April

April

புலிகளுக்கு சரணடைய வழங்கப்பட்ட காலக்கெடு இன்று நண்பகல் முடிவு -அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தகவல்

keheliya_rambukwella.jpgஎல்.ரீ. ரீ.ஈ.  இயக்கத் தலைவர் பிரபாகரனும் அவரது சகாக்களும் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைய வழங்கப்பட்ட 24 மணி நேர காலக்கெடு இன்று நண்பகல் 12.00 மணியுடன் முடிவடைவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

பிரபாகரன் உள்ளிட்ட புலித் தலைவர்களும் ஏனைய எல்.ரீ.ரீ.ஈ. இயக்க உறுப்பினர்களும் உடனடியாக சரணடைய வேண்டும் என அரசாங்கம் நேற்று இறுதி எச்சரிக்கை விடுத்திருந்தது. இன்று நண்பகல் 12.00 மணியுடன் முடிவடையும் 24 மணி நேர காலக்கெடுவுக்குள் புலிகள் சரணடையத் தவறினால் அவர்களுக்கெதிராக படை வீரர்கள் கடும் நடவடிக்கை மேற்கொள்வார்கள் என பாதுகாப்பு தொடர்பான ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளர்.

புலிகள் சரணடைய வேண்டும் என இறுதி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளபோதும் தப்பி வரும் பொதுமக்களை மீட்கும் நடவடிக்கையில் படையினர் தொடர்ந்தும் ஈடுபடுவார்கள் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

சுப்ரீம் கோர்ட்டில் வருண்காந்தி உறுதிமொழி

india-varun.jpgஉத்தர பிரதேச மாநிலம் பிலிபிட் தொகுதியில் பா.ஜனதா சார்பாக போட்டியிடும் வருண் காந்தி மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளது. அவரை, இரண்டு வாரம் பரோலில்’ விடுதலை செய்ய சுப்ரீம் கோர்ட்டு கடந்த வாரம் உத்தரவிட்டது.

அப்போது, வன்முறையை ஏற்படுத்தும் வகையில் எந்த அவதூறு கருத்துகளையும் பேச மாட்டேன்’ என உறுதி அளிக்குமாறு வருண் காந்தியை சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியது.

அதன்படி, வருண் காந்தி அடைக்கப்பட்டு இருந்த எடா சிறையின் சூப்பிரண்டிடம் ஒரு உறுதி மொழி பத்திரத்தை வழங்கினார். அந்த உறுதி மொழியின் நகலை சுப்ரீம் கோர்ட்டுக்கும் வழங்க வேண்டும். எனவே, சுப்ரீம் கோர்ட்டில் உறுதி மொழி பத்திரத்தை வருண் காந்தி நேற்று அளித்தார்.

அந்த உறுதி மொழியில், மத கிளர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் பேசவோ, எழுதவோ மாட்டேன்’ என அவர் தெரிவித்து இருக்கிறார்.

பரீட்சை பெறுபேறு மீளாய்வு விண்ணப்பம்!

schools_stu.jpgஅண்மை யில் வெளிவந்த 2008 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கு பரீட்சைத் திணைக்களம் விண்ணப்பங்களைக் கோரியுள்ளது.

இந்த விண்ணப்பங்களை எதிர்வரும் மே மாதம் 10 ஆம் திகதியோ அல்லது அதற்கு முன்னரோ கிடைக்கக்கூடிய வகையில் பதிவுத் தபாலில் அனுப்பி வைக்குமாறு பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. பாடசாலை விண்ணப்பதாரிகள் பாடசாலை அதிபர்கள் ஊடாகவும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் நேரடியாகவும் பதிவுத் தபால் மூலம் விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும்.

