(மார்ச் இறுதிப் பகுதியில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த சாம் அங்கு தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை தேசம்நெற் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார். சாம் தனது தனிப்பட்ட காரணங்களுக்காகவே யாழ் சென்றிருந்தார். அப்பொது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டு உள்ளார். இவர் ரிஎன்ஏ யில் உள்ள ரெலோ பாராளுமன்ற உறுப்பினர்களால் மீள இயக்க வைக்கப்பட்ட லண்டன் ரெலோ அமைப்பாளராக செயற்பட்டு வருகிறார்.)
யாழ்ப்பாணம் போவது என்பது மிகவும் கஸ்டமான விடயம். யாரும் யாழ் போக ரிக்கட் பதிவு செய்திருந்தாலும் அரச அதிகாரிகள் அல்லது வேறு முக்கியமானவர்கள் யாழ்போக வேண்டின் உங்களது ரிக்கட் ரத்து செய்து திரும்ப பதிவு செய்யப்படும்.
கொழும்பில் வெள்ளவத்தையிலிருந்து விமான சேவையினர் பொறுப்பு எடுத்து இரத்மலானை விமான நிலையத்திற்கு எடுத்துப்போய் அங்கிருந்து இராணுவம் உங்கள் பொதிகள் முழுவதையும் பொறுப்பு எடுத்து அந்த பொருட்களை திரும்ப கட்டுவன் சந்தியில் உங்களிடம் ஒப்படைக்கும். விமானம் பறக்கும் போது மொபைல்போன் கமரா போன்றவைகள் எம்மோடு வைத்திருக்க முடியாது.
பயணிகள் பலாலி விமான ஓடுபாதையிலிருந்து இராணுவத்தின் பஸ் முலம் கட்டுவன் சந்தி வரையில் அழைத்து வரப்படுவார்கள். இந்த வேளையில் பஸ்சின் யன்னல்கள் யாரும் வெளியே அவதானிக்க முடியாதபடி திரையிடப்படும். இராணுவ கட்டிடங்கள் இடங்கள் போன்றவைகள் உங்கள் பார்வையிலிருந்து விலக்கியே இருக்கும்படியான ஒழுங்குகள் செய்யப்பட்டிருக்கும். கட்டுவனில் பொலீசார் உங்களை பொறுப்பு எடுக்கும் போது விசாரிப்பர். இராணுவத்தினர் படமும் எடுப்பார்கள்.
யாழ்ப்பாணத்திலிருந்து திரும்ப கொழும்பு வரும் போது இடிந்து விழும் நிலையிலிருக்கும் யாழ் ரயில்வே நிலையம் அருகே அதிகாலையிலிருந்து காவல் நின்று மாலை 4 மணியளவில் பலாலியில் விமானம் ஏறலாம். இந்த யாழ் ரயில்வே நிலையம் அருகே ஈபிடிபியினரால் வழங்கப்படும் தண்ணீர்த் தாங்கி உள்ளது. மிகவும் அமைதியான சூழ்நிலையில் எல்லாம் இயங்குகின்றது. ஈபிடிபியினரின் அலுவலகங்களை யாழ்பாணத்தில் பரவலாக எங்குமே இராணுவ முகாம்களுக்கு அண்மையில் காணமுடியும்.
நாம் எல்லோரும் லண்டனில் கேட்கும் ரேடியோக்கள் தொலைக் காட்சிகளில் வெளிவரும் மிகப் பெரும்பாலான செய்திகளுமே பொய்யானவை என்பதை அங்கு நேரில் சென்று பார்த்தால் புரியும். இதில் முதலாவதானது இலங்கை இராணுவத்தின் நடத்தைகள். இலங்கை இராணுவம் 1983டன் ஒப்பிடுகையில் மிகவும் வித்தியாசமாகவே நடந்து கொள்கின்றனர். இதை நான் கடந்த யுத்த நிறுத்தக் காலத்தில் போனபோதும் அதவானித்தேன். பொய்யான செய்திகள் பரவலாகப் பரப்பப்படும் போது உண்மையான குற்றங்கள் நிகழுவதும் அந்தப் பொய்யினுள் புதைக்கப்படுகிறது.
ஊரடங்கு வாழ்வு…..
