பி தொடர்பாக தீர்மானங்களை எடுக்கும் உரிமை இலங்கைக்குண்டு, அவர் தொடர்பாக சர்வதேசத்தில் காணப்படும் பிரச்சினைகளையே முதலில் தீர்த்துக்கொள்ள வேண்டியுள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

Related News:

வடமாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக கே.பி?

புலம்பெயர்ந்த புலித் தலைவர்கள் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு – கே.பி. உட்பட 9 பேர் கொழும்பில் பேச்சுவார்த்தை

கே.பி.க்கு மன்னிப்பு வழங்குவதென அரசு தீர்மானித்தால் ஆச்சரியப்படமாட்டேன் அமைச்சர் கெஹலிய

தோட்டங்களில் வேலைக்கமர்த்தப்படும் பெண்கள் கர்ப்பம் தரித்துள்ளனரா என சோதிக்கப்படுகிறார்கள்!

மலையகத் தோட்டப் பகுதிகளில் உள்ள இளம் பெண்கள் தோட்டத் தொழிற்துறையில் வேலைக்கமர்த்துவதற்கு முன்னதாக  அவர்கள் காப்பம் தரித்துள்ளனரா என ஆராயும் மருத்துவ சேதனைகள் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இதனைக் கண்டித்து தற்போது இலங்கை மனிதஉரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தலைவரும், மத்திய மாகாணசபை உறுப்பினருமான முரளி ரகுநாதன் இம்முறைப்பாட்டைச் செய்துள்ளார். தோட்டத் தொழிற்துறையில் இளம் பெண்களை வேலைக்கு அமர்த்தும் போது அவர்கள் காப்பம் தரித்துள்ளனரா என ஆராயும் நடவடிக்கைகள் பெண்கள் மத்தியில் பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

காப்பம் தரித்த பெண்களை வேலைக்கமர்த்துவதால். பிரசவத்தின் போது பல கொடுப்பனவுகளை வழங்க வேண்டி வரும் என்பதற்காகவே தோட்ட நிர்வாகம் பெண்களிடம் இவ்வாறான மருத்துவ சோதனைகளை நடத்தவதாக தெரியவருகின்றது.

முப்பது வருடங்களின் பின் யாழ்ப்பாணத்தில் பொஸன் அலங்காரப் பந்தல்!

பொஸன் நோன்மதி தினத்தை முன்னிட்டு யாழ். நாகவிகாரையில்  மாபெரும் பொஸன் அலங்காரப் பந்தல் நாளை (June 25 2010) முதல் காட்சிப்படுத்தப்படவுள்ளது. யுத்தம் காரணமாக 30 வருடங்களின் பின்னர் பொஸன் அலங்காரப் பந்தல் காட்சிப் படுத்தப்படவிருப்பதாக படைத்தரப்பு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொடூர யுத்தம் காரணமாக முப்பது வருடங்களின் பின் முதல் முறையாக யாழ்.பிரதேசத்தில் மக்கள் கண்டு களிப்பதற்காக யாழ்ப்பாண நாகவிகாரையின் விகாராதிபதி, உத்தரலங்கா பிரதான சங்க நாயக்கர் ஞானரத்தின தேரரின் உபதேசத்திற்கமைய யாழ்.பாதுகாப்புப் படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க உட்பட இராணுவ விரர்கள், பொலிஸார் ஆகியயோரின் ஏற்பாட்டில் நாளை (25-06-2010)  மாலை 6.30 மணிக்கு மாபெரும் பொஸன் அலங்காரப் பந்தல் காட்சிப்படுத்தப்படும். இதன்மூலம் விருது ஜாதகக் கதை பற்றிய விளக்கமளிக்கப்படும். தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு இந்த அலங்காரப் பந்தல் மக்களுக்கு காட்சிப்படுத்தப்படும்.

இவ்வாறு அச்செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெயர்ந்துள்ள 433 பேர் இன்னமும் மீள்குடியமர்த்தப்படவில்லை.

மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்களில் இன்னும் 93 குடும்பங்களைச் சேர்ந்த 433 பேர் மீள்குடியமர்த்தப்படமலுள்ளதாக மட்டக்களப்பு மாவட்டச் செயலக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.  தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் சகல இடம்பெயர்ந்தோர் முகாம்களும் மூடப்பட்ட நிலையில், இவர்கள் அங்குள்ள நண்பர்கள் உறவினர் வீடுகளில் வசித்து வருகின்றனர்.

இதில் கிரான் பிரதேச செயலர் பிரிவில் 37 குடும்பங்களைச் சேர்ந்த 212 பேரும். செங்கலடிப் பிரிவில் 56 குடும்பங்களைச் சேர்ந்த 221 பெருமே நண்பர்கள் உறவினர் வீடுகளில் இன்னமும் தங்கியுள்ளனர்.

இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் கருத்து தெரிவிக்கையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் நிறைவடைந்து விட்டதாக அரசாங்கம் அறிவித்திருந்தது. ஆனால், 93 குடும்பங்கள் இன்னமும் மீள் குடியேற்றப்படாமலுள்ளன. கிழக்கிலும் வடக்கிலும் மக்களின் மிள்குடியேற்றம் இன்னும் பூரணப்படுத்தப்படவில்லை. எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா.ஆலோசனை குழு நியமனத்துக்கு இலங்கை கண்டனம்

uno.jpgஇலங்கையின் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவங்கள் தொடர்பாக ஆலோசனை வழங்குவதற்காக ஐ.நா. செயலாளர் நாயகத்தினால் நிபுணர்கள் குழு நியமிக்கப்பட்டதை இலங்கை அரசாங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது.

இது தொடர்பாக வெளியுறவு அலுவல்கள் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டமை இறைமையுள்ள ஒரு நாட்டின் விடயத்தில் தேவையற்றதும் கேட்டுக்கொள்ளப்படாததுமான தலையீடு என்று கூறப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

30 வருடங்களுக்கு மேலாக இலங்கை பயங்கரவாதத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் புலிகள் இயக்க பயங்கரவாதிகளினால் நினைத்துப் பார்க்க முடியாத அளவு வன்முறைகளும் கொடூரமும் கட்டவிழ்த்து விடப்பட்டன. உலகின் மிகவும் கொடூரமான பயங்கரவாத அமைப்பாக அது விளங்கியது.

நீண்ட கால மற்றும் சிரமமான போராட்டத்தின் பின் புலிப் பயங்கரவாதத்தை தோற்கடித்து அரசாங்கம் நாட்டை மீட்டெடுத்தது. தற்போது நாட்டையும் மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் கட்டியெழுப்பும் நடைமுறை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ‘நடந்த சம்பவங்களில் இருந்து பாடம் படிக்கும் நல்லிணக்க ஆணைக்குழு’ ஒன்றை விசாரணை சட்ட விதிகளின் கீழ் நியமித்துள்ளார். இலங்கை சட்டத்தின் கீழ் அமைக்கப்படக் கூடிய ஆகக் கூடிய நியதிச் சட்ட ஆணைக்குழுவாக இது அமைகிறது. இந்த ஆணைக்குழுவானது தேசிய ஒற்றுமைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என்று இலங்கை அரசாங்கம் நம்புகிறது.

இலங்கை மனித உரிமைகளை தொடர்ந்து ஊக்குவித்தும், பாதுகாத்தும் வந்துள்ளது. இதனை ஐ.நா. போன்ற முறையான அமைப்புகளினால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதை இங்கு குறிப்பிடவேண்டும். இந்நிலையில் இலங்கையில் இடம்பெற்ற சம்பவங்கள் பற்றி ஆராய நிபுணர் குழு அமைக்க ப்பட்டமை இறைமையுள்ள ஒரு நாட்டின் விடயத்தில் தேவையற்றதும் கேட்டுக்கொள்ளப்படாததுமான தலையீடாகும்.

அத்துடன் இலங்கையில் இடம்பெறும் நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணை க்கு எதிரான தரப்பினர் இதன்மூலம் முறையற்ற வகையில் பயனடையவும் இதனால் வாய்ப்பு ஏற்படக் கூடும்.

கடந்த வருடம் மே மாதம் 23 ஆம் திகதி ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தபோது அந்த விஜயத்தின் இறுதியில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில்; இலங்கை அரசாங்கத்துக்கும் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற இராணுவ செயற்பாடுகளின்போது பாரிய அளவிலான சர்வதேச மனித உரிமை மீறல் குற்றங்கள் இழைக்கப்பட்டதாக எந்த குறிப்பும் இடம்பெறவில்லை என்பதையும் இலங்கை அரசாங்கம் இங்கு சுட்டிக்காட்டவிரும்புகிறது என்று வெளியுறவு அலுவல்கள் அமைச்சின் அறிக்கை கூறுகிறது.

இதேவேளை மேற்படி நிபுணர் குழு அமைக்கப்பட்டமை தேவையற்றது என ஊடக மற்றும் தகவல்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இலங்கை பலமான அரசியலமைப்புடன் கூடிய இறைமையுள்ள நாடாகும். அரசியலமைப்புப்படி நிறைவேற்று அதிகாரமும், மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்றத்தின் அதிகாரமும் கொண்ட ஜனநாயக நடைமுறை எமக்கு உள்ளது. அத்துடன் துடிப்புடன் இயங்கும் நீதித்துறையும் உள்ளது. நாட்டின் இறைமை மக்களில் தங்கியுள்ளதுடன் அவர்களது உரிமைகள் அரசியலமைப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளன என்று அமைச்சர் ரம்புக்வெல்ல கூறுகிறார்.

மோதல் தொடர்பான அனைத்து விடயங்களையும் ஆராயும் அதி காரத்துடன் கூடிய நல்லிணக்க ஆணைக்குழுவொன்றை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்கனவே நியமித்துள்ளார். இந்நிலையில் அதற்கு சமாந்தரமாக ஒரு விசார ணையை ஐக்கிய நாடுகள் அமைப்பு நடத்த முற்படுவதானது இலங்கை அதன் தேசிய நல்லிணக்கத்தையும் நிரந்தர சமாதானத்தையும் ஏற் படுத்தும் முயற்சியின் ஒரு பகுதி யாக ஆரம்பித்துள்ள நடைமுறையை முன்கூட்டியே தீர்மானிக்கும் வகை யிலானதும் குறைத்து மதிப்பிடும் வகையிலானதுமாகும்.

