முதியோர்கள் 58 பேர் சமளங்குளம் முதியோர் இல்லத்தில் பராமரிப்பு

20090424063601srilanka4.jpgவன்னி யில் இருந்து இடம்பெயர்ந்து வந்து வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 58 பேர் சமளங்குளம் அரசினர் பாடசாலையில் இயங்கத் தொடங்கியுள்ள வவுனியா கோவில்குளம் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் ஆலயத்தின் முதியோர் இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இங்கு மொத்தமாக 66 பேர் அனுப்பி வைக்கப்பட்டதாகவும், அவர்களில் 6 பேர் வயோதிபம் காரணமாக மரணமடைந்ததாகவும், இருவர் உறவினர்களின் வேண்டுகோளுக்கமைய அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும், எஞ்சிய 58 பேர் இந்த முதியோர் இல்லத்தில் தற்போது பராமரிக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவர்களில் சிலருக்கு உறவினர்கள் எவரும் இல்லையென்றும் பலர் தாமாக இயங்க முடியாதவர்களாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கோவில்குளம் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் ஆலய அறங்காவலர் அவையினர் இவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளையும், உணவையும் வழங்கி பராமரித்து வருகின்றார்கள். இந்த ஆலயத்தின் தொண்டர்கள் இவர்களைப் பராமரிக்கும் பணியில் முழுமையாக ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த முதியோர் இல்லத்திற்கு எம்.எஸ்.எப். மற்றும் இன்ரநஷனல் ஹன்டிகப்ட் எனப்படும் வலுவிழந்தோருக்கான சர்வதேச நிறுவனம் ஆகியன தேவையான மெத்தைகள், சக்கர வண்டிகள் போன்றவற்றை வழங்கி உதவியுள்ளன. இந்த இல்லத்திற்குத் தேவையான குடிநீர் வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு ஒக்ஸ்பாம் நிறுவனம் முன்வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *