April

April

தமிழ் மக்கள் பாதிக்கப்படுவது குறித்து புலிகளுக்கு மனவுறுத்தல்கள் கிடையாது -ஹிந்து பத்திரிகை கருத்து

the_hindu.jpgதாம் அழிவை நோக்கிச் செல்வதை அறிந்தும் மோதல் தவிர்ப்பு வலயத்தினுள் கனரக ஆயுதங்களுடன் நடமாடி சிவிலியன்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தி வருவது தொடர்பில் எல்.ரீ.ரீ.ஈ. யினருக்கு மனவுறுத்தல்கள் எதுவும் கிடையாது என இந்தியாவின் ஹிந்து பத்திரிகை தெரிவித்துள்ளது.

தமிழ்-சிங்கள புத்தாண்டு காலத்தில் புலிகளுக்கெதிரான படை நடவடிக்கைகளை மட்டுப்படுத்துவதென இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானத்தைப் பாராட்டும் வகையில் தீட்டப்பட்டிருந்த ஹிந்து பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கத்திலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் வெளியான இப்பத்திரிகையில் இது தொடர்பாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

எல்.ரீ.ரீ.ஈ. இயக்கம் மனிதநேயத்துக்கான மோதல் தவிர்ப்பு வலயம் எனும் கருதுகோலையாவது அங்கீகரிக்க மறுப்பது,  அவர்கள் தங்களை எந்த மக்களின் ஏகப் பிரதிநிதிகளாகக் கூறிக்கொள்கின்றார்களோ அம்மக்களின் உயிர்கள் மற்றும் நலன்கள் என்பன தமது இந்தப் போலி விடுதலைப் போராட்டத்தில் கவனத்திற்கொள்ளப்பட மாட்டாது என்பதையே தெளிவுபடுத்துகின்றது.

புலிகளின் பிடியிலிருந்து கடந்த 2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை நோக்கி வருகை தந்த தமிழ் மக்களின் தொகை 65 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இப்புள்ளி விபரம் தமிழ் மக்கள் அவர்களின் சுய விருப்பத்தின்பேரில் தம்மோடு இருப்பதாக புலிகள் கூறிவரும் பொய்ப் பிரச்சாரத்தின் யதார்த்தத்தைப் புலப்படுத்துகிறது.

எல்.ரீ.ரீ.ஈ. இயக்கம் மீது அழுத்தத்தைப் பிரயோகிப்பதும் மோதல் தவிர்ப்பு வலயத்திலிருந்து வெளியேற விரும்பும் சிவிலியன்களை எந்தவித தடைகளுமின்றி தப்பிவர அனுமதிக்குமாறு புலிகளை நிர்ப்பந்திப்பதுமே தற்போதுள்ள மனிதாபிமான நெருக்கடிக்குரிய ஒரே தீர்வாகும் என்றும் அப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மட்டக்களப்பு மாநகர சபை நடவடிக்கைகளைப் பகிஷ்கரித்து உறுப்பினர்கள் வெளிநடப்பு

16042009.jpgகிழக்கு மாகாணசபை நாளை கொண்டு வரவுள்ள உள்ளூராட்சி சபை விசேட சட்ட மூலத்திற்கெதிராக மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர்கள் அனைவரும் சபை நடவடிக்கைகளைப் பகிஷ்கரித்து வெளிநடப்புச் செய்ததுடன் கண்டனத் தீர்மானமும் நிறைவேற்றியுள்ளனர்.

குருநகர் மீன் சந்தை 20 வருடங்களின் பின்னர் மீண்டும் இயங்க ஆரம்பம்!

f-m.jpgயாழ்ப்பாணம் குருநகர் மீன் சந்தை 20 வருட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக கடந்த 20 வருட காலமாக இந்த சந்தை மூடப்பட்டிருந்ததுடன் இராணுவத்தினர் இதனை தங்களின் முகாமாகப் பயன்படுத்தி வந்தனர்.

பொதுமக்கள் பாவனைக்காக இந்தச் சந்தை நேற்று உத்தியோக பூர்வமாக மீண்டும் திறந்து வைக்கப்பட்டதாக யாழ் இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இது தொடர்பாக நேற்று நடைபெற்ற விசேட நிகழ்வில் மீன்பிடி அமைச்சு மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள், மீன்பிடி சங்கப் பிரதிநிதிகள்ää அரசியல் பிரமுகர்கள் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.

