Multiple Page/Post

அலரிவிதை உண்டு 9 மாணவர்கள் தற்கொலைக்கு முயற்சி; மாணவி மரணம்

images000.jpgஅலரி விதைகளை உட்கொண்டு தற்கொலை செய்ய முயன்ற ஒன்பது மாணவர்களில் ஒரு மாணவி மரணமான சம்பவம் தம்புள்ளை பகுதியில் இடம்பெற்றுள்ளது. தம்புள்ளை பக்கனே கங்கேயாய மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 10 ஆம் தர மாணவியே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

வெள்ளிக்கிழமை இப்பாடசாலைவளவில் வைத்து இவர்கள் அலரி விதைகளை உட்கொண்டதாக பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.  ஒரு மாணவி வாந்தியெடுத்து பொலநறுவை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அதன் போது தன்னுடன் சேர்ந்து அலரி விதைகளை உண்ட ஏனைய மாணவர்களின் விபரத்தை அவர் வெளியிட்டார்.

பொலநறுவை ஆஸ்பத்திரி நிர்வாகம் இது தொடர்பாக பொலநறுவை பொலிஸாருக்கு தகவல் கொடுத்ததையடுத்து பொலிஸார் ஏனைய மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களின் பெற்றோருக்கு சம்பவத்தைக் கூறினார்கள். இதனையடுத்த மூன்று மாணவர்களும் ஐந்து மாணவிகளும் தம்புள்ளை ஆஸ்பத்திரியில், அனுமதிக்கப்பட்டனர்.

இதேவேளை, பொலநறுவை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட மாணவியின் நிலைமை மோசமாகவே அவர் கண்டி ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டு சிறிது நேரத்தில் உயிரிழந்தார். தம்புள்ளை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட எட்டு மாணவர்களில் இருவர் பின்னர் கண்டி ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டனர்.

ஆறு மாணவிகளின் பெயர்கள் எழுதப்பட்ட பிறந்த தின வாழ்த்து அட்டைகள் மாணவன் ஒருவரின் புத்தகத்தில் இருந்து ஆசிரியரால் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தையடுத்து திங்கட்கிழமை அதிபரிடம் இதனைக் கூறப்போவதாக ஆசிரியர் எச்சரித்ததே இவர்களின் தற்கொலை முயற்சிக்கு காரணமென்று பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

இலங்கைக்கு 2.6 பில்லியன் டொலர் கடன் வழங்க நாணய நிதியம் அங்கீகாரம்

050709imf_.jpgஇலங்கைக்கு 2.6 பில்லியன் டொலர் கடனை வழங்க சர்வதேச நாணய நிதியம் முடிவு செய்துள்ளது. நிதியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சபை இதற்கான அங்கீகாரத்தை நேற்று வழங்கியுள்ளது. முதல் தவணையாக 320 மில்லியன் டாலர்களை இலங்கை உடனடியாகப் பெற முடியும் என்றும், அடுத்த கட்ட கொடுப்பனவுகள், ஒவ்வொரு காலாண்டிலும் மேற்கொள்ளப்படும் மீளாய்வுகளின் அடிப்படையில் வழங்கப்படும் என்றும், சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது.

நாட்டின் பொருளாதார மறுசீரமைப்புக்கு உதவி புரிந்து பொருளாதார நிலையை வலுப்படுத் தும் முகமாக இலங்கைக்கு இந்தக் கடன் வழங்கப்படுவதாக சர்வதேச நாணய நிதியம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாணய நிதியத்திடமிருந்து 1.9 பில்லியன் டொலர் கடனைப் பெறுவதற்கு அரசாங்கம் கடந்த மார்ச் மாதம் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தது. இதனையடுத்து 2.5 பில்லியன் டொலராகக் கடனை அதிகரித்து வழங்குவதெனக் கடந்த வாரம் அறிவித்திருந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் வொஷிங்டனில் கூடிய சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சபை, 2.6 பில்லியன் டொலர் கடனை வழங்க அங்கீகரித்துள்ளது.

இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தல் இலங்கை நேரப்படி நேற்று (25) அதிகாலை வெளியானது. இலங்கைக்கு இந்தக் கடனை வழங்குவது தொடர்பாக நிறைவேற்றுச் சபைக் கூட்டத்தில் கருத்துத் தெரிவித்த நிதியத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளரும், பதில் தலைவருமான டக்காரொஷி கட்டா, உலகப் பொருளாதார நெருக்கடி இலங்கையின் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும், அதிலிருந்து மீள்வதற்கு இந்தக் கடன் உறுதுணை புரியுமென்றும் தெரிவித்துள்ளார்.

