Multiple Page/Post

பெரும்பான்மையின முதலாளித்துவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித்துக்கு இருக்கும் ஈரம் தமிழ் தேசியவாதிகளிடம் இல்லை காணவில்லை !

பெரும்பான்மையின முதலாளித்துவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித்துக்கு இருக்கும் ஈரம் தமிழ் தேசியவாதிகளிடம் இல்லை காணவில்லை !

ரோஹிங்கியா அகதிகளை உடனடியாக நாடு கடத்தும் மனிதாபிமானமற்ற செயலில் ஈடுபடுவதை அரசாங்கம் தவிர்க்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போது, அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை இதற்கு பதிலளித்த பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால, ரோஹிங்கியா அகதிகளை நாடு கடத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாகவும் தமது அரசாங்கம் இந்த விவகாரம் குறித்து மியான்மர் அதிகாரிகளுடன் விவாதிக்கத் தொடங்கி உள்ளதாகவும், சட்ட நடவடிக்கைகளின் பின்னரே நாடு கடத்துவது சாத்தியமாகும் என்றும் கூறினார்.

எவ்வாறாயினும், இந்த முடிவு ஒரு சலசலப்பை ஏற்படுத்தியது, SJB இன் முஜிபுர் ரஹ்மான் மற்றும் ACMC தலைவர் ரிஷாத் பதியுதீன் உட்பட பல எதிர்க்கட்சி அரசியல்வாதிகள், அரசாங்கம் அதன் நடவடிக்கையை மறுபரிசீலனை செய்யுமாறு கோரியுள்ளனர். இந்த விடயத்தில் தமிழ் மக்களின் மனித உரிமைகள் பற்றிப் பேசும் தமிழ் தேசியக் கட்சிளின் பாராளுமன்ற உறுப்பினர்கள்இ மௌனம் காத்தனர். உலகின் எப்பாகத்திலும் ஒடுக்கப்பட்ட மகளுக்காக குரல்கள் எழும்புகின்ற போது ஏனோ தானோ என்று தங்களுக்கு சம்பந்தமேயில்லாத விடயமாகவே இவர்கள் நடந்துகொள்கின்றனர் தமிழ் தேசியக் கட்சிகள்.

ரோஹிங்கியா அகதிகள் விடயத்தில் தமிழ் மக்களும் ஒரு அகதிச் சமூகம் என்ற வகையில் எங்களுக்கு ஒரு தாரடமீகக் கடமைப்பாடு இருப்பது இந்த அரசியல்வாதிகளுக்குத் தெரிவதில்லை. இவர்கள் தமிழ் மக்கள் விடயத்தில் வலிந்து குரல் எழுப்புவது கனடிய வெள்ளையின பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் மக்களின் வாக்குகளுக்காக மனித உரிமை பேசுவது போன்றது. காஸா இனப்படுகொலை பற்றி கனடியர்களும் வாய்திறக்கமாட்டார்கள். தமிழ் தேசியக் கட்சிகளும் வாய் திறக்கமாட்டார்கள். பெரும்பான்மை முதலாளித்துவக் கட்சிக்கு இருக்கின்ற ஈரம் கூட தமிழ் தேசியம் பேசுபவர்களிடம் இல்லாது போனது தமிழ் மக்களின் சாபக்கேடு.

பாராளுமன்றம் தொடங்கி யாழ் பல்கலை வரை பாலியல் குற்றவாளிகள் !

