- “பிரபாகரன் ஒரு முட்டாள். சாடிக்கு ஏற்ற மூடி போல, பொட்டு அம்மானும் ஒரு மொக்கன்” எனக்கு துரோகிப்பட்டம் தருபவர்களுக்கு என் பதில்: இரட்டைமுகவராக மாறிய முன்னாள் கடற்புலி புலனாய்வுச் செயற்பாட்டாளர் காகுஸ்தன் அரியரத்தினம் (கனடா)
- புலிகளின் வி. பிரபாகரனும், வெனிசுவேலாவின் அதிபர் நிக்கோலாஸ் மடூரோவும் ஒரே விதமான முடிவை எதிர்கொண்டனர்:
- கனடிய தமிழ்ப் பெண் கருப்பினத்தவரை மணந்ததால் வெகுண்டெழுந்த தமிழினத்தின் ஆண்மை!
- புதிய வடிவில் வரும் வர்த்தக-தொழில் நுட்பப் போர்
- அமெரிக்காவின் நோக்கம் நிறைவேறுமா..?
- லார்க்கூர்னே சிவன் கோயில் அர்ச்சகர்கள் பாலியல் துஷ்பிரயோக வழக்கில் இந்தியாவில் கைது !
Multiple Page/Post
ஈழத் தமிழர்களைக் காப்பாற்றுமாறுகோரி தமிழகம் முழுவதிலும் இன்று பெரும் மனிதச்சங்கிலிப் போராட்டம் நடைபெறவிருக்கின்றது. இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்தப் போராட்டத்தில் அனைவரும் ஒன்றுதிரண்டு பங்கேற்கவேண்டும் என்று அந்த இயக்கம் அழைப்பு விடுத்திருக்கிறது.இது தொடர்பாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கை வருமாறு:
“இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவே புலிகளின் ஆயுதப் போராட்டம் நடக்கிறது. ஆனால், புலிகள் மீது போர் தொடுக்கிறோம் என்று சொல்லி, மொத்த தமிழ் இனத்தையே இலங்கை இராணுவம் அழிக்கத் துடிக்கிறது. இலங்கையில் உடனடியாகப் போர் நிறுத்தம் ஏற்பட இந்திய அரசு குரல் கொடுத்தாக வேண்டும்.
நம் வேதனையை வெளிப்படுத்த இலங்கைத் தமிழர்களைக் காக்க தமிழ்நாட்டு வீதிகளில் கரம் கோத்து நிற்போம் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் வேண்டுகிறது. பெப்ரவரி 17ஆம் திகதி மாலை 5 மணி முதல் 6 மணி வரை கரம் கோர்த்து நிற்போம்.
இலங்கைத் தமிழர்கள் மீது பூட்டப்படும் அடக்குமுறை சங்கிலியை உடைப்பதற்கு நாம் மனித சங்கிலி அமைப்போம். கண்ணை இமை காப்பது போல இலங்கை தமிழர்களைக் காக்கும் இமைகளாக மாறுங்கள். தாய்த் தமிழகத்தின் மன வேதனையை, கொந்தளிக்கும் உணர்ச்சியை இந்திய அரசு உணரட்டும். போரை நிறுத்த முற்படட்டும்.’ இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.
வன்னியிலிருந்து இடம் பெயர்ந்து வவுனியா நலன்புரி நிலையத்தில் தங்கியுள்ள யாழ். பல்கலைக் கழகத்திற்கு செல்ல வேண்டிய மாணவர் ஆறு பேருக்கு விமான பயணச் சீட்டுக்களும் கைச்செலவிற்கு பத்தாயிரம் ரூபா பணமும் மீள்குடியேற்ற அமைச்சினால் நேற்று வழங்கப்பட்டது.
அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் இவற்றை வைபவ ரீதியாக மாணவர்களிடம் நேற்று வவுனியா செயலகத்தில் நடைபெற்ற வைபவத்தில் வழங்கினார். வவுனியா மாவட்ட செயலாளர் மற்றும் அதிகாரிகளும் இவ்வைபவத்தில் கலந்து கொண்டனர்.