ஒரு பாடத்துக்கு 150.00 ரூபா என்ற அடிப்படையில் மீளாய்வுக் கட்டணம் அறவிடப்படுகிறது. உரிய கட்டணத்தை அஞ்சல் அல்லது உப அஞ்சல் அலுவலகங்களில் செலுத்தி பற்றுச் சீட்டின் மூலப் பிரதியை விண்ணப்பப் படிவத்தின் மறுபுறம் ஒட்டி அனுப்பிவைக்க வேண்டும். ஒவ்வொரு பாடத்திற்கும் ஒவ்வொரு விண்ணப்பம் வீதம் அனுப்ப வேண்டுமென பரீட்சைத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

இன்றும் போராட்டங்கள் தொடர்கிறது! நேற்று பாரிஸில் 210 ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது! : த ஜெயபாலன்

Protest_London_20Apr09இலங்கை அரச படைகள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் ஊடுருவிக் கொண்டிருக்க பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் புலம்பெயர்ந்த தமிழர்கள் மிகவும் உணர்ச்சிகரமான போராட்டங்களில் குதித்துக் கொண்டு உள்ளனர். குறைந்தது கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக மரணத்தின் விளிம்பில் இருந்து 30000க்கும் மேற்பட்ட மக்கள் எதிர்காலம் எப்படி இருக்குமோ இப்போதைக்கு உயிரைக் காப்பாற்றிக் கொள்வோம் என்று அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்துகொண்டுள்ளனர். இன்னும் சில தினங்களில் புலிகளின் வசமுள்ள இறுதிப் பத்திற்கும் சற்று அதிகமான கிலோ மீற்றர் நிலப்பரப்பும் அரச படைகளின் கட்டுப்பாட்டிற்று வந்தவிடும் என படைத்தரப்பு தெரிவிக்கின்றது.

பெரும்பாலும் மக்கள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியைவிட்டு வெளியேறும் போது புலிகள் அரச படைகளுடன் நேருக்கு நேரான மோதலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். நேற்றைய யுத்தத்திலும் புலி ஆதரவு ஊடகங்கள் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை 1500 வரை இருக்கும் என செய்திகளை வெளியிட்டு உள்ளனர். இச்செய்தியின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ள முடியவில்லையென சர்வதேச ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு உள்ளன. இழப்புக்கள் பற்றிய செய்திகள் புலம்பெயர் தமிழ் மக்களை மிகவும் உணர்ச்சிகரமாக வைத்துள்ளது.

ஏப்ரல் 5ல் புலிகளின் முக்கிய தளபதிகள் முக்கிய போராளிகள் இழக்கப்பட்டு தலைவர் வே பிரபாகரன் காப்பாற்றப்பட்டார். ஆயினும் புலிகளின் தலைமையை ஆபத்து நெருங்கியதை அடுத்து மேற்கு நாடுகள் முழுவதும் போராட்டங்கள் முடக்கிவிடப்பட்டது. உண்ணாவிரதப் போராட்டங்களும் முடக்கிவிடப்பட்டது.

இப்போராட்டங்களின் மையமாக பிரித்தானியாவின் இதயப்பகுதியான வெஸ்ற்மினிஸ்ரர் மாறியுள்ளது. இங்கு சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கும் சுப்பிரமணியம் பரமேஸ்வரன் 15வது நாளாகத் தனது போராட்டத்தை தொடர்கிறார். இவரது நிலை கவலைக்குரியதாக இருக்கையில் நேற்றுக் காலை பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் வந்து சந்தித்து போராட்டதை முடிவுக்கு கொண்டு வரலாம் என்ற நிலை அதற்கு முதல்நாள் இருந்தது. ஆனால் இலங்கை இராணுவம் புலிகளின் இறுதியாக உள்ள கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் முன்னேறி மக்கள் வெளியேறுவதற்கான பாதையை திறந்ததை அடுத்து போராட்டம் மேலும் உணர்ச்சிகரமாக மாறியுள்ளது. நேற்றுமாலை வெஸ்ற்மினிஸ்ரர் பகுதியைச் சுற்றிய போக்குவரத்துக்கள் முற்றாகத் தடைப்பட்டன. நூற்றுக்கணக்கில் பொலாசாரைக் கொண்டு வந்து இறக்கி வீதிகளை போக்குவரத்திற்கு அனுமதிக்க எடுத்த முயற்சி ஆயிரக் கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்களின் போராட்டத்திற்கு முன்னால் பலனளிக்கவில்லை. சிலர் பாய்களைக் கொண்டு வந்து வீதியில் விரித்து படுத்தும் தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.