இதேவேளை யாழ் கடற்பிரதேசத்தில் மீன் பிடிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் சற்று தளர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

கூடுதல் விலைக்கு பொருட்கள் விற்பனை செய்த 1424 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

bandula_gunawardena.jpgஇவ்வருட ஆரம்பம் முதல் ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்புக்கள் மூலம் கூடுதல் விலைக்கு அத்தியவசிய பாவனைப் பொருட்களை விற்பனை செய்த  1424 வர்த்தகர்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக கூட்டுறவு மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். கூட்டுறவு மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சில் இன்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இவ்வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் மார்ச் மாதம் இறுதி வரை 974 சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் இவற்றில் குற்றவாளிகளாக காணப்பட்டவர்களுக்கு ஒரு கோடியே ஐந்து இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளை ஏப்ரல் முதலாம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை மட்டும் 450 சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்போது கொழும்பு புறக்கோட்டையில் 180 அரிசி மூடைகளும் கண்டியில் 44 அரிசி மூடைகளும் சவீகரிக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் 20 ஆம் திகதி நீதிமன்றங்களுக்கான விடுமுறை முடிவுற்றதும் குறிப்பிடப்பட்ட 450 வாத்தகர்களுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார். 

நோர்வே தூதரகம் முன்பாக ஆர்ப்பாட்டம்!

protest_norvey.jpgகொழும்பு, வோர்ட் பிளேசில் உள்ள நோர்வே தூதரகம் முன்பாக இன்று ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று இடம்பெற்றது. ஒஸ்லோவிலுள்ள இலங்கை தூதரகம் தாக்கி சேதமாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பத்தரமுல்ல சீலாரத்ன தேரோ தலைமையில் இன்றைய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நோர்வேயிலுள்ள இலங்கைத் தூதரகம் தாக்கப்பட்டமையைக் கண்டிப்பதாகவும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இத்தாக்குதல் குறித்து விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும், இலங்கையிலுள்ள நோர்வே தூதரகம் மூடப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தும் பதாதைகளை ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் ஏந்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, கிளிநொச்சிக்கு விஜயம்

mahinda000.jpgஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று கிளிநொச்சிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். இந்த விஜயத்தின் போது, அவருடன் படை உயரதிகாரிகளும்  கிளிநொச்சிக்கு சென்றிருந்தனர்.

கிளிநொச்சியில் படையினருடன் புத்தாண்டு நிகழ்வுகளில் ஈடுபட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. முப்பது வருடங்களின் பின்பு இலங்கை அரசுத் தலைவர் ஒருவர் கிளிநொச்சிக்கு விஜயம் செய்திருப்பது இதுவே முதல் தடவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி தமது விஜயத்தின்போது, கிளிநொச்சியின் நிலைமைகள் குறித்து படையினருடன் கலந்துரையாடியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈஎன்டிஎல்எப் இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்கே நாராயணனைச் சந்தித்தனர் – ஈஎன்டிஎல்எப் செய்தி அறிக்கை

Narayanan_M_Kஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ஈ.என்.டி.எல்.எப்.)யின் உயர்மட்டக் குழு இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உயர் திரு. எம்.கே. நாராயணன் அவர்களை நேற்று திங்கள்கிழமை (13-04-2009) புதுடெல்லியில் சந்தித்து முல்லைத்தீவில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் யுத்தத்தை நிறுத்த இந்தியா உடனடியாக தலையிட வேண்டுமென கேட்டுக்கொண்டது.

சுமார் ஒருமணி நேரம் நீடித்த இந்தச் சந்திப்பின் போது, இலங்கை தமிழர் பிரச்சினை தற்போது ஒரு தீவிரமான கட்டத்தை அடைந்துள்ளது என்றும் தமிழர் நீதியானதும் நியாயமானதுமான கோரிக்கைகளை பெற்றுக்கொள்வதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும், தற்போது இந்தியாவிற்கு கிடைத்திருக்கும் இறுதி சந்தர்ப்பம் எனவும் குழுவினர் வலியுறுத்தினர்.

