சின்னஞ்சிறு வயதில் மண்வீடு கட்டி விளையாடிய அனுபவம் எம்மில் பலருக்கு உண்டு. மனதில் எழுகின்ற பெரிய ஆசைகளை, நிறைவேறாத ஆதங்கங்களை ஏதோ எங்களுடைய இயலுமைக்கேற்ப சிறிய அளவில் செய்து மகிழும் ஒரு கற்பனை திருப்தி தான் இது. ஏன் ஒரு சிற்றின்பம் என்று கூட சொல்லி விடலாம். தற்போது ஐரோப்பிய, ஸ்கன்டிநேவிய நாடுகளில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களினால் நடாத்தப்படும் இந்த வட்டுக்கோட்டை பிரகடனம் மீதான வாக்கெடுப்பும் இச் சிறுபிள்ளைத்தன விளையாட்டிற்கு ஒப்பானதே.
கடந்த 30 வருட காலத்திற்கு மேலாக தமிழ் தேசியத்தை வலிந்து தலைமை தாங்கிய தலைவர் பிரபாகரன் எந்தவொரு காலகட்டத்திலும் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தைப் பற்றியோ அல்லது அத்தீர்மானத்திற்கு அத்திவாரமாக இருந்த தமிழ் அரசியல் தலைவர்களைப் பற்றியோ பெரிதாக ஏதும் கூறிவிடவில்லை. அங்கீகரிக்கக் கூட இல்லை. அதற்கு மாறாக………. அமிர்தலிங்கம், யோகேஸ்வரன், ஆலாலசுந்தரம், தர்மலிங்கம் போன்றவர்களை வரிசையாக சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் சுடத் தவறவில்லை. ஏன் அவ்வாறு சந்தர்ப்பம் கிடைத்தால் தொண்டமான் என்ன தந்தை செல்வா உட்பட வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடித்தளங்களை கூட சுட்டுத்தள்ள ஒரு கணம் கூட யோசித்திருக்க மாட்டார்கள். அடிப்படை அரசியலுக்கும் குறைந்த பட்ச ஜனநாயகத்திற்கும் கூட எந்தவித இடமும் கொடுக்காத விடுதலைப் புலிகளும் அதன் ஆதரவுகளும் இன்று காலாவதியாகிப் போன வட்டுக்கோட்டைத் தீர்மானத்தைத் தூக்கிவைத்து தாண்டவம் ஆடுவது கண்கெட்ட பின் நடத்துகின்ற சூரியநமஸ்காரத்திற்கு ஒப்பானது.
தனித்தமிழ் ஈழம் ஏதோ மூன்றடி தூரத்தில் இருப்பதாக இதுவரை காலமும் கதையளந்து மாவீரர் தினத்திற்கு வரிசையாக போய் விசிலடித்து வந்த இந்த புலம்பெயர்வுகள் இன்று வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்று கூறி வரிசையாக நிற்பதைப் பார்க்கும் போது அழுவதா அல்லது சிரிப்பதா என்று தெரியவில்லை. ஆக மொத்தமாக பார்க்கும் போது 98.95% நோர்வே மக்கள் தமிழீழத்தை ஆதரிக்கின்றனர் என்று வெளியாகிய செய்தி சதாம் உசைன் மறைவதற்கு சில மாதங்களுக்கு முன் ஈராக்கில் இடம்பெற்ற தேர்தலில் சதாம் உசைன் ஈட்டிய மாபெரும் வெற்றிக்கு ஒப்பானது. 16 ஒக்ரோபர் 2002 ல் ஈராக்கில் இடம்பெற்ற வாக்களிப்பில் சதாம் உசைன் 99.96% வாக்குகளைப் பெற்று மேலும் 7 ஆண்டுகள் ஈராக்கை ஆள மக்களின் ஆதரவை பெற்றுக் கொண்டார். இன்று மே மாதம் 10ம் திகதி 2009ம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு 98.95% ஆதரவு கிடைத்துள்ளது.
