April

April

“தமிழ் மக்களின் குரலாக ஒலிக்கும் மனோகணேசனின் கரத்தை பலப்படுத்த தேர்தலை பயன்படுத்தவேண்டும்’

election_ballot_cast.jpgதலைநகர் கொழும்பில் தமிழ் மக்களின் உண்மைக்குரலாக, உரிமைகளை பெறுவதற்கு உரிய விதத்தில் ஓங்கி ஒலிக்கும் குரல் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தலைவர் மனோ கணேசன் என்பதை உலகமே அறியும் என்று கொழும்பு மாநகரசபை உறுப்பினரும் மேல்மாகாணசபைக்கான வேட்பாருமான ஏணி.எஸ்.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

எமது தமிழ் சமூகத்தின் உரிமைகருதி, உயர்வு கருதி தனது சிந்தனையையும் , செயலையும் விரிவுபடுத்துவதோடு, உரிமைக்குரலை நேர்மையாக முன்வைக்கும் நிகரற்ற தலைவர் மனோகணேசன். கடந்த காலங்களில் நடந்தநிகழ்வுகளில் கடத்தல், காணாமல்போனோருக்காக கரிசனையுடன் கடமையாற்றிய அவரின் கவனத்தை ஈர்க்கும் செயற்பாடுகள் கொழும்பில் இப்படியும் ஓர் அரசியல்வாதியா! என்று வியந்து பார்க்கும் அளவுக்கு பெருமைக்குரியது.

நமக்காக, நமது சமூகத்துக்காக நற்சிந்தனையுடன் காரியமாற்றும் மனோகணேசனின் கரங்களை நாம் அனைவரும் பலப்படுத்தும் ஓர் அரிய சந்தர்ப்பம் மேல் மாகாணசபைத் தேர்தலாகும். கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் எமது ஜனநாயக மக்கள் முன்னணியின் வேட்பாளர்கள் மூவர் போட்டியிடுகின்றோம். மூவருக்கும் தமிழ் மக்களின் விருப்பு வாக்குகள் மூன்றையும் அளித்து அமோக வெற்றிபெறச் செய்வது நமது தலைவர் மனோகணசேனின் கரங்களை பலப்படுத்தும் ஓர் அரிய கடமையாகும்.

கொழும்பு மாவட்டத் தமிழ் மக்கள் தங்களது விருப்பு வாக்குகள் மூன்றினையும் ஜனநாயக மக்கள் முன்னணிவேட்பாளர்களுக்கே அளித்து, அமோக ஆதரவை தெரிவிக்கவேண்டும். அதன் மூலம் ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதிநிதித்துவம் மேலும் இரண்டில் மூன்றாக அதிகரிக்கப்படும் அதேநேரம் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் மேல் மாகாணசபையில் அதிகரிக்கவும் வாய்ப்பு ஏற்படும்.

மேல் மாகாணசபையில் மூன்று பிரதிநிதித்துவத்தை பெறுவதன் மூலம் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரின் பலம் அதிகரிக்கப்படுகின்றது என்பதை நாம் நன்குணர்ந்து, ஐக்கிய தேசிய கட்சியின் யானை சின்னத்துக்கு வாக்களிக்கும் அதேசமயம் மூன்று விருப்பு வாக்குகளையும் ஜனநாயக மக்கள் முன்னணி வேட்பாளர்களுக்கே அளிக்க வேண்டியது தமிழ் மக்களின் தன்மானக்கடமையாகும்.

கொழும்பு மாவட்டத் தமிழ் மக்கள் வெல்லமுடியாத வேட்பாளர்களுக்கு வாக்களித்து வாக்குகளை வீணாக்காது. வெற்றிபெறும் மூன்று வேட்பாளர்களையும் அமோக வெற்றி பெறச் செய்வதே ஆரோக்கியமான வாக்களிப்பாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

Project Beacon – இறுதிக் கட்டத்தில்!! புலிகளின் தலைமை ஆபத்தில்!!! : த ஜெயபாலன்

Pirabakaran_V2005 டிசம்பரில் பதவிக்கு வந்த ராஜபக்ச அரசால் ஒஸ்லோவில் இணைத் தலைமை நாடுகளுக்கு கையளிக்கப்பட்ட 5 ஆண்டுகளில் புலிகளை துடைத்தழிக்கும் திட்டமே புரஜக்ற் பிக்கன். பாதுகாப்பு அமைச்சுச் செயலர் கோதபாய ராஜபக்சவாலும் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவாலும் வடிவமைக்கப்பட்ட இந்த இராணுவத் திட்டத்தின் மூன்றாவது வருட நடவடிக்கை இவ்வாண்டு ஏப்ரல் 30ல் முடிவுக்கு வருகிறது. இந்த புரஜக்ற் பீக்கன் திட்டத்தின் பின்னால் இந்தியாவின் பங்களிப்பு இல்லையென்று சொல்வது அர்த்தமற்றவாதம்.