யாழ்ப்பாணம் புலிகளிடமிருந்து விடுவிக்கப்பட்டு பத்து வருடங்களுக்கு மேலாகியும் இன்று வரையில் அங்கு ஊரடங்குச்சட்டம் அமுலில் உள்ளது. இரவு 9 மணிக்கு பிறப்பிக்கப்படும் ஊரடங்குச் சட்டம் மக்களின் அன்றாட வாழ்க்கையை பெருமளவு பாதிப்படையவே செய்கிறது. இந்த ஊரடங்கு காரணமாக யாழ்பாணத்திலிருந்து கடைசி பஸ் சேவைகள் 6 மணிக்கு புறப்படும். இப்படியான இடைஞ்சல்களுடன் வாழும் யாழ் மக்கள் இவ் ஊரடங்குச் சட்டத்தை முற்றாக நீக்குவதையே விரும்புகிறார்கள். குறைந்தது ஊரடங்குச் சட்டம் இரவு 12 பிறப்பிக்கப்படுவதையும் கடைசி பஸ் சேவைகள் 8 மணிவரை நீடிப்பதையும் விரும்புகிறார்கள். யாழில் அதிகாரத்தை வைத்துள்ள ஈபிடிபியினர் இந்த நடைமுறைகளை ஏன் செய்ய முடியாது உள்ளது. இவை மக்களின் அடிப்படையான பிரச்சினைகளில் ஒன்றாகும்.
இரவு வேளைகளில் மின்சாரத்தடை ஏன் செய்யப்பட வேண்டும் என்பது மக்கள் பல வருடமாக கேட்டபடி உள்ளவிடயம். இரவு 8 மணியிலிருந்து இரவு 10 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. இந்த மிக முக்கியமான நேரத்தில் ஏன் மின்சாரத்தை அரசு துண்டிக்க வேண்டும்? யாழ் பிள்ளைகளின் கல்வியில் இது பெரும் பாதிப்பை உள்ளாக்குகின்றது. இப்படியான பிரச்சினைகளை தீர்த்து வைக்கக்கூடிய திர்த்து வைக்க வேண்டிய கடமைப்பாடு அங்கு அதிகாரத்தைக் கொண்டுள்ள ஈபிடிபியினருக்கு உள்ளது. இவ்விடயத்தில் ரிஎன்ஏ கேட்டாலும் அரசு செவிசாய்க்காது.
மாலை 6 மணிக்கு கடைசி பஸ் போனதும் யாழ்ப்பாண நகரம் வெறிச்சோடிவிடும். ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் பிறப்பிக்கப்படுவதால் அந்த நேரத்தில் ஆபத்து அவசரத்திற்கு வெளியே வரமுடியாத நிலையுள்ளது. நோய்வாய்ப்பட்டவர்களை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல முடியாது.
புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்றால் இலங்கை இராணுவம் முன்பு வீட்டுக்கு பக்கத்து வீட்டார்களையும் தொந்தரவு செய்வது வழக்கம். ஆனால் இப்போது அப்படி எல்லாம் நடப்பதில்லை. இதேவேளை புலிகளைப் பற்றிய மிகச் சரியான தகவல்களை இhணுவம் பெறுவதினாலேயே இராணுவம் தேவையற்றோரை தொந்தரவு செய்வதில்லை என மக்கள் கருதுகின்றனர். மக்களது அன்றாட வாழ்கை பலவகையில் பாதிக்கப்பட்டாலும் தனிப்பட்டமுறையில் இராணுவம் தலையிடாமல் நடந்து கொள்வதை அவதானிகக் கூடியதாக உள்ளது.
பலாலியிலிருந்து இராணுவத்தின் தொடர் வண்டிகள் கச்சேரியூடாக நாவற்குழியை நோக்கி போகும் விடயம் மிக முக்கியமானது. காரணம் இப்படியான தொடர் இராணுவ வண்டிகள் இந்த எ9 பாதையூடாக போகும் நேரத்தில் மிகவும் வேதனைக்குரிய விடயம் தமிழர்கள் இந்த பாதையை எக்காரணம் கொண்டும் எந்த அவசரத்திற்கும் குறுக்காக போக முடியாது. அதாவது இந்த பிரதான பாதையின் முழு பக்கத்து தெருக்களுமே மூடப்படும் எல்லா வண்டிகளும் மக்களும் இந்த தொடர் வாகன வண்டிகள் போய் முடியும் வரையில் காத்திருக்க வேண்டும். இதில் அவசர கர்ப்பிணியாகிலும் அல்லது மாரடைப்பில் அவஸ்த்தைப்படுபவராயினும் சரி காத்திருக்க வேண்டியதுதான். இது குறைந்தது 2மணி நேர நாடகமாக இருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
குடாநாட்டில் எல்லா மக்களையும் இராணுவம் மதிப்பீடு செய்துள்ளது. யார் எவர் என்பதை நிச்சயமாக தெரிந்துள்ளது. இப்படி இருக்கையிலும் ஏன் இராணுவம் தனது கெடுபிடிகளை தளர்த்தி மக்களை சுதந்திரமாக எந்நேரமும் எதுவும் செய்ய விடாமல் தடுக்கிறது என்பது எல்லோரிடமும் உள்ள கேள்வியாகும்.
