March

March

அமெரிக்க வேலையில்லாதோர் எண்ணிக்கை உச்சத்தை எட்டுகிறது

worker.jpgஅமெரிக் காவில் வேலையில்லாதோரின் எண்ணிக்கை கடந்த 25 வருடங்களில் இல்லாத அளவுக்கு அதிகமாக இருப்பதாக அமெரிக்க அரசாங்கம் வெளியிட்ட புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. கடந்த மாதத்தில் ஆறரை லட்சம் பேர் வேலை இழந்துள்ளார்கள். இதனால் வேலையில்லாதோரின் மொத்த எண்ணிக்கை அரை வீதத்தால் அதிகரித்து 8.1 சதவீதத்தை எட்டியுள்ளது.

சில்லறை விற்பனைத்துறை மற்றும் பொழுதுபோக்குத்துறை ஆகியவை உட்பட பல்வேறுபட்ட தொழிற்துறைகளில் வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது.

தொழில்சார் நிபுணர்கள் சேவைகள், வணிக சேவைகள், தொழிற்சாலைகள் மற்றும் கட்டிட நிர்மாணத்துறை ஆகியவையே மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

புதுமாத்தளனில் பட்டினிச்சாவு என்ற செய்தி முல்லை மருத்துவரின் அடிப்படையற்ற கருத்து – சுகாதார அமைச்சின் செயலர் விளக்கம்

logo_health.jpgமுல்லைத் தீவு, புதுமாத்தளன் பகுதியில் பட்டினியினால் பலர் இறந்துள்ளார்களென முல்லைத்தீவு சுகாதார சேவைகள் பணிப்பாளர் (RDHS) டொக்டர் வரதராஜா தெரிவித்த கருத்துக்கள் எந்த வகையான விஞ்ஞான ரீதியான அடிப்டையுமற்றதென சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்டர் எச். ஏ. பி. கஹந்தலினகே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- டொக்டர் வரதராஜனால் தெரிவித்த கருத்துக்கள் ஊடகங்களில் வெளியாகியிருந்தன. சில தினங்களாக பட்டினியால் பாதிக்கப்பட்டவர்களில் 13 பேர் மரணித்துள்ளனர். இவர்களின் சடலங்கள் புதுமாத்தளன் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டிருந்ததாக அவர் கூறியிருக்கிறார்.

முல்லைத்தீவு சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் வரதராஜாவுடன் தொடர்பு கொண்டு (04/03/2009) வினவினேன். பட்டினிச்சாவு குறித்துதான் முல்லைத்தீவு அரசாங்க அதிபருக்கு கடிதம் எழுதியதாக டொக்டர் வரதராஜா ஒப்புக்கொண்டார்.மேற்படி மரணங்கள் எவ்வித விஞ்ஞான ரீதியான அடிப்படையுமற்றதென ஒப்புக்கொண்ட டொக்டர் வரதராஜா, சடலங்களின் பெளதிக ரீதியான தோற்றத்தின் அடிப்படையிலேயேதான் அந்த முடிவை அறிவித்ததாகவும் ஏற்றுக்கொண்டார்.

எந்தவித உயிரியல் ரீதியான (Autopsy) பரிசோதனையும் இல்லாமல் டொக்டர் வரதராஜா எழுந்தமானமாக அறிக்கை விட்டிருக்கிறாரென்பது ஊர்ஜிதமாகியிருக்கிறது.

புதுமாத்தளன் பகுதியிலுள்ள மக்களை மனிதக் கேடயங்களாகப் புலிகள் பயன்படுத்தி வருகிறார்கள். அவர்களுக்குத் தேவையான உணவு, மருந்து வகைகளை அரசாங்கம் போதியளவு அனுப்பி வருகிறதென்பனை சர்வதேச ஊடகங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன். நோய்வாய்ப்படுபவர்கள் எவ்வித தாமதமும் இன்றி திருமலைக்கும் வவுனியாவுக்கும் அனுப்பபட்டு வருகிறார்கள்.

எனவே, டொக்டர் வரதராஜனால் வெளியிடப்பட்ட கடிதமும், அது தொடர்பான கருத்துக்களும் புலிகளின் அழுத்தங்களினால் செய்யப்பட்டவையாக இருக்கலாம். இது அரசாங்கத்தையும் அரசாங்கத்துடன் சேர்ந்து பணியாற்றி வரும் ஐ.சி.ஆர்.சிக்கும் ஒரு இக்கட்டான நிலைக்குத் தள்ளுவதற்கான திட்டமிட்ட செயலாகக் கருதவேண்டியுள்ளது.

எப்படியென்றாலும், இது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக டொக்டர் எச். ஏ. பி.காஹந்தலியனகே தெரிவித்துள்ளார்.

இறையாண்மைக்கு எதிரான கருத்து: நாஞ்சில் சம்பத் கைது

nanjilsampath.jpgமதிமுக வின் கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் சனிக்கிழமை சென்னையில் கைதுசெய்யப்பட்டார்.  இம்மாதம் முதல் தேதியன்று திருப்பூரில், இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில், தனித் தமிழ்நாடு உருவாகவேண்டும் என்றும், டெல்லியில் அதன் தூதரகம் அமைய வேண்டும் என்றும், தமிழகத்தில் உள்ள மாணவர்கள் அதற்குப் போராட வேண்டும் என்றும் அவர் பேசியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், பிரிவினைவாதத்தைத் தூண்டும் வகையிலும் பேசியதாக அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

புதுமாத்தளன் பகுதிக்கு 500 மெ. தொன் உணவு – இன்று தரையிறக்கம்

ship.jpgபுதுக் குடியிருப்பு, புதுமாத்தளன் பகுதியிலுள்ள மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களுடன் நேற்று மாலை புறப்பட்ட விங்டாங் சரக்குக் கப்பல் இன்று முல்லைத்தீவு கடலிலிருந்து 500 மெற்றித் தொன் உணவுப் பொருட்களை புதுமாத்தளன் கரைக்கு இறக்குகிறது. முல்லைக்கடலில் இறங்குதுறை வசதியின்மையால் சிறிய படகுகளை பயன்படுத்தி பொருட்களை இறக்குவதற்காக படகுகளுக்கு 200 லீட்டர் பெற்றோல் மண்ணெண்ணெய்யும் கப்பல் மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

அரிசி, சீனி, மா, சமையல் எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய 500 மெற்றிக் தொன் உணவுப் பொருட்கள் ஒரே தடவையில் கொண்டுசெல்லப்படுவதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் எஸ். பி. திவாரட்ண தெரிவித்தார்.