ஆனால் இவ்வாறான ஒரு திட்டம் இலங்கை அரசால் இணைத்தலைமை நாடுகளுக்குவழங்கப்பட்டு அவர்களின் ஆசீர்வாதம் பெறப்பட்டதா என பிரித்தானியாவில் உள்ள இலங்கைத் தூதரிடம் கேட்டபோது அவ்வாறான ஒரு திட்டம் பற்றி தான் அறிந்திருக்கவில்லை என அவர் தேசம்நெற் க்குத் தெரிவித்தார்.

இந்தத் திட்டத்தை நிறைவேற்ற மகிந்த அரசு எவ்வித அரசியல் தலையீடும் ஏற்படுத்தப்பட மாட்டாது என்பதையும் இராணுவத்திற்கான முழுமையான ஒத்துழைப்பையும் உறுதிப்படுத்தியது. பாதுகாப்பு அமைச்சுச் செயலாளர் கோதபாய ராஜபக்சவும் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவும் முடிவுகளை சுதந்திரமாக எடுக்க முடிந்தது. இந்தியாவின் இராணுவ ஒத்துழைப்பும் அவர்களுக்கு இருந்தது.

படையினரே எதிர்பாராத வகையில் ஏப்ரல் 5ல் புதுக்குடியிருப்புப் பகுதியை சுற்றி வளைத்ததில் விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனும் அவரது மகன் சார்ஸ் அன்ரனியும் சுற்றி வளைக்கப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கசிந்துள்ளன. படையினரின் வியூகத்தை உடைத்து தலைமையைக் காப்பாற்றும் கடுமையான மோதலில் புலிகளின் முக்கிய தளபதிகள் பலரும் போராளிகளும் கொல்லப்பட்டு தலைமை அச்சுற்றி வளைப்பை உடைத்து வெளியேற்றப்பட்டு உள்ளதாகவும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் அக்குறுகிய சுற்றி வளைப்பில் இருந்து வெளியேறிய போதும் இராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டு உள்ள முல்லைத்தீவு பகுதியின் இராணுவ அரணை உடைத்து வெளியேற முடியவில்லை என்றும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதல்களில் முக்கிய உறுப்பினர்களை உயிருடன் கைது செய்ய இராணுவத்தினர் மயக்க வாயுவை பயன்படுத்தியதாகவும் அதே தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏப்ரல் 5ல் இடம்பெற்ற மோதலில் இரு தரப்பிலும் பலத்த இழப்புகள் ஏற்பட்டது. ஆயினும் புலிகளின் முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டது மட்டுமல்ல அவர்களின் உடல்கள் இராணுவத்தினால் கைப்பற்றப்பட்டும் உள்ளது. இவர்கள் வருமாறு அடையாளம் காணப்பட்டு உள்ளனர். புலிகளின் பெண்கள் பிரிவின் மாலதி படையணியின் தலைவரான விதுஷாவும், பிரதித் தலைவரான துர்காவும்,  நாகேஷ், கடாபி மற்றும் தீபன் ஆகிய மூன்று முக்கிய தலைவர்களும் புலிகளின் பிராந்திய பொறுப் பாளர்கள் ஆவர். கடாபி, பிரபாகரனின் மெய்ப் பாதுகாவலருமாவார். மணிவண்ணன் புலிகளின் ஆட்டிலறிப்பிரிவுத் தலைவராவார்.

இந்த பாரிய இழப்புகளை வெளியிடுவது உளவியல் ரீதியான பலவீனத்தை ஏற்படுத்தும் என்பதால் புலிகள் இந்த முக்கிய தளபதிகளின் இழப்புகள் பற்றி மௌனமாகவே உள்ளனர். புலிகளின் ஆதரவு இணையத் தளமான தமிழ்நெற்றுக்கு சவாலாக உருவாக்கப்பட்ட ‘டிபென்ஸ் எல்கே’ தற்போதைய யுத்தம் பற்றிய செய்திகளை உடனுக்குடன் வெளியிடும் ஊடகமாக மாறியுள்ளது. புலிகளின் ஆதரவாளர்கள் உட்பட தமிழ்நெற் பார்ப்பவர்களிலும் பார்க்க டிபென்ஸ் எல்கே பார்த்து யுத்த நிலவரத்தை அறிந்துகொள்பவர்கள் அதிகரித்து உள்ளனர். அதனால் புலிகள் மறைக்க விரும்பும் செய்திகளும் ஆதார பூர்வமாக அங்கு வெளியிடப்படுகிறது. ஒளிவிச்சு, தமிழ்நெற் எல்லாவற்றையும் டிபன்ஸ் எல்கே உங்வாங்கிக் கொண்டுவிட்டது.