யாழ் மக்கள் என்ன கூறுகிறார்கள்…..
யாழ்ப்பாணத்தில் மக்களின் பேச்சுக்களை அவதானிக்கும் போது, மகிந்தாவை ஆட்சிக்கு கொண்டுவந்தது புலிகள் என்றும், வன்னியில் உள்ள பாஸ் முறையே மக்களைப் புலிகளின் எதிரியாக்கியது என்றும் 60 வயது என்றிருந்த கட்டுப்பாட்டை 65 ஆக்கியது மக்களிடம் ஏன் இப்படி சுதந்திரமாக இருக்க வேண்டிய வயோதிபர்களை கட்டுப்படுத்துகிறார்கள் என்றும் ரிஎன்ஏ யினர் மகிந்தாவிடம் பேசி தமது பிரச்சினைகளையும் தமிழர் உரிமைப் பிரச்சினைகளையும் தீர்க்க வழிமுறைகளைச் செய்ய புலிகள் தடுப்பது பற்றியும், தற்போது யாழ்பாணத்தில் தமிழில் பேசி தமிழர்களிடமிருந்து புலிகளின் ஊடுருவலை தெரிந்து கொள்வதும் அரச படைகளுடன் இணைந்து செயற்படுவதும் முன்னாள் புலிகளே என்றும், கூறுகின்றனர்.
இந்தியா உதவிக்கு வந்தபோது அவர்களை சரியாகப் பாவிக்க புலிகளிடம் இராஜதந்திரம் இல்லை என்றும் மக்கள் கருதுகின்றனர்.
கிழக்கு தேர்தல் புறக்கணிப்பு – மகிந்தாவை சந்திக்காது ரிஎன்ஏ புறக்கணிப்பது – புலிகள் ரிஎன்ஏ கட்டுப்படுத்துவது போன்றன தவறு என்றே மக்கள் கருதுகின்றனர்.
ரிஎன்ஏ அரசை அல்லது அரசின் அலுவலர்களை சந்திப்பதை புலிகள் விரும்புவதில்லை. இது தமது பாராளுமன்ற உறுப்பினர்கள் தமக்கு செய்ய வேண்டிய அலுவல்களை செய்யவிடாமல் புலிகளால் தடைகள் ஏற்படுவதாக மக்கள் கருதுகின்றனர்.
யாழ் மருத்துவமனையில் தேவையான மருந்துகள் இல்லை. மருத்துவ மனையின் முக்கிய கணக்காளர் பதவியில் இருப்பவர் கொழும்புடன் தொடர்பு கொள்ள தமிழில் மட்டுமே தொடர்பு கொள்ளக் கூடியவர் என்பதும் இதுவே பலவிதமான தடங்களுக்கு காரணமாக இருப்பதாகவும் இவர் ஈபிடிபி யினாலேயே நியமிக்கப்பட்டவர் என்றும் ஒருவர் குற்றஞ்சாட்டினார். வேறு பலருடன் கதைத்ததில் பொறுப்பான பதவிகளில் இருப்பவர்கள் தகுதியின் அடிப்படையில் நியமிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் உண்டு. குறிப்பாக கொழும்புடன் தொடர்புகொள்ளும் விடயங்களில் தொடர்பு மொழியாக ஆங்கிலம் உள்ளதால் அரச அலுவலர்களுக்கு மொழி சிக்கலாக உள்ளது.