இந்திய தேசிய பாதகாப்பு ஆலோசகருடன் ஈழ தேசிய ஜனநாய விடுதலை முன்னணி (ஈ.என்.டி.எல்.எப்.) உயர்மட்டக் குழுவினர் கையளித்த மகஜரில், சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ள இரண்டு நாள் போர் ஓய்வு பலன் எதனையும் ஏற்படுத்தப் போவதில்லை என்று சுட்டடிக்காட்டப்பட்டது. விடுதலைப் புலியினர் இந்தக் காலக்கட்டத்தில் போரில் சிக்கியுள்ள இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் பொதுமக்களை அரசத் தரப்புப் பகுதிகளுக்கு செல்ல அனுமதிக்கப் போவதில்லை என்றும், போர்ப்பகுதியில் சிக்கியுள்ள தமிழ் பொதுமக்கள் கூட அரசத் படையினரின் தடுப்பு முகாம்களுக்குள் செல்ல விரும்பமாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது. புலிகளின் கட்டுப்பாட்டிற்குள் இருந்து அரசப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் தமிழர்களை இடமாற்றுவது இந்தக் கட்டத்தில் ஏற்புடையது அல்ல என்றும் மகஜரில் சுட்டிக்காட்டப்பட்டது.

இன்றைய காலகட்டத்தில் உடனடியான நிரந்தர யுத்த நிறுத்தம் வேண்டுமென வலியுறுத்திய ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ஈ.என்.டி.எல்.எப்.)யின் உயர்மட்டக் குழுவினர் யுத்த நிறுத்தத்தை தொடர்ந்துஇ வன்னியில் போரில் அகப்பட்டுள்ள இரண்டு லடச்சத்து ஐம்பதாயிரத்துக்கும் (250000) மேற்பட்ட பொதுமக்கள் மீள குடியமர்த்தப்பட வேண்டுமெனவும் அதன் பின்னர் அமைதிப் பேச்சுக்கள் ஒருங்கிணைந்த ஈழத் தமிழர் தலைமையுடன் இந்தியாவின் தலைமைத்துவத்தின் கீழ் நடத்தப்பட வேண்டுமென இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரை கேட்டுக்கொண்டனர்.

ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்தியா நேரடியாகவே தலையிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்த ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ஈ.என்.டி.எல்.எப்.) உயர்மட்டக் குழுவினர் பின்வரும் தங்களது ஆலோசனைகளை தமது மகஜரில் தெரிவித்துள்ளனர்.

   (01) இலங்கையின் வடக்கில் நடைபெறும் தற்போதைய யுத்தத்தில் இந்தியாவின் நேரடி தலையீடும், இந்திய அமைதிப்படையினரின் மேற்பார்வையில் நிரந்தர யுத்தநிறுத்தமும் வேண்டும்.

   (02) முல்லைத்தீவில் தற்போது சிக்குண்டுள்ள பொதுமக்கள், முல்லைத்தீவில் அல்லது வடஇலங்கையில் அந்த மக்கள் விரும்பும் இடங்களில் இந்தியாவின் அல்லது ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் அமைப்பின் மேற்பார்வையில் மீள குடியமர்த்தப்பட வேண்டும்.

   (03) இலங்கை அரசினால் தற்போது வவுனியாவிலும் ஏனைய இடங்களிலும் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வன்னியிலிருந்து தப்பி வந்த பொதுமக்கள் இந்தியாவின் அல்லது ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் அமைப்பின் மேற்பார்வையில் அமைக்கப்படும் புனர்வாழ்வு முகாம்களுக்கு மாற்றப்படுவதுடன் இலங்கை அரசினால் நடத்தப்படும் தற்போதைய முகாம்கள் மூடப்பட வேண்டும்.

   (04) அகதி முகாம்களில் தங்கவைக்கப்படும் தமிழ் பொதுமக்களை இலங்கை இராணுவத்தினரும் பொலிசாரும் அணுகுவதும் அவர்களை கட்டுப்படுத்துவதும் முற்றாக நீக்கப்பட வேண்டும்.

   (05) இலங்கை அரசுக்கும் ஒருங்கிணைக்கப்பட்ட ஈழத் தமிழர் தலைமைக்கும் இடையே தமிழர் பிரச்சினையை இறுதியாக முடிவுக்குக் கொண்டுவர குறித்த கால எல்லைக்குள் நடத்தி முடிக்கத்தக்கதான பேச்சுவார்த்தைகள் இந்தியாவின் தலைமையின் கீழ் நடைபெற வேண்டும்.