புதுக்குடியிருப்பில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து நேற்று மாலை (ஏப்ரல் 5ல்) லண்டனில் அவசர அவசரமாகக் கூடிய புலிகளின் முக்கிய ஆதரவாளர்கள் சர்வதேச அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும் நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கி உள்ளனர். அதன் ஒரு கட்டமாக இன்று பிரித்தானியாவின் வெஸ்ற்மினிஸ்ரர் பாராளுமன்றத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இந்த ஆர்ப்பாட்டம் அடுத்த சில தினங்களுக்கு தொடர்ச்சியாக நடைபெறும் என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஒரு தீவிர ஆதரவாளர் தேசம்நெற் க்குத் தெரிவித்தார். காவல்துறையினர் சுமுகமாகவே நடந்து கொள்வதாகவும் ஆர்ப்பாட்டம் அமைதியாக இடம்பெறுவதாகவும் அவர் தேசம்நெற் க்குத் தெரிவித்தார்.

புரஜக்ற் பீக்கன் திட்டத்திற்கு ஆரம்பத்தில் இணைத் தலைமை நாடுகள் அச்சத்துடனேயே தங்கள் ஆதரவை வழங்கி இருந்தனர். குறித்த காலப்பகுதியில் ஒவ்வொரு இலக்கும் அடையப்பட வேண்டும் என்பதை இணைத்தலைமை நாடுகள் வலியுறுத்தி இருந்தன. இத்திட்டத்தின் முதலாவது ஆண்டின் வெற்றி இணைத் தலைமை நாடுகளுக்கு இலங்கை அரசாங்கத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தி இருந்தது.

புரஜக்ற் பீக்கன் இராணுவத் திட்டப்படி புலிகளின் கரையோரக் கட்டுப்பாட்டுப் பகுதி 3 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு அவற்றை ஒவ்வொன்றாகக் கைப்பற்ற தீர்மானிக்கப்பட்டது. அதன் படி ஒவ்வொரு பிரிவையும் கைப்பற்ற இலங்கை அரசு 12 மாதங்களாக மூன்று ஆண்டுகளுக்குள் புலிகளின் நிலப் பரப்பைக் கைப்பற்ற திட்டம் இட்டது.

01 மே 2006 – 30 ஏப்ரல் 2007 திருகோணமலையின் சம்பூர் முதல் மட்டக்களப்பின் பனிச்சங்கேணி வரையான கiயோரப் பகுதியையும் அதனோடு இணைந்த நிலப்பகுதிகளையும் கைப்பற்றுவது.
01 மே 2007 – 30 ஏப்ரல் 2008 மன்னார் முதல் பூனேரியன் வரையான கரையோரப் பகுதியையும் அதனோடு இணைந்த நிலப்பரப்பையும் கைப்பற்றுவது.
01 மே 2008 – 30 ஏப்ரல் 2009 ஆனையிறவு முதல் கொக்குத்தொடுவாய் வரையான கரையோரப் பகுதியையும் அதனோடு இணைந்த நிலப்பகுதியையும் கைப்பற்றுவது.

புலிகளின் கட்டுப்பாட்டை கைப்பற்றும் இந்த திட்டங்களின் படி புலிகளுக்கான ஆயுதங்கள் தரையிறக்கப்படும் விநியோக வழிகளை கட்டுப்படுத்த புரஜகற் பீக்கன் திட்டமிட்டது. அதன்படி அம்பாறை, சிலாவத்துறை, புல்மோட்டை மற்றும் பருத்தித்துறை ஆகிய பகுதிகள் இந்த மூன்றாண்டு திட்டத்தில் கைப்பற்றுவது முக்கிய இலக்குகளாக அமைந்தது.

01 மே 2009 – 30 ஏப்ரல் 2011 காலப் பகுதி புலிகளை களையெடுக்கும் காலப் பகுதியாக அமையும். தங்களுக்கான விநியோகங்கள் இல்லாத நிலையில் வன்னி காடுகளுக்குள் உள்ள புலிகளை களையெடுக்கும் காலப் பகுதியாக இது அமையும். ஏப்ரல் 2011க்கு அண்மையாகவே மகிந்த ராஜபக்ச அரசின் முதலாவது ஆட்சிக்காலம் நிறைவு பெற்று பொதுத் தேர்தல் இடம்பெற வேண்டிய காலப்பகுதியாகும்.

01 மே 2006 – 30 ஏப்ரல் 2007 வரையான முதலாவது ஆண்டு காலப்பகுதி இலங்கை அரசுக்கு மிகுந்த வெற்றியை ஏற்படுத்தியது. சம்பூரில் 25 ஏப்ரல் முதலாவது விமானத் தாக்குதல் நடத்தப்பட்டது. அப்பகுதி முழுமையும் 30 ஏப்ரல் 2007ல் இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது. இணைத் தலைமை நாடுகள் இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகள் சில அரச சார்பற்ற நிறுவனங்களும் இலங்கை அரசைப் பாராட்டின. தூதரகங்கள் இராணுவ வெற்றிக்கு பாராட்டுச் செய்திகளை வெளியிட்டன. இந்த வெற்றியானது புரஜகற் பீக்கன் திட்டத்திற்கான ஆதரவை மேலும் பலப்படுத்தியது.