வவுனியா மாவட்ட செயலகத்தில் நேற்று அமைச்சர் தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட மகாநாட்டில் நலன்புரி நிலையங்களுடன் தொடர்புடைய சிரேஷ்ட உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர். சுகாதாரம், சமைத்த உணவு விநியோகம், குடிநீர், மின்சார வசதிகள் பற்றியவை மீளாய்வு செய்யப்பட்டது.
வவுனியா பிரதேசத்திற்குள் வந்தவர்கள் 13 நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 31 ஆயிரம் பேர் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளனர். இவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது என் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
பாடசாலைகளை விரைவில் திறக்கும் நோக்குடன் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களை குடியமர்த்த செட்டிகுளத்தில் நான்கு மாதிரி நிவாரண கிராமங்கள் அமைக்கப்படவுள்ளன. அது தொடர்பான வேலைத் திட்டங்கள் துரிதமாகவே நடைபெற்று வருகின்றது என்று தெரிவித்த அமைச்சர், அந்த பிரதேசத்திற்கு அதிகாரிகளுடன் விஜயம் செய்து வேலைத் திட்டங்களை அவதானித்தார்.
இனிமேல் நடைபெறும் தேர்தல்களின் போது பாராளுமன்ற அடையாள அட்டையை சமர்ப்பித்து வாக்களிக்க எந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் அனுமதி வழங்கப்பட மாட்டாது என மேலதிக தேர்தல் ஆணையாளர் டபிள்யு. பி. சுமனசிறி தெரிவித்தார்.
நடந்து முடிந்த மத்திய மாகாணசபைத் தேர்தலின் போது அமைச்சர் டி. எம். ஜயரத்னவுக்கு பாராளுமன்ற அடையாள அட்டையை சமர்ப்பித்து வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்டது. இது குறித்து வினவிய போது கருத்துத் தெரிவித்த அவர் தேர்தலில் வாக்களிக்க அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு, சாரதி அனுமதிப்பத்திரம் அடங்கலான எட்டு வகையான ஆவணங்களுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றார்.
எனவே இந்த எட்டு வகையான ஆவணங்கள் தவிர்ந்த வேறு எந்த ஆவணத்தையும் சமர்ப்பித்து வாக்களிக்க அனுமதி வழங்கப்பட மாட்டாது. இதில் எதுவித மாற்றமும் கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கை மக்களை சர்வதேசம் காட்சிப் பொருளாக்கு வதற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லையென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று தெரிவித்தார். வடக்கோ, தெற்கோ, தமிழரோ ஏனைய இனத்தவரோ அனைவரும் ஒருதாய் மக்கள், அவர்களை சகோதரர்களாக மதித்து அம்மக்களுக்கான சகல தேவைகளையும் பெற்றுக் கொடுக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து பாதுகாப்புப் பிரதேசங்களுக்குள் பிரவேசிக்கும் மக்கள் மன அழுத்தங்களுக்கு உள்ளாக்கப்படுவதாக சில சக்திகள் சர்வ தேச நாடுகளில் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றன. இதனை நாம் முற்றாக மறுக்கிறோம். நாட்டின் உண்மையான நிலையை நேரில் கண்டறிய இலங்கைக்கு வருமாறு தாம் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்துக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
ஹோமாகம பமுனு ஆரச்சி பவுண்டேசன் நிறுவனத் தினரால் 100 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணித்து வழங்கப்பட்டுள்ள ஹோமாகம பொது வைத்தியசாலையின் புதிய கட்டிடத் தொகுதியை உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்துவைத்து உரையாற்றுகையி லேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது,
பயங்கரவாதிகளிடமிருந்து மீண்டு வரும் தமிழ் மக்களுக்கு மானசீக துன்புறுத்தலைப் படையினர் மேற்கொண்டு வருவதாகப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. புலிகளே இவ்வாறு செய்தாலும் படையினர் ஒரு போதும் இவ்வாறு செய்ய மாட்டார்கள் எனப்பது உறுதி.
இவ்வாறு பாதுகாப்புப் பிரதேசங்களுக்கு வரும் மக்களுக்கான சகல வசதிகளையும் குறைவின்றிப் பெற்றுக்கொடுப்பதில் அரசாங்கம் அதிககவனம் செலுத்திவருகிறது. அத்துடன் இவ்வாறு வரும் மக்களுக்குத் தேவையான சுகாதார வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதில் எமது டாக்டர்களும் தாதியர்களும் அங்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றனர்.
