மேல் மாகாண சபைக்கான அமைச்சரவை, அலரிமாளிகையில் வைத்து சத்தியப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டதன் பின்னர் நேற்று அங்கு நடைபெற்ற வைபவத்தில் கலந்துகொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றும் போது உறுதிமொழிகளை எதிர்பார்த்திருக்காத மக்கள், வயிற்றுப்பசியை விடவும் நாட்டைப் பற்றியே சிந்தித்துள்ளனர் என்று தெரிவித்தார்
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்: ” மக்கள் வயிற்றுப் பசியை விடவும் நாட்டைப் பற்றியே சிந்தித்துள்ளனர். இதன் மூலமாகவே மேல் மாகாண சபைத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை வாக்குகளை எம்மால் பெற்றுக்கொள்ள முடிந்தது. மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு மக்கள் பிரதிநிதிகள் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். மக்கள் வழங்கிய ஆணையை பிரதிநிதிகள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஏனென்றால் மக்கள் உறுதிமொழிகளை எதிர்பார்க்கவில்லை. பசி, வேலை வாய்ப்பு என்பவற்றுக்கு மேலாக நாட்டை முன்நிறுத்திப் பார்த்துள்ளனர் என்பதனால் மக்கள் பிரதிநிதிகளுக்கு பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றார்.