ஏற்கனவே ஜி20 மாநாட்டை ஒட்டி இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கையை எடுத்த பொலிசார் அதில் ஒரு ஆர்ப்பாட்டக்காரர் மரணமானது தொடர்பிலும் அவர்களது நடவடிக்கை தொடர்பிலும் மிகுந்த விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளனர். அவ்வாறான மற்றுமொரு நடவடிக்கையை மேற்கொள்ள பொலிசார் துணியவில்லை. மேலும் ஆர்ப்பாட்டக் காரர்கள் யாரும் வன்முறை நோக்கோடு செயற்படாததால் பொலிசாருக்கும் ஆர்ப்பாட்டக் காரர்களுக்கும் முரண்பாடுகள் எழவில்லை. ஆனால் நாளையும் பிரித்தானியாவின் இதயப்பகுதியின் போக்குவரத்துக்கள் தடைப்பட்டால் அப்பகுதியின் சகஜநிலை பாதிக்கப்படும். பொருளாதார மையத்தில் மிகுந்த பொருளாதார நெருக்கடியான காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள இப்போராட்டம் அப்பகுதியின் ஸ்தீரத் தன்மையைப் பாதிக்கும். மேலும் இவ்வகையான போராட்டங்களை ஏனைய சமூகங்களும் மேற்கொள்ள முற்படலாம். அது அப்பகுதியின் பொருளாதார நடவடிக்கைகளைப் பாதிக்கும் என்பது கூர்ந்து அவதானிக்கப்படுகிறது. இதனால் போக்குவரத்திற்கு தடையை ஏற்படுத்தும் பட்சத்தில் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளில் பொலிஸார் இறங்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே இதே போன்று பிரான்ஸில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வன்முறையில் ஈடுபட்டதாக பிரெஞ் பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை ஆயுதக் கூட்டம் என்று விபரித்துள்ள பொலிஸ் அதிகாரி அவர்கள் போக்குவரத்தில் ஈடுபட்ட மூன்று பஸ்கள் மீதும் பொலிசார் மீதும் பொருட்களை வீசியதாகக் குற்றம்சாட்டி உள்ளார். ஒரு பொலிஸ் அலுவலர் உட்பட நான்கு பேர் சிறு காயங்களுக்கு உள்ளானதாகவும் பொலிஸ் அதிகாரி ராய்டர் செய்தி ஸ்தாபனத்திற்கு தெரிவித்து உள்ளார்.  ஆயுதக் கூட்டம் என்பது பொதுவாக கத்தி துப்பாக்கி இருப்புக் குற்றி போன்றவற்றை வைத்துள்ளவர்களுக்கே பயன்படுத்தவது வழக்கம். ஆனால் அப்பதம் தற்போது ஆர்ப்பாட்டக் காரர்களுக்கும் பயன்படுத்தப்பட்டு உள்ளது.

பாரிஸில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு போக்குவரத்தை தடைசெய்ய முற்பட்ட ஆர்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசியும் தண்ணீர் அடித்தும் அப்புறப்படுத்தினர்.

ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஸ்கூட்டர் ஒன்றுக்கு நெருப்பு வைத்ததாகவும் 3 பஸ்களினதும் இரு கார்களினதும் ஒரு லொறியினதும் முகப்புக் கண்ணாடிகளை உடைத்ததாகவும் ஏப்பி செய்தியாளர் பிரான்ஸ் 24 செய்தி நிறுவனத்திற்குத் தெரிவித்து உள்ளார். பொலிசார் மீதும் குப்பைகளும் போத்தல்களும் எறியப்பட்டு உள்ளது. இதனைத் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்ட 210 பேரை கைது செய்ததாக பிரெஞ் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இவற்றுக்கிடையே இன்று கனடாவின் ஒட்டோவா நகரிலும் ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே நடந்த ஆர்ப்பாட்டங்களின் போது மாணவர்கள் விதிகளை மறித்து போக்குவரத்துக்களை தடைப்படுத்தினர்.