பாராளுமன்றம் தொடங்கி யாழ் பல்கலை வரை பாலியல் குற்றவாளிகள் !
கடந்த சில வாரங்களாக நாடாளுமன்றத்தில் பணிபுரியும் சில பெண் ஊழியர்கள்இ பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதாக செய்திகள் வெளியாகி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் முஜிபுர் ரஹ்மான் மேலும் தெரிவிக்கையில், “மூத்த அதிகாரிகள் தங்களுக்கு கீழ் பணிபுரியும் பெண் ஊழியர்களை தொடர்ந்து பாலியல் ரீதியாக துன்புறுத்துகின்றனர். எனக்குக் கிடைத்த தகவலின்படி, சில சந்தேக நபர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், சிலருக்கு கட்டாய ஓய்வு அளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளதாகவும் எங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் தகவல் அமைப்புகள் மற்றும் மேலாண்மைத் துறையின் மூத்த அதிகாரிகள் அங்குள்ள பெண் ஊழியர்களுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுப்பதாக செய்திகள் வந்துள்ளன” என்றார்.
எனினும் முஜிபுர் ரஹ்மானின் கருத்துக்கு பதிலளித்த ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவ்வாறான சம்பவங்கள் எதுவும் இடம்பெற்றதற்கான ஆதாரங்கள் எவையும் கிடைக்கப்பெறவில்லை எனவும் ஊகத்தின் அடிப்படையில் எந்த கருத்துக்களையும் முன்வைக்க வேண்டாம் எனவும் குறிப்பிட்டதனை அடுத்து சபை அமலி துமளியாகியது.
இதேவேளை அண்மையில் இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய பல்கலைக்கழக மாணவிகள் மீது பாலியல் ரீதியான – பாலின ரீதியான துன்புறுத்தல்கள் இடம்பெறுவது பற்றியும் தனது விசனத்தை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்திருந்தார்.
அண்மையில், யாழ் பல்கலைக்கழகத்தில் பால்நிலை ஒப்புரவு மற்றும் சமத்துவம் பற்றிய இரண்டாவது சர்வதேச ஆய்வு மாநாடு நடைபெற்றது . இதில் உரையாற்றிய துணைவேந்தர், பேராசிரியர் சி சிறிசற்குணராஜா, பால்நிலை வன்முறைகள் பல்கலைக்கழகங்களிலும் தலைதூக்கியுள்ளன. சில விரிவுரையாளர்கள் இரவு நேரங்களில் அவர்களுக்கு குறுஞ்செய்திகள் அனுப்புகின்றனர். இது சிக்கலான ஒரு பிரச்சினை எனவும் தெரிவித்திருந்தார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பாலியல் துஸ்பிரயோகங்கள், வன்முறைகளால் பெண்கள் தொடர்ந்தும் பாதிப்புள்ளாகி வருகின்றனர். ஆயினும் அவை தொர்பான முறையான விசாரனைகளோ, சட்ட ரீதியான நடவடிக்கைகளோ இடம்பெறுவதில்லை. இது தொடர்பில் தேசம்நெற் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வருகின்றது. இந்த பிரச்சனைகள் தொடர்பில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கவனம் செலுத்துமா என சமூக ஆர்வலர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சுற்றுலாத்துறை நாடு என்ற அடிப்படையில் யூதர்களின் வழிபாட்டு தலங்களிற்கு பாதுகாப்பை வழங்கவேண்டிய நிலையில் உள்ளோம். – முஜிபுர் ரஹ்மானுக்கு பிரதமர் ஹரினி அமரசூரிய பதில் !

சுற்றுலாத்துறை நாடு என்ற அடிப்படையில் யூதர்களின் வழிபாட்டு தலங்களிற்கு பாதுகாப்பை வழங்கவேண்டிய நிலையில் உள்ளோம். – முஜிபுர் ரஹ்மானுக்கு பிரதமர் ஹரினி அமரசூரிய பதில் !

இன்று இலங்கையின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்டு இஸ்ரேலிய மத நிலையங்கள் அல்லது கலாச்சார நிலையங்கள் கட்டப்பட்டு வருவதாகவும்  அவ்வாறான இடங்களில் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, இஸ்ரேலின் தேசிய மத நிலையங்களையோ அல்லது அதற்கு நிகரான கட்டிடங்களையோ நிர்மாணிப்பதற்கு எந்தவொரு அரசாங்க நிறுவனமும் அனுமதி வழங்கவில்லை என  தெரிவித்துள்ளார்.

இதுவரையில் இஸ்ரேலியர்களுக்கு மத நிலையங்களையோ அல்லது அதுபோன்ற இடங்களையோ கட்டுவதற்கு புத்தசாசனம், சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சோ அல்லது அதன் கீழ் உள்ள திணைக்களங்களோ அனுமதி வழங்கவில்லை. ஆனால் அவர்கள் அத்தகைய நிலையங்களை நடத்துகிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். அது தொடர்பான தகவல்கள் எமக்கு கிடைத்துள்ளன. அது தொடர்பில் நாங்கள் ஆராய்ந்து பார்த்துள்ளோம். அவை அனுமதியுடன் நடைபெறவில்லை. எந்தவொரு தருணத்திலும் அனுமதி வழங்கப்படவில்லை என பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.