   (06) ஈழத் தமிழர்களுக்கான நிரந்தர தீர்வின் ஒரு அங்கமாக தற்போது போரில் ஈடுபட்டுள்ள விடுதலைப் புலியினரை போர் தவிர்ப்பு ஒன்றில் ஈடுபடுத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

   (07) வட-கிழக்கில் இதுவரை ஏற்பட்ட யுத்தத்தினால் இடம்பெயர்ந்த எல்லா மக்களும் அவர்கள் முன்னர் குடியிருந்த இடங்களில் மீளவும் குடியமர்த்தப்பட வேண்டும்.

ஈழத் தமிழர்களுக்கான நிரந்தர தீர்வு தொடர்பாக ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணியின் (ஈ.என்.டி.எல்..எப்.) நிலைப்பாட்டை எடுத்துக் கூறிய உயர்மட்டக் குழுவினர் ஈழத் தமிழர்கள் சுயநிர்ணய உரிமை கொண்ட மக்கள் என்பதை எப்போதுமே வலியுறுத்தி வந்திருப்பதாக தெரிவித்தனர்.

இந்தியாவினால் ஏற்பாடு செய்யப்பட்ட திம்பு மகாநாட்டில் சகல தமிழ் கட்சிகளும் குழுக்களும் ஒருமித்து ஏற்றுக்கொண்ட திம்பு கோட்பாடுகள் எந்தவொரு இறுதித் தீர்விலும் அங்கீகரிக்கப்பட வேண்டும். ஆயினும் ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணியும் அதே போன்று பல ஈழத் தமிழ் அரசியல் குழுக்களும், நாடு பிரிவினைக்குட்படாத வகையில் திம்பு கோட்பாடுகள் உள்ளடக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கின்றனர்.

இறுதி தீர்வு ஏற்படுவதற்கு இடைபட்டக் காலக்கட்டத்தில் 1987ஆம் ஆண்டில் இந்திய அரசினால் ஏற்படுத்தபபட்ட“இலங்கை-இந்திய” ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒன்றிணைந்த வடகிழக்கு மாகாணங்களுக்கு நிர்வாக அலகு ஒன்று ஏற்படுத்தபட வேண்டுமெனவும் ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணியின் உயர்மட்டக் குழுவினர் தமது மகஜரில் தெரிவித்தள்ளனர்.

இதுவரை 77 வன்முறைச் சம்பவங்கள் பதிவு இனிவரும் தினங்களில் மேலும் அதிகரிக்கும் நிலை

caffe.jpgமேல் மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக இதுவரை 77 வன்முறைச் சம்பவ முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள தேர்தலை கண்காணிப்பதற்கான கபே அமைப்பு தேர்தலுக்கு இன்னும் 8 தினங்களே உள்ள நிலையில் வன்முறைச் சம்பவங்கள் மேலும் அதிகரிக்கும் சாத்தியம் உள்ளதாகவும் எச்சரித்துள்ளது.

இது தொடர்பில் அவ்வமைப்பின் ஊடகப் பேச்சாளர் கீர்த்தி தென்னக்கோன் கருத்து தெரிவிக்கையில்;

நாம் தேர்தல் தொடர்புடைய முறைப்பாடுகளை கடந்த டிசம்பர் 14 ஆம் திகதி முதல் நேற்று புதன்கிழமை 15 ஆம் திகதிவரை பதிந்தும் அவதானித்தும் வருகின்றோம். மொத்தமாக 77 முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளோம். இதில் கம்பஹா மாவட்டத்திலே அதிகூடியதான 32 முறைப்பாடுகளை பதிவு செய்த நிலையில் இதற்கு அடுத்ததாக கொழும்பு மாவட்டம் உள்ளது. களுத்துறை மாவட்டத்தில் நாம் 15 முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளோம்.

இந்த 77 முறைப்பாட்டில் தாக்குதல் சம்பவங்கள் 54 ஆகவுள்ளதுடன் அச்சுறுத்தல் தொடர்பில் 3 இனையும் பதிவு செய்துள்ளோம். நாம் தேர்தல் சட்டங்களை மீறியமை மற்றும் அரச சொத்துக்கள் துஷ்பிரயோகமென அதிகளவான தகவலை பெற்றபோதும் எம்மால் இவ்விரண்டு தொடர்பில் முறையே 10 முறைப்பாடுகளையே எம்மால் ஊர்ஜிதப்படுத்த முடிந்தது.