இலங்கை அரச படைகள் தங்கள் படைகளை புலிகளின் கடைசிச் சில கிலோ மீற்றர்களுக்கள் நகர்த்த புலம்பெயர் தமிழர்கள் தங்கள் போராட்டங்கள் பலனளிக்கவில்லை என்ற விகாரத்துடன் உணர்ச்சி பொங்க தங்கள் இறுதிப் போராட்டத்தை தொடர்கின்றனர். யுத்தத்தை நிறுத்தக் கோரி யுத்தத்தின் முடிவில் இவர்கள் ஆரம்பித்த போராட்டம் புலி அலையில் அடித்துச் செல்லப்பட்டு விட்டது. இதனால் மண்ணோ மக்களோ காப்பாற்றப்படவில்லை.

புலிகளின் தலைமை இரு வாரங்களிற்கு முன்னரயே எஸ்கேப் ஆகிவிட்டது என்று உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் தெரிவித்த போதும் அவர் உள்ளேயே இருக்கின்றார் என்று 24 மணிநேர காலக்கெடுவை இலங்கை அரசு அவர்களுக்கு வழங்கி உள்ளது. ஏற்கனவே குறிப்பிட்டது போல் புலிகளின் தலைமை இப்பகுதியைவிட்டு வெளியேறி இருந்தால் இராணுவம் பாரிய தாக்குதல்கள் இன்றி முன்னேற முடியும். ஆனால் அரசு குறிப்பிடும்படி புலிகளின் தலைமை இராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டுள்ள பிரதேசத்திற்குள் இருந்தால் மிக உக்கிரமமான மோதலுக்கான வாய்ப்பு உள்ளது. இன்னமும் 100000 மக்கள்வரை புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தினுள் உள்ளனர். அவர்களுக்கு மத்தியிலேயே அவ்வாறான ஒரு மோதல் இடம்பெறும். இது இதுவரை சந்தித்திராத அவலதை ஏற்படுத்தலாம் என்ற அச்சம் தவிர்க்க முடியாதது. ( Project Beacon – இறுதிக் கட்டத்தில்!! புலிகளின் தலைமை ஆபத்தில்!!! : த ஜெயபாலன் , தலையோடு வந்தது தலைப்பாகையோடு போனது. ‘தலைவர் எஸ்கேப்’ : த ஜெயபாலன் )

நான்காயிரத்திற்கும் அதிகமான மக்கள் கொல்லப்படடும் அதனைப் போன்று இரு மடங்கினர் காயமுற்றும் நடந்த இந்த யுத்தம் அழிவைத் தவிர எதனையும் தரவில்லை. இலங்கை அரசும் புலிகளும் சர்வதேச சமூகமும் இந்த அழிவைத் தடுத்திருக்க முடியும். ஆனால் செய்யவில்லை. இலங்கை அரசோ புலிகளோ காலம் காலமாக எடுத்துக் கூறப்பட்ட அரசியல் தீர்வு பற்றி அக்கறையற்று இருந்தனர். எப்போதும் இராணுவத் தீர்வு நோக்கியே அவை செயற்பட்டன. இன்றும் செயற்படுகின்றன. அதற்கு வேறுபாடின்றி இரு தரப்பும் மக்களைப் பணயம் வைத்து காய்களை நகர்த்தினர். இந்த உண்மையை கண்டுகொள்ளாத புலம்பெயர்ந்த தமிழர்கள் புலிகளையும் தமிழர்களையும் ஒன்றாகவே பார்த்தனர். அதனால் வன்னி மக்களின் பாதுகாப்பை இரண்டாம் பட்சத்திலேயே வைத்தனர். இவர்கள் அனைவரும் விட்ட தவறிற்காக வன்னி மக்கள் அதி உச்ச விலையச் செலுத்தினர். இந்த வலி வன்னி மக்களை வாழ்நாள் முழுவதும் தொடரும். இந்த மனித அவலத்தினை தடுக்க முடியாத வெறும் சாட்சிகளாக நாங்கள் ஆகிவிட்டோம்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவோம்: அத்வானி

advanil000.jpgமத்தியில் பா.ஜ. ஆட்சிக்கு வந்தால் அயோத்தியில் ராமர் கோயில் கட்டியே தீருவோம் என்று பாஜக பிரதமர் வேட்பாளர் அத்வானி கூறியுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் நடந்த கூட்டத்தில் அத்வானி பேசியதாவது: அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்ற கோடிக்கணக்கான மக்களின் கனவை மத்தியில் பா.ஜ. தலைமையில் ஆட்சி அமைந்தால் நிறைவேற்றுவோம்.

