யாழ் தேவி ரயில் சேவை தாண்டிக்குளம் வரையும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டபோதிலும், பாதுகாப்பு காரணங்களால் வவுனியா வரையுமே தற்போது நடைபெறுகிறது. வியாழக்கிழமையில் இருந்து யாழ்தேவி ரயில் வவுனியாவுக்கு அப்பால் தாண்டிக்குளம் ரயில் நிலையம் வரையும் நடைபெறும் என போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும அறிவித்திருந்தார்.
ஆனால், தற்போதைய நிலையில் பாதுகாப்பு காரணங்களால் வவுனியாவுக்கு அப்பால் இச்சேவையை நீடிக்க முடியவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். வவுனியாவில் இருந்து மூன்று கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ள தாண்டிக்குளம் ரயில் நிலையமும் ரயில் பாதையும் புனரமைக்கப்பட்டது.
யாழ்தேவி ரயில் சேவையை மீண்டும் வடக்கு நோக்கி நடத்துவதற்கு தொடர்பான திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு கடந்த மார்ச் 23 ஆம் திகதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றது. இதன்போது வடபகுதி நோக்கிய ரயில் சேவையின் அவசியம் குறித்தும் ஆராயப்பட்டது.