பொதுமக்களின் அனைத்து தேவைகளையும் பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சில சர்வதேச அமைப்புக்கள் மக்களின் பிரச்சினைகளை ஆராய்வதற்கென இங்கு வந்து, பல்வேறு பிரதேசங்களுக்கும் விஜயம் செய்து அம்மக்களுக்கு எந்த வித உதவியையும் செய்யாமலேயே மீண்டும் நாடு திரும்பிவிடுகின்றனர். அங்கு சென்று இலங்கை மக்களை அந்நாடுகளில் கண்காட்சிப் பொரு ட்களாக்கப் பார்க்கின்றனர்.
சுனாமி அனர்த்தத்தின் போது பல சர்வதேச நாடுகள் எமக்கு உதவியளித்தன என்பதை நாம் ஒரு போதும் மறுக்க முடியாது. எனினும் பெரும்பாலான சர்வதேச அமைப்புக்கள் உதவி என்ற பெயரில் எமது மக்களுக்கு உபயோகிக்க முடியாத பழைய உடைகளையும், காலாவதியான உணவுகளையும் வழங்கியிருந்தன. அவற்றை நாம் தீமூட்டியதையும் இங்கு நினைவு கூரவேண்டியுள்ளது. மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைத் தேர்தல் வெற்றியானது சர்வதேச அழுத்தங்களுக்கு பதிலாக அமைந்துள்ளது. தாய் நாட்டை நேசிக்கும் மக்கள் இருக்கும்வரை எவரும் தாய் நாட்டைக் காட்டிக் கொடுக்க முடியாது. மேற்படி வெற்றியானது அரசாங்கத்தின் எதிர்கால பயணத்தை மேலும் வலுப்படுத்துவது உறுதி எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
இந்திய உயர் ஸ்தானிகர் ஆலோக் பிரசாத் அடங்கலான தூதுக்குழுவினர் நேற்று கிழக்கு மாகாணத்துக்கு விஜயம் மேற்கொண்டனர். கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகளை கண்டறியும் வகையில் இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது.
இந்திய தூதுவர் தனது விஜயத்தின் போது கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன், கிழக்கு மாகாண அமைச்சர்கள், அரசஅதிபர்கள் உட்பட பல தரப்பினரையும் சந்தித்து உரையாடினர். இலங்கை அரசாங்கம் அரசியல் யாப்பின் 13ஆவது திருத்தத்தின்படி அதிகாரப் பகிர்வு தொடர்பாக எடுக்கம் தீர்மானங்களுக்கு இந்தியா முழுமையான ஆதரவை வழங்கும் என்று இந்நிகழ்வுகளில் உரையாற்றிய போது அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்புக்கு விஜயம் செய்த இந்திய உயர் ஸ்தானிகருக்கு மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் வைத்து கிழக்கு முதல்வர் மற்றும் மட்டு. மேயர் ஆகியோரினால் வரவேற்பு அளிக்கப்பட்டது. இங்கு உரையாற்றிய இந்திய உயர் ஸ்தானிகர் ஆலோக் பிரசாத், கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்வதற்கு இந்தியா தனது முழுப்பங்களிப்பையும் வழங்குமென்று தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த இந்திய உயர் ஸ்தானிகர், கிழக்கு மாகாணம் ஜனநாயக ரீதியில் இன்று செயற்படுவதையிட்டு இந்தியா தனது மகிழ்ச்சியைத் தெரிவிக்கின்றது.கிழக்கு மாகாண அபிவிருத்திக்கென கடந்த காலங்களில் இந்தியா சிறிய உதவிகளை செய்தது. மீன்பிடி உபகரணங்கள் மற்றும் பஸ் வண்டிகளை வழங்கியுள்ளது. எதிர்வரும் காலங்களில் மட்டக்களப்புக்கும் திருமலைக்குமிடையில் அதி நவீன புகையிரத வண்டியொன்றை வழங்கி சேவையில் ஈடுபடச் செய்ய உள்ளோம். அதேபோன்று இருபது தொழில் கல்வி நிலையங்களையும் ஆரம்பிப்பதற்கு இந்தியா உதவுமென மேலுமவர் தெரிவித்தார்.