சேது சமுத்திரத் திட்டத்தை செயல்படுத்துவதாகக் கூறி ராமர் பாலத்தை இடிக்க ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முயற்சி செய்தது. சேது சமுத்திர திட்டத்துக்கு தமிழகத்தைச் சேர்ந்த ஒரு கட்சியும் (அதிமுக) எதிர்ப்பு தெரிவிக்கிறது.

இந்தியாவில் இருந்து ரூ.7 லட்சம் கோடி கறுப்பு பணம் சுவிஸ் உட்பட பல வெளிநாட்டு வங்கிகளில் முடங்கியுள்ளது. பா.ஜ. ஆட்சி அமைந்தால் அந்தப் பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வருவோம் என்றார்.

மகாராஷ்டிரா மாநிலம் ஜால்னாவில் பா.ஜ. தலைவர் ராஜ்நாத் சிங் பேசுகையில், ராமபிரானையே கற்பனை கதாபாத்திரம் என்று கூறி இந்துக்களை மத்திய அரசு இழிவுப்படுத்தியது. சேது சமுத்திர திட்டம் என்ற பெயரில் இந்துக்கள் வழிபடும் ராமர் பாலத்தை இடிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. மாற்றுவழியில் இந்த திட்டத்தை நிறைவேற்றவும் மறுக்கிறது. மத்தியில் பா.ஜ. ஆட்சிக்கு வந்தால், சேது சமுத்திர திட்டத்தை இப்போது நிறைவேற்ற முடிவு செய்துள்ள வழியில் நிறைவேற்ற விடாமல் ரத்து செய்வோம் என்றார். 

சர்வதேசத்தின் அழுத்தங்களுக்கு அரசு இன்று சபையில் பதில்அளிக்கும்

sri-lanka-parliament.jpgயுத்த நிறுத்தத்தை மேற்கொள்ளுமாறு சர்வதேச நாடுகள் இலங்கை அரசுக்கு விடுத்துவரும் அழுத்தங்கள் தொடர்பாகவும் நோர்வேயுடனான இராஜதந்திர உறவைத் துண்டித்துக்கொள்ளுமாறு இலங்கை அரசுக்குள்ளிருந்து பிரயோகிக்கப்படும் அழுத்தங்கள் தொடர்பாகவும் இலங்கை அரசின் நிலைப்பாட்டை வெளிவிவகார அமைச்சர் றோஹித போகொல்லாகம இன்று நாடாளுமன்றில் தெரிவிப்பார் என்று எதிர் பார்க்கப்படுகின்றது.

நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் அமைந்துள்ள இலங்கைத் தூதரகம் தாக்கப்பட்டமையைத் தொடர்ந்து அந்நாட்டுடனான இராஜதந்திர உறவைத் துண்டித்துவிடுமாறு அரசுடன் இணைந்துள்ள சில கட்சிகளும் அரசுக்கு வெளியேயுள்ள கட்சிகளும் அரசுக்கு அழுத்தங்கொடுக்கத் தொடங்கியுள்ளன.

குறிப்பாக அரசில் இணைந்துள்ள ஜாதிக ஹெல உறுமய மற்றும் விமல் வீரவன்ஸவின் தேசிய சுதந்திரமுன்னணி ஆகிய கட்சிகள் இந்த அழுத்தங்களைத் தொடர்ச்சியாகக் கொடுத்து வருகின்றன. இது ஒருபுறமிருக்க, இலங்கையின் வடக்கில் இடம்பெறும் யுத்தத்தை நிறுத்துமாறு சர்வதேச நாடுகள் பலவும் இலங்கைக்கு அழுத்தங் கொடுத்து வருகின்றன.

இந்த இரண்டு விடயங்கள் தொடர்பான அரசின் நிலைப்பாட்டை வெளிவிவகார அமைச்சர் றோஹித போகொல்லாகம இன்று நாடாளுமன்றில் தெரிவிப்பார் என்று நம்பகரமான வட்டாரங்கள் கூறுகின்றன.