மக்கள் நினைப்பில் டக்ளஸ் கருணா அரசாங்கத்தோட சேர்ந்து இருக்கிறார்கள். ரிஎன்ஏ புலிகளின் கதைகளை கேட்டுக் கொண்டு ஒன்றும் செய்ய முடியாமல் உள்ளனர். தமது பிரச்சினைகளை பேச ஆட்களில்லை என்ற உணர்வு மேலோங்கியுள்ளதை அவதானிக்கவும் முடியும்.
இன்னும் சிலரிடம் முக்கியமாக வர்த்தகர்களிடம் இந்தப் புலிகள் தம்மை வறுகு வறுகு என்று வறுகி நாம் பிச்சைக்காரர் ஆகிவிட்டோம் எமக்கு செய்த அநியாயத்திற்கே புலிகள் அரசாங்கத்திடம் வாங்கிக் கட்டுகிறார்கள் என்பதும் சந்தையில் தாராளமாய் கேட்க முடிகிறது.
யாழில் புலிகளின் செயற்பாடுகள்…..
புலிகளை விட்டு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளியேறியவர்கள் புலனாய்வுத்துறையில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளார்கள். ஈபிடிபி மற்றும் ரிஎம்விபி உறுப்பினர்களுக்கு புலிகளின் அண்மைக்கால நடவடிக்கைகள் உறுப்பினர்கள் பற்றி எதுவும் தெரிவதற்கில்லை. அதனால் அவர்களால் இன்று புலிகளை அடையாளம் காணுவது கடினமானது. ஆனால் கடந்த சில ஆண்டுகளுக்குள் புலிகளைவிட்டு வெளியேறிய பலர் இன்று இலங்கை அரசின் உளவுப்படையில் வேலைசெய்யும் அலுவலர்கள் என்பது தெட்டத் தெளிவான விடயம். இன்று யாழ்ப்பாணத்தில் புலிகளின் ஊடுருவலைத் தடுப்பது முன்னாள் புலிகளாகிய இன்னாள் அரச உளவுப்படையினரே. முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமைக்கு புலிகளால் முன்வைக்கப்பட்ட காரணம் அவர்கள் தம்மை காட்டிக் கொடுப்பதாக, ஆனால் இன்று புலிகளே புலிகளைக் காட்டிக் கொடுக்கும் நிகழ்வு நடைபெறுகின்றது.
அன்று மாத்தையா நேற்று கருணா இன்று இளந்திரையன் – புலிகளின் இராணுவக் கட்டமைப்பு உருவாக்கிய உள்முரண்பாடுகளும் பிரச்சினைகளுமே புலிகளின் தன்னழிவிற்கு இட்டுச்சென்று உள்ளது. இன்று புலிகளின் போராட்டம் தலைமை எல்லாமே தோற்றுப் போயுள்ளதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
இளந்திரையனே கிளிநொச்சி தாக்குலின் தோல்விக்கு காரணம் என்றும் கூறி அவருக்கும் இன்னும் சிலருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டதாக அங்கு மக்கள் தெரிவிக்கின்றனர். இளம்திரையனே இராணுவத்திற்கு முழுத் தகவல்களும் கொடுத்தவர் என்றும் இலங்கை இராணுவம் புலிகளுக்கு உள்ளேயும் புலிகளின் ஆதரவாளர்களையும் தமக்கு செய்தி சேகரிப்புக்கு தமது உளவாளிகளாக மாற்றி யமைத்துள்ளனர்.
இக்காரணத்தினாலேயே யாழ்ப்பாணத்தில் புலிகள் இன்று எதுவுமே செய்யமுடியாத நிலையில் இருப்பதாயும் பலராலும் பேசப்படுகின்றது. ஒரு சாதாரண ஓட்டோ டிரைவர் ஒரு வெளிநாட்டுப் பிரஜைக்கு இவற்றை சாதாரணமாகவே பேசிக்கொள்கிறார்.
சந்திரிகா அரசு காலத்தில் புலிகள் யாழ்ப்பாணத்தில் நிலத்துக்குகீழ் ஒழித்துவிட்டுப் போன ஆயுதங்களை புலிகள் திரும்ப வந்து எடுத்துப் போராடினார்கள். இப்போ இந்த நிலை யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை பூச்சியம் என்றே கருதப்படுகிறது. காரணம் இராணுவம் மிகவும் நுட்பமாக விடயங்களை கையாளுகின்றது.
