25

25

எரித்திரியாவை தடை செய்யுமாறு ஐ.நாவிடம் கோரிக்கை

somaliaauforce.jpg எரித்திரியா மீது ஐ.நா. பாதுகாப்பு சபை தண்டனைத் தடைகளை விதிக்க வேண்டும் என்று ஆப்பிரிக்க ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. தனது உறுப்பு நாடுகளில் ஒன்றுக்கு எதிராக ஆப்பிரிக்க ஒன்றியம் இப்படி ஒரு நடவடிக்கையை எடுத்திருப்பது இதுவே முதல் முறை.

சோமாலியாவின் இஸ்லாமியவாத கிளர்ச்சிக்காரர்களுக்கு எரித்ரியா ஆயுதங்கள் வழங்கிவருவதாக ஆப்பிரிக்க ஒன்றியம் குற்றம்சாட்டியுள்ளது. சோமாலியாவில் இடைகால அரசாங்கத்திற்கு ஆதரவாக ஆப்பிரிக்க ஒன்றியம் நான்காயிரம் துருப்பினரை பணியமர்த்தியுள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது.

தன் மீதான குற்றச்சாட்டுகளை எரித்ரியா மறுத்துள்ளது. ஆப்பிரிக்க ஒன்றியம் ”திறனற்ற மற்றும் வலிமையற்ற ஓர் அமைப்பு” என்று கூறி அதனைப் புறக்கணித்துள்ள எரித்ரிய தகவல் தொடர்பு அமைச்சர் அலி அப்து, எரித்ரியா அவ்வமைப்பிலிருந்து தனது உறுப்புரிமையை இடைநிறுத்திக்கொண்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

சோனியாவுக்கு விசேஷ கைத்தறி சேலை; மம்தா பானர்ஜி வழங்கினார்

mamta-banerjee.jpg டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அண்மையில், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி சந்தித்துப் பேசினார். அப்போது, அவருக்கு மேற்கு வங்காளத்தின் பிரசித்தி பெற்ற டோனேகாலி கைத்தறி சேலை ஒன்றை பரிசாக வழங்கினார்.

வெளிறிய நிறம் கொண்ட இந்த கைத்தறி சேலையை பாராளுமன்றத்தில் எம்.பி.க்கள் பதவியேற்பு உறுதிமொழி எடுக்கும் நாளன்று அணிந்து கொண்டு வருமாறும் சோனியாவிடம் அப்போது மம்தா பானர்ஜி கேட்டுக் கொண்டார்.

பாராளுமன்றத்துக்கு இந்த கைத்தறி சேலையை சோனியா அணிந்து வந்தால் டோனேகாலி ரக சேலைகள் மேற்கு வங்கத்தில் மட்டுமின்றி நாட்டின் பிறபகுதி பெண்களையும் ஈர்க்கும். இதன் மூலம் நலிவடைந்துள்ள மேற்கு வங்க கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கையில் மீண்டும் மலர்ச்சி ஏற்படும் என்று திரிணாமுல் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

புலிகளின் தலைவர் வே பிரபாகரனின் வீரமரணச் செய்தியை அடுத்து புலிகளுக்குள் பிளவு! : த ஜெயபாலன்

LTTE LOGOPirabakaran_Vபுலிகளின் தலைவர் வே பிரபாகரன் உயிரிழந்து அவருடைய உயிரிழப்பு உறுதிப்படுத்துவதற்கு முன்னரேயே புலிகள் அமைப்பிற்குள் பெரும் பிளவு உருவாகி உள்ளது. மே 18ல் புலிகளின் தலைவர் கொல்லப்பட்டதை புலிகளின் சர்வதேச இணைப்பாளர் செல்வராஜா பத்மநாதன் என்று அறியப்பட்ட கே பி மறுத்திருந்தார். ஆனால் நேற்று மே 24ல் அவர் வெளியிட்ட அறிக்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச இணைப்பாளர் கே பி புலிகளின் தலைவர் முக்கிய தளபதிகள் வே பிரபாகரனின் குடும்பத்தினர் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தி உள்ளார். அதனைத் தொடர்ந்து ஏற்கனவே புகைந்து கொண்டிருந்த விடயம் வெட்டவெளிச்சமாகி உள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் உயிரிழந்ததை உறுதிப்படுத்தியுள்ள கே பி ஏனைய அமைப்புக்களுடன் இணைந்து ஆயுதப் போராட்டம் தவிர்ந்த வழிகளில் தமிழ் மக்களுக்கான உரிமைப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் எனத் தெரிவித்து இருந்தார்.