திருகோணமலை துறைமுகத்திலிருந்து நேற்று மாலை 3.00 மணிக்கு 500 மெற்றிக் தொன் பொருட்களுடன் கப்பல் புறப்பட்டுச் சென்றதுடன், இன்று புதுமாத்தளன் பகுதி கடலில் தரித்து நிற்கும் என்று கூறிய அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் எஸ். பி. திவாரட்ண இதற்கு முன்னரும் 250 மெற்றிக் தொன் உணவுப் பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவித்தார்.

அத்துடன் பொருட்களை இறக்கும் சிறிய வள்ளங்கள் பல தடவைகள் கரைக்கும் கப்பலுக்குமாய் செல்ல வேண்டியதால் பெருந்தொகையான எரிபொருட்கள் தேவைப்படுவதாக கூறப்பட்டதையடுத்தே 200 லீட்டர் எரிபொருளும் அனுப்பப்படுவதாகவும் எஸ். பி. திவாரட்ண மேலும் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறைக்கு முற்றுப் புள்ளி வைக்கப்படுவது தமிழ் பெண்களின் விடுதலைக்கு மைல்கல்! : ஜெ. ஜென்னி

Freedom_it_is_a_rightஉலகெங்கிலுமுள்ள ஒடுக்கப்பட்ட – ஒடுக்கப்படுகின்ற பெண்களை மையப்படுத்தி வருடா வருடம் பங்குனி 8ல் சர்வதேச மகளீர் தினத்தையொட்டி, உலகம் முழுவதும் மகளிர் பேரணிகள், எழுச்சிக் கூட்டங்கள், விடுதலை சுலோகங்கள், அறைகூவல்கள். அதேநேரம் எமது நாட்டில் இன்று நிமிடத்திற்கு நிமிடம் குண்டுமழையில் மரணித்துக் கொண்டும், வாழ்வாதாரங்கள் எதுவுமே அற்றும், நிர்க்கதியாக அல்லல்பட்டு அலைந்து திரியும் பெண்கள், குழந்தைகள், வயோதிபர் உட்பட்ட சமூகம், இன்று இனச்சுத்திகரிப்பிற்கு பலியாகி வருவது சர்வதேசமே அறிந்த விடயமாகும்.

யுத்த சூழலில் சிக்குண்ட பெண்கள், குழந்தைகளின் நிலையும் மிக மோசமானதாக உள்ளது. பொதுவாக ஒரு சமூகத்தின் பெண் விடுதலையானது, இரட்டைச் சுமைகளுக்கு எதிராகப் போராட வேண்டியதாக உள்ளது. நாளாந்த வாழ்வியல் பிரச்சனைகளை எதிர்கொள்வதும் சமூக ஒடுக்குமுறையை எதிர்கொள்வதுமாக அவளுடைய போராட்டம் தொடர வேண்டி இருக்கையில்  யுத்த சூழலின் மத்தியில் வாழும் நாடுகளில் பெண்ககள் 3வது சுமையையும் சுமக்க நிர்ப்பந்திக்கப்பட்டு உள்ளனர். இவ்வாறாக வாழ்வியல் பிரச்சனை என்பது மறுதலையாக ‘பிரச்சனைகளும் – சுமைகளுமே வாழ்வியலாக” மாறிவிட்டது.

இந்த 3வது சுமைகளாக:
1)போர்ச்சூழலில் அல்லது வன்முறைக் கலாச்சாரத்தில் வாழும் சமூகத்தில் – கணவனையோ, அன்றி தந்தையையோ அன்றி சகோதரனையோ இழக்கும் பெண்கள் தனிமரமாக நின்று பொருளாதார நிலையுட்பட்ட அத்தனை குடும்பச் சுமைகளையும் அக்குடும்ப உறுப்பினர்களையும் தானே சுமக்க வேண்டி உட்படுகின்றாள்.
2)பயங்கரவாத சட்டங்கள் அல்லது போர்ச்சூழலால் கைதாக்கப்படும், அல்லது காணாமல் போகும் ஆண் உறவுமுறைகளை தேடியோ, அலைந்தோ, ஆர்ப்பாட்டங்கள் செய்தோ அன்றி சட்ட அலுவல்கள் மேற்கொண்டோ சிறிய கிராமங்களிருந்து கூட புறப்பட்டு பெருநகரங்கள் வரை வந்து நீதிக்காக போராட நிர்ப்பந்திக்கப்படுகின்றாள், அல்லது தேடி அலைகின்றாள்.
3)சமூகத்தில – கைதாகுதல், காணாமல் போதல், அடையாளம் தெரியாத படுகொலை என்ற பயநிலைப்பாடுகளால் ஆண்கள் இருக்கும் குடும்பங்களில் கூட, பெண்கள் சராசரி சுமைகளுடன் வாழ்வியல் ஆதாரமாக எல்லாவற்றிற்குமான குடும்ப பொறுப்பை ஏற்க வேண்டியுள்ளது.
4)தத்தமது குடும்பங்களின் அடிமட்ட வாழ்நிலைக்கோ, அன்றி பொருளாதார மேம்பாட்டிற்கோ மேற்குறிப்பிட்ட அத்தனை சுமைகளுக்கும் அப்பாலும், நகரங்களுக்கு இடம்பெயர்ந்தோ அன்றி மத்திய கிழக்கு நாடுகள் உட்பட அந்நிய நாடுகளுக்கு அலைந்தோ உழைக்க வேண்டியுள்ளது.
5)மேலும் இந்த வன்முறைக் கலாச்சாரம், மனித வாழ்வில் பின்னிப் பிணைந்து விட்டதால் மனித வெடிகுண்டுகளாக சில பெண்களும், கர்ப்பிணித் தாய்மார்களும் போராட்டம் என்ற பெயரில் பயன்படுத்தப்பட்டதால் அனைத்து வயதுப் பெண்களும் கூட பாதுகாப்புநிலை, பரிசோதனை என பல சொல்லோணாத் துனபத்திற்கு ஆளாகின்றாள். இவற்றினூடாக நடைபெறும் பாலியல் துன்புறுத்தல் கூட சட்டங்களால் நியாயப்படுத்தப்பட்டவைகளாகத் தான் கணிக்கப்படுகின்றன.

இப்படியாக போர்ச் சூழலில் வாழும் எந்த நாட்டுப் பெண்களாக இருந்தாலும் சரி, தமது வயதிற்கும் அறிவுக்கும் அனுபவத்திற்கும் மீறிய சுமைகளாக இந்த 3வது சுமை பல வடிவங்களில் பெண்களை மேலும் மேலும் சுமை தாங்கிகளாகத்தான் அழுத்துகின்றன.

இதனூடாக, பல கிராமத்து பெண்கள் உட்பட, வீடே உலகமென – இந்த இரட்டைச் சுமை வாழ்வே தமது தலைவிதியென்று வாழ்ந்து வந்த பெண்கள் இந்த 3வது சுமையை ஏற்க நேரிடும்போது குடும்பத்தில் மட்டுமல்லாது சமூகத்திலும், சமூகக் காரணிகளிலும் தானாகவே முன்வந்து தலைமைப் பொறுப்புக்களை பலவிதத்திலும் ஏற்க நிர்ப்பந்திக்கப்படுகின்றாள்.