சரணடையும் புலிகளுக்கு புனர்வாழ்வு – ஜனாதிபதி

mahinda.jpgஎஞ்சி யுள்ள புலிகள் சரணடையும் பட்சத்தில் அவர்களுக்குப் புனர்வாழ்வளித்து நாட்டுக்குப் பலன் தரக்கூடிய பிரஜைகளாக்குவதே எனது நோக்கம். இது நடைமுறைச் சாத்தியமான காரியம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுத் தெரிவித்தார்.

பிரபாகரனுக்கு எதிராகப் பாதுகாப்பு வலயத்திலிருந்து மக்கள் வெளியேறி வரத் தொடங்கி விட்டதால் எஞ்சியுள்ள புலிகள் சரணடைய வேண்டும். இல்லாவிட்டால் ஒன்றில் சண்டையிட்டு மடிய வேண்டும். அல்லது சயனைட் அருந்தி தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார். ஸ்ரீலங்கா சுதந்திர பட்டதாரிகள் சங்கத்தின் மேல் மாகாணப் பட்டதாரிகள் மாநாடு அலரி மாளிகையில் நேற்று நடைபெற்றது. இவ் வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

இவ் வைபவத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில், யுத்த நிறுத்தம் பற்றியோ தாக்குதல் இடைநிறுத்தம் குறித்தோ எம்மோடு பேசுவதில் பலனில்லை. நாம் ஏற்கனவே 72 மணிநேர கால அவகாசம் வழங்கினோம். அதற்குப் பிறகு 42 மணிநேர அவகாசம் வழங்கினோம். அவர்களுக்கு (புலிகளுக்கு) போதியளவு கால அவகாசம் வழங்கியுள்ளோம். நீங்கள், புலிகளின் தலைவருக்கு கூறி ஒரு மணி நேரகால அவகாசம் அல்ல அரைமணி நேரகால அவகாசம் பெற்றுக்கொடுங்கள்.

புலிகளின் பிடியில் சிக்குண்டுள்ள அப்பாவி மக்கள் பாதுகாப்பான பிரதேசங்களுக்கு வந்துசேர அக்கால அவகாசமே போதும். புலிகளின் பிடியில் சிக்குண்டுள்ள மக்கள் பாதுகாப்பு படையினரின் பிரதேசங்களுக்கு வந்து சேர்ந்ததும் அங்கு எஞ்சப்போவது புலிகள் மட்டுமே. ஆகவே, புலிகள் ஆயுதங்களைக் கைவிட்டுச் சரணடைய வேண்டும். இல்லாவிடில் எமது பாதுகாப்புப் படையினருடன் சண்டையிட்டு மடிய வேண்டும். அல்லது சயனைட் வில்லை அருந்தி தற்கொலை செய்து கொள்ளவே நேரிடும்.

எஞ்சியுள்ள புலிகள் சரணடைய வேண்டும். எவரும் கொல்லப்படுவதை நான் விரும்பவில்லை. எஞ்சியுள்ள புலிகள் சரணடைவார்களாயின் அவர்களுக்குப் புனர்வாழ்வளித்து நாட்டுக்குப் பயனுள்ள பிரஜைகளாக்குவதே எனது நோக்கம். இது நடைமுறைச் சாத்தியமான காரியம். இதற்கு அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனும், கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனும் நல்ல முன்னுதாரணம்.

பிரபாகரனை இந்தியாவும் கேட்டுள்ளது. அவருக்கு இந்நாட்டு நீதிமன்றத்திலும் வழக்குள்ளது.  ஆகவே அவர் சட்டத்திற்கு முன் ஆஜர்படுத்தப்பட்டு அதற்கு ஏற்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

புலிகளால் பாதுகாப்பு வலயத்தினுள் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டுள்ளவர்களில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி சிவிலியன்கள் கழுத்தளவு தண்ணீரில் பலத்த சிரமங்களுக்கு மத்தியில் நேற்று நண்பகலாகும் போது பாதுகாப்புப் பிரதேசங்களுக்கு வந்து சேர்ந்தனர். இவர்களோடு தற்கொலை புலிகளும் வந்து தங்களை வெடிக்க வைத்து அப்பாவி மக்களைப் படுகொலை செய்தனர்; காயப்படுத்தினர்.