இதற்கிடையே கே பி உடைய அறிக்கையை மறுத்து அவரைத் தேசத் துரோகி எனச் சித்தரித்து புலிகளின் மற்றுமொரு அணி தமிழகத் தலைவர்கள் வைக்கோ நெடுமாறன் ஆகியோருடாக ‘தேசியத் தலைவர் உயிருடன் இருக்கிறார் என்பதில் எள்ளவும் சந்தேகம் இல்லை’ எனத் தெரிவித்து அறிக்கைகள் வெளியிடப்பட்டு உள்ளது.

இந்த புலிகளின் குழுக்களிடையே ஏற்பட்டுள்ள இந்த மோதல் தலைமைப்பீடத்தை கைப்பற்றுவதற்கான போட்டியாக அவதானிக்கப்படுகிறது. விடுதலைப் புலிகளின் உயர்மட்டம் முழுமையாக அழிக்கப்பட்ட நிலையில், இந்த அழிவில் இருந்து மட்டு அம்பாறை மாவட்ட புலனாய்வுத் தளபதி ராம் மற்றுமொரு தளபதி நகுலன் ஆகியோரும் சில நூற்றுக்கணக்கான போராளிகளுமே எஞ்சியுள்ளனர்.

இதற்கிடையே புலிகளின் சர்வதேச புலனாய்வுப் பொறுப்பாளர் அறிவழகன் மே 22ல் தமிழ் நெற்றிற்கு அறிக்கை ஒன்றை வழங்கி இருந்தார். அதில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் உயிருடன் நலமாக இருப்பதாகவும் அவர் இறந்தது என்பது திட்டமிட்டு தயாரிக்கப்பட்ட வதந்தி என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக தேசம்நெற் இற்கு கிடைக்கும் தகவல்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்தலக வெளியுறவுத் செயலகத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறைக்குமிடையே அதிகார இழுபறி ஒன்று ஏற்பட்டு உள்ளதை உறுதிப்படுத்துகின்றன. மே 18ல் விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடம் முற்றாக அழிக்கப்படுவதற்கு அண்மையாக புலம்பெயர் நாடுகளில் உள்ள முக்கிய பொறுப்பானவர்கள் மாற்றப்பட்டதாகவும் தெரியவருகிறது. குறிப்பாக வே பிரபாகரனின் சொந்த ஊரான வல்வெட்டித்துறையைச் சார்ந்தவர்கள் முக்கிய பொறுப்புகளில் நியமிக்கப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன.

நேற்று (மே 24 2009) வே பிரபாகரன் உயிரிழந்ததை உறுதிப்படுத்துவதற்கு முன்னதாக வே பிரபாகரன் உயிரிழந்த விடயம் சர்வதேச நாட்டுப் பொறுப்பாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்களுடாக அடுத்த நிலையில் உள்ளவர்களுக்கும் இது தெரியப்படுத்தப்பட்டது. கடந்த 72 மணி நேரத்தில் ஏற்படுத்தப்ட்ட தொடர்புகளில் முதலில் அவர் உயிரிழந்துவிட்டதாகவும் மறுநாள் இல்லை உயிருடன் இருப்பதாகவும் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது. வே பிரபாகரனின் உயிரிழப்புத் தொடர்பாக கே பி புலிகளின் சர்வதேச நாடுகளின் பொறுப்பாளர்களிடம் இருந்து கடுமையான கேள்விகளை எதிர்கொண்டு உள்ளதாகத் தெரியவருகிறது. சர்வதேச நாடுகளின் பொறுப்பாளர்களும் தங்களின் உறுப்பினர்களிடம் இருந்து பலத்த கேள்விக்கணைகளை எதிர்நோக்கி இருந்தனர்.

புலிகளின் ஆதரவாளர்கள் தங்களின் நாட்டுப் பொறுப்பாளர்களிடமும் சர்வதேசப் பொறுப்பாளர்கள் கே பி இடமும் எழுப்பியதாக அறியவந்தள்ள கேள்விகளே இவை. ஆனால் இதற்கான பதில் இன்னமும் அவர்களுக்குத் தெரியவில்லை.

