கடனை மீளச் செலுத்தக்கூடிய ஆற்றல் அரசாங்கத்திடம் இருப்பதாலேயே சர்வதேச கடன்களைப்பெற தீர்மானித்ததாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். அரசாங்கம் வெற்றிகரமான பொருளாதாரத் திட்டத்தைக் கொண்டுள்ளது. கடனை மீளச் செலுத்தும் உறுதிப்பாடும் எமக்குள்ளது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
நாட்டைப் பாதுகாத்து மக்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் போராட்டத்தில் ஒரு தூக்குமரமல்ல பத்துத் தூக்குமரத்தைச் சந்திக்கவும் தயாராகவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணையும் நிகழ்வு நேற்று முன்தினம் அலரிமாளிகையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது:-
ஜனாதிபதித் தேர்தலின் போது நான் மக்கள் ஆணையை வேண்டுகின்ற போது இந்தநாட்டு மக்கள் அனைவருமே நாடு துண்டாடப்படுவதைத் தடுத்து நாட்டைப் பாதுகாத்து ஐக்கியப்படுத்துமாறு என்னைக் கோரினர்.
இந்த நாட்டைக் காட்டிக் கொடுத்த தலைவர் என எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவையே கூற முடியும். நாட்டைப் பகுதியாகப் பிரித்து புலிகளுக்கு நிர்வாகம் வழங்கியவர் அவர். இன்று வன்னிப் பகுதியில் படையினர் மீட்டெடுக்கும் பாரியளவு ஆயுதங்களை நாம் தொலைக் காட்சி மூலமாகப் பார்க்கிறோம். இது வடக்கையும், கிழக்கையும் பாதுகாக்கவென புலிகள் வைத்திருந்த ஆயுதமென நீங்கள் நினைக்கிர்களா? இன்னும் சில மாதங்கள் தாமதமாகியிருந்தால் நிலைமை மோசமாகியிருக்கும். மக்கள் அன்று நாட்டைப்பற்றி சிந்திக்காமல் தவறான தீர்ப்பை தேர்தலில் வழங்கியிருந்தால் புலிகள் கனவுகண்ட தமிழஈழம் சுலபமாகக் கிடைத்திருக்கும். நீர்கொழும்பிலிருந்து பதுளை வரையிலான பகுதிகள் நாட்டிலிருந்து துண்டாடப்பட்டிருக்கும் ஈழம் அமைக்கப்பட்டிருக்கும். புலிகளின் எதிர்பார்ப்பு அதுவே.
தாய்நாட்டைப் பாதுகாப்பதற்கான மக்கள் ஆதரவும் ஆணையும் எனக்குக் கிடைத்ததால்தான் நாடு பாதுகாக்கப்பட்டது. எமது அர்ப்பணிப்புடனான தீர்மானத்தைக் கண்டே மக்கள் எமக்கு ஆதரவு வழங்கினர். இதற்கு மக்கள் ஆதரவு கிடைத்திருக்கவில்லையெனில் தாய் நாட்டைப் பாதுகாக்கும் இப்பயணத்தைத் தொடர்திருக்க முடியாது. அனைத்துப் பிரசாரங்கள் அழுத்தங்களையும் எதிர்கொள்ள மக்கள் ஆதரவே உறுதுணையாகியது.
நாட்டைப் பாதுகாப்பதற்காக நாம் தற்போது கோடிக்கணக்கில் பணத்தை செலவிடுகின்றோம். யுத்தம் புதிதாக முளைத்ததல்ல. முப்பது வருடகாலம் பழமையானது. ரணில் விக்கிரமசிங்க நாட்டைப் புலிகளுக்கு வழங்கியது மட்டுமல்லாமல் உளவுப் பிரிவினரைக் கொல்லவும், பொதுமக்கள் பலியாகவும் காரணமானவர். என தெரிவித்த ஜனாதிபதி சகல சவால்களையும் வெற்றிகொள்ளும் இப்பயணத்தை மேலும் சக்திப்படுத்த மேல் மாகாணத் தேர்தலில் மக்கள் முழுமையான ஆதரவினை வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.