வெளிவிவகார அமைச்சின் தலையீட்டின் ஊடாக அதனை எவ்வாறு தடுப்பது என்பது தொடர்பில் ஆராயப்பட்டு வருகிறது. இந்த வழிபாட்டுநிலையங்களிற்கு அனுமதி வழங்கவில்லை, இந்த விடயத்தில் நாங்கள் விரைவில் தலையிடுவோம், என தெரிவித்துள்ள பிரதமர் எனினும் அருகம் குடா விவகாரத்தை தொடர்ந்து நாங்கள் யூதர்களின் வழிபாட்டு தலங்களிற்கு பாதுகாப்பை வழங்கவேண்டிய நிலையில் உள்ளோம். இது சுற்றுலாப்பயணிகள் குறித்த நாடொன்றின் கடப்பாடு என அவர் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு பிள்ளையினதும் கல்வியில் விஞ்ஞானம் முக்கியமான பகுதியாக மாறுகிறது. – பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய 

ஒவ்வொரு பிள்ளையினதும் கல்வியில் விஞ்ஞானம் முக்கியமான பகுதியாக மாறுகிறது. – பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய

ஒவ்வொரு பிள்ளையினதும் கல்வியில் விஞ்ஞானம் முக்கியமான பகுதியாக மாறுகிறது. இலங்கையில் விஞ்ஞான ரீதியிலான கல்வி மற்றும் ஆய்வுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி அவற்றை முன்னேற்றுவதில் அரசு முக்கிய பங்கு வகிக்கின்றது என பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய  விஞ்ஞான முன்னேற்றத்திற்கான இலங்கை சங்கம் ஏற்பாடு செய்த நிகழ்வில் கலந்து கொண்ட போது  தெரிவித்துள்ளார்

அங்கு உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய,  நாம் எமது சவால்களை அடையாளம் கண்டு
அபிவிருத்தியில் கவனம் செலுத்த வேண்டும். ஒரு துடிப்பான அறிவுத்திறன் கொண்ட சமூகம், வலுவான ஆய்வு மற்றும் அபிவிருத்தி உட்கட்டமைப்பு உட்பட இளம் ஆய்வாளர்களுக்கான வாய்ப்புக்களும் வழிகாட்டுதல்களும் ஒரு நாட்டின் அபிவிருத்திக்கு முக்கியமானதாகும்.

எவ்வாறாயினும், நாம் எமது சொந்த சூழ்நிலையை எடுத்துக்கொண்டால், தற்போதைய நிலையில் எம்மால் மகிழ்ச்சியாக இருக்க முடியாதென்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். எமது ஆராய்ச்சி கலாசாரம் உண்மையில் படைப்பாற்றல் மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு வெகுமதியளிக்காது. எமது ஆய்வாளர்கள் அதீத கருவிகளாக மாறுகின்றார்கள், எம்மைச் சுற்றியுள்ள உலகத்தில் அறிவு மீதான ஈர்ப்பு மற்றும் விருப்பத்தை விடவும் பிரச்சார திட்டங்களிலேயே கூடுதல் கவனம் செலுத்துகின்றார்கள். ஒவ்வொரு பிள்ளையினதும் கல்வியில் விஞ்ஞானம் முக்கியமான பகுதியாக மாறுகிறது. விஞ்ஞான கல்வி மற்றும் ஆராச்சியானது கோட்பாடு மற்றும் முறையான கடினத்தமையை உறுதி செய்வதுடன், அது தாக்கம் மிக்கது என்பதையும் உறுதி செய்ய வேண்டும். இது எமது நாட்டிற்கு இன்றியமையாதது.

இலங்கையில் விஞ்ஞான ரீதியிலான கல்வி மற்றும் ஆய்வுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி அவற்றை முன்னேற்றுவதில் அரசு முக்கிய பங்கு வகிக்கின்றது. தற்போது நாம் வகிக்கும் வகிபாகத்தை நினைத்து திருப்திக்கொள்ள முடியாது. இலங்கையில் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தை முன்னேற்றுவதற்கான விரிவான அணுகுமுறையை எமது அரசாங்கம் வெளிப்படுத்தியுள்ளது.