முதற்கட்டத்தை முடித்துக் கொண்ட புரஜக்ற் பீக்கன் 2வது கட்டம் மன்னார் – வவுனியா முனையில் 25 ஏப்ரல் 2007ல் ஆரம்பமாகியது. 24 ஏப்ரல் 2008ல் மது தேவாலயப் பகுதியையும் 08 மே 2008ல் அடம்பனையும் இராணுவம் கைப்பற்றியது. புலிகள் பெரும்பாலும் மக்களுடன் பின்வாங்கினர்.

புரஜக்ற் பீக்கன் மூன்றாவதும் இறுதியான புலிகளின் நிலப்பரப்பைக் கைப்பற்றும் யுத்தத்தில் ஜனவரி 3ல் புலிகளின் நிர்வாகத் தலைநகரான கிளிநொச்சி இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதுவரை சர்வதேச அபிப்பிராயங்கள் அனைத்தையும் இலங்கை அரசு தக்க வைத்துக் கொண்டது. குறைந்தபட்ச உயிரிழப்புகளே ஜனவரி பிற்பகுதி வரையான புரஜக்ற் பீக்கன் நடவடிக்கைகளில் ஏற்பட்டது. புலிகள் மக்களையும் சாய்த்துக் கொண்டு முல்லைத் தீவிற்குள் பின்வாங்கிச் சென்று ஒரு குறுகிய நிலப்பரப்பிற்குள் ஒடுக்கப்பட்டனர். ஜனவரி பிற்பகுதி முதல் இந்த குறுகிய நிலப்பரப்பைக் கைப்பற்ற இராணுவம் தீவிரமான தாக்குதலை நடத்தியது.

ஜனவரி பிற்பகுதி முதல் தினமும் 40 – 100 வரையான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். ஒரு புறம் இராணுவம் தாக்குதலை நடத்த மறுபுறம் இராணுவத் தாக்குதலில் இருந்து தப்பி ஓடுபவர்கள் மீது புலிகள் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். . பிடித்து வந்து செம்மையாக அடித்து முதுகுத் தொலை உரித்தனர். நாங்கள் பாதுகாப்பு வழங்குவோம் என்று பலவந்தமாக அழைத்து வந்த மக்கள் புலிகளுக்கு மனிதக் கேடயங்களாக மாற்றப்பட்டனர். புலிகள் தங்கள் நன்றிக்கடனை செம்மையாகச் செலுத்தினர்.

இலங்கை அரசாங்கத்தின் மீதும் புலிகளின் மீதும் சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்துள்ளது. இலங்கை அரசாங்கத்தின் மீது திரும்பும் சர்வதேச அழுத்தங்கள் புலிகளின் நடவடிக்கைகளால் பெரிதும் சமப்படுத்தப்பட்டு இலங்கை அரசு ஒப்பீட்டளவில் சர்வதேச அங்கிகாரத்துடன் தனது இராணுவ நடவடிக்கையைத் தொடர்கிறது.

தற்போது புலிகளின் பலத்த கோட்டையாக விளங்கிய புதுக்குடியிருப்பும் படைகளின் வசம் வீழ்ந்து உள்ளது. இரண்டு மூன்று கிராமங்கள் உள்ளடங்கிய 20க்கும் குறைவான கிலோமிற்றர் பரப்பளவே தற்போது புலிகளிடம் எஞ்சியுள்ளது. புரஜக்ற் பீக்கன் திட்டத்தின் மூன்றாவது கட்டம் இந்தக் கடைசித் துண்டு நிலமும் இலங்கை அரச படைகளின் கட்டுப்பாட்டிற்குள் வருவதுடன் முற்றுப்பெறும். இது இன்னும் சில வாரங்களுக்குள் 30 ஏப்ரல் 2009ற்குள் சாத்தியமாகும் என்பது பெரும்பாலும் உறுதியாகி உள்ளது. இதன் போது பெப்ரவரி 2009ல் நோர்வே உட்பட இணைத் தலைமை நாடுகள் புலிகள் தங்கள் ஆயுதங்களை கைவிட்டு சரணடைய வேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்திருந்தது. இவை புரஜக்ற் பீக்கன் நடவடிக்கைக்கு இணைத் தலைமை நாடுகள் அழித்த அங்கீகாரத்தை வெளிப்படையாகக் காட்டி உள்ளது.