தேர்தல் தொடர்பிலான பெரியளவான வன்முறைகள் 50% மானவைக்கு இரு பிரதான கட்சிகளே காரணமாகும். இந்நிலையில் இரு பிரதான கட்சித் தலைவர்களிடம் தமது கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் வேட்பாளர்கள் வன்முறையில் ஈடுபடாதிருப்பதற்கு உடனடியாக நடவடிக்கையெடுக்க வேண்டுமெனக் கபே கேட்டுள்ளது.

ராஜபட்சவின் உண்மையான நண்பராக கருணாநிதி செயல்படுகிறார்:பழ.நெடுமாறன்

neduma2.jpgஇலங்கை அதிபர் ராஜபட்சவின் உண்மையான நண்பராக முதல்வர் கருணாநிதி செயல்படுவதாக தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு அமைப்பாளர் பழ.நெடுமாறன் பதிலடி கொடுத்துள்ளார். தமிழகத்தில் உள்ள சிலரின் வழிகாட்டுதலின்பேரில் தவறான அணுகுமுறைகளை விடுதலைப் புலிகள் கடைப்பிடிப்பதால் தான் இலங்கைப் பிரச்சினை இன்னும் முடிவுக்கு வராமல் இருக்கிறது என்று கருணாநிதி அண்மையில் கூறியிருந்தார். இதற்குப் பதிலளிக்கும் வகையில் பழ.நெடுமாறன் வெளியிட்டிருக்கும் அறிக்கை : “போர் நிறுத்தம் என்ற பெயரில் இரு நாள்களாக அதிகமான படைகளை ராஜபட்ச கொண்டு வந்து குவித்து, பாதுகாப்பு வளையத்துக்குள் இருக்கும் தமிழ் மக்கள் மீது ஏவுகணைகளையும், எறி குண்டுகளையும் வீசி கொன்று குவித்துவருகிறார்.

ஆனால் கருணாநிதியும், ப.சிதம்பரமும் தங்களது முயற்சியால்தான் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது என்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்த செய்த முயற்சி ஒரு நாடகமே என்பது நிரூபணமாகிவிட்டது. ஈழத் தமிழர்களை ராஜபட்ச துரத்தித் துரத்தி அடிக்கிறார். கருணாநிதியோ தமிழக தமிழர்களை விரட்டிவிரட்டி அடிக்கிறார். ராஜபட்சவின் உண்மையான நண்பராக கருணாநிதி திகழ்வதைக் கண்டிக்கிறேன்” என அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் கூட்டமைப்பு எம்.பி.க்கள் நேற்றிரவு சந்திப்பு

tna_.jpgதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் நேற்று புதன்கிழமை இரவு இந்தியப் பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனை சந்தித்துப் பேசியுள்ளனர். இந்திய வெளியுறவுச் செயலர் சிவ்சங்கர் மேனன் மற்றும் அதிகாரிகளைச் சந்திப்பதற்காக புதுடில்லிக்கு நேற்று சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்களே எம்.கே.நாராயணனை நேற்றிரவு சந்தித்துப் பேசினர்.

கூட்டமைப்பு எம்.பி.ஆர்.சம்பந்தன் தலைமையில் மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதன்போது, இலங்கைப் படையினர் இராணுவ நடவடிக்கையை உடனடியாக நிறுத்த இந்தியா அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. எனினும் போர்நிறுத்தம் குறித்து இந்திய தரப்பில் உறுதியான பதிலெதுவும் வழங்கப்படவில்லை யெனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் கூட்டமைப்பு எம்.பி.க்கள் இன்று வியாழக்கிழமை சிவ்சங்கர் மேனன் மற்றும் அதிகாரிகளைச் சந்திக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தற்போதைய நிலையில் இந்திய அரசு தரப்பை சந்திக்கக் கூடாதென கூட்டமைப்பு எம்.பி.க்களில் பெரும்பான்மையோர் வலியுறுத்தி வந்த நிலையில் இந்தச் சந்திப்பு நடைபெறுவதும் குறிப்பிடத்தக்கது.