எமது கொள்கை கட்டமைப்பு, குவாண்டம் லீப் தலைப்பு என்பவற்றின் ஊடாக முன்னணி விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப முயற்சிகளில் அரசாங்கத்தின் பங்களிப்பை வலியுறுத்துகிறது. விஞ்ஞான கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்ப ரீதியிலான முன்னேற்றத்தின் கேந்திர நிலையமாக இலங்கை இருப்பதை உறுதிப்படுத்துவதே இந்த கட்டமைப்பின் நோக்கமாகும். அத்துடன், எமது அரசாங்கம் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப கொள்கை கட்டமைப்பை வெளிப்படுத்தியுள்ளது.

மேலும் பொருளாதார மீள் எழுச்சி மற்றும் தேசிய அபிவிருத்திக்கு முக்கியமான இயக்கிகளாக இருக்கும் விஞ்ஞானம் மற்றும் ஆராய்ச்சிக்கு முன்னுரிமை வழங்குவதன் ஊடாக எமது அர்ப்பணிப்பு சுட்டிக்காட்டப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்

பிரித்தானியாவில் மீண்டும் தலைதூக்கும் இனவாத அரசியல் !

பிரித்தானியாவில் மீண்டும் தலைதூக்கும் இனவாத அரசியல் !

 

பாகிஸ்தானைப் பூர்வீகக் கொண்ட சிலர் பிரித்தானிய இளம்பெண்களை பலநூற்றுக் கணக்கில் பாலியல் துஸ்பிரயோகம் செய்ததை தேசம்நெற் ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்தது. கடந்த ஒரு தாப்தத்ற்கு மோலாக நடந்துகொண்டிருக்கும் இப்பிரச்சினைகளில் கடந்த ஆண்டுவரை கடந்த ஒரு தசாப்தகாலமாக ஆட்சியிலிருந்த கொன்சவேடிவ் அரசாங்கம் எவ்வித குறிப்பிடத்தக்க நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் தற்போது எதிர்க்கட்சியில் உட்கார்ந்ததும் ஆசியர்கள் வேற்றுக்கலாச்சாரத்திலிருந்து வந்த கலாச்சாரத்தை வைத்திருக்கின்றார்கள், இவ்விடயத்தில் விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என அரசுக்கு அழுத்தம் கொடுக்கின்றனர்.

 

இலங்கையில் 70 ஆண்டுகள் நாட்டைச் சூறையாடிய கட்சிகள் நாட்டுப்பற்றில் முதலைக் கண்ணீர் வடிப்பது போல் இனவாதத்தைக் கக்குகின்றனர். அதே பாணியில் பிரித்தானியாவில் கொன்வவேடிவ் கட்சியும் நீலிக்கண்ணீர் வடித்து இனவாதத்தைக் கக்குகிறது. இவர்களுக்கு ஒரு படி மேலே சென்ற தற்போது தீவிர வலதுசாரித் தலைவராகவும் இனவாதியாகவும் உள்ள எக்ஸ் தளத்தின் உரிமையாளர் எலோன் மஸ்க் இந்த விடயத்திலும் தன்னுடைய மூக்கை நுழைத்துள்ளார். பிரித்தானிய உள்நாட்டு அலுவலக அமைச்சர் ஜெஸ் பிலிப்ஸை ‘கெட்ட ஆவி’ என்றும் ‘பாலியல் வன்புணர்வு இனப்படுகொலைகை;கு மன்னிப்புக் கேட்பவர்’ என்றும் குற்றம்சாட்டியுள்ளார். அதற்கு பதிலடி கொடுத்த பிரித்தானிய அமைச்சர் ஜெஸ் பிலிப்ஸ், ‘எலொன் மஸ்க் பொருத்தமற்ற தகவல்களை வெளியிடுகிறார்’ எனக் குற்றம்சாட்டியுள்ளார்.

 

அர்ச்சுனாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி கேள்விக்குறியில் ?

அர்ச்சுனாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி கேள்விக்குறியில் ?