‘பல தீமைகளிலும் ஒரு நன்மை” என்பது போல் இந்தப் பலவகை தலைமைப் பண்புகளால் ஒவ்வொரு பெண்ணின் அவரவர் சூழலுக்கேற்றவாறு ஆளுமை தோற்றுவிக்கப்படுகின்றது. ஆனால் இந்த ஆளுமை தொடர்ந்தும் சமூகத்தில் பெண்கள் மீதான பலவித அழுத்தங்களையும், சுமைகளையும் இழப்புக்களையும் மொத்தத்தில் அதிகரிக்கச் செய்கின்றது.

மேலும், உலகப் புரட்சிகள் உட்பட்ட அனைத்து உலகில் நடக்கும் யுத்தங்கள், ஆக்கிரமிப்புக்கள், நாடு பிடிப்புக்கள் அனைத்திலும், காலத்திற்கு காலம் அதிகார வர்க்கங்களாலும் அதுசார்ந்த ராணுவத்தாலும், ஆக்கிரமிப்பாளார்களாலும் ஒடுக்கப்படும் மக்களின் மீதோ அன்றி, கைப்பற்றப்படும் பிரதேசங்களிலோ, அன்றி ராணுவ மற்றும் அராஜகவாதிகளால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளாலோ பாதிக்கப்படுபவர்களில் மிக காட்டுமிராண்டித்தனமாக பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்டு பாதிக்கப்படுபவர்கள் பெண்களே. விசாரணை என்ற பெயரிலோ, மிரட்டல் என்ற வடிவத்திலோ, ஆக்கிரமிப்பு தோரணையிலோ மிக அவமானப்படுத்தப்பட்டு ஒரு பெண் துன்புறுத்தப்படுவது இந்த பாலியல் வன்முறையால்தான்.

ஒரு ஆணிற்கு நடைபெறும் உடல் சார்ந்த சித்திரவதைகள், துன்புறுத்தலைவிட ஒரு பெண்ணிற்கு நடக்கும் உடல் சார்ந்த இந்த பலாத்காரம் என்பது காலாதிகாலத்திற்கும் அப் பெண்ணின் உடல் மனநிலை சார்ந்த பெரும் கொடுமை என்பதை ஒரு பெண்ணாக இருந்து சிந்தித்துப் பார்த்தால் தான் புரியும்.

அன்றிலிருந்து இன்றுவரை – இந்நிமிடம் வரை உலகம் நாகரீக வளர்ச்சியில் போய்கொண்டு இருந்தாலும் இந்த பாலியல் துன்புறுத்தல், பலாத்காரம் என்று வரும்போது பெண்களுக்கெதிரான இந்தக் கொடுமை ஒரே வடிவமைப்பில்தான் நடக்கின்றது.

இயற்கையில் ஒரு பெண்ணாணவள், உடலியல் ரீதியாக உயிரியல் படைப்பின் கருவறையை கொணடவள். இவள் ஒரு சமுதாயத்தின் சங்கிலித்தொடர். ஆனால் இந்தப் பெண்ணிற்கு இழைக்கப்படும் பாலியல் வல்லுறவுக் கொடுமையென்பது, அவளின் அத்திவாரத்தையே ஆட்டம் காண வைக்கும் அவலமாகும். எனவே இப்படியான கொடுமையிலிருந்து பாதிக்கப்பட்ட பெண் மீண்டுவர உடலாலும், மனதாலும் விசேடமாக எம் சமூக அமைப்பாலும் எவ்வளவோ துன்பங்களை கடக்க வேண்டியுள்ளது.

எனவே இந்த சர்வதேச மகளீர் தினநாளில் – உலகில் பல்வேறு நாடுகளில் பலவித பெண் விடுதலைக் கோசங்கள் வைக்கப்பட்டாலும் எம்மவரின் யுத்த பூமியில் அல்லல்படுதலும், அலைந்துதிரிதலும், மரணத்துள் வாழ்வுமாக குண்டுமழையில் பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில் நாம் எந்த பெண் விடுதலைக் கோசங்களை வைக்க முடியும்.

அடிப்படை வாழ்வியல் உரிமையே அற்றுப் போகும் நிலையில் எந்தெந்த உரிமைகளை நோக்கி சிந்திப்பது? யுத்தத்தில் வாழும் பெண்கள் குழந்தைகள் உட்பட்ட எம்மவர் இதுவரை யுத்தத்தில் இழந்த உயிர்களைப் பற்றி சிந்திப்பதா? தமக்கு நடக்கும் உடல், உள ஊனங்கள், தனிமைகள், சுமைகள் விரக்திகள் பற்றி சிந்திப்பதா? தத்தமது உயிர்நிலைகளின் நிரந்தரமற்ற தன்மையை பற்றி சிந்திப்பதா? மொத்த்தில், யுத்தத்தின் வாழ்வு கூடட, பெண்ணை மேலும் மேலும் பாதிக்கப்பட்டவளாக, சுமை தாங்கியாக இருப்பு நிலைகளுக்காகவே அகதி முகாம்களில் எல்லாவற்றிற்கும் கையேந்துபவளாக, பெண்களின் பிரத்தியேக பிரச்சனைகளுக்குக்கூட வரிசையில் நின்று தமது திகதிகளை அறைகூறுபவளாக இப்படி எத்தனை விதத்தில் பெண் அங்கு துன்பப்படுகின்றாள்.

மரணத்து வாழ்விலும் பெண்களுக்கேயுரிய உடலியல் மாற்றங்கள் அசௌகரியங்கள்! எத்தனை கர்ப்பிணித் தாய்மாரின் அவசரமான – அவலமான பிரசவங்கள்! அந்த பச்சிலம் பாலகர்கள் யுத்த பூமிக்குள்ளும், தற்காலிக – நிரந்தரமான அகதிக் கொட்டகைகுள்ளுமாக புதிய வரவுகள். இதற்குப் பாலூட்ட இரத்தமே இல்லாத தாய்மார்கள்! எத்தனை குழந்தைகள் பெண்கள் உட்பட்ட அரை வயிறு கால் வயிறுடன் பட்டினியான நாட்கள், நலிவுற்ற வயதான ஊனமுற்ற வயோதிபர்! இப்படி எத்தனை எத்தனை அவலங்கள்!

ஓரளவு மனித உரிமையுள்ள, ஓரளவு ஜனநாயகம் நடைமுறையிலுள்ள சமூக அமைப்பில் தான் பெண்விடுதலை கோசங்களிற்கு இடமுண்டு ‘ஆனால் எம் இருப்பே எமக்கில்லை” என்ற பிற்பாடு, நாம் எதை ஆதாரமாக்கி – எவற்றை கோசமாக்குவது?