தலைவர் கொல்லப்பட்டாரா? இல்லையா?
அவர் எவ்வாறு கொல்லப்பட்டார்?
அத்தனை தளபதிகளும் எவ்வாறு ஒரே இடத்தில் இருந்தனர்?
அத்தனை பேரும் தலையிலும் நெஞ்சிலும் காதிலும் மட்டுமே சுடப்பட்டு உள்ளனர்?
அவர்கள் சரணடைவதற்கு நம்பிக்கையூட்டப்பட்டு உள்ளனரா?
அந்த நம்பிக்கையைக் கொடுத்தது யார்?
அந்த நம்பிக்கை ஏன் காப்பாற்றுப்படவில்லை?
நம்ப வைத்து கழுத்தறுக்கப்பட்டு இருந்தால் ஏன் அதனை அம்பலப்படுத்தவில்லை?
தலைவர் கொல்லப்பட்டால் அது எதற்காக மறைக்கப்பட்டது?
தலைவர் கொல்லப்பட்டதை மறைத்தவர்கள் இப்போது ஏன் அதனை வெளிப்படுத்தினர்?

இவ்வளவு கேள்விகளுக்கு மத்தியில் கே பி ”எமது தேசியத் தலைவரினது வீரவணக்க நிகழ்வை அதற்குரிய எழுச்சியுடன் மேற்கொள்ளுமாறு அனைவரையும் வேண்டுகிறோம். திங்கட்கிழமை 25.05.2009 முதல் ஒரு வாரத்திற்கு எமது தலைவரை நினைவு கொள்ளும் வீரவணக்க வாரமாக எமது இயக்கம் பிரகடனப்படுத்துகிறது.” எனத் தனது அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.

இதற்கிடையே புலிகளுக்குள் ஏற்பட்டுள்ள இப்பிளவு ஊடகங்களுக்குள்ளும் பரவியுள்ளது. விடுதலைப் புலிகளின் காணொளி ஊடகமாக விளங்கிய ஜிரிவி கே பி உடைய அறிக்கையை வெளியிட்டு இன்று (மே25 2009) முதல் துக்க தினம் அனுஸ்டிக்கப்படப் போகிறது. மறுமுனையில் விடுதலைப் புலிகளின் வானொலியாக விளங்கிய ஐபிசி வே பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்று சொல்லி உயிருடன் இருப்பவருக்கு என்ன அஞ்சலி என்று துக்க தினத்தை நிராகரித்து உள்ளனர்.

ஜிரிவி கே பி சார்பான நிலைப்பாட்டையும் ஐபிசி புலனாய்வுப் பிரிவு சார்பான நிலைப்பாட்டையும் எடுத்துள்ளன. அடுத்த சில நாட்களில் இந்தப் பிளவுகள் ஊடகங்களில் வெளிப்படையாகத் தோண்றுவதைக் காணலாம். மேலும் புலம்பெயர் நாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளின் பொறுப்பாளர்களும் ஆதரவாளர்களும் தாங்கள் அணியை தெளிவுபடுத்த வேண்டிய நிலைக்கு நிர்ப்பந்திக்கப்படுவார்கள்.

புலிகளின் அனைத்துலகச் செயலகம் ஆயுதப் போராட்டத்தை கைவிட்டுள்ளதாக அறிவித்துள்ள நிலையில் புலிகளின் புலனாய்வுப் பிரிவு தொடர்ச்சியான ஆயுதப் போராட்டத்தை வலியுறுத்தி உள்ளது. நேற்று அம்பாறையில் மூன்று இராணுவத்தினர் கொல்லப்பட்து ஐபிசி புதினம் ஆகிய ஊடகங்களில் முக்கிய இடத்தைப் பிடித்து இருந்தது. இவ்விரு ஊடகங்களும் பிரபாகரன் உயிரிழந்ததை உறுதிப்படுத்தும் கே பி யின் அறிக்கையை வெளியிடவில்லை.

இவ்விடயத்தில் தமிழ்நெற் பிரபாகரன் உயிரிழந்ததை உறுதிப்படுத்தும் கே பி யின் அறிக்கையை வெளியிடாத போதும் அவர்கள் இவ்விடயத்தில் நடுநிலை வகிக்க முற்பட்டு இருப்பதை அவர்களது ஆசிரியர் குழு அறிக்கை தெரிவிக்கிறது. ”பிரபாகரன் உயிருடன் இருக்கின்றாரா இல்லையா ஆயுதப் போராட்டம் தொடர வேண்டுமா இல்லையா போன்ற கேள்விகளால் தமிழ் தேசிய போக்கு பிளவுபடுவதோ சுரண்டப்படுவதோ ஏற்றுக்கொள்ளப்பட முடியாது. – The Tamil national cause cannot afford to be deviated and exploited by others through questions such as whether Pirapaharan is alive or not or whether the armed struggle has to be continued or not.”

