25

25

வவுனியா அகதி முகாம்கள் நிலை: அத்தியாவசியத் தேவைகளில் தட்டுப்பாடு

mullaitheevu.jpg
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியாவிலுள்ள பல்வேறு முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ள அகதிகளின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ள நிலையில், முகாம்களிலே குடிநீர், உணவு மற்றும் பிற அத்தியாவசியத் தேவைகளுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதாக முகாம்வாசிகள் தெரிவித்துள்ளனர்.

ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஒரே இடத்தில் தங்கவைக்கப்படுகிற நிலைமை இல்லை என்றும் முகாமில் உள்ளவர்கள் தமது உறவுகளை தொடர்புகொள்வது இயலாத காரியமாக உள்ளது என்றும் முகாம் வாசிகள் தெரிவிக்கின்றனர்.

வன்னியில் காயமடைந்த 848 பொதுமக்கள் வவுனியா ஆஸ்பத்திரியில் அனுமதி

puthu.jpgவன்னி யில் இடம்பெற்ற தாக்குதல்களில் காயமடைந்த 848 பொதுமக்கள் வியாழக்கிழமை வரை வவுனியா ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.

இதில் மரணமான 36 பேரது சடலங்கள் ஆஸ்பத்திரி பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன. வன்னியிலிருந்து கடந்த மூன்று நாட்களிலேயே காயமடைந்த இவர்கள் வவுனியாவுக்கு கொண்டு வரப்படுகிறது.

இந்த 848 பேரில் படுகாயமடைந்த பலர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக கொழும்பிலிருந்து மருத்துவர் குழுவொன்று வவுனியாவுக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

யாழ். தேவி ரயில் சேவை நடவடிக்கை தலைமையகம் நிறுவ அமைச்சரவை முடிவு

யாழ்தேவி ரயில்சேவைக்கான நடவடிக்கைச் செயலக மொன்றை ஸ்தாபிக்கவும் அதற்கு ஊழியர்களைச் சேர்த் துக்கொள்வதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கி யுள்ளது.

போக்குவரத்துத் துறை அமைச்சர் டலஸ் அழகப் பெரும சமர்ப்பித்த பிரேரணைக்கு அமைச்சரவை அனு மதியளித்ததாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார். யாழ்ப்பாணத்திற்கும் தெற்குக்கும் உறவுப் பாலத்தை ஏற்படுத்தும் வகையில்’வடக்கு நட்பு’ வேலைத் திட்டத்தின் கீழ் யாழ்தேவி ரயில் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.

இத்திட்டத்திற்குப் பங்களிப்புச் செய்யுமுகமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது ஒரு மாத சம்பளத்தை முதலில் வழங்கி நிதியத்தை ஆரம்பித்து வைத்திருப்பதாகவும், அதனை அமைச்சர் அழகப்பெரும தொடர்ந்து வருவதாகவும் அமைச்சர் யாப்பா தெரிவித்தார்.

வன்னியிலிருந்து வந்த 4,325 பேர் தென்மராட்சியில் தங்கவைப்பு

Wanni_War_Welfare_Campவன்னி புதுமாத்தளன் பகுதியில் இடம்பெறும் இராணுவ நடவடிக்கைகள் காரணமாக கடந்த 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் மட்டும் 4 ஆயிரத்து 325 பொதுமக்கள் யாழ்ப்பாணத்திற்கு இடம்பெயர்ந்து வந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.  இவர்களில் 2 ஆயிரத்து 70 பேர் கொடிகாமம் திருநாவுக்கரசு மகா வித்தியாலயத்திலும் 2 ஆயிரத்து 259 பேர் சாவகச்சேரி இந்து மகளிர் கல்லூரியிலும் தங்கவைக்கப்பட்டிருக்கின்றனர்.

யாழ். மாவட்ட அரச அதிபரின் மேற் பார்வையில் தென்மராட்சி பிரதேச செயலகம் இவர்களுக்கான சமைத்த உணவை வழங்கி வருகிறது. சாவகச்சேரி நகர சபையின் நீர் வழங்கல் பிரிவு குடிநீர் வசதிகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, வன்னியில் இராணுவ நடவடிக்கைகள் ஆரம்பமான நாளிலிருந்து இதுவரை இடம்பெயர்ந்து வந்தவர்களில் தென்மராட்சியில் மட்டும் 9 ஆயிரத்து 516 பேர் தங்கவைக்கப்பட்டிருக்கின்றனர். இவர்கள் தென்மராட்சியிலுள்ள 5 நலன்புரி நிலையங்களிலும் 2 பாடசாலைகளிலும் தங்கவைக்கப்பட்டிருக்கின்றனர்.