ஆனால் அடுத்த சில தினங்கள் மிகவும் மோசமான அழிவுகளை ஏற்படுத்தும் என்ற அச்சம் ஏற்பட்டு உள்ளது. பெரும்பாலும் வே பிரபாகரன் உட்பட விடுதலைப் புலிகளின் முக்கிய தலைமைகள் இப்பகுதிகளில் சிக்குண்டு இருப்பதால் நடக்கப் போகும் யுத்தத்தில் மிகப்பெரும் மனித அவலம் ஏற்படும் அச்சம் ஏற்பட்டு உள்ளது. பெரும்பாலும் இந்த யுத்தத்தை வென்றுள்ள இலங்கை அரசு எந்த ஒரு சமாதான முயற்சிக்கும் பேச்சுவார்த்தைக்கும் உடன்படாது என்பது தெட்டத் தெளிவாகி உள்ளது. புலிகளை அழிப்பதில் தமிழ் மக்கள் கொல்லப்படுவது சர்வதேச சமூகத்தின் எதிர்ப்பைக் கொண்டு வரும் என்பதைத் தவிர இலங்கை அரசு அப்பாவித் தமிழ் மக்களைப் பலி கொடுத்து தனது இலக்கை அடைவதில் எவ்வித தயக்கமும் காட்டாது. புலிகளைப் பொறுத்தவரை தமது இருப்பை உறுதிப்படுத்த இலங்கை அரசுக்கு ஒப்பாக தமிழ் மக்களை பலிகொடுப்பதில் தாங்கள் தயங்க மாட்டோம் என்பதை ஏற்கனவே செயலிலும் காட்டி உள்ளார்கள்.

ஜனவரி இறுதி முதல் மரண வதைக்குள் சிக்குண்டுள்ள வன்னி மக்களுக்கு அடுத்து வரும் நாட்கள் மிக மிகக் கொடுமையானதாக அமைய உள்ளது. தமிழ் தேசியத் தலைமைகளினது குறிப்பாக புலிகளினது முட்டாள்தனமான அரசியல் முடிவுகளுக்கும் அதற்கு தலையாட்டு பொம்மைகள் போன்று தலையைத் தலையை ஆட்டிய ஊடகங்களினதும் புலம்பெயர் உறவுகளினதும் தவறுகளுக்கும் வன்னி மக்கள் அதி உச்ச விலையைச் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் செலுத்தப் போகிறார்கள். புலிகளின் கட்டுப்பாட்டில் சிக்குண்ட இளம்பராயத்தினர் குறுகிய கட்டாய பயிற்சியின் பின் களமுனைக்கு அனுப்பப்பட்டு பெரும்பாலும் கொல்லப்பட்டுவிட்டார்கள் என்று அஞ்சப்படுகிறது. ஒரு தலைமுறையே இழக்கப்பட்டுள்ளது.

புலிகளின் தலைமை மிக நெருக்கடியான இராணுவ நிலைக்குள் சிக்குண்டு உள்ளது. அவர்களுக்கு உயிராபத்து ஏற்படுத்தும் தாக்குதல்கள் அவர்களைச் சுற்றியுள்ள பல நூற்றுக் கணக்கான ஆயிரக்கணக்கான வன்னி மக்களை உயிரிழக்கச் செய்யும். மிகப்பெரிய மனித அவலம் ஏற்படும். அதுமட்டுமல்ல ஏற்கனவே வன்னிப் பகுதியை விட்டு வெளியேறி எல்லையோரக் கிராமங்களில் உள்ள புலிகள் பழிவாங்கும் நடவடிக்கையாக சிங்கள கிராமங்களைத் தாக்கலாம் என்ற அச்சமும் பலமாக உள்ளது. இல்கையில் சுனாமி ஏற்படுத்திய பேரவலத்திலும் பார்க்க இலங்கை இராணுவமும் புலிகளும் ஏற்படுத்தப் போகும் மனிதப் பேரவலம் எண்ணிக்கையிலும் அதன் கோரத்திலும் மிக மோசமாக அமையலாம். இது தெற்கில் ஒரு இனக் கலவரத்தையும் தோற்றுவிக்கலாம்.

இந்த அவலங்களைத் தடுத்து நிறுத்துவதற்கான காலங்கள் இழக்கப்பட்டுக் கொண்டே வருகின்றது. இனவாத அலையிலும் புலி ஆதரவு – புலி எதிர்ப்பு அலையிலும் மனிதம் அடித்துச் செல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

புரஜக்ற் பீக்கன் திட்டத்தை புலிகளும் நன்கு அறிந்தே இருந்தனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இந்திய ஆதரவுடன் இலங்கை அரசு புலிகள் மீது இராணுவ நடவடிக்கையொன்றை மேற்கொள்ள இருப்பதை கிழக்கு விடுவிக்கப்பட்டதன் பின்னர் அறிந்தே இருந்தனர். ஆயினும் கடந்த காலங்களில் மேற்கொண்ட அரசியல் மற்றும் இராணுவத் தவறுகள் அவர்களை அவர்களது முடிவுக்கே துரத்தி உள்ளது. புலிகள் தங்களைச் சூழ நண்பர்களைக் கொண்டிருக்காவிட்டாலும் எதிரிகளை உருவாக்காது இருக்கவில்லை. ஒரு விடுதலைப் போராட்ட இயக்கமாக அல்லாமல் ஒரு இராணுவக் குழுவாக செயற்பட்டு தமிழ் மக்களது நியாயமான அரசியல் போராட்டத்தையும் இன்று சிதைத்து தன்னழிவை நோக்கித் தள்ளப்பட்டு உள்ளனர். அதற்கான விலையை ஒட்டுமொத்த இலங்கைத் தமிழ் சமூகமும் செலுத்த வேண்டியுள்ளது.