இவ்விடயம் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன? யார் எந்த அணியில் செல்வார்கள்? என்பது விரைவில் வெளிவரலாம்.

இப்போது ஏற்பட்டுள்ள பிளவு ஒரு உடன்பாட்டிற்கு கொண்டு வருவதன் மூலம் தீர்த்துக்கொள்ளக் கூடிய வாய்ப்புகள் அருகி வருகிறது. இப்பிரச்சினையில் புலிகளின் பல மில்லியன் பெறுமதியான சொத்துக்களும் சம்பந்தப்பட்டு இருப்பதால் இப்பிளவுகள் இன்னமும் ஆழமாவதற்கான வாய்ப்புகளே அதிகம் தென்படுகின்றது. பல்வேறு ஆவணங்களும் தொடர்புகளும் அழிக்கப்பட்டுள்ள நிலையில் தனிப்பட்ட முறையில் மேற்கொள்ளப்பட்ட பல முதலீடுகள் அவரவரின் சொந்த சொத்துக்களாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சில குழு மோதல்களுக்கும் வித்திடும் அபாயத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்தச் சர்ச்சையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவருக்கும் தளபதிகளுக்குமான அஞ்சலி நிகழ்வுகள் பந்தாடப்படப் போகின்றது. இப்போது ஏற்பட்டுள்ள முரண்நிலையால் புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழீழ விடுதலைப் புலகளின் முன்னாள் உறுப்பினர்கள் பொறுப்பாளர்கள் ஆதரவாளர்கள் பெரும் குழப்பம் அடைந்து உள்ளனர்.

இலங்கையில் இன்னமும் ஆயுதங்களை வைத்துக்கொண்டுள்ள நூற்றுக் கணக்காண இளைஞர்களின் நிலையும் ஆபத்தானதாக உள்ளது. கே பி ஆயுதப் போராட்டத்தை கைவிட்டு உள்ளதால் அந்த இளைஞர்கள் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைவதற்கான பாதுகாப்பான வழிமுறை ஒன்றை மேற்கொள்ள முயற்சிப்பதாக அறியப்படுகிறது. அதே சமயம் ஆயுதப் போராட்டத்தை தொடர்ந்து மேற்கொள்ளப் போவதாக புலனாய்வுப் பிரிவுப் புலிகள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு மாறுபட்ட அறிக்கைகள் அந்த நூற்றுக் கணக்கான இளைஞர்களை ஆபத்தில் தள்ளியுள்ளது.

வவுனியா செயலகத்தில் இன்று உயர்மட்ட மாநாடு

செட்டிகுளம் நலன்புரி நிலையங்களில் வசிக்கும் சுமார் இரண்டு இலட்சம் மக்களுடைய தேவைகள் குறித்த உயர்மட்ட மாநாடு இன்று திங்கட்கிழமை காலை வவுனியா செயலகத்தில் மாவட்ட அரச அதிபர் தலைமையில் நடைபெறவுள்ளது.

மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் உட்பட சகல திணைக்களங்களின் முக்கிய தலைவர்கள், பாதுகாப்பு படையினர் இந்த மகாநாட்டில் கலந்து கொள்வர்.

காலை 11 மணிக்கு மகாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இடம்பெயர்ந்த மக்களுடைய தேவைகள் குறைபாடுகள், இன்னும் பல விடயங்கள் இந்த மகாநாட்டில் ஆராயப்படுமென அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அமிர்தலிங்கத்தின் மகனெனக் கூறி வர்த்தகர்களிடம் பணம் கேட்டு மிரட்டல்