தற்போது வன்னிப் பகுதியில் புலிகள் நிலத்துக்குக் கீழ் ஒளித்துவிட்டுப் போகும் அத்தனை பொருட்களும் தற்போது இராணுவத்தால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. காரணம் இராணுவம் மிக நுட்பமான கருவிகளையும் யுக்திகளையும் கையாளுவதேயாகும். இதைவிட புலிகளிடமிருந்து சரணடைந்தவர்களினதும் தகவல்கள் இலங்கை அரசுக்கு பெருமளவு உதவி புரிகின்றது.
கடந்த 20 வருடங்களாக புலிகளின் உளவுப் படையில் இருந்த நபர் படகுமூலம் இந்தியாவுக்கு தப்பியோட முயற்சித்தபோது புலிகள் கலைத்துக் கலைத்து அந்தப் படகை சுட்டுத் தள்ளினர். அதற்கிடையேயும் அந்த நபர் தப்பியோடி இராணுவத்திடம் சரணடைந்துள்ளார். இவரிடமிருந்து மிக அதிகமான வன்னிப் பிரதேச தகவல்கள் பெறப்பட்டுள்ளது என்பது யாழ்ப்பாணத்தில் உள்ள பேச்சுக்கள்.
தற்போது யாழில் புலிகள் ஊடுருவினால் உளவுப் படையின் அதிவிரைவுப் படையினரிடம் தப்பிவிட முடியாது. புலிகளின் ஊடுருவலை ஆகக் குறைந்தது 2 கிழமையில் அழித்தொழித்துவிடுவர்.
முன்பு ஒருகாலத்தில் எப்படி புலிகள் மாற்று இயக்கத்தவர்களை அழித்தொழிப்பில் மிக வேகமாக செயற்ப்பட்டனரோ அதே போல இப்போது புலிகளை அழித்தொழிக்க இந்த முன்னாள் புலிகள் செயற்ப்படுவதை பார்க்க முடிகிறது. ஒரு குடும்பம் புலிகளுடன் தொடர்படையவர்கள் என்று தெரியவரின் அக்குடும்பம் காணாமல் போய்விடுவர்.
இந்தப் பிரிவினர் மோட்டார் சைக்கிளில் (mobile brigade) தான் எப்போதம் வருவார்கள். யாழ்ப்பாணத்தில் மக்களே பெரும்பான்மையினர் மோட்டார் சைக்கிள் பாவிப்பதால் பெரும்பாலானவர்கள் இந்த அதிவிரைவுப் படையினரை அவதானிப்பது மிக கடினம். இவர்கள் வரம்பு வாய்க்கால் என்ற வேறுபாடு இல்லாமல் வருவர். திரிவர். தேடுவர். இவர்களே யாழ்பாணத்தை யுத்தப் பிரதேசமாக வைத்திருப்பவர்களாவர். யாழ்ப்பாணத்தில் புலிகளின் நடவடிக்கைகளை ஒடுக்கியவர்கள் இந்த இராணுவப் பிரிவினரேயாவர்.
அண்மையில் சரசாலையில் ஒரு வீட்டில் புலிகள் பகலில் வந்து தங்கி போனவிடயம் அடுத்தநாள் அதிகாலையில் அந்த வீடு தாக்கப்பட்டு 3 பேர் கொல்லபட்டனர். அந்த வீட்டில் தொலைத்தொடர்பு சாதனம் துப்பாக்கிகள் எடுக்கபபட்டது. இப்படியாக இந்த தகவல்களை அரச இராணுவத்தினர்க்கு கொடுத்து உதவுபவர்களும் முன்னாள் புலிகளேயாகும். இந்த உளவாளிகள் புலிகளை காட்டித்தருவதாக சொல்லியே உயிருடன் விடப்பட்டுள்ளவர்கள் அல்லது அரசின் நம்பத்தகுந்த வட்டாரங்களாக மாற்றப்பட்டோராவர்.
இந்த அதிவேக தாக்கும் பிரிவினர் பல அதிகாரங்களை தமது கைவசம் கொண்டுள்ளனர். யாராவது ஒருவரில் சந்தேகம் என்றால் அவரிடம் அவரது அடையாள அட்டைகளை வாங்கிக் கொண்டு குறிப்பிட்ட முகாமிற்கு வரும்படி கூறிவிட்டுப் போவார்களாம். அங்கே இவர் போக முன்பு இவரைப் பற்றிய முழு விபரங்களும் பெற்றுக்கொண்டு இவரிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்படும். அதிலிருந்து இவரைப் பற்றிய முடிவுகள் எடுக்கப்படுவதாக மக்கள் கருதுகின்றனர்.