எனவே மொத்தத்தில், சர்வதேச மகளீர் தின கோசங்களாக எதை நாம் முன்னெடுப்பது?

இரு மருங்கிலும் உடன் யுத்தத்தை நிறுத்து!
உடன் சமாதானத்தை விரைவுபடுத்து!
பாதுகாப்பு பிரதேசங்களை விஸ்தரி!
நியாயமான சர்வதேச மத்தியஸ்தத்துடன் எம்மவர்களின் உரிமைகளும், இறைமைகளும் மீளப்பெறப்படல்!

இப்படியான கோசங்களும், அதன் நகர்வுகளும், அதனூடான வேலைத்திட்டங்களுமே அடிப்படை வாழ்வியலை மீட்டுத்தரும். அதனூடே எம்மகளிரின் விடுதலையையும் முன்னெடுக்க முடியும். ஏனெனில் வன்முறைக் கலாச்சாரத்தால் முற்றாக நிர்மூலமாக்கப்பட்ட எமது தமிழ் பேசும் மக்களின் மனித உரிமைகள் மறுசீரமைக்கப்படுவதுடன் இணைத்தே எம்மகளீரின் விடுதலையையும் பல தரத்திலும் முன்னெடுக்க முடியும்.

இன்று (08.03.09) அகில உலக பெண்கள் தினம்! : இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்

International_Women_Dayஇன்னும் இரு வருடங்களில் ‘அகில உலக பெண்கள் தினம் நூற்றாண்டு விழா’ எடுக்கவிருக்கிறது. 98 வருடங்களாகத் தொடரும் அகில உலக மாதர் தினமான இன்று கிட்டத்தட்ட 61 நாடுகளில் சுமார் ஆயிரம் வைபவங்கள், விழாக்கள், சொற்பொழிவுகள், கலைவிழாக்கள், ஊர்வலங்கள் என்பன பெண்களால் நடத்தப்படவிருக்கின்றன.

கடந்த நூற்றாண்டிலிருந்து இதுவரை உலகம் எத்தனையோ முன்னேற்றங்களை கண்டிருக்கின்றது. அந்த மாற்றத்தால் நிறையப் பயன் பெற்றவர்கள் பெண்கள் எனபது மறுக்க முடியாத உண்மை. கடந்த நூற்றாண்டில் நடந்த இரு உலகப் போர்களும் (முதலாம் உலக யுத்தம்1914-1919, இரண்டாம் உலக யுத்தம் 1939-1945) பெண்களின் வாழ்க்கை மாற்றமடைய முக்கிய காரணிகளாகவிருந்தன. ஆண்கள் தங்கள் நாட்டைக் காப்பாற்ற போருக்குச் சென்றார்கள். அதே நேரம் பெண்கள், இதுவரையும் ஆண்கள் தங்கள் குடும்பத்துக்காகவும் சமுதாயத்துக்காகவும் செய்த அரசியல், தொழிற்சாலை வேலைகளையும், போருக்கான ஆயுத உற்பத்தி வேலையையும் செய்ய வேண்டிய நிலைக்குப் பெண்கள் தள்ளப் பட்டார்கள்.

19ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து இதுவரை பெண்களின் நிலையில் பல முன்னேற்றங்கள் பெரும்பாலான ரீதியில் மேற்கு நாடுகளில்  ஏற்பட்டாலும் வளர்ச்சியடையாத, வளர்ச்சியடையும் பல நாடுகளில் பெரும்பாலான பெண்களின் நிலையில் பெரிய விதத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இன்று உலகில் அதி தீவிரமாக வளர்ந்து வரும் ‘அடிப்படைவாதக் கொள்ளைகள்’ (பெரும்பாலும் சமய ரீதியானது சில கொள்கைகள் இன ரீதியானவை) பெண்களை மிகவும் பின் தங்கிய நிலைக்குத் தள்ளி விட்டிருக்கிது.

ஓரு சமுதாயத்தின் கலாச்சார, சமயப் பாதுகாவலாளார்களாகப் பெண்கள் கணிக்கப்படுகிறார்கள். பெண்களின் உடைகள், வாழ்க்கை முறை என்பன கலாச்சாரப் பிணைப்பு, கலாச்சாரக் கட்டுக்கோப்புக்கள் என்ற பெயரில் ஆண்களால் கட்டுப்படுத்துப்படுகின்றன.

ஓட்டுமொத்தமாகப் பார்த்தால் பெண்ணினம், இன்று பல துறைகளிலும் முன்னேறியிருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். ஆணினம் பொறாமைப்படுமளவுக்குக் கல்விப் படிப்பில் மட்டுமல்லாது, பல தொழிற்துறைகளிலும் பிரகாசிக்கிறார்கள். பொருளாதார முன்னேற்றததைக் கண்டிருக்கிறார்கள். ஓரு குறிப்பிட்ட சிறு தொகையினர் அரசியற் தலைவிகளாக வந்திருக்கிறார்கள்.படை வீரர்களாகப் பணி புரிகிறார்கள். விஞ்ஞானிகளாக விண்ணில் பறக்கிறார்கள்.

ஆனாலும் இன்று, ”பெண்ணியம்” என்ற கோட்பாடு ஒடுக்கப்பட்ட பெண்களுக்கு மட்டுமல்லாது ஒடுக்கபட்ட அத்தனை மக்களுக்கும் போராடும் ஒரு தத்துவ நியதியைக் கொண்டிருக்காமல் ஒரு குறிப்பிட்ட வர்க்கப் பெண்கள் மட்டும் தாங்கள் சரியென நினைக்கும் வாழ்க்கை முறையைக் கொண்டு நடத்தப் பெண்ணிய வாதத்தையும் பெண்ணிய தத்துவங்களையும் கையாடிவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டும் பல திசைகளிலுமிருந்தும் வருகின்றன.

என்னதான் பல குற்றச்சாட்டுக்கள் இருந்தாலும் பெண்ணிய சிந்தனைகள் பல மாற்றங்களை முன்னெடுக்க முனைகிறது. பெண்களைப் பாதுகாக்கப் பல சட்டங்கள் உண்டாக்கவும் தொழில் நிலையங்களில் சம உரிமை, சம ஊதியம் பெறவும் இப்போராட்டஙகள் உதவுகின்றன. விக்டோரியா மகாராணி காலத்தில் பெண்கள் ஆண்களின் ‘உடமைகள்’ என்ற சட்டம் இருந்தது. இன்று அந்த சட்டம் மாற்றப்பட்டு, மனைவியின் சம்மதம் இன்றி அவளை அவளின் கணவர் தொடுவதும் இன்று சட்ட விரோதமாகியிருக்கிது.