சாதாரண மக்களை ஒரு புறம் விடுவோம். இந்த வாக்கெடுப்பைப் பற்றி ஐரோப்பாவில் பரவலாகச் செயற்படும் தீபம் தொலைக்காட்சி, GTV தொலைக்காட்சி, IBC வானொலி போன்ற நிலையங்கள் நிகழ்த்தும் அரசியல் பதிவேடுகள் மிகவும் கோமாளித்தனமானது. நாளுக்கு நாள் ஏதோ புதிய புதுமையான அரசியல் பரிணாமத்தை விபரிப்பதைப் போல் இவ்வாறான அரசியல் கோமாளித்தனங்களை ஒலிபரப்பி ஒரு மனிதனின் அடிப்படை அறிவுத்திறனை சோதிக்கின்றனர். ஐரோப்பிய சமூகம் இந்த தேர்தல் முடிவுகளை மிகவும் உன்னிப்பாக அவதானிக்கிறதாக கூறுகிறது லண்டனில் இருந்து ஒளிபரப்பப்படும் தீபம் தொலைக்காட்சி.
அமையவிருக்கும் தமிழ் ஈழத்தில் தன்னுடைய பெயர் மட்டும் முதன்மை வகிக்க வேண்டும் என்ற ஒரே ஒரு காரணத்திற்காக வட்டுக்கோட்டைத் தீர்மானத்தையும் அதனை மையப்படுத்தி இடம்பெற்ற 1977ம் ஆண்டு தேர்தலையும் அத்தேர்தலில் மாபெரும் வெற்றியீட்டிய தலைவர்களையும் சுட்டு வீழ்த்திய இயக்கம் இன்று அழிவின் விளிம்பில் நின்று கொண்டு வரலாற்றுத் தவறுகளை திருத்த எத்தணிப்பது காலம் கடந்து வந்த ஞானம். இன்று இடம்பெறுகின்ற அரசியல் முனைப்புகள் எப்போதோ நடந்திருக்க வேண்டும். தொடர்ச்சியாக இடம்பெற்றிருக்க வேண்டும். எங்கோ இருந்து வருகின்ற கைகளுக்கும், கை மாற்றுக்களையும் அடிப்படையாக வைத்து நேச நாடுகளின் தலைவர்களைக் கூட மண்டையில் போடத் துணிந்தவர்கள் இன்று 24 மணி நேரத்தில் 3 கிலோ மீற்றரில் முடங்கிக் கிடக்கும் போது நடாத்துகின்ற இந்த அரசியல் முனைப்புக்கள் எந்தவித மாற்றத்தையும் கொண்டுவரப்போவதில்லை.
இன்று நோர்வேயை மையப்படுத்தி இடம்பெற்ற இத்தேர்தலின் பின்னணியில் ஊதறுப் பத்திரிகை இருந்துள்ளது. இப்பத்திரிகை நோர்வேயின் பல்லின மக்களால் பல்லின மக்களின் தேவை கருதி 2001ம் ஆண்டில் இருந்து நடாத்தப்படுகின்ற பத்திரிகை. இப்பத்திரிகை இணையத்தளத்தை மையப்படுத்தி நடாத்தப்படுகின்ற ஒரு சமுதாயப் பத்திரிகை. இது நோர்வே மக்களினால் வாசிக்கப்படுகின்ற பத்திரிகை அல்ல. இது தினசரி பத்திரிகையும் அல்ல. இப்பத்திரிகை Europeans Minorities On Line (Eminol.com) என்ற ஸ்தாபனம் ஒன்றுடன் கூட்டாக ஐரோப்பிய ஒன்றிய கூட்டு பண உதவியுடன் நடாத்தப்படுகின்ற ஒரு இணையப் பத்திரிகை. இத்தாபனங்களின் முக்கிய பொறுப்பில் மஜோரன் விவேகானந்தன் என்ற இலங்கைத் தமிழர் ஒருவர் பதவி வகிக்கிறார். மஜோரன் விவேகானந்தன் நோர்வேயில் இருந்து அந்நாட்டின் அமைப்புகளுடன் இணைந்து புலிகளுக்கு சார்பான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாக இந்திய கொழும்புப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டு உள்ளன.
இன்று வெளிநாடுகளில் முக்கிய ஸ்தாபனத்தில் அல்லது ஏதோ ஒரு வித்தத்தில் தனிப்பட்ட பலம் உள்ளவர்கள் அமைப்புகள் தமது பலத்தை அல்லது அழுத்தத்தை கொழும்பு அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் கொடுத்து ஏதாவது தீர்விற்கு உந்துதலைக் கொடுக்க வேண்டுமே தவிர காலாவதியாகிப் போன வெத்து அரசியல் கோசங்களுக்கு பலம்கொடுத்து பல நூற்றுக் கணக்கான மக்களைக் கொல்லவும் பல லட்சக் கணக்கான மக்களின் எதிர்காலத்தை இருட்டடிக்கவும் துணை போகக் கூடாது.