telephone.jpgதமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் செயலாளரான காலம் சென்ற அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் மகனெனக் கூறும் ஒருவர் கொழும்பிலுள்ள வர்த்தகர்கள், முக்கிய பிரமுகர்களிடம் தொலைபேசிமூலம் பணம் கேட்டு மிரட்டுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வர்த்தகர்கள் முக்கியஸ்தர்களுக்கு தொலைபேசி அழைப்புகளை எடுக்கும் இந்நபர் தான் அமிர்தலிங்கத்தின் மகன் எனவும் தான் லண்டனிலிருந்து வந்திருப்பதாகவும் கூறி பணம் தரவேண்டுமென அச்சுறுத்துவதாக சம்பந்தப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர். இதேவேளை சம்பந்தப்பட்ட வர்த்தகர்களை லண்டனிலிருந்து தொடர்பு கொண்ட அமிர்தலிங்கத்தின் மனைவியான மங்கையர்க்கரசி தனது இருமகன்களும் லண்டனிலேயே இருப்பதாகவும் அவர்களுக்கும் இந்த பணம் கேட்கும் சம்பவங்களுக்கும் எவ்வித தொடர்புமில்லையெனவும் தனது மகனெனக் கூறி வேறு எவரோ பணம்பெற முயற்சிப்பதாகவும் கூறியுள்ளார்.

சாமிமலையில் மண்சரிவு – குடியிருப்புகள் சேதம்

earth-slip.jpgதற் போதைய மழையுடனான காலநிலைமாற்றத்தினால் சாமிமலை பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட மண் சரிவினால் இரண்டு தொழிலாளர் குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன. மின்சிங்டே பிரதேசத்தில் ஏற்பட்ட இந்த மண்சரிவின் காரணமாக பாதிக்கப்பட்ட இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் பொது இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில் கலரவில பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கி காரணமாக 42 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் இச் சம்பவங்களில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லையெனவும் பாதிக்கப்பட்டோர் கலரவில தமிழ் மகா வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில் நுவரெலியாவில் மழை காரணமாக 28 வீடுகள் நீரில் மூழ்கியுள்ளதாக அனர்த்த நிவாரண மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் கேல்ட்டன் பிரதேசத்தில் தாழ் நிலப்பரப்பில் காணப்பட்ட 6 வீடுகள் நீரில் மூழ்கியுள்ளதுடன் அவற்றிலிருந்த 19 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதேவேளை, அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு வீடுகள் மண்சரிவினால் சேதமடைந்தன. அங்கிருந்த 20 பேர் மாற்றிடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணங்களை வழங்குவதற்கு அந்தந்தப் பிரதேச செயலாளர் பிரிவுகளின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

131 கிலோ எடையுள்ள 15 குண்டுகள் வவுனியாவில் மீட்பு

131 கிலோ எடையுள்ள அதிசக்தி வாய்ந்த 15 குண்டுகளை வவுனியா கந்தபுரம் காட்டுப் பகுதியிலிருந்து பொலிஸார் மீட்டெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார். ஒவ்வொன்றும் ஒன்பது கிலோ எடையுள்ள இந்த குண்டுகள் வான்களுக்கு பொருத்தக்கூடியவைகள் என்று ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

வவுனியா பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவல் ஒன்றை அடுத்து கந்தபுரம் காட்டுப் பகுதியில் பாரிய தேடுதல்களை மேற்கொண்ட பொலிஸார் இந்த குண்டுகளை மீட்டெடுத்துள்ளனர். சிவப்பு மற்றும் கறுப்பு நிற இரண்டு பரல்களில் மறைக்கப்பட்டு புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த குண்டுகள் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

இந்த குண்டுகளுடன் பெருந்தொகையான வயர்கள் மற்றும் வெடிக்க வைக்கும் கருவிகளையும் பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர்.முக்கிய பிரமுகர்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தும் நோக்குடன் இந்த குண்டுகள் புலிகளால் ஏற்கனவே மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

குண்டு மீட்டெடுக்கப்பட்ட பகுதியில் தேடுதல் நடத்திய பொலிஸார் பலரது வாக்கு மூலங்களை பதிவுசெய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படவில்லை என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார். இந்தச் சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸ் நிலையத்தின் குற்றத் தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் எஸ். எஸ். பி. தெரிவித்தார்.

வல்வெட்டித்துறையில் மாணவிகளுடன் சேஷ்டை; மூன்று இளைஞர்கள் கைது

sri-lankan-students.jpgவீதியால் செல்லும் மாணவிகளுடன் நீண்ட நாட்களாக சேஷ்டை செய்துவந்த இளைஞர்களில் மூவர் வல்வெட்டித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.  இவர்கள் பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர். நீதிவான் கே. அரியநாயகம் மூவரையும் கடுமையாக எச்சரித்தார்.