இதனால் பாதிக்கப்பட்டவர்கள் ஹெலிகொப்டர்கள் மூலம் ஆஸ்பத்திரிகளுக்கு எடுத்து வரப்பட்டுள்ளனர்.

பிரபாகரனுக்கு எதிராக மக்கள் பாதுகாப்பு பிரதேசங்களை நோக்கி வரத் தொடங்கி விட்டனர். உலக வரலாற்றில் புலிகளால் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டுள்ள பாரியளவு அப்பாவி மக்களை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளை எமது படையினர் வெற்றிகரமாக முன்னெடுக்கின்றனர் என்றார்.

கிழக்கில் 42 செயற்திட்டங்களுக்கு அமைச்சர் முரளி நிதி ஒதுக்கீடு

karuna_amman.jpgஅரசிய லமைப்பு தேசிய நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) 2009ம் ஆண்டிற்கான தனது பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதியிலிருந்து 5 மில்லியன் ரூபாவை மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை ஆகிய மாவட்ட அபிவிருத்திப் பணிகளுக்கென ஒதுக்கீடு செய்துள்ளார்.

மேற்படி மாவட்டங்களிலுள்ள 42 செயற்திட்டங்களுக்கு இந்நிதி பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பழுகாமம் விவேகானந்தா சிறுவர் இல்லத்திற்கு 6 இலட்சம் ரூபாவும், கிரான் கனிஷ்ட வித்தியாலயத்திற்கு 10 இலட்சம் ரூபாவும், காரைதீவு இராமகிருஷ்ண மிஷன் பாடசாலைக்கு மின்சாரத்தை பெற்றுக் கொடுக்கவென 1,50,000 ரூபாவும், பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயத்திற்கு 3 இலட்சம் ரூபாவும் மற்றும் கிழக்கு மாகாண ஆலயங்களுக்குமாக நிதி பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக பொருட்கள் மீதான வரி சட்ட மூலம் பொருட்களின் விலை அதிகரிப்பை ஏற்படுத்தாது

sri-lanka-parliament.jpgஅரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள விசேட வர்த்தக பொருட்கள் வரி சட்ட மூலமானது மேலும் ஒரு புதிய வரிவிதிப்பையோ பொருட்களின் மீதான புதிய விலையதிகரிப்பையோ ஏற்படுத்தாது என அரச வருமானத்துறை அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

உள்ளூர் உற்பத்தியாளர்களைப் பாதுகாக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள ஏற்றுமதி இறக்குமதி திருத்தச் சட்டமூலமானது குறிப்பாக சோளப் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பெரும் நன்மைகளை ஈட்டிக்கொடுக்கும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று உள்ளூராட்சி சபை திருத்தச் சட்டமூலம், விசேட வர்த்தகப் பொருட்கள் வரி சட்டமூலம், தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி சட்டமூலம் ஆகியன மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இதற்கிணங்க உள்ளூர் விவசாயிகளைப் பாதுகாக்கும் வகையில் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சோளம் மற்றும் ஏனைய விவசாய பொருட்களுக்கும் வரிவிதிக்கப்படுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

அமைச்சர் தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது;

ஐக்கிய தேசியக் கட்சியினர் தமது ஆட்சிக் காலத்தில் மக்களிடமிருந்து அறவிடப்பட்ட வரியிலிருந்து தமக்கு வேண்டியவர்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய்களை வழங்கி அதற்கான வரிஅறவீட்டையும் மேற்கொள்ளாமல் சலுகை வழங்கினர்.

எமது அரசாங்கம் அத்தகைய நிறுவனங்களிடமிருந்து வரியை அறவிடுவதில் கவனம் செலுத்தியதுடன் உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு வரிச் சலுகைகளை வழங்கி வருகிறது குறிப்பாக சோளப் பயிர்ச்செய்கையாளர்களுக்கு ஒரு கிலோ சோளத்திற்கு 28.00 ரூபா விலை கிடைக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

சோளப் பயிர்ச் செய்கையாளர்களின் மேம்பாட்டைக் கருதி அதற்கென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விசேட குழுவொன்றை நியமித்துள்ளார். இதன்படி எதிர்வரும் காலங்களில் ஒன்றரை இலட்சம் ஏக்கரில் சோளம் பயிரிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.