அங்கத்துவ நாடொன்றின் விருப் பத்தை கவனத்திற்கொள்ளாது ஐக் கிய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகம் மூவர் கொண்ட நிபுணர் குழுவை நியமித்துள்ளார். தேவையான நடவடிக்கைகளை இலங்கை மேற்கொள்ள இது வழி வகுத்துள்ளது என்று அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறி யுள்ளதாக அரச தகவல் திணைக்கள அறிக்கையில் மேலும் கூறப் பட்டுள்ளது.

புறக்கோட்டையில் இன்று அதிகாலை கிரனைட் தாக்குதல்

கொழும்பு, புறக்கோட்டை போதிராஜ மாவத்தையில் இன்று அதிகாலை இடம்பெற்ற கிரனைட் தாக்குதலில் ஒன்பது பேர் சிறுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாகப் பொலிஸ் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர். காயம் அடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

தென் கிழக்கு பல்கலைக்கழக பீடாதிபதியாக கலாநிதி சபீனா இம்தியாஸ் நியமனம்

safeena_dean.gifதென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீட பீடாதிபதியாக கலாநிதி சபீனா இம்தியாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அம்பாறை மாவட்டத்தில் கலாநிதி பட்டம் பெற்ற முதல் முஸ்லிம் பெண்மணி மற்றும் முதல் முஸ்லிம் பெண் பீடாதிபதி என்ற பெருமை இவரையேசாரும்.

கலாநிதி சபீனா இம்தியாஸ் பீடாதிபதியாக நியமிக்கப்பட முன்னர் தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முக்கிய பல பதவிகளில் பணியாற்றியுள்ளார். கல்முனையை பிறப்பிடமாக கொண்ட சபீனா இம்தியாஸ், கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மற்றும் பேராதனை பல்கலைக்கழம் என்பவற்றின் பழைய மாணவி என்பதும் குறிப்பிடத்தக்கது

கடலுக்குள் புதிய நகரம்: 450 ஏக்கரில் நிர்மாணம்

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் கடலை நிரப்பி 450 ஏக்கரில் புதிய நகரமொன்றை நிர்மாணிக்கும் பணிகள் இந்த வருட இறுதிக்குள் ஆரம்பிக்க உள்ளதாக துறைமுக அதிகார சபைத் தலைவர் பிரியந்த விக்ரம கூறினார். துறைமுக அதிகார சபையில் நேற்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர், மேலும் கூறியதாவது;

கொழும்பு துறைமுகப் பகுதியில் 285 ஹெக்டயர் அளவு நிரப்பி விரிவுபடுத்தப்படுகிறது. இதனுடன் இணைந்ததாக கொழும்பு துறைமுகத்தில் இருந்து காலிமுகத்திடல் வரையான 450 ஏக்கர் பகுதி நிரப்பப்பட்டு புதிய நகரமொன்று உருவாக்கப்படும். கடலை நிரப்பி ஆரம்பக் கட்ட பணிகளை துறைமுக அதிகார சபை மேற்கொள்ளும்.

இதற்காக 350 மில்லியன் டொலர் செலவிடப்பட உள்ளது. திட்டமிட்ட முறையில் புதிய நகரம் நிர்மாணிக்கப்படும். இதன் மூலமாக கொழும்பு நகரின் நெரிசல் குறைவடையும். இது தவிர தெஹிவளையில் இருந்து கொள்ளுபிட்டிவரை கடலோரமாக நிர்மாணிக்கப்பட்டு வரும் பாதையை காலிமுகத்திடல் வரை நீடிக்குமாறு ஜனாதிபதி பணித்துள்ளார். இதன்படி காலி முகத்திடலில் இருந்து கொள்ளுபிட்டி வரையான கரையோரமும் நிரப்பப்படும்.

பாணின் விலை 4 ரூபாவினால் அதிகரிப்பு

பாணின் விலை நேற்று நள்ளிரவு முதல் 4 ரூபாவினால் அதிகரிக்கப்படுவதாக பேக்கரி உரிமையாளர் சங்கம் நேற்று தெரிவித்தது.

மேற்படி சங்கத்தின் நிறைவேற்றுக் குழு நேற்று கூடியபோதே இந்த தீர்மானத்தை எடுத்ததாக சங்கத்தின் செயலாளர் நிமல் பெரேரா தெரிவித்தார்.

கோதுமையின் இறக்குமதி தீர்வை, மீண்டும் அமுல்படுத்தப் பட்டுள்ளதையடுத்து மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள தாலேயே பாணின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பாணின் விலை அதிகரிக்கப்பட்ட தைப் போன்றே கோதுமை மாவினால் தயாரிக்கப்படும் ஏனைய உணவு வகைகளின் விலையும் அதிகரிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்