உடனடியாக 20,000 பேர் இடம்பெயர்ந்து வவுனியா வருவர் என எதிர்பார்ப்பு

risadbadurudeen.jpgவன்னிப் பகுதியில் இருந்து மேலும் 20 ஆயிரம் பேர் உடனடியாக இடம்பெயர்ந்து வவுனியாவுக்கு வருவார்கள் என அதிகாரிகள் மட்டத்தில் எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே 50 ஆயிரம் பேர் வவுனியாவுக்கு வந்திருப்பதாக மீள்குடியேற்ற அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

புதிதாக வருபவர்களை பாடசாலைகளில் தங்க வைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும், அந்த பாடசாலைகள் அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் ரிசாட் பதியுதீன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இவ்வாறு வருபவர்களுக்கான தங்குமிடம், அடிப்படை வசதிகள் என்பவற்றைச் செய்து கொடுப்பது தொடர்பாக இன்று வவுனியா செயலகத்தில் அரச அதிபர் திருமதி சாள்ஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் ரிசாட் பதியுதீனும் கலந்து கொண்டார். இடம்பெயர்ந்த மக்களின் நலன்கள் தொடர்பான நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான இராணுவ அதிகாரி பிரிகேடியர் எல்.சி.பெரேராவும் இந்தக் கூட்டத்தில் சமூகமளித்திருந்தார்.

அடையாளம் காணப்பட்டுள்ள பாடசாலைகள் எவை என்பது பற்றிய விபரங்களை அமைச்சர் வெளியிடவில்லை. எனினும், அந்தப் பாடசாலைகளில் மலசலகூடங்கள் மற்றும் அடிப்படை வசதிகளைச் செய்யுமாறு வலயக் கல்விப் பணிப்பாளருக்கும், துறைசார்ந்த திணைக்களத் தலைவர்களுக்கும் உத்தரவிட்டிருப்பதாக அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபையின் விசேட அமர்வு நாளை

அரசினால் கொண்டுவரப்பட்டுள்ள உள்ளூராட்சித் தேர்தல் திருத்தச் சட்ட மூலத்தை ஆராய்வதற்காக கிழக்கு மாகாண சபையின் விசேட அமர்வு நாளை செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ளது. குறித்த சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படமுன் மாகாண சபைகளின் கருத்தை அறிந்து கொள்ள முடிவெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து கிழக்கு மாகாண சபையின் அங்கீகாரத்திற்காக தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நாளைய விசேட செயலமர்வில் இச்சட்டதிருத்தம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

புதிய உள்ளூராட்சித் தேர்தல் திருத்தச் சட்டத்திற்கிணங்க , உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் வட்டார ரீதியில் அதிக வாக்குகளைப்பெறுபவருக்கே வெற்றி என்ற அடிப்படையில் நடத்தச் சிபாரிசு செய்யப்பட்டிருக்கிறது. விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை கைவிடப்படுகிறது.

இலங்கை இராணுவத்திடம் மனித நேயம் இல்லாவிட்டால் வன்னியில் எஞ்சியுள்ள பகுதி துவம்சமாக்கப்பட்டிருக்கும் – அமைச்சர் டலஸ்

dalas_alahapperuma.jpgமனித நேயம் மிக்க இலங்கை இராணுவத்திடம் மனித நேயம் குறித்து சர்வதேச இராணுவங்கள் பாடம் கற்க வேண்டும். அந்தளவுக்கு யுத்தத்தின் போது இலங்கை இராணுவம் மனித நேயம் பேணுகின்றது. இந்த மனிதநேயத்தின் காரணமாகவே வடக்கில் எஞ்சியுள்ள கிலோமீற்றர் பிரதேசத்தை இராணுவம் தாக்கி துவம்சம் செய்யாமல் பொறுமையாக செயல்படுகிறது என போக்குவரத்து அமைச்சர் டலஸ் அலகப் பெரும தெரிவித்தார்.

பலாங்கொடை டிப்போவை 37 ஆவது மாதிரி டிப்போவாக தரமுயர்த்தும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் தொடர்ந்து கூறியதாவது,

கண்ணுக்கெட்டிய தூரத்தில் ஒசாமா பின் லேடன் சிக்கியிருந்தால் மேற்கு நாடுகளின் இராணுவங்கள் கை கட்டிப் பார்த்துக் கொண்டிருக்குமா? இலங்கை இராணுவம் தமிழ்ப் பொது மக்களைப் பாதுகாப்பதற்காக மிகவும் மனித நேயத்துடன் பண்புடன் செயல்படுகிறது.  எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்க உட்பட சர்வதேச உலகமும் புலிகளைத் தோற்கடிக்க முடியாது எனக் கூறி அவர்களுக்கு தாயகத்தின் ஒரு பகுதியை தாரை வார்க்க முயற்சித்துக் கொண்டிருக்கையில் நாட்டின் ஜனாதிபதியாக வந்த மகிந்த ராஜபக்ஷ இந்த யுத்தத்தை எமது இராணுவத்தால் வெற்றி கொள்ள முடியுமென திடசங்கற்பம் பூண்டு முப்படைகளையும் வழிநடத்தி இன்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியை எமக்குப் பெற்றுக் கொடுத்துள்ளார்.