 

இவ்வாண்டு முதல் தடவையாக பாராளுமன்றம் கூடப்பட்ட போது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த சபாநாயகர் ஜெகத் விக்கிரமரத்தின யாழ் மாவட்ட சுயேட்சை “பா உ இராமநாதன் அர்ச்சுனாவின் பாராளுமன்ற உறுப்புரிமையின் எதிர்காலம் விசாரணை முடிவிலேயே தீர்மானிக்கப்படும்” என தெரிவித்துள்ளார். ஒரு குழுவொன்று அர்ச்சுனாவின் செயற்பாடுகள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அதன் அறிக்கையை அடிப்படையாக வைத்து பராளுமன்றத்தில் அவரின் எதிர்காலம் குறித்து தீர்மானிக்கப்படும் என சபாநாயகர் தெரவித்தார்.

 

பா உ அர்ச்சுனா பாராளுமன்றத்துக்கு போட்டியிட்ட வேளையில் அரச உத்தியோகத்தில் இருந்துள்ளார் என்றும் அது சட்டவிரோதமானது என்றும் அவர் மீது ஒரு பொதுநல வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் இக்குற்றச்சாட்டை அர்ச்சுனா முற்றாக மறுத்துள்ளார். இதைவிடவும் அர்ச்சுனாவுக்கு எதிராக 20 வரையான வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பின்னணியிலேயே அர்ச்சுனா மீதான விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

 

மேலும் நேற்றைய பாராளுமன்ற விவாதத்தில் தனக்கு பேசுவதற்கான நேரம் ஒதுக்கப்படவில்லை என அர்ச்சுனா மீண்டும் குற்றம்சாட்டியிருந்தார். இதனை சபாநாயகரிடமும் அர்ச்சனா முறையிட்டார். அர்ச்சுனா ஆளும் கட்சியைச் சேராதவராகையால் அவருடைய நேர ஒதுக்கீட்டை எதிர்க்கட்சியே மேற்கொள்ள வேண்டும். ஏற்கனவே எதிர்க் கட்சியான ஐக்கிய மக்க் சக்திக்கும் அர்ச்சுனாவுக்கும் புதிய பாராளுமன்றம் ஆரம்பிக்கப்பட்ட நாள்முதல் மோதல் இருந்து வருகின்றது. அது கைகலப்பிலும் முடிந்ததாக ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டினர். ஆகையால் இந்தப் பிரச்சினை தற்போதைக்கு சுமூகமாகும் எனத் தெரியவில்லை.

தனிக்கட்டை தேசியவாதிகளின் அரசியல் தீர்வு குறித்து பேச்சுவார்த்தை ! 

தனிக்கட்டை தேசியவாதிகளின் அரசியல் தீர்வு குறித்து பேச்சுவார்த்தை !

 

கடந்த தேர்தலில் வாக்கு வங்கியை இழந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி எட்டு ஆசனங்களைக் கொண்டுள்ள தமிழரசுக் கட்சியை காகம் திட்டுவது போல் திட்டிக்கொண்டே அக்கட்சியில் தனிக்கட்டையாகவும் கறுப்பாடாகவும் உள்ள பா உ சிவஞானம் சிறிதரனை கிளப்பி தங்கள் பக்கம் தருப்ப முயற்சி எடுத்து வருகின்றனர். இது தொடர்பில் சில பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்றுள்ளது. வாக்கு வங்கியை இழந்து தனிக்கட்டையாகிப் போன செல்வம் அடைக்கலநாதனின் ஜனநாயக தேசியக் கூட்டமைப்பும் தனிக்கட்டையாக இல்லாமல் மற்றைய தனிக்கட்டைகளோடு கட்டுண்ட கட்டுமரமாகாலாம் என நினைக்கிகன்றார். பொன்னம்பலம் கஜேந்திரகுமார் இவர்களோடு தனித் தனியா கதைத்துவிட்டார்.

 

வரும் ஜனவரி 25இல் கட்சிகளோடு சந்திக்கப் போவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி அறிவித்துள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தனித்தனியாகச் சந்திப்பதோ கட்சியாகச் சந்திப்பதோ ஒரு விடயமேயல்ல. இவர்கள் யாழ் மக்களால் ஓரம்கட்டப்பட்டவர்கள். ஆனால் எட்டு ஆசனங்களைக் கொண்டுள்ள தமிழரசுக் கட்சி இவர்களோடு கதைக்கப் போய் இவர்களை வளர்த்துவிடுகின்ற வேலையை செய்ய விரும்புமா என்பது என்பது சந்தேகமே. குறிப்பாக தமிழரசுக் கட்சியின் நாணயக் கயிற்றை கையில் வைத்துள்ள சுமந்திரன் ஒளிவுமறைவில்லாமல் தடாலடியாக இந்த அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் தாங்கள் முன்நகர்த்திய பாதையிலேயே தொடருவோம் என்பதை மிகத் தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளார். மீறுபவர்கள் கட்சியிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்றும் எம் ஏ சுமந்திரன் கூறியுள்ளார்.