இப்படி எத்தயையோ மாற்றங்களைக் கண்டாலும், பெண்கள் உண்மையாகவே தாங்கள் போராடும் ‘சமத்துவத்தை’ அடைந்து விட்டார்களா? என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.

இங்கிலாந்தில் ஒரு கிழமைக்கு இரு பெண்கள் அந்தப் பெண்களின் கணவர் அல்லது காதலனாற் கொலை செய்யப்படுகிறாள். ஓவ்வொரு வருடமும் நூற்றுக்கணக்கான பெண்கள் பாலியற் கொடுமைக்காளாகிறார்கள். சமய. குடும்ப கவுரவம் என்ற பெயரில் பல பெண்கள் அவர்களின் பெற்றோர், உறவினர்களாற் கொலை செய்யப்படுகிறார்கள்.

வறிய நாடுகளின் ஏற்றுமதிப் பொருட்களாகப் பெண்கள் விலை பேசப்பட்டு மேற்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் படுகிறார்கள்.

வளர்ச்சியடையாத நாடுகளில் நடக்கும் அரசியல் போராட்டங்களால் அவதிப்படுபவர்கள் பெண்களும் குழந்தைகளுமாகும். வசதி படைத்த நாடான அமெரிக்காவிலேயே மிகவும் கொடிய வறுமையை அனுபவிப்பவர்கள் கறுப்பு இனப் பெண்களாகும். ஆனாலும் அமெரிக்காவில் நடக்கும் போராட்டங்களில் பெண்கள் எப்போதும் முக்கிய பங்கெடுத்திருக்கிறார்கள்.கறுப்பு இன மக்களின் போராட்டத்தில் பெண்களின் பங்கு எப்படி முன்னிலை வகித்தது என்பது சரித்திரம் படித்தவர்களுக்குத் தெரியும்

1861-65  வரை நடந்த அமெரிக்க உள்நாட்டுப் போரின் பின்னால் நடந்த சமுதாய, பொருளாதார மாற்றங்கள் அமெரிக்காவில் பல மாற்றங்களை உண்டாக்கின. பெண்களும் சொத்துடமை வைத்திருக்கலாம் (கோன் வித் த விண்ட் என்ற படம் இதற்கு ஒரு உதாரணம்) என்பது போன்ற அடிப்படைச் சட்டங்கள் பெண்களின் வாழ்க்கை மாற்ற மடையவும் பொருளாதாரத்தில் உயர்நிலை காணவும் உதவின.

அத்துடன் 19ம் நூற்றாண்டின் கடைசிக் கால கட்டத்தில் இரஷ்யாவில் கொழுந்து விட்டெரியத் தொடங்கிய மார்க்சியப் புரட்சிக் கருத்துக்கள் மேற்கத்திய பெண்களின் போராட்டத்திற்கும் பெண்கள் தினக் கொண்டாட்டங்களுக்கம் வித்திட்டதா என்பது பற்றியும் பல ஆய்வுகள் செய்யலாம்.

பெண்கள் தங்கள் சம உரிமைக்கான போராட்டத்தை தொடங்க முதல் பெண்களுக்கும் வாக்குரிமை கொடுக்க வேண்டும் என்று முதல் குரல் எழுப்பியவர் (1869) ஜோன் ஸ்ருவார்ட் என்ற ஒரு பிரிட்டிஷ் ஆண் பாராளுமன்றவாதியாகும்.

1893ல் பிரித்தானியக் காலனியாகவிருந்த நியுசீலாந்து நாட்டில் பெண்களுக்கு வாக்குரிமையளிக்கும் உரிமை கொடுக்கப்பட்டது.

பிரித்தானியாவில் பல போராட்டங்களுக்குப் பின்தான் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை கொடுக்கப் பட்டது. ஆனாலும் இன்னும் பல நாடுகளில் பெண்களின் பாராளுமன்ற பிரவேசம் மிகவும் குறைந்த நிலையியே இருக்கிறது. இவவருடம், சவுதி அரேபியாவில் முதற்தடவையாக ஒரு பெண் பிரதி நிதித்துவம் பெற்றிருக்கிறார்.

இன்று நடைமுறையிலிருக்கம் பெண்ணிய சிந்தனைகளுக்க வித்திட்டவர்கள் அமெரிக்கப் பெண்கள் என்றால் அது மிகையாகாது.

1909ம் ஆண்டு, அமெரிக்காவின் நியுயோர்க் நகரிலிருந்த உடுப்புத் தொழிற் சாலையிலிருந்த பெண்களின் ஞாபகார்த்தக்கூட்ட அணிவகுப்பாக சோசலிசப் பார்டடியைச் சேர்ந்த பெண்களாற் தொடங்கிய (28.2.1909) இந்த நிகழ்ச்சி அகில உலகப்பெண்கள் தினம் என்று உருவாகியது. 1910ம் ஆண்டு டென்மார்க் நாட்டின் கோப்பன்ஹேகன் நகரில் நடந்த முதலாவது பெண்கள் மகாநாட்டில் பெண்களுக்காக ஒரு தினத்தை விசேடமாகக் கொண்டாட வேண்டும் என்ற தீர்மானம் ஜேர்மனிய நாடடைச் சேர்ந்த சோசலிஸ்ட் பார்ட்டி அங்கத்தவரான கிலாரா ஷெட்கின் என்ற பெண்மணியாற் கொண்டுவரப்பட்டது.

தொடர்ந்து நடந்து வந்த அகில உலகப் பெண்கள தின விழாக்களும் அதன் வளர்ச்சியும் 1975ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையினர் பெண்கள் தின விழாவை ‘அகில உலக மாதர் தினமாகப் பிரகடனப்படுத்தியது.  உலகம் பரந்த விதத்தில் பார்த்தால் பெண்களின் அரசியற் பங்கு மிகக்குறைவாகவேயுள்ளது. ஆண்கள் தந்கள் அதிகாரத்தை நிலை நிறுததப் பெண்களை அரசியலில் இருந்து ஒதுக்கி வைக்கிறார்கள்.

இன்று, பெண்கள் தினத்தன்று, தென்னிந்திய வியாபாரிகள் இவ்வினத்தை ‘மலிவு சேலை வியாபார’ தினமாக நடத்துகிறார்கள். மலிவான சேலைக்குள் பெண்ணிய சிந்தனைகளைச் சுருட்டிவிடப் பார்க்கிறார்கள். இந்தியப் பெண்களின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் இன்னும் 33 விகிததிற்கு வரவில்லை. மத வெறி பிடித்த – (பெண்ணைத் தெய்வமென மதிக்கும்)  இந்து தீவிரவாதிகளன் கொடிய பாலியல் வெறிக்கு ஒவ்வொரு வருடமும் நூற்றக்கணக்கான தலித் பெண்கள் பலியாகிறார்கள்.

பாலஸ்தினியாவின் காஷாப் பகுதியிலும் சூடானின் டாவோர் அகதி முகாமிலும் ஆயரக் கணக்கான பெண்களும் குழந்தைகளும் படும் துயர் சொல்ல முடியாதவை.

இலங்கையில் ஆயிரக் கணக்கான தமிழப் பெண்களும் குழந்தைகளும் போர் சூழ்நிலைக்குள் அகப்பட்டு சொல்லவொண்ணாத் துயரை முகம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இலங்கையில் கிழக்கிலங்கைப் பெண்கள் பலர் பாதுகாப்புப் படையின் பாலியற் கொடுமைக்காளாகித் துன்பப்படுகிறார்கள். இவை மிகவும் கடுமையாகக் கண்டிக்கப் படவேண்டியவை. இவர்களின் துயர் விரைவில் தீர்க்கப்பட அரசியல் மாற்றங்கள் முன்னெடுக்கப்படப் பெண்களின் பங்கு மிக மிக அவசியம்.

எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் பாரிஸில் படுகொலைக்கு எதிரானதும் தமிழ் – சிங்கள இன ஒற்றுமையைக் கோருகின்றதுமான போராட்டம்! : த ஜெயபாலன்

Paris_Protest_07Mar09இலங்கையில் நடைபெறும் அனைத்துப் படுகொலைகளையும் கண்டிக்கும் கண்டனப் போராட்டம் இன்று பாரிஸில் இடம்பெற்றது. இக்கண்டன ஊர்வலம் பாரீஸ் Place Georges Pompidou இருந்து ஆரம்பமாகி பிரான்ஸ் வெளிநாட்டு அமைச்சு முன்றலில் முடிவுற்றது. 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட இந்த ஊர்வலத்தில் பிரெஞ் இடதுசாரி அமைப்புகளைச் சேர்ந்த பலர் கலந்துகொண்டிருந்தனர். வழமையாக புலி ஆதரவு அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்படும் ஆர்ப்பாட்ட ஊர்வலங்களுக்கு மாறுபட்ட வகையில் இந்தக் கண்டன ஊர்வலம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. Comite’ De de’fence Social – சமூகப் பாதுகாப்பு அமைப்பு ஏற்பாடு  செய்திருந்த இந்த ஊர்வலத்தில் பிரான்ஸில் உள்ள இடதுசாரி அமைப்புகளான FA (Fédération Anarchiste), Bread and Roses, Solidaires Paris (Union Syndicale) ஆகியனவும் கலந்து கொண்டிருந்தன. இலங்கை அரசு மேற்கொள்ளும் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை தமிழ் மக்களுக்கு உள்ளேயே வைத்திருந்த நிலையில் இருந்து தாம் நாழும் நாடுகளில் உள்ள பிரதான போராட்ட அரசியல் அமைப்புகளுடன் இணைந்து போராட முற்பட்டதற்கு ஒரு எடுத்துக்காட்டாக இது அமைந்து உள்ளது.

இக்கண்டன ஊர்வலம் பற்றி கருத்துத் தெரிவித்துள்ள தேசம்நெற் வாசகர் சண் இவ்வாறு தெரிவிக்கிறார், ”இந்த நேரத்தில் இப்படியான இந்த ஊர்வலம் இவர்கள் வைக்கும் கோசம் எல்லா கொலைகளையும் கண்டிக்கும் நேர்மை எல்லா கொள்ளைக்கார அமைப்புக்களையும் கண்டிக்கும் துணிவு எங்களுக்கு நம்பிக்கை தருகிறது. பரிசில் இன்னும் இலங்கை அரசுக்கு விலைபோகாத உறுதியான நண்பர்கள் இருப்பது இன்னும் நம்பிக்கை தருகிறது.”

Paris_Protest_07Mar09– இலங்கையில் நடைபெறும் அனைத்து படுகொலைகளையும் வன்முறைகளையும் நிறுத்து!
– இலங்கையில் ஒடுக்கப்படும் அனைத்து மக்களிற்கும் சுகந்திரம் வழங்கு!
– அராஐகம் படுகொலைகள் காணாமல்போதல்களிற்கு எதிராக தமிழ்பேசும் மக்களே சிங்கள மக்களே ஒன்றிணையுங்கள்!
– பெண்கள் சிறார்களுற்கு எதிரான அனைத்து வன்முறைகளையும் நிறுத்து!
– பிரான்ஸ் அரசே! வதிவிட அனுமதியற்ற இலங்கை மக்களிற்கு இங்கு வதிவிட அனுமதி வழங்கு!
– பிரான்ஸ்சிலும் இலங்கையிலும் உள்ள இலங்கை தொழிலாளர்களிற்கு பிரான்ஸ் தொழிலாளர்களின் ஆதரவை வழங்குவோம்!

மேற்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து மேற்கொள்ளப்பட்ட இந்தப் போராட்டத்தை புலி ஆதரவாளர்களும் புலி எதிர்ப்பாளர்களும் வேறுபட்ட காரணங்களுக்காகப் புறக்கணித்தனர்.

புலி ஆதரவாளர்கள் அதற்கும் மேலே சென்று இந்த ஊர்வலம் பற்றி ஒட்டப்பட்ட சுவரொட்டிகளை கிழித்ததுடன் சுவரொட்டிகளை ஒட்டிய பிரெஞ்சு மற்றும் தமிழ் ஏற்பாட்டாளர்களை தாக்கவும் முற்பட்டு உள்ளனர். அவர்களை மிகக் கேவலமான வார்த்தைகளால் திட்டித் தீர்த்தும் உள்ளனர். இந்தக் கண்டன ஊர்வலம் பற்றிய சுவரொட்டிகளை நேற்று முன்தினம் லாச்சப்பலில் ஒட்டிவிட்டுத் திரும்பியவர்களை இடைமறித்த சிலர் தங்கள் கைத்தொலைபேசி மூலம் மேலும் பலரை வரவழைத்து 30 – 35 பேர் சுற்றி வளைத்து வசை பாடியதுடன் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் அனைத்தையும் கிழித்தெறிந்தனர்.