இன்று யாழ்ப்பாணத்தில் புலிகள் எந்த ஒரு வேலையும் செய்ய முடியாமல் இருப்பது பற்றி மக்கள் மிகவும் சாதாரணமாக பேசுவதுண்டு. காரணம் ஒருகாலத்தில் ஒரு சிறு முயற்ச்சியுடன் தமக்கு வேண்டியவர்களுக்கு கதவடைப்பு கர்த்தால் என்பன செய்யக்கூடியவர்கள் பாலசிங்கம், தமிழ்ச்செல்வன் மரணித்த போது யாழ்ப்பாணத்தில் எந்த ஒரு கதவடைப்போ கர்த்தாலோ செய்யப்படவில்லை என சிலரும், தற்போது யாழ்பாணத்தில் எல்லோரும் மொபைல் தொலைபேசியுடன் இருப்பதாயும் அப்படி இருந்தும் புலிகளின் தொடர்புகள் யாழ்பாணத்தினுள்ளே வருவது குதிரைக் கொம்பாகிவிட்டது. இது எல்லாவற்றிக்கும் காரணம் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் தற்போது அரசின் உளவாளிகளாக உள்ளதாலேயே என்று பலரும் பேசிக் கொள்கிறார்கள்.
புலிகளின் உயர்மட்டத்தில் அரச உளவாளிகள் இருப்பதாலேயே புலிகள் இப்படியான படுதோல்விகளைச் சந்திக்கிறார்கள் என்று பலரிடம் கருத்துண்டு இதற்கு உதாரணமாக ஆனந்தபுரம் சம்பவத்தை எல்லோரும் உதாரணமாக பேசுகின்றார்கள். போராற்றல் கொண்ட தளபதிகளான பால்ராஜ், கருணா, தீபன் போன்ற கட்டளைத்தளபதிகளை புலிகள் இழந்தது புலிகளுக்கு இராணுவ வல்லமையை இழந்துள்ளனர் என மக்கள் கருதுகிறார்கள்.
வன்னி நிலைமைகள் தொடர்பாக…..
புலிகளே எல்லாம் என்றிருந்த வன்னி மக்களை புலிகளும் துன்புறுத்தியது மிகவும் மனவேதனையானது என்று தப்பி வந்த முள்ளியவளை வாசி சொன்னார். தப்பிப் போகும் மக்கள் புலிகளால் சுடப்பபட்டுள்ளனர் என்ற கருத்து யாழில் பரவலாக உள்ளது. வெளி நாட்டுத் தமிழர்கள் இங்கு வந்து பார்த்து எமது நிலைமைகளை அவதானித்து பேசுவதே நல்லது என்ற அபிப்பிராயப்படுகின்றனர்.
புலிகள் 2000 பேர்மட்டில் கிழக்கு காடுகளில் தப்பியோடி உள்ளதாயும் 1000 பேர்மட்டடில் வன்னிக் காடுகளில் ஒழிந்துள்ளார்கள் என்றும் இனிமேல் கொரில்லாப் பாணியிலான தாக்குதல்களையே தொடுப்பர்கள் எனவும் பேசிக் கொள்கின்றனர்.
மேலும் புலிகளின் தலைவர்களாக சொர்ணம் பானு போன்றவர்களே இருப்பதாகவும் முக்கிய பல தலைவர்களை புலிகள் இழந்து விட்டதாயும் புலிகளால் இனிமேல் பாரிய இராணுவ நடவடிக்கைகளை செய்ய முடியாதென்றும் ஒரு சந்தை வியாபாரி கூறினார்.
யாழ் மருத்துவ மனைக்கு புலிகளால் சுடப்பட்ட 3 தமிழ் மக்கள் கொண்டு வரப்பட்டனர். அவர்கள் அங்கிருந்து தமது வியாதியின் கொடுமையிலும் தமது மரணத்தின் விளிம்பிலும் புலிகளால் சுடப்பட்டதை எடுத்துக் கூறி திட்டுகின்றனர்.