மஹியங்கனையில் சிங்கள ஆசிரியையினால் எழுதப்பட்ட தமிழ்நூல் வெளியீடு

மஹியங்கனை பண்டாரநாயக்க மத்திய மகா வித்தியாலயத்தில் தமிழ் மொழி கற்பிக்கும் ஆசிரியை விமலா கொடிஆரச்சி எழுதிய இரண்டு தமிழ்ப் புத்தகங்களின் (கைநூல்) வெளியீட்டு விழா அண்மையில் மஹியங்கனை தேசிய பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. வெளியீட்டு விழா நிகழ்வில் நூலாசிரியர் விமலா கொடிஆரச்சி பேசுகையில்: ‘நான் சிங்கள மொழிமூலம் கற்றேனாயினும் தமிழ் மொழியின் மீதுள்ள பற்றுதல் மற்றும் ஆற்றல் காரணமாக இக்கைநூலை எழுதக் கிடைத்தது. இந்நூல் சிங்கள மொழி மூலக் கல்வி பயிலும் மாணவர்களின் தேவையில் ஒரு சிறு பங்களிப்பைச் செய்யும் என்று எதிர்பார்க்கிறேன்.’

‘6ம், 7ம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான தமிழ் மொழிக் கைநூல்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்புத்தகங்கள் நன்கு பிரயோசனப்படக் கூடியவையாகும். மஹியங்கனை ஜீ.எம். நூல் வெளியீட்டு நிறுவனத்தினால் இப்புத்தகங்கள் வெளியிட்டு வைக்கப்பட்டன

வவுனியாவுக்கு இடம்பெயர்ந்தவர்களில் 30 ஆயிரம் பேர் மன்னாருக்கு அனுப்பப்படுவர்

Wanni_War_Boat_Refugeesவன்னி யிலிருந்து வவுனியாவுக்கு இடம்பெயர்ந்து வந்தவர்களில் முப்பதாயிரம் பேரை மன்னாருக்கு அனுப்பிவைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வன்னியில் இடம்பெறும் இராணுவ நடவடிக்கையால் அங்கிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து வவுனியா வந்துள்ளனர்.

இவர்களை தங்கவைத்து பராமரிப்பதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இதையடுத்து, சுமார் 30,000 பேரை மன்னாருக்கு அனுப்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மன்னாரில் இவர்களைத் தங்க வைக்க 20 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. அங்கு இவர்கள் அனுப்பப்பட்டு அங்கு தங்கவைக்கப்பட்டு பராமரிக்கப்படவுள்ளனர்.

நேற்று முன்தினம் புதன்கிழமை மாலை வவுனியா மாவட்ட செயலகத்தில் அனர்த்த நிவாரண அமைச்சர் அமீர் அலி, தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது. மன்னார் தீவுக்குள் உள்ள 20 பாடசாலைகளில் மக்களை தங்கவைக்க வசதிகள் உள்ளதாக மகாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.

தேசநிர்மாணத்துறை அமைச்சர் எவ்.எம்.சந்திரசேனா, வடமாகாண ஆளுநர், வவுனியா மன்னார் மாவட்ட அரச அதிபர்கள் உட்பட முக்கிய அதிகாரிகள் பலரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். ஓமந்தைக்கு இடம்பெயர்ந்த மக்கள் பல்லாயிரக்கணக்கில் வந்து சேர்ந்துள்ளதாக இராணுவத் தரப்பு தகவல்கள் தெரிவித்தன. வியாழக்கிழமை முதல் இடம்பெயர்ந்த மக்களை பஸ்கள் மூலம் மன்னாருக்கு அனுப்பிவைக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படுமென படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

உற்பத்தி செலவினத்தைக் குறைக்க புதிய வகை இயந்திரம் அறிமுகம்

சுமார் 55 வருடகால பழைமைவாய்ந்த வாழைச்சேனை தேசிய கடதாசி ஆலையின் உற்பத்தி நடவடிக்கைகளை மேம்படுத்தவென தேச நிர்மாண அமைச்சின் 20 மில்லியன் ரூபா நிதியில் கொள்வனவு செய்யப்பட்ட புதிய இயந்திரமொன்று தொழிற்சாலைக்கு வழங்கப்பட்டுள்ளது. உமி மூலமாக எரியூட்டும் இவ்வியந்திரத்தின் செயற் பாட்டினை கடதாசி ஆலையின் தலைவர் சிறிபால அமரசிங்க வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.

ஆலை முகாமையாளர் ரீ. வாமதேவன் தலைமையில் இது தொடர்பாக நடைபெற்ற வைபவத்தில் சர்வமதத் தலைவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். உமியை எரிபொருளாகக் கொண்டு இப்புதிய இயந்திரம் இயங்கச் செய்வதனால் கடதாசி உற்பத்திச் செலவு குறைவடையுமென எதிர்பார்க்கப்படுகிறது.

1955 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட வாழைச்சேனை கடதாசி ஆலையில் மூவாயிரம் ஊழியர்கள் பணியாற்றி மாதம் ஒன்றில் 1800 தொன் உற்பத்தி இடம்பெற்றது. பிற்காலத்தில் அரசுகளின் மாறுபட்ட கொள்கை காரணமாக சந்தைப்படுத்தலில் ஏற்பட்ட வீழ்ச்சியினையடுத்து ஆலை நட்டத்தில் இயங்கியது.