இன்று ஊர்வலம் ஆரம்பிக்கப்படும் இடத்திலும் கூடிய தங்களை புலி ஆதரவாளர்களாகக் காட்டிக்கொண்டவர்கள் தங்கள் வசைகளைக் கொட்டினர். இவர்களது அடாத்தான செயல்களால் அவ்விடத்தில் வன்முறை நிகழும் என்று அஞ்சிய பலர் ஊர்வலத்தில் கலந்து கொள்ளாமல் திரும்பினர். அவ்வாறு திரும்பிய பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர் தேசம்நெற்றுடன் தொடர்பு கொண்ட போது, தான் தனது மனைவியுடனும் பிள்ளைகளுடனும் இந்த ஊர்வலத்தில் கலந்துகொள்ளச் சென்றதாகவும் ஆனால் அங்கு இந்த ஊர்வலத்தை குழப்ப விளைந்த சிலர் தகாத வார்த்தைகளை தமிழிலும் பிரெஞ்சிலும் பேசியதாகவும் நிலைமை பதட்டமாக இருந்ததால் தாங்கள் வீடு திரும்பியதாகவும் தெரிவித்தார். அந்த வார்த்தைகளைக் கேட்கவே காது கூசுவதாகக் கூறிய அவர் அவர்கள் அதனை பலருக்கும் மத்தியில் திருப்பித் திருப்பிக் கூறியதாகக் கூறினார்.

‘தமிழ் மக்களுக்குப் போராட நீங்கள் யார்?’, ‘அதற்குத் தான் நாங்கள் இருக்கிறோம்.’, ‘சிங்களவனோடு சேரச் சொல்லுறியளோ’ என்று ஆரம்பித்து தமிழ், பிரெஞ் மொழிகளில் உள்ள தகாத வார்த்தைகள் அனைத்தும் ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் மீது வசையாகக் கொட்டப்பட்டது.

Paris_Protest_07Mar09நிலைமையை ஏற்கனவே உணர்ந்திருந்த காவல்துறையினர் பல வாகனங்களில் கொண்டு வந்து இறக்கப்பட்டதுடன், சிவில் உடையிலும் பலர் உலாவவிடப்பட்டனர். ஊர்வலத்தில் கலந்த கொண்டவர்கள் மீது வன்முறை பிரயோகிக்கப்படாமல் இருக்க அதனைக் குழப்ப முற்பட்டவர்கள் காவல்துறையினரால் ஓரங்கட்டப்பட்டனர். ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்களைச் சுற்றி காவல்துறையினர் தொடர்ந்து சென்றனர்.

‘தாங்கள் பல்வேறு ஒடுக்கப்பட்ட சமூகங்களின் போராட்டங்களிலும் கலந்துகொண்டதாகக் குறிப்பிட்ட பிரெஞ்சுத் தோழர் ஒருவர், இது தங்களுக்கு புதிய அனுபவம்’ எனக் குறிப்பிட்டதாக இந்தக் கண்டன ஊர்வல ஏற்பாட்டாளர்களில் ஒருவரான அசோக் யோகன் கண்ணமுத்து தேசம்நெற்றுக்குத் தெரிவித்தார். இந்த ஊர்வலத்தில் தமிழ் – சிங்கள மக்கள் இணைய வேண்டும் என்ற கோசத்தை புலி ஆதரவாளர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று குறிப்பிட்ட அவர், அவர்கள் தங்களை மீறி யாரும் குரல் கொடுப்பதை தடுப்பதாகக் குறிப்பிட்டார்.

புலி எதிர்ப்பாளர்களான EPDP, PLOTE, TELO, TMVP போன்ற ஆயுதக் குழுக்கள் இலங்கை அரசின் இராணுவத்தினருடன் இணைந்து செயற்படுவதாக குற்றம்சாட்டப்பட்டு இருந்ததால் அவர்களும் இந்தக் கண்டன ஊர்வலத்தை புறக்கணித்ததாக அசோக் தெரிவித்தார். இன்னும் சில ‘மாற்றுக்கருத்து’, ‘ஜனநாயகம்’ பேசும் சிலர் வேடிக்கை பார்த்துவிட்டுச் சென்றதாகவும் கூறினார்.

வன்னி மக்களின் மனித அவலம் மிகமோசமடைந்த நிலையிலும் புலம்பெயர்ந்த மக்கள் தங்களுடைய குழுவாத அரசியலில் இருந்து விடுபடாதவர்களாகவே உள்ளனர். புலி ஆதரவாளர்களைப் பொறுத்தவரை வன்னி மக்களின் இழப்பைக் கொண்டு புலிகளின் அரசியல் பேரம்பேசலுக்கான இறுதி முயற்சியாக இதனைப் பயன்படுத்துகின்றனர்.  புலி எதிர்ப்பாளர்களைப் பொறுத்தவரை வன்னி மக்களின் இழப்பைப் பொருட்படுத்தாமல் எப்படியாவது புலிகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என்பதிலேயே கவனமாக உள்ளனர்.

இந்த இரு முக்கிய அணிகளுக்கு அப்பால் மக்களது நலன்சார்ந்த போராட்டங்கள் மிகவும் பலவீனமானமதாகவே உள்ளது. அவர்களுடைய குரல்களையும் பல்வேறு வகையில் அடக்குவதற்கான முயற்சிகளே பெருமளவில் மேற்கொள்ளப்படுகிறது. Key Board புரட்சியாளர்களைத் தாண்டி இவ்வாறான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டிய மிக முக்கியமாக கலகட்டம் இது. இவ்விடத்தில் தேசம்நெற் கருத்தாளர் நாதனுடைய குறிப்பை இங்கு மீளப்பதிவிடுவது பொருத்தமாக இருக்கும்.

Paris_Protest_07Mar09”இந்த போராட்டமானது உலகில் வாழும் உழைக்கும் மக்களின் ஒத்துழைப்புடன் நடைபெற வேண்டியதாகும். இதற்கான வழிமுறைகளையும் செயற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டியது இலங்கைப் பாட்டாளிவர்க்கத்தின் தலையில் சுமத்தப்பட்டுள்ளது.

நாம் எமது மக்களுக்காக போராட வேண்டுமென்றால் எமக்கு தார்மீக ஆதரவு பெறவேண்டுமென்றால் நாம் இந்த நாட்டவர்களுடன் சேர்ந்து இங்குள்ள பிரச்சனைக்களுக்காக போராடுவதன் மூலமே புலம்பெயர்ந்த நாடுகளின் பூர்வீக மக்களை ஆதரவாக இணைத்துக் கொள்ள முடியும். தொழிற்சங்கம் போராட்டம், இனவாதத்திற்கெதிரான போராட்டம், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக நடத்தப்படுகின்ற போராட்டம், புலம்பெயர்ந்த நாடுகளில் நடைபெறும் போராட்டத்தில் பங்குபற்றுதல் வேண்டும்.”

29 டொலருக்கு மசகு எண்ணெயினை கொள்வனவு செய்யும் அரசு பெற்றோலை 120 ரூபாவுக்கு விற்கின்றது – ரவி எம்.பி.

ravi-karunanayaka.jpgஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக் காலத்தின் போது 43 டொலர்களுக்கு மசகு எண்ணெய் கொள்வனவு செய்யப்பட்டு ஒரு லீற்றர் பெற்றோல் 75 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால், இன்று 29 டொலர்களுக்கு மசகு எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகின்ற போதிலும் பெற்றோல் ஒரு லீற்றர் 120 ரூபாவுக்கே விற்பனை செய்யப்படுகின்றது.