கோப்பாய் கொடிகாமம் நாவற்குழி ஆகிய பகுதிகளில் ஜடிபி முகாம்கள் நிறுவப்பட்டுள்ளன. இத்துடன் மேலும் முகாம்கள் நிறுவுவதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்காக புதிய இராணுவ காவலரண்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஜடிபி முகாம்களில் இந்து பிராமண பூசாரிகள் மிகவும் முறைகேடாகவே நடாத்தப்படுவதாயும் இது பற்றி கேட்பதற்கு யாரும் இல்லை என்ற ஆதங்கம் பலரிடமும் உள்ளது. ஒரு கிறீஸ்தவப் பாதிரியாரை இப்படியான முகாமில் வைத்திருப்பதை அரசு விரும்பவில்லை. ஆனால் இந்து மதகுருமார்கள் இந்த முகாம்களில் அடைக்கப்பட்டு தமது ஆஸ்த்தானங்களை கவனிக்க முடியாமல் உள்ளனர். இதற்கு பொறுப்பாக உள்ள இந்து கலாச்சார அமைச்சும் அதனைக் கவனம் எடுக்கவில்லை.
இறுதியாக…..
புலிகளின் காலத்தில் பெண்கள் நன்றாக நகையணிந்து எந்த நேரத்திலும் போகலாம் வரலாம் என்ற நிலை இருந்தது என்பதை எல்லோருமேமே ஒத்துக் கொள்கிறார்கள். ஆனால் தற்போது யாழ்ப்பாணத்தில் பல களவுகள் கொள்ளைகள் நடைபெறுகின்றது. இது பசி பட்டினி காரணமாகவே நடைபெறுகின்றது. காரணம் வேலையின்மை. மோட்டார் சைக்கிளில் வந்து வழிப்பறி செய்வதும் இராணுவத்தினர் போன்று நடித்து கொள்ளையடிப்பதும் தாராளமாக நடைபெறுவதாக பலரும் பேசிக் கொள்கிறார்கள்.
வெளிநாடுகளில் இந்தக் கொள்ளைகளை ஒரு குறிப்பிட்ட இயக்கத்தினரே செய்வதாக பிரச்சாரப்படுத்தப்படுகிறது. ஆனால் இந்த கொள்ளைகளில் பல தரப்பட்டவர்களும் ஈடுபடுகின்றனர்.
தற்போது யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் மக்களுடன் நெருங்கிப் பழகுகின்றனர். புலிகளின் வரிஅறவிடுதல் புலிகளின் பரிசோதனைகள் புலிகளின் கெடுபிடிகள் இல்லையென்று திருப்திப்படுபவர்கள் பலருள்ளனர். நான் எனது சொந்த அனுபவத்தில் புலிகளின் பரிசோதனைகளையும் இராணுவத்தின் பரிசோதனைகளையும் சந்தித்து உள்ளேன். புலிகள் நடந்துகொண்ட விதமும் பேசும் பேச்சுக்களும் ஒப்பீட்டளவில் இலங்கை இராணுவம் பரவாயில்லை என்ற மனப்பான்மையையே ஏற்படத்தியது. இப்படி இந்த இராணுவம் நடக்கிறது என்று யோசிக்கும் போது இராணுவம் புலிகளின் தவறுகளில் இருந்து பாடங்களை கற்றுக் கொள்கிறார்கள் என்றும் ஆனால் புலிகள் இராணுவத்தின் தவறுகளை படிப்பதில்லை மட்டுமல்ல தாமும் தவறுகளை தொடர்ந்து விடுகிறார்கள் என்றுமே எண்ணத் தோன்றுகின்றது. ஆனால் இனிமேல் புலிகள் திரும்பியும் வந்தால் என்ற பயம் உள்ளதை அவதானிக்க கூடியதாக இருந்தது.
யாழ்ப்பாணத்தில் ஆங்கிலம் மூலம் கல்வி கற்றல் அதிகரித்த வண்ணம் உள்ளது. ஆங்கிலத்தின் இலக்கிய ஆங்கில பாடங்கள் பரவலாக எல்லா உயர்தர பாடசாலைகளிலும் ஆங்கில மொழி மூலம் கற்ப்பிக்கப்படுகின்றது.
