![]()
கும்பகோணத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒருவருக்கு உபதலைவர் பதவி வழங்கப்பட்டு மலையக மக்களை வழிநடத்த வேண்டுமென்ற பரிதாபகரமான நிலைமை தோற்றுவிக்கப்பட்டுள்ளது என்று இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் உபதலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார். பொகவந்தலாவ முத்துலெட்சுமி தோட்டத்தில் நடைபெற்ற மேதினக் கூட்டத்தில் கலந்துகொண்ட அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது;
தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளை வென்றெடுக்கும் வகையில் தொழிற்சங்கங்களும் இணைந்து செயற்பட வேண்டும். தொழிலாளர்களின் உரிமைகளின் சுவடுகளைப் பிரித்தெடுத்து அதன் மூலம் முதலாளித்துவம் தொழிலாளர்களின் முதுகில் சவாரி செய்து இலாபம் தேட முற்பட்டு வருகிறது. இவ்வாறான நரித்தந்திர நடவடிக்கைகளுக்குத் தோட்டத் தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சில தொழிற்சங்கங்களும் துணைபோய்க் கொண்டிருக்கின்றன.
சாதாரண தொழிலாளர்களுக்கு 500 ரூபாவுக்கு குறையாத நாட்சம்பளம் வழங்கப்படுகின்றது. ஆனால், தோட்டத்தொழிலாளர்களுக்கு 200 ரூபா சம்பளம் மட்டுமே வழங்கப்படுகிறது. மேலதிக கொடுப்பனவு என்பது எல்லாம் வெறும் கண்துடைப்பேயாகும். மலையகத்தின் இளைஞர்களை வழிநடத்த தகுதிவாய்ந்த இளைஞர்கள் இல்லையா?
கும்பகோணத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு கூட உபதலைவர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. இனி இவரையும் தலைவராக ஏற்றுக்கொள்வது மலையக மக்களின் தலைஎழுத்து. இதேபோலத்தான் மலையகத்தில் மாகாண சபை உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்பட்டவர்களைக் கொழும்பில் தெருக்களிலெல்லாம் தேடித்திரிய வேண்டியநிலை தோட்டத்தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
எமது முழுவாழ்க்கையையும் தோட்டத்தொழிலாளர்களினதும் மலையக மக்களினதும் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்து கொண்டு சேவை செய்து வருவதை இலட்சியமாகக் கொண்டுள்ளோம்.