அரசாங்கம் ஏன் மக்களுக்கு இவ்வாறான அநீதியை இழைக்கின்றது என்று ஐக்கிய தேசிய கட்சி எம்.பி. ரவி கருணாநாயக்க நேற்று சபையில் கேள்வி எழுப்பினார். எரிபொருள் தொடர்பான சிறிய கேள்விக்கு பதிலளிப்பதற்காக அமைச்சர் உலகத்தையே சுற்றிவருவதாகவும் ரவி எம்.பி. பரிகாசம் செய்தார். பாராளுமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை காலை 9.30 க்கு சபாநாயகர் வி.ஜே.மு. லொக்கு பண்டார தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர் வாய்மூல வினா விடைக்கான நேரத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

ரி.எம்.வி.பி. அமைப்பு இன்று அரசிடம் ஆயுதங்கள் கையளிப்பு

pullayaan.jpgதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தமது அமைப்பிலுள்ள இராணுவ பிரிவை கலைப்பது என்று ஏற்கனவே எடுத்த முடிவின் பேரில் இன்று உத்தியோகபூர்வமாக தம்மிடமிருந்த ஆயுதங்களை பாதுகாப்பு தரப்பினரிடம் கையளித்துள்ளது. மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் நடை பெற்ற இது தொடர்பான வைபவத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தரப்பில் அந்த அமைப்பைச் சேர்ந்த 2 பேர் கிழக்கு பிராந்திய இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தம்பத் பெர்னான்டோவிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தனர்

இந் நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் கிழக்கு மாகாண பிரதிபொலிஸ் மா அதிபர் எட்வின் குனத்திலக்கா,மட்டக்களப்பு பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த வீரசூரிய ,மாநகர முதல்வர் சிவகீத்தா பிரபாகரன் ,மாகாண சபை உறுப்பினர் எட்வின் சில்வா கிருஸ்னானந்தராஜா ,தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் செயலாளர் எட்வின் சில்வா கைலேஸ்வரராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்

தமது அமைப்பிலுள்ள இராணுவ பிரிவு இன்றுடன் கலைக்கப்பட்டு விட்டதாக முன்னதாக இங்கு உரையாற்றிய அந்த அமைப்பின் ஊடக பேச்சாளரான ஆசாத் மௌலானா கூறினார் இதன் பின்னர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளினால் ஏற்பாடு செய்யப்பட்ட பத்திரிகையாளர் மகாநாடொன்று நகர சபை மண்டபத்தில் நடை பெற்றது. இம் மகாநாட்டில் ஐ.நா வின் புலம் பெயர்ந்தவர்கள் தொடர்பான சர்வதேச அமைப்பின் உள்ளுர் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்

இலங்கையில் தமிழ் ஆயுத அமைப்பொன்று இலங்கை அரசாங்கத்திடம் நேரடியாக ஆயுதங்களை கையளிக்கும் முதலாவது நிகழ்வு இதுவாகும். 1987 ம் ஆண்டு இலங்கை இந்தியா ஒப்பந்தத்தின் படி விடுதலைப் புலிகள் மற்றும் ஈரோஸ் ஆகிய அமைப்புகள் ஆயுதங்களை கையளித்திருந்தாலும் அந்த கையளிப்பானது இந்திய இராணுவம் ஊடாகவே இலங்கை பாதுகாப்பு தரப்பிடம் கையளிக்கப்பட்;டது  இக் காலப்பகுதியில் ஆயுதப் போராட்டத்தில் இல்லாத போதிலும் டெலோ ,ஈ.பி.ஆர்.எல்.எப். ,புளொட் ஆகிய அமைப்புகளும் வைபவ ரீதியாக ஏற்கனவே தம் வசமிருந்த ஆயுதங்களை இப்படி கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட்டு தமிழ் பிரதேசங்களில் சகல சபைகளையும் கைப்பற்றியதோடு நடைபெற்று முடிந்த மாகாண சபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியுடன் இனைந்து போட்டியிட்டு தமது கட்சியைச் சேர்ந்த சிவனேசதுரை சந்திரகாந்தன் முதலமைச்சராக தெரிவாகும் வாய்ப்பை பெற்றிருந்தது. மட்டக்களப்பில் இன்று நடை பெற்ற தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் ஆயுத கையளிப்பின் போது 56 துப்பாக்கிகள் ,சுமார் 6000 துப்பாக்கி ரவைகள் உட்பட பல்வேறு வகையான ஆயுதங்கள் கையளிக்கப்பட்டுள்ளன.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் மற்றும் பாதுகாப்பு தரப்பிலிருந்து வெளியாகிய தகவல்கள் மூலம் இது தெரியவந்துள்ளது. கையளிக்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பான விபரங்கள் வருமாறு :

ரி 56 ரக துப்பாக்கிகள் 52 அதற்கான மகசீன் 168, மற்றும் ரவைகள் 2106
எஸ்.எம்.ஜி. ரக துப்பாக்கி 01, ரி 81 ரக துப்பாக்கி 01, ஏ.கே.எல்.எம். ஜி. ரக துப்பாக்கிகள் 02, ஆர்.பி.ஜி. உட்பட ஷெல்கள் 46, வெளிச்ச குண்டுகள் 16
பி.கே. ரவுன்டஸ் 4650, கைக் குண்டுகள் 02 உட்பட பல்வேறு வகையான ஆயுதங்கள் கையளிக்கப்பட்டன.

போராட்டம் தொடரும் – வக்கீல்கள்

hc-clash.jpgசென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் மற்றும் போலீஸாருக்கு இடையே நடந்த மோதலில் இரு தரப்பினருக்குமே தொடர்பு உள்ளது என்று கூறியுள்ள ஸ்ரீகிருஷ்ணா அறிக்கையை நிராகரிப்பதாக வக்கீல்கள் தெரிவித்துள்ளனர். தங்களது கோரிக்கைகள் ஏற்கப்படும் வரை போராட்டம் தொடரும் எனவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

சென்னை உயர்நீதிமன்ற கலவரம் குறித்து விசாரித்த நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா, இந்த கலவரத்திற்கு முக்கிய காரணம் வக்கீல்களே. அதேபோல போலீஸாரும் எல்லை மீறி நடந்து கொண்டு விட்டனர் என்று கூறியுள்ளார்.

இந்த அறிக்கையைத் தொடர்ந்து இதுதொடர்பான வழக்கை சென்னை உயர்நீதி மன்றத்திற்கே மாற்றி உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இந்த நிலையில், ஸ்ரீகிருஷ்ணாவின் அறிக்கை பாரபட்சமாக இருப்பதாக கூறி அதை வக்கீல்கள் நிராகரித்துள்ளனர்.