அம்பாறைக்கு விஜயம் செய்த இந்திய உயர் ஸ்தானிகர், அம்பாறை அரச அதிபர் சுனில் கன்னங்கரவை அரச அதிபர் அலுவலகத்தில் வைத்து சந்தித்து உரையாடினார் அம்பாறை நகர அபிவிருத்திக்கு அரசு முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து அரச அதிபர் இங்கு விளக்கமளித்துள்ளார். இந்திய அரசாங்கம் அம்பாறை உட்பட கிழக்கு மாகாணத்தை அபிவிருத்திசெய்ய பல செயற்திட்டங்களை முன்னெடுக்க உள்ளதாக இந்திய உயர் ஸ்தானிகர் இந்த சந்திப்பின் போது கூறினார்.
மீள் குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஞாயிற்றுக்கிழமை வவுனியா மாவட்டத்திலுள்ள இடைத்தங்கல் முகாம்களுக்கு விஜயமொன்றை மேற்கொண்டார். முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களிலிருந்து தற்போது வவுனியா மாவட்டத்துக்கு வருகை தரும் மக்களை நேரில் சென்று பார்வையிட்டதுடன், அவர்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்தும் அமைச்சர் அம்மக்களிடம் கேட்டறிந்து கொண்டார்.
செட்டிகுளம் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கதிர்காமர் கிராமத்துக்குச் சென்று அங்கு தற்காலிகமாக வசிக்கும் மக்களின் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்து கொண்டார். அதேவேளை, அக்கிராமத்தை அண்டிய பகுதியில் மற்றும் இரு கிராமங்களை அமைக்கும் ஆரம்பகட்ட பணிகள் இடம் பெறுவதால் அதனது முன்னேற்றம் குறித்தும் அப்பணிகளை துரிதப்படுத்துமாறும் அதிகாரிகளுக்கு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பணிப்புரை வழங்கினார்.
இதேவேளை, வவுனியா பம்பைமடு பல்கலைக்கழக வளாகத்தில் தஞ்சமடைந்துள்ள மக்களை பார்வையிட்டதுடன் அவர்களுக்கான சுகாதார வசதிகளை உடன் பெற்றுக் கொடுக்குமாறும் போதுமானளவு வைத்தியர்களை ஈடுபடுத்துமாறும் அமைச்சர் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரிடம் கேட்டுக் கொண்டார்.
அமைச்சருடன் யூ.என்.எச்.சி.ஆர். இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி அமீன் உட்பட பலரும் இணைந்து கொண்டனர்.
வெளியேறா விட்டால் இலங்கை அரச படைகள் தாக்குகின்றனர். வெளியேற முற்பட்டால் புலிகள் தாக்குகின்றனர்.
புலிகள் தங்கள் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து வெளியேறும் மக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்வதாகவும் இதனால் சிலர் கொல்லப்பட்டு உள்ளதாகவும் நேற்று (பெப் 16) ஐநா வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கின்றது. புலிகள் தமிழ் மக்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் அதில் பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் சர்வதேச அமைப்பொன்று குற்றம்சாட்டியது இதுவே முதற் தடவையாகும். ஏற்கனவே புலிகள் மக்களைத் தடுத்த வைத்திருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் வெளியேறுபவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக வெளியாகி உள்ள உத்தியோகபூர்வமான அறிவிப்பாக இது அமைந்து உள்ளது.
ஐநா வின் இக்குற்றச்சாட்டு புலிகளுக்கு மீகுந்த அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளதுடன் புலிகளுக்கு ஆதரவான சக்திகளின் அரசியல் முன்னெடுப்புகளுக்கும் இது மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது.