பயங்கரவாதிகளான அல்ஹைடா அமைப்பிடம் கூட விமானங்கள், நீர்மூழ்கிகள், பயங்கர ஆயுதங்கள் இருக்கவில்லை. ஆனால் யாருமே நினைத்தும் கூட பார்க்க முடியாத அளவில் ஆயுத மயப்பட்ட புலிகளை எமது இராணுவம் வெற்றி கொண்டமை வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும். நாம் எந்தளவு வெற்றிகளை அடைந்தாலும் அவை சிங்களவர்களுக்கு மட்டும் உரித்தானது அல்ல. சகல இன மக்களும் இந்த மண்ணில் நிம்மதியாக வாழ வேண்டும். சிறுபான்மை சமூகங்களை அடக்கிய உலகில் எந்த நாடும் முன்னேறியதில்லை.

பாதுகாப்பு வலயம் மீதான தாக்குதலை எதிர்த்து புலம்பெயர் தமிழர் கிளர்ந்தெழ வேண்டும் : பழ.நெடுமாறன்

neduma2.jpgவன்னியில் பாதுகாப்பு வலயம் மீது படையினர் நடத்தும் தாக்குதலுக்கு எதிராக புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் அனைவருமே கிளர்ந்தெழ வேண்டும் என பழ. நெடுமாறன் அழைப்பு விடுத்துள்ளார். மாத்தளன், பொக்கணை, வலைஞர்மடம், இரட்டை வாய்க்கால் போன்ற கிராமங்களை உள்ளடக்கிய பாதுகாப்பு வலயத்தில் லட்சக்கணக்கான மக்கள் தங்கியிருப்பதால், படையினர் தாக்குதலைத் தொடுத்தால் அவர்களே உயிரிழக்க நேரிடும் எனச் சுட்டிக்காட்டப்படுகின்றது.

பாதுகாப்பு வலயம் மீதான தாக்குதலுக்கு முன்னோடியாகவே, தமிழீழ விடுதலைப் புலிகள் இந்தப் பகுதிகளுக்குள் மக்களோடு மக்களாக ஊடுருவியிருப்பதாகவும், மக்களைக் காப்பாற்றும் நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள இருப்பதாகவும் படையினர் அனைத்துலகின் நாடிபிடிக்கும் முன்னோடி அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளனர்.

எதிர்வரும் 16ஆம் நாள் இந்திய பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையிலும், தமிழ்-சிங்கள புத்தாண்டு நெருங்கி வருவதாலும், அதற்கு முன்னர் விடுதலைப் புலிகளை முற்றாக அழிக்க வேண்டும் என நினைக்கும் இந்திய, இலங்கை அரசுகள் அடுத்த சில நாட்களில் பாதுகாப்பு வலயம் மீதான தாக்குதலை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளன. இந்தியத் தேர்தலுக்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளை முற்றாக அழிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி தலைமையிலான இந்திய அரசாங்கம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இலங்கை அரசுக்கு உத்தரவு பிறப்பித்திருந்ததாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன.  புலம்பெயர்ந்த தமிழர்கள் தாம் வாழும் நாடுகளின் அரசுகளுக்கு இந்தத் தகவலை உடனடியாகக் கொண்டு சென்று, இலங்கை அரசை வலியுறுத்த அனைத்துலக சமூகத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் பழ.நெடுமாறன் அழைப்பு விடுத்துள்ளார். 

யுத்த சூழல் நீங்கியதும் அரசியல் தீர்வு – அமைச்சர் மைத்திரிபால தெரிவிப்பு

srisena.jpgதற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் யுத்த நடவடிக்கைகள் பூர்த்தியடைந்ததும்; அரசாங்கம் அரசியல் தீர்வொன்றை முன்வைக்கும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகமும்; அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன இன்று மட்டக்களப்பில் தெரிவித்தார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தைத் திறந்து வைத்து உரையாற்றிய போதே இதனை அவர் குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து கூறுகையில

சுமார் 25 வருடங்களின் பின் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வ அலுவலகம் இன்று திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த காலங்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் வடக்கு-கிழக்கு மக்களுக்கும் நெருக்கமான தொடர்புகள் இருந்த போதிலும் யுத்த சுழ்நிலை காரணமாக துண்டிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது மீண்டும் அந்தத் தொடர்புகள் ஏற்படத் தொடங்கியுள்ளன.