வடமராட்சிப் பகுதியில் வீதியால் செல்லும் மாணவிகள், இளம் பெண்களிடம் சில இளைஞர்கள் அநாகரிகமான முறையில் நடந்து கொள்வதாக பெற்றோர் உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு முறையிட்டிருந்தனர். இதையடுத்து பருத்தித்துறை, நெல்லியடி, வல்வெட்டித்துறை பொலிஸார் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்தனர்.

இதன்போது உடுப்பிட்டியில் இளைஞர் குழு ஒன்று இவ்வாறு நடந்துகொண்ட போது பொலிஸாரைக் கண்டதும் ஓட முயற்சித்தனர் அவர்களில் மூவரை பொலிஸார் துரத்திப்பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். அனைவரும் கடுமையாக எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்

55 இலங்கையர் இந்தோனேசிய சிறையில் உண்ணாவிரதம்

இந்தோனேசியாவின், அச்சே மாநில சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 55 இலங்கையர்கள் அங்கு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு நேற்று கூறியது. இவர்கள் சட்டவிரோதமாக இந்தோனேசியாவுக்கு நுழைந்ததன் காரணமாக

கைதாகியுள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது. இவர்கள் தொடர்பான விபரங்களை இந்தோனேசிய அரசாங்கத்திடம் கோரியுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு கூறியது. ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் வந்தால் மாத்திரமே தமது உண்ணாவிரதத்தை கைவிடுவதாக உண்ணாவிரதமிருக்கும் இலங்கையர்கள் தெரிவித்துள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது. இந்தோனேசியாவுக்கு சட்டவிரோதமாக நுழைந்த 446 பேர் இந்த வருடம் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 193 பேர் மியன்மார்வாசிகளும் 55 இலங்கையர்களும் அடங்குவர் என அறியவருகிறது.

அமைச்சரவையில் பங்கேற்பது பற்றி விவாதித்து அறிவிப்போம்: கலைஞர்

karunanidhi.jpgமத்திய அமைச்சரவையில் தி.மு.க. சேருவது குறித்து விவாதித்து முடிவு எடுக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. பிரதமர் மன்மோகன் சிங் உட்பட 20 கேபினட் அமைச்சர்கள் பதவி ஏற்றுள்ளனர்.

இந்த புதிய அரசில் தி.மு.க.வுக்கு எத்தனை அமைச்சர்கள், எந்தெந்த இலாகாக்களை தருவது? என்பது குறித்து டெல்லியில் 2 நாட்கள் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் தி.மு.க. தலைவர், முதல் அமைச்சர் கருணாநிதி கலந்து கொண்டார்.

ஆனால் இதில் சுமுக முடிவு ஏற்படவில்லை. மத்திய அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தருவது என்றும், காங்கிரஸ் கூறிய  பார்முலா’ குறித்து செயற்குழு அல்லது உயர்நிலை செயல்திட்டக்குழுவில் விவாதித்து முடிவு செய்யப்படும் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்துவிட்டு, கருணாநிதி சென்னை புறப்பட்டு வந்துவிட்டார். சென்னை வந்த பின் கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் தி.மு.க.வின் முன்னணி தலைவர்களுடன் இதுகுறித்து ஆலோசனை நடத்தினார்.

இந்த விஷயங்கள் குறித்து முதல் அமைச்சர் கருணாநிதி, கட்சியின் முன்னணி தலைவர்களுடன் ஆலோசித்தார். அதன் பின்னர் அவர் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அந்த அறிவிப்பில் கருணாநிதி கூறியிருப்பதாவது:  15 வது நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து அமைச்சரவை அமைக்கும் காலக் கட்டத்தில் டெல்லியிலே உள்ள சில தொலைக்காட்சிகளில் வேண்டுமென்றே திட்டமிட்டு, தி.மு.க. அமைச்சர்களைப் பற்றி பொய்ப் பிரச்சாரம் செய்ததை டெல்லி நிருபர்கள் கூட்டத்தில் பிரதமரே விளக்கமளித்து மறுத்திருப்பதற்கும், அதைத் தொடர்ந்து பிரதமரே மத்திய அமைச்சரவையில் தி.மு.க. பங்கு பெற வேண்டும் என்று அழைப்பு விடுத்ததற்கும் கழகத்தின் உயர்நிலை செயல்திட்டக் குழு பிரதமருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறது.அமைச்சரவையில் பங்கேற்பது பற்றியும் விவாதித்து முடிவெடுத்து அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்.