 

இந்தப் பின்னணியில் ஜனவரி 25 இல் தமிழ் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து இணக்கப்பாடை எட்ட சந்திக்க உள்ளதாகச் சொல்வதே ஒரு ஏமாற்று நாடகம். தமிழரசுக் கட்சியில் அக்கட்சியின் கறுப்பு ஆடாக உள்ள பா உ எஸ் சிறிதரன் மட்டுமெ வருவார், தனிக்கட்டையாக. கட்சியின் முக்கியஸ்தர்கள் யாரும் வருவதற்கில்லை. இதையெல்லாம் தெரிந்து கணக்குப் பார்த்தே மலையகத் தமிழரின் வாக்குரிமையைப் பறிக்கத் துணைபோன சட்டப் பரம்பரையில் வந்த பொன்னம்பலம் கஜேந்திரகுமார் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். அரசியல் தீர்வு குறித்த பொன்னம்பலம் கஜேந்திரகுமாரின் காய்நகர்த்தல் ஒரு அங்குலம் தன்னும் நகருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

கனடாவில் தமிழ் இளைஞன் காருக்குளிலிருந்து சடலமாக மீட்பு !

கனடாவில் தமிழ் இளைஞன் காருக்குளிலிருந்து சடலமாக மீட்பு !

 

கனடாவில் வாழும் வவுனியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த 4ம் திகதி (04.01.25) காருக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வவுனியா செட்டிகுளம் வீரபுரம் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய ஜேக்கப் நெவில் டிலக்ஷன் என்ற இளைஞனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என கனேடிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காரின் கதவுகள் திறக்கப்படாமையால் நீண்ட நேரம் காரில் சிக்கியதில் ஏற்பட்ட மூச்சுத் திணறலால் அவர் இறந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனால் ஏன் அவரால் காரை உடைத்துக்கொண்டு வெளியேவர முடியவில்லை என்பது இன்னமும் தெளிவாகத் தெரியவில்லை. கார்கள் பொதுவாக காற்றுப் புகாதவையாக வடிவமைப்பு செய்யப்படுவதில்லை. மேலும் காருக்குள் ஒரு மணிநேரமே இருந்ததால் மூச்சுத் திணறி இறந்ததும் விளக்மில்லாமல் உள்ளது.

கனடாவின் டொராண்டோவில் குறித்த இளைஞன் இறந்த தெருக்களில் உள்ள கண்காணிப்புக் கமாராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்துள்ளனர். அதில், காரை சாலையோரம் நிறுத்திய பின் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அந்த இளைஞன் காருக்குள் இருந்துள்ளது தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் கனடாவின் ரொறன்ரோ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆலயங்கள் நீதிமன்ற வழக்குகளுக்கே அதிகம் செலவு செய்கின்றன – ஆளுநர் வேதநாயகன் !

ஆலயங்கள் நீதிமன்ற வழக்குகளுக்கே அதிகம் செலவு செய்கின்றன – ஆளுநர் வேதநாயகன் !

 

ஆலயங்கள் இப்போது சமூகசேவைக்கு செலவு செய்வதிலும் பார்க்க வழக்குகளுக்கே அதிகளவு பணத்தைச் செலவு செய்கின்றன என வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன்இ அன்னை சிவத்தமிழ் செல்வி பண்டிதை கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் நூற்றாண்டு விழா நிகழ்வில் கலந்துகொண்டு தெரிவித்துள்ளார். அண்மையில் லண்டன் லூசியம் சிவன் ஆலயத்திலும் இவ்வாறு வழக்குகளில் ஏராளமான நிதி செலவழிக்கப்படுவதான குற்றச்சாட்டு தேசம்நெற் இல் வெளிவந்தது. புலம்பெயர்ந்த நாடுகளிலும் பல ஆலயங்கள் நீதிமன்றம் ஏறி இறங்கி மக்கள் சேவைக்குப் பயன்படுத்து நிதியை வீணடிக்கின்றனர் என்ற குற்றச்சாட்டு பரவலாகவே வைக்கப்பட்டு வருகின்றது.