சிங்களம் படிப்பதால் நல்வாழ்க்கை பெறலாம் என்ற எண்ணம் மக்களிடம் வளர்ந்துள்ளது. இது இலங்கை அரசின் சிங்கள நாடு என்ற பயணத்திற்கான அறிகுறியாக தெரிகின்றது. அதேசமயம் சிங்கள இராணுவத்தினர் தாராளமாக தமிழில் பேசுகின்றனர். அவர்களுக்கு தமிழ் பல காலமாக படிப்பிற்கப்படுகின்றது.
1983ம் ஆண்டு காலப்பகுதியில் இருந்த சாதிப்பிரிவனர்க்குரிய விகிதாசாரங்களில் தற்போது சாதியமைப்புக்கள் யாழ்ப்பாணத்தில் மாற்றம் கண்டுள்ளது. சாதிக்குரிய தொழில்கள் மெல்ல மெல்ல புலிகளின் ஆதிக்க காலத்தில் செய்ய முடியாதிருந்த தொழில் முறைகள் மீண்டும் ஆரம்பித்துள்ளது. இதற்கு வேலையில்லாத் திண்டாட்டமே காரணமாகும். இதற்குரிய பரிகாரங்களை காணவேண்டி உள்ளது.
சாதியரீதியாக ஒடுக்கப்பட்ட பெரும்பான்மை மக்களின் ஆதரவைக் கொண்ட அமைப்பாக ஈபிடிபி யே உள்ளது. இதன் போது எனக்கு ஜாபகம் வந்த ஒருவிடயம் யாழ்பாணத்தில் புலிகள் தேர்தலை புறக்கணிக்கும்படி கேட்டு தேர்தல் புறக்கணிக்கப்பட்ட போது ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மக்கள் துணிந்து ஈபிடிபியை தமது பிரதிநிதியாக கொண்டு வந்தனர். இது பற்றி ஐபிசி ஆய்வாளர் ஜோதிலிங்கம் அந்த மக்களை நாம் (புலிகள்) வென்றெடுக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டி இருந்தார்.
சரசாலை சரஸ்வதி கல்லுரியில் ஆரம்ப கல்வி கற்ற யாழ் மத்திய கல்லுரி அதிபர் பற்றியும் அவரது கடமையுணர்வு உதவி மனப்பானமை மாணவர்களிடையே பெருமைமிக்க அதிபர் போன்ற விடயங்கள் யாழ்ப்பாணத்தில் இன்றும் அவர் கொல்லப்பட்டு பல காலங்களாகியும் மக்களால் பேசப்படுகின்றது. இத ஒரு முக்கியமான விடயமாக எனக்கு தெரிகின்றது.
புலிகளும் புலிகளின் ஊடகங்களும் செய்யும் பிரச்சாரங்கள் யாழ்ப்பாண மக்களைச் சென்றடைவதில்லை. அவை மக்களிடம் எடுபடவில்லை என்றே நான் கருதுகிறேன். இயக்கங்களால் பட்ட கஸ்ரங்களால் மக்களுக்குப் போராட்டத்தில் வெறுப்பும் சலிப்பும் எற்பட்டுள்ளது. இதன் காரணமாக தாம் இபபடியே இலங்கை இராணுவத்துடன் வாழ்ந்துவிட்டுப் போய்விடலாம் என்று எண்ணும் அளவிற்கு அவர்கள் தள்ளப்பட்டு உள்ளனர்.
சாதாரண சமாதான வாழ்வு என்றால் என்ன என்பதையே அவர்கள் மறந்துவிட்டனர். அதனால் திறந்தவெளிச் சிறைக்குள் ஊரடங்குவாழ்வுக்கு தங்களைப் பழக்கப்படுத்திக் கொண்டுள்ளனர். மகிந்த ஆண்டாலென்ன பிரபாகரன் ஆண்டாலென்ன இவர்களுடைய சகோதரங்களும் பிள்ளைகளும் ஆண்டாலென்ன தாங்கள் உண்டு தங்கள் வாழ்வு உண்டு என்று வாழப் பழகிக்கொண்டு உள்ளனர். அந்த மக்களை மௌனமாக்கிவிட்டு அங்கும் இங்குமாகப் பலரும் அவர்களுக்கு குரல் கொடுப்பதாகக் கூறி தங்கள் அரசியலை அவர்கள் தலையில் கட்டுகின்றனர். பாவம் அந்த மக்கள். அவர்களது ஊரடங்கு வாழ்வு முடிவின்றித் தொடர்கிறது.