பெப் 16 ஐநா வின் நாளாந்த செய்திக் குறிப்பில் இலங்கையில் தினமும் 40 பேர் கொல்லப்படுவதாகவும் இவ்விடயம் தொடர்பாக ஐநா செயலாளர் நாயகம் பாதுகாப்பு கவுன்சிலிடம் தனது அவதானத்தை வெளியிட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அண்மையில் ஆசிய பயணத்தை மேற்கொண்டிருந்த ஐநா செயலாளர் நாயகம் இலங்கை ஜனாதிபதியுடனும் உரையாடி இருந்தார். பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பினர்களுக்கு இவ்வுரையாடல் பற்றியும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
ஐநா உள்ளுர் பணியாளர்கள் 15 பேர் மற்றும் அவர்களில் தங்கியிருப்போர் 75 பேர் யுத்தப் பகுதிகளை விட்டு வெளியேறாமல் புலிகளால் தடுத்து வைக்கப்பட்டு உள்ளதாகவும் ஐநா குற்றம்சாட்டி உள்ளது. ஐநா பணியாளர்களில் ஒருவரையும் புலிகள் பலாத்காரமாக தங்கள் படையணியில் சேர்த்து உள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ள ஐநா அவ்விளைஞரை உடனடியாக விடுவிக்கும் படி கோரியுள்ளதுடன் பொது மக்களை பலாத்காரமாக தங்கள் படைகளில் சேர்பதை நிறுத்துமாறும் கோரியுள்ளது.
குறிப்பாக பெண்களையும் குழந்தைகளையும் யுத்தப் பகுதியில் இருந்து வெளியேற அனுமதிக்கும் படியும் ஐநா புலிகளைக் கேட்டுக் கொண்டு உள்ளது. இலங்கை அரசும் புலிகளும் மனிதாபிமானமான தீர்வுக்கு வர வேண்டும் என்றும் அதன் மூலமே பொதுமக்கள் குறிப்பாக சிறுவர்களது உயிரிழப்புகளைத் தடுக்க முடியும் என ஐநா கேட்டுக் கொண்டு உள்ளது.
வன்னியில் புலிகள் பொதுமக்களை தடுத்து வைத்திருப்பதாகவும் அதனை மீறி வெளியேறுபவர்களை சுட்டுக் கொல்வதாகவும் குற்றம்சாட்டி உள்ள ஐநா தினமும் 40 பொதுமக்கள் கொல்லப்படுவதற்கு காரணமாக உள்ள இலங்கை அரசாங்கத்தின் மீது எவ்வித அழுத்தத்தையும் வழங்கத் தவறி உள்ளது. புலிகள் பயங்கரவாத அமைப்பாக பட்டியல்படுத்தப்பட்ட ஒரு அமைப்பு. ஆனால் இலங்கை அரசு சட்டரீதியானது. அப்படி இருந்தும் பாதுகாப்பு வலயங்கள் மீதே இலங்கை அரசு தாக்குதல்களை நடாத்தி உள்ளது. இதனால் பல நூற்றுக் கணக்கானவர்கள் உயிரிழந்து உள்ளனர். இதனை ஐநாவின் நேற்றைய அறிக்கை கண்டிக்கத் தவறியுள்ளது.
மேலும் பாதுகாப்பு வலயங்கள் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்ககும் வரை அந்த வலயங்களுக்குள் மக்கள் செல்வதற்கு அச்சம் இருக்கும் என்பதையும் ஐநா கண்டுகொள்ளவில்லை. பாதுகாப்பு வலயங்கள் ஐநா வினதோ அல்லது சர்வதேச மனிதாபிமான அமைப்புகளினதொ பொறுப்பில் வரும்பொது தான் மக்கள் நம்பிக்கையுடன் அப்பகுதிகளுக்குச் செல்லத் தயாராவார்கள்.
மேலும் வன்னியில் உள்ள பெரும்பாலான மக்கள் புலிகளுடன் ஏதோவிதத்தில் தொடர்புடையவர்களாகவும் இருந்திருப்பர். அதனால் அவர்களுடைய பாதுகாப்புக்கு சர்வதேச மனிதாபிமான அமைப்புகள் பொறுப்பெற்க வேண்டும். மேலும் சரணடைபவர்கள் பலாத்காரமாக இயக்கத்தில் சேர்க்கப்பட்டவர்கள் மாவீரர் குடும்பங்கள் ஆகியோரின் பாதுகாப்புத் தொடர்பாக சர்வதேச மனிதாபிமான அமைப்புகள் இலங்கை அரசுக்கு அழுத்தங்களை வழங்க வேண்டும். இல்லையேல் பயங்கரவாதத்தை களையெடுக்கிறோம் புலிகளைக் களையெடுக்கிறோம் என்ற பெயரில் பல நூற்றுக் கணக்காணவர்கள் சித்திரவதைகளுக்கு உள்ளாவார்கள் கொல்லப்படுவார்கள் என்பது உறுதி.