 

குறித்த நிகழ்வுகளில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட ஆளுநர் வேதநாயகன், 1993ஆம் ஆண்டு காலப் பகுதியில் தெல்லிப்பழை பிரதேச செயலக உதவி அரசாங்க அதிபராக இருந்தமையை நினைவுகூர்ந்து அன்றைய நாட்களில் அம்மையாருடன் நெருங்கிப்பழகும் வாய்ப்புக் கிடைத்ததாகக் குறிப்பிட்டார். அன்றைய காலத்தில் ஆலயங்கள் சமூகப் பணிகளை முன்னெடுக்காதிருந்த சூழலில், அம்மையார் அவர்களே அதனைத் தொடக்கி அதன் முன்னோடியாக இருந்ததாகவும் புகழாரம் சூட்டினார். இன்று ஆலயங்களில் உண்மையான கடவுள் பக்தி இல்லை. இதனால் பல ஆலயங்கள் நீதிமன்றப்படியேறியுள்ளன எனக் குறிப்பிட்டார்.

 

புலம்பெயர் தேசங்களிலிருந்து ஆலயங்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டாலும் ஆலய நிர்வாகங்கள் ஒழுங்காக கணக்கறிக்கைகள் முன்வைப்பதில்லை எனவும் இது பிரச்சினைகளுக்கு அடிநாதமாக இருக்கின்றது என்றும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

 

தனது உரையில் நா வேதநாயகன் ஆறுதிருமுருகனை தங்கம்மா அப்பாக்குட்டி அடையாளம் காட்டியதாக எந்த அடிப்படையில் குறிப்பிட்டார் எனத் தெரியவில்லை என அந்நிகழ்வில் கலந்துகொண்ட தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் சேவைகளில் விருப்புக் கொண்ட மயில்வாகனம் குமரகுரு. அவர் மேலும் குறிப்பிடுகையில் சிறுமிகள் இல்லத்தில் என்ன நடந்தது தொடர்பான சுயாதீன விசாரணைக்கு ஆளுநர் உத்தரவிடுவதுடன் கிளீன் சைவம் என்ற புரஜக்ற்றும் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்றார்.

எங்களை மீண்டும் இலங்கைக்கே திருப்பி அனுப்புங்கள் – தமிழகத்தில் இலங்கையர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு !

எங்களை மீண்டும் இலங்கைக்கே திருப்பி அனுப்புங்கள் – தமிழகத்தில் இலங்கையர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு !

 

இலங்கையில் ஏற்பட்டிருந்த பொருளாதார நெருக்கடி காரணமாக கடல் வழியாக தமிழகத்தில் தஞ்சம் அடைந்த 13 குடும்பங்களைச் சேர்ந்த இலங்கை அகதிகளை மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்க வேண்டும் என இலங்கை அகதிகள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு கையளித்துள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை தமிழர்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் இலங்கையிலிருந்து படகு வழியாக சட்ட விரோதமான முறையில் தனுஷ்கோடியில் தஞ்சம் அடைய தொடங்கினர்.

இது வரை 309 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடியில் கடல் வழியாக அகதிகளாக தஞ்சமடைந்து மண்டபம் ஈழத்தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதில் பொருளாதார நெருக்கடி காரணமாக தஞ்சமடைந்த இலங்கை தமிழர்களை அகதிகளாக இந்திய அரசு இதுவரை பதிவு செய்யாத காரணத்தினால் இவர்களுக்கு இந்திய அரசால் வழங்கப்படும் எந்த விதமான நிவாரணம் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் வருவாய் இன்றி தவித்த இலங்கை தமிழர்கள் ஐந்து குடும்பத்தினர் மீண்டும் சட்டவிரோதமாக கடல் வழியாக அண்மையில் இலங்கைக்கு திரும்பிச் சென்றுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் அகதிகளாக பதிவு செய்யாமல் உள்ள இலங்கை தமிழர்கள் 13 குடும்பத்தினரை படகு மூலம் அல்லது விமானம் மூலம் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்குமாறு இன்று (06) மாவட்ட ஆட்சியரை சந்தித்து பாதிக்கப்பட்ட இலங்கை அகதிகள் மனு கையளித்துள்ளனர்.