யுத்தத்திற்குப் பின்னரான மறுசீரமைப்புப் பணிகளுக்கும் நிவாரணங்களுக்குமான வளங்களைப் பெற்றுக் கொள்ளவும், சர்வதேச கையிருப்பை மீளக்கட்டியெழுப்பி இலங்கையின் உள்ளகப் பொருளாதார முறைமையை வலுப்படுத்தவும் இந்தக் கடன் ஏதுவாக அமையுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்குக் கடன் வழங்கியமை நல்ல விளைவுகளை ஏற்படுத்தும் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்தக் கடன் இலங்கையின் பொருளாதார மீட்சிக்கும், மேம்பாட்டுக்கும் வழிவகுக்குமென கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதார விரிவுரையாளர் அமிர்தலிங்கம் தெரிவித்தார். இதன்மூலம் நடைமுறைக் கணக்கின் பற்றாக்குறை நிவர்த்தியாக செல்மதி நிலுவை உறுதியாக்கப்படுமென்று அவர் சுட்டிக்காட்டினார்

விடுதலைப்புலிகளை தோற்கடித்த அரசாங்கப் படைகளின் அண்மைய தாக்குதல்களின் போது எழுந்துள்ள மனிதாபிமான அதிருப்திகளை முன்வைத்து, சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக சபையின் இந்த முடிவை ஆதரிக்க பிரிட்டனும், அமெரிக்காவும் மறுத்து விட்டன.

நாணய நிதிய வாக்கெடுப்பில் பிரிட்டன் கலந்துகொள்ளவில்லை

இலங்கைக்கு 2.6 பில்லியன் டொலர் கடனை வழங்க சர்வதேச நாணய நிதியம் வெள்ளிக்கிழமை இரவு அங்கீகாரம் வழங்கியிருக்கும் அதேசமயம், இது தொடர்பான வாக்கெடுப்பில் பிரிட்டன் கலந்துகொள்ளவில்லை. நாணய நிதிய நிகழ்ச்சித்திட்டம் வெற்றியடைவதற்கு இலங்கையின் அரசியல் சூழ்நிலை நெருக்கடியானதாக இருப்பதாக பிரிட்டனின் நிதியமைச்சர் ஸ்ரீபன் ரிம்ஸ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததுடன், முகாம்களில் உள்ள அகதிகள் தொடர்பாகவும் கவலையை வெளிப்படுத்தி இருந்ததாக லண்டன் ரைம்ஸ் பத்திரிகை நேற்று சனிக்கிழமை தெரிவித்திருந்தது.

சமூக மற்றும் மீள் கட்டுமான நடவடிக்கைகளுக்காக அனுசரணையான இந்தக்கடன் வழங்கும் திட்டமானது இராணுவ பலவீன ஒதுக்கீட்டிற்கு உள்ளடக்கப்படுகின்றதா என்பதை பிரிட்டன் கவனிக்கும் என்று பிரிட்டிஷ் அரசாங்க வட்டாரங்களை மேற்கோள்காட்டி “ரைம்ஸ்’ பத்திரிகை தெரிவித்துள்ளது.

அத்துடன் அகதிமுகாம்களுக்கு இந்த நிதியை செலவிடுமாறும் பிரிட்டன் அழைப்பு விடுத்திருப்பதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபையில் 5 சதவீத வாக்களிக்கும் உரிமையை பிரிட்டன் கொண்டுள்ளது. 51 சதவீதமான வாக்குகள் கிடைத்தால் பிரேரணையை நிறைவேற்று சபை நிறைவேற்ற முடியும். ஆனால், யுத்தம் முடிவடைந்துள்ளதால் சமாதானத்தை இலங்கை எட்டமுடியுமென்று சர்வதேச நாணய நிதியமும் வெளிநாட்டு முதலீட்டாளர்களும் நம்புகின்றனர்.

இலங்கை மற்றும் தமிழர்களுக்கான சர்வகட்சி பாராளுமன்றக் குழுவுக்கு நிதியமைச்சர் ஸ்ரீபன் ரிம்ஸ் எழுதியுள்ள கடிதத்தில்,”சர்வதேச நாணய நிதியத்தின் ஏற்பாட்டிற்கு பிரிட்டன் ஆதரவு வழங்கவில்லை. இந்தத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு இது பொருத்தமான நேரம் அல்ல என்று பிரிட்டன் கருதுகிறது. சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதன் ஊடாக இலங்கை நீண்டகால சமாதானம், சுபிட்சத்தை ஏற்படுத்த வேண்டுமென பிரிட்டன் விரும்புகிறது. ஆயினும் முகாம்களில் உள்ள இடம்பெயர்ந்த மக்களின் மனிதாபிமான நிலைவரம் தொடர்பாக தொடர்ந்தும் நாம் கவலையடைத்துள்ளோம். இடம்பெயர்ந்த மக்களின் சுதந்திர நடமாட்டம் அவசியமானதாகும். இடம்பெயர்ந்த மக்களை மீளக்குயமர்த்தும் விரிவான நடவடிக்கைகளை மேம்படுத்த வேண்டுமென்று ஐ.நா. அண்மையில் விடுத்திருக்கும் கோரிக்கைக்கு நாம் ஆதரவளிக்கிறோம். சாத்தியமான அளவுக்கு அந்த மக்கள் வீடுகளுக்கு திரும்பிச் செல்ல இடமளிக்க வேண்டும். இதனைத் தாமதமின்றி நடை முறைப்படுத்துமாறு அரசாங்கத்தை நாம் வலியுறுத்துகிறோம்.