இதையடுத்து ஊழியர்களது எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்பட்டு தற்போது 240 ஊழியர்கள் மாத்திரமே பணியாற்றுவதுடன், மாதத்திற்கு 450 தொன் கடதாசியே உற்பத்தி செய்யப்படுகிறது. இங்குள்ள கட்டடங்கள் பழைமையடைந்துள்ளதுடன், இயந்திரங்களும் துருப்பிடித்துக் காணப்படுகின்றன.

இங்குள்ள ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்குக் கூட உற்பத்தி இலாபம் பெறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனைக் கருத்திற்கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விசேட பணிப்புரைக்கிணங்க வாழைச்சேனை தேசிய கடதாசி ஆலையின் உற்பத்தி நடவடிக்கைக்கு ஊக்கமளிக்கும் நோக்குடன் புதிய இயந்திரம் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்தேவி சேவை வவுனியா வரையுமே

sri-lanka-railway.jpgயாழ் தேவி ரயில் சேவை தாண்டிக்குளம் வரையும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டபோதிலும், பாதுகாப்பு காரணங்களால் வவுனியா வரையுமே தற்போது நடைபெறுகிறது. வியாழக்கிழமையில் இருந்து யாழ்தேவி ரயில் வவுனியாவுக்கு அப்பால் தாண்டிக்குளம் ரயில் நிலையம் வரையும் நடைபெறும் என போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும அறிவித்திருந்தார்.

ஆனால், தற்போதைய நிலையில் பாதுகாப்பு காரணங்களால் வவுனியாவுக்கு அப்பால் இச்சேவையை நீடிக்க முடியவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். வவுனியாவில் இருந்து மூன்று கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ள தாண்டிக்குளம் ரயில் நிலையமும் ரயில் பாதையும் புனரமைக்கப்பட்டது.

யாழ்தேவி ரயில் சேவையை மீண்டும் வடக்கு நோக்கி நடத்துவதற்கு தொடர்பான திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு கடந்த மார்ச் 23 ஆம் திகதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றது. இதன்போது வடபகுதி நோக்கிய ரயில் சேவையின் அவசியம் குறித்தும் ஆராயப்பட்டது.

களுத்துறை சிறைச்சாலையிலிருந்து 100 கைதிகள் இடமாற்றம்

களுத்துறை சிறைச்சாலையிலிருந்து சுமார் 100 கைதிகள் நாட்டின் வேறு பகுதிகளிலுள்ள சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அண்மையில் இந்தச் சிறைச்சாலையில் கொல்லப்பட்ட கைதிகளின் மரணம் தொடர்பான விசாரணைகளை அடுத்தே இவர்கள் இடமாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலை உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

களுத்துறை சிறைச்சாலையில் ஆண், பெண் கைதி மற்றும் விளக்கமறியல் கைதிகள் 1600 பேரும், 162 காவலர்களும் உள்ளனர். இக் கொலை தொடர்பான நீதிமன்ற விசாரணைகளை நீதிவான் அநுர செனவிரத்ன மேற்கொண்டு வருகின்றனர்.

சர்வதேச சமூகம் போரை நிறுத்த உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்: யாழ் பல்கலைக்கழக ஒன்றியம்

civiling_flee_vanni_02.pngதமிழ் மக்களைப் பேரழிவுக்கு உள்ளாக்கியிருக்கும் போரை நிறுத்தி, அவர்களை அழிவிலிருந்து பாதுகாப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் சர்வதேச சமூகத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

யுத்த பிரதேசத்தில் அழிவு, மறுபக்கத்தில் அகதி முகாம்களில் வாடிய வாழ்க்கை, இந்த நிலையில் உள்ள மக்களைக் காப்பாற்றி, நிரந்தரமான அமைதிக்கும், இயல்பான ஒரு வாழ்க்கைக்கும் வழி வகுத்துக் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் என்றும் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அறிக்கையில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் இனவாத போக்கைக் கண்டித்து, போருக்கு முடிவு கட்ட சர்வதேசம் முன்வர வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.

அண்மையில் 1500க்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழ் மக்கள் போர் வலயத்திற்குள் பலியாகியிருந்தும் சர்வதேச சமூகம் பாராமுகமாக இருப்பது பெரும் வேதனையளிப்பதாக இருக்கின்றது என கவலை வெளியிட்டுள்ள யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், வன்னிமக்கள் மீது நடத்தப்படுகின்ற தாக்குதல்களினால் தமது மாணவர்கள் தங்கள் உறவுகளைப் பறிகொடுத்த நிலையில் அவர்கள் பற்றிய தகவல்களை அறிய முடியாமல் துடித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.