தங்களது கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து வெளியேறுபவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து அவர்களை கொலை செய்யவும் துணிந்துள்ளமை மிகவும் ஆபத்தான சூழலை ஏற்படுத்தி உள்ளது. வெளியேறா விட்டால் இலங்கை அரச படைகள் தாக்குகின்றனர். வெளியேற முற்பட்டால் புலிகள் தாக்குகின்றனர். வன்னி மக்களின் வாழ்வு இலங்கை அரச படைகளுக்கும் புலிகளுக்கும் இடையே ஊசலாடுகிறது.
புலம்பெயர் நாடுகளில் வன்னி மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விடயங்களிலும் பார்க்க புலிகளுக்கு ஒக்சிஜன் கொடுக்கும் நடவடிக்கைகளே தீவிரமாக உள்ளது. ‘போராட்டம் என்றால் மக்கள் அழியத்தான் செய்வார்கள். இழப்புகள் இல்லாமல் போராட்டம் இல்லை’ என்றெல்லாம் விளக்கமளிக்கும் புலம்பெயர் உறவுகள் உயிருக்கு ஊசலாடும் அந்த மக்களின் காதிலும் பூ வைக்க முயற்சிக்கிறார்கள்.
ஈழத்தில் நடைபெறும் போரில் காயமடைந்த தமிழர்களுக்கு மருத்துவம் செய்ய தயாராக இருப்பதாக தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஈழத்தில் நடைபெற்று வரும் இனப்படுகொலையை தடுத்து நிறுத்த வலியுறுத்தி சென்னையில் மருத்துவ கல்லூரிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் சென்னை அரசு பொது மருத்துவமனை அருகில் ஞாயிற்றுக்கிழமை தொடர் முழக்கப் போராட்டம் நடத்தினர்.
இந்தப் போராட்டத்தில் ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி, அரசு பல் மருத்துவக்கல்லூரி மற்றும் தாதியர், மருந்தியல் கல்லூரிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இப்போராட்டத்தில் உரையாற்றிய மருத்துவக்கல்லூரி மாணவி திவ்யா, இலங்கையில் உடனடியாகப் போர் நிறுத்தப்பட வேண்டும். அங்கு அமைதியான அரசியல் தீர்வை உருவாக்க இந்திய அரசு வழி வகை செய்ய வேண்டும். மருத்துவமனைகள் மீது குண்டு வீசும் கொடும் செயலை நிறுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் மருத்துவ வசதிகளை மேற்கொள்வதற்கு அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கங்களுக்கு இசைவளிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார். போரால் படுகாயம் அடைந்த தமிழர்களுக்கு இலங்கை சென்று மருத்துவம் மேற்கொள்வதற்கு மருத்துவ மாணவர்கள் தயாராக இருப்பதாகவும் திவ்யா கூறினார்.
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு மேற்கு பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த புலிகளின் 130 மி. மீ. ரக பீரங்கி இரண்டை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
புதுக்குடியிருப்பை நோக்கி முன்னேறி வரும் இராணுவத்தினர் அந்தப் பிரதேசத்தில் நேற்றுக்காலை மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே பீரங்கிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
பொலித்தீன்களால் சுற்றி மிகவும் பாதுகாப்பான முறையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த பீரங்கிகளை கண்டெடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, விசுவமடு பிரதேசத்திலுள்ள தென்னந்தொப்பு ஒன்றிலிருந்தும், புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையிலிருந்த புலிகளின் பாரிய முகாம் ஒன்றிலிருந்தும் பெருந்தொகையான ஆயுதங்கள் உட்பட வெடி பொருள்களை மீட்டெத்துள்ளதாகவும் பிரிகேடியர் தெரிவித்தார்.