யுத்தத்திற்கு இன்னும் சில நாட்களில் முடிவு கட்டப்பட்டுவிடும். அடுத்து அரசியல் தீர்வு முன் வைக்கப்படும். எப்படியான அரசியல் தீர்வு என்பதைப் பற்றி தற்போது ஆராய்ந்து வருகின்றோம் எனக் கூறினார்.

குருக்கள் மனைவி கொலைவழக்கு தீர்ப்புக்கு எதிராக எதிரி மேன்முறையீட்டு மனு

திருகோணமலை கோணேசர் ஆலய குருக்கள் மனைவி கொலை வழக்கில் மேல் நீதிமன்றம் விதித்த தீர்ப்புக்கு எதிராக எதிரி மேன்முறையீடு செய்துள்ளர். இந்த ஆலய முன்னாள் பிரதம குருக்கள் சிவகடாட்சக் குருக்களான விசாகேஸ்வர ஐயர் மீது அவரின் மனைவி அம்பிகாவை கொலை செய்ததாக குற்றம் சாட்டி தொடரப்பட்ட வழக்கு விசாரணை முடிவில் எதிரியை குற்றவாளியாகக்கண்ட திருகோணமலை மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.

கடந்த மாதம் 23 ஆம் திகதி இத்தீர்ப்பு வழங்கப்பட்டு அரை மணித்தியாலத்தில் எதிரியின் மேல் முறையீட்டு மனுவை சட்டத்தரணி கே. எம். தில்லைநாதன் தாக்கல் செய்திருந்தார்

குற்றச்சாட்டு நியாயமான அளவு சந்தேகத்துக்கு அப்பால் நிரூபிக்கப்படவில்லை எனவும் அம்பிகாவின் மரணம் தொடர்பாக நிரூபிக்கப்படவில்லை எனவும், மேன் முறையீட்டு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் அரசு தரப்பு சாட்சியான பாலமுரளி சர்மா என்பவரின் சாட்சியம் ஒப்புறுதி செய்யப்படவில்லை என்ற காரணமும் மேன் முறையீட்டு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்தாலியில் பூமியதிர்ச்சி 70 பேர் உயிரிழப்பு! இலங்கையர் எவருக்கும் பாதிப்பில்லை

italyearthquake.jpgஇத்தா லியில் இன்று அதிகாலை ஏற்பட்ட பூமியதிர்ச்சியால் 70 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஆயிரக் கணக்கானோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இன்று அதிகாலை இடம்பெற்ற பூமியதிர்ச்சியால் இத்தாலி வாழ் இலங்கையர்கள் எவரும் பாதிக்கப்பட்டமை தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லையென இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது

பூமியதிர்ச்சியின் வேகம் 6.3 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளது. இத்தாலியின் மத்திய பகுதியில் ஏற்பட்ட இந்த பூகம்பத்தால் பெரும் எண்ணிக்கையிலான  வீடுகளுக்கும் கட்டடங்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை 3.30 அளவில் இந்தத் தாக்கம் ஏற்பட்டுள்ளது. மீட்புப் படையினர் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து அரசாங்கம் கவணம்  செலுத்திவருகிறது.

நலன்புரி நிலைய முகாமைத்துவ உதவியாளர்களாக இடம்பெயர்ந்து வந்துள்ள இளைஞர் யுவதிகள்.

வவுனியாவில் இடம்பெயர்ந்த மக்களுக்கான நலன்புரி நிலையங்களில், தங்கியுள்ள குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர் யுவதிகள் 110 பேர் அந்த நிலையங்களின் முகாமைத்துவ உதவியாளர்களாக மீள்குடியேற்ற அமைச்சினால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்.  இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் இன்று வைபவரீதியாக வவுனியா செயலகத்தில் நடைபெற்ற வைபவத்தில் வழங்கப்பட்டன.

இடம்பெயர்ந்த மக்களின் இடைத்தங்கல் நிலையங்களில் தங்கியுள்ள குடும்பங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ள இந்த 110 பேரும் ஏற்கனவே இந்த நிலையங்களின் நிர்வாக நடவடிக்கைகளில் தொண்டர்களாகப் பணியாற்றியவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இடைத்தங்கல் நிலையங்களின் நிர்வாகத்தை மேற்கொண்டுள்ள கிராமசேவை அதிகாரிகளுக்கு இந்த உதவியாளர்கள் பல்வேறு பணிகளிலும் உதவிபுரிவார்கள் என்றும், இடம்பெயர்ந்த மக்கள் மத்தியில் சுகாதாரம், தண்ணீர் மற்றும் மின்சாரம் என்பவற்றைப் பாதுகாப்பாகவும், சிக்கனமாகவும் பயன்படுத்தும் வழிவகைகள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவார்கள் என்றும்  மீள்குடியேற்ற அமைச்சர் தெரிவித்தார்.

இடைத்தங்கல் நிலையங்களின் முகாமைத்துவ உதவியாளர்களுக்கு நாளாந்த அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.