![]()
படையினருக்கும், புலிகளுக்கும் இடையில் நடைபெற்றுவரும் யுத்தம் காரணமாக வன்னிச் சிறுவர்கள் கடுமையான பாதிப்புக்களை எதிர்நோக்கி வருவதாக ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளரின் சிறுவர் மற்றும் ஆயுத போராட்டங்களுக்கான விசேட பிரதிநிதி ராதிகா குமாரசுவாமி தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
“யுத்தம் காரணமாக அப்பாவிச் சிறுவர்கள் சொல்லொணா துயரங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இது ஏற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலை.சிறுவர்களைப் பணயமாக வைக்கவோ அல்லது ஆயுத போராட்டத்தில் அவர்களை ஈடுபடுத்தவோ எவருக்கும் அதிகாரமில்லை. தமிழீழ விடுதலைப் புலிகள் தடுத்து வைத்துள்ள சிறுவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். அவர்கள் தமது பெற்றோர் அல்லது பாதுகாவலர்களுடன் இணைக்கப்பட வேண்டும்.
அரசாங்க அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள சிறுவர்களும் பல்வேறு இடர்பாடுகளை எதிர்நோக்கி வருகின்றனர். சர்வதேச தர நியமங்களுக்கு அமைவான வசதிகள் அகதி முகாம்களில் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும். அரசாங்கமும், தமிழீழ விடுதலைப் புலிகளும் எறிகணைத் தாக்குதல் நடத்துவதை நிறுத்த வேண்டும்” என்றார்.