அர்ச்சுனாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி கேள்விக்குறியில் ?
இவ்வாண்டு முதல் தடவையாக பாராளுமன்றம் கூடப்பட்ட போது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த சபாநாயகர் ஜெகத் விக்கிரமரத்தின யாழ் மாவட்ட சுயேட்சை “பா உ இராமநாதன் அர்ச்சுனாவின் பாராளுமன்ற உறுப்புரிமையின் எதிர்காலம் விசாரணை முடிவிலேயே தீர்மானிக்கப்படும்” என தெரிவித்துள்ளார். ஒரு குழுவொன்று அர்ச்சுனாவின் செயற்பாடுகள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அதன் அறிக்கையை அடிப்படையாக வைத்து பராளுமன்றத்தில் அவரின் எதிர்காலம் குறித்து தீர்மானிக்கப்படும் என சபாநாயகர் தெரவித்தார்.
பா உ அர்ச்சுனா பாராளுமன்றத்துக்கு போட்டியிட்ட வேளையில் அரச உத்தியோகத்தில் இருந்துள்ளார் என்றும் அது சட்டவிரோதமானது என்றும் அவர் மீது ஒரு பொதுநல வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் இக்குற்றச்சாட்டை அர்ச்சுனா முற்றாக மறுத்துள்ளார். இதைவிடவும் அர்ச்சுனாவுக்கு எதிராக 20 வரையான வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பின்னணியிலேயே அர்ச்சுனா மீதான விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
மேலும் நேற்றைய பாராளுமன்ற விவாதத்தில் தனக்கு பேசுவதற்கான நேரம் ஒதுக்கப்படவில்லை என அர்ச்சுனா மீண்டும் குற்றம்சாட்டியிருந்தார். இதனை சபாநாயகரிடமும் அர்ச்சனா முறையிட்டார். அர்ச்சுனா ஆளும் கட்சியைச் சேராதவராகையால் அவருடைய நேர ஒதுக்கீட்டை எதிர்க்கட்சியே மேற்கொள்ள வேண்டும். ஏற்கனவே எதிர்க் கட்சியான ஐக்கிய மக்க் சக்திக்கும் அர்ச்சுனாவுக்கும் புதிய பாராளுமன்றம் ஆரம்பிக்கப்பட்ட நாள்முதல் மோதல் இருந்து வருகின்றது. அது கைகலப்பிலும் முடிந்ததாக ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டினர். ஆகையால் இந்தப் பிரச்சினை தற்போதைக்கு சுமூகமாகும் எனத் தெரியவில்லை.