இதன் அடிப்படையில் இலங்கை தற்போதைய அரசியல் நிலைவரம் கடினமானதாக இருப்பதாக நாம் நம்புகிறோம். நிகழ்ச்சித்திட்டத்தை அமுல்படுத்துவதற்கான நிலைமை கடினமானதாக உள்ளது. மனிதாபிமான நிலைவரம் கரிசனைக்குரியதாகத் தொடர்ந்து இருந்துவருகிறது. 180 நாட்களுக்குள் அகதிகள் முகாம்களிலிருந்து தமது சொந்த இடங்களுக்கு திரும்பிச் செல்வார்கள் என்று அளிக்கப்பட்ட உறுதிமொழிக்கிணங்க செயற்படுமாறு அரசாங்கத்தை நாம் வலியுறுத்துகிறோம் என்று ரிம்ஸ் கூறியிருக்கிறார்.

இலங்கை அரசாங்கத்துடனான கடன் விடய நிபந்தனைகளுக்கு சர்வதேச நாணய நிதியம் இணங்கி இருப்பதாக இந்த வாரம் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் டொமினிக் ஸ்ரோர்ஸ்கான் தெரிவித்தார்.

அபிவிருத்தி என்பது கொழும்புக்கு மட்டுமல்ல. வடக்கு, கிழக்கு உட்பட தென்பகுதிக்கும் அது பொருந்தும்- ஜனாதிபதி

mahinda-rajapa.jpg“யுத்தத்தை முடித்து விட்டோம்; இந்த வெற்றியின் மூலம் நாட்டை அபிவிருத்தி செய்வதையே பெரும் வெற்றியாக நான் கருதுகிறேன்” என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார். அபிவிருத்தி என்பது கொழும்புக்கு மட்டுமல்ல வடக்கு, கிழக்கு உட்பட தென்பகுதிக்கும் அது பொருந்தும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

கண்டி ஜனாதிபதி மாளிகையில் நேற்று முன்தினம் மாலை ஸ்ரீல.சு.கவினது பதுளைக் கிளை நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் மகளிர் பிரிவு அணிகள் ஸ்ரீல.சு.கட்சிக்கு அவர்கள் ஆற்றிய அர்ப்பணிப்புக்கு நன்றி பாராட்டும் வகையில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில், பிரிக்கப்பட்ட இந்த நாட்டை ஒன்றிணைத்து சுதந்திரத்தை மீட்டுத்தர வேண்டுமென எதிர்பார்த்து எமக்கு புள்ளடியிட்டதன் பயனை தாங்கள் தற்போது நன்றாகப் புரிந்திருப்பீர்கள். நாம் இன்று பயங்கரவாதிகளை ஒழித்தும், பயங்கரவாதிகளின் தலைவரையும் ஒழித்து நாட்டில் அனைவரும் அச்சமின்றி வாழும் ஒரு சிறந்த சூழலை ஏற்படுத்தியுள்ளோம் இந்த வெற்றியின் மூலம் நாட்டின் அபிவிருத்தியையே பெரும் வெற்றியாக நான் கருதுகிறேன்.

காலாகாலமாக ஐ.தே.க. உறுப்பினர்கள் பெருமளவில் எம்முடன் இணைந்து கொண்டதற்கான காரணம் நாம் அண்மையில் பெற்றுக் கொண்ட வெற்றியின் காரணமாகும். இந்த நாட்டின் அபிவிருத்தியை நாம் ஒரு போதும் ஓரம்கட்டி விடவில்லை. தீவிரவாதிகளை ஒழித்துக்கட்டும் அச்சந்தர்ப்பத்திலும் கூட நாம் நாட்டின் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டு வந்துள்ளோம். யுத்தத்தை காட்டி நாம் எப்போதும் எதையும் காலம் தாழ்த்த முடியாது. தற்போது நாட்டில் சுதந்திரமான ஒரு சூழ்நிலை நிலவியுள்ளதனால் அதிகமான அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ளப் பாடுபடுவோம்.

ஆனால், முன்பு அரசியல் செய்தவர், கொத்மலை மற்றும் நுரைச்சோலை மின் திட்டங்களை அரசியல் வாக்குக்கு மட்டும் பயன்படுத்தினர். அரசியலில் தோல்வியை கண்டதும் அதை கைவிட்டுவிடுவார்கள். யுத்த காலத்திலும் கூட நுரைச்சோலை கொத்மலை திட்டங்களைக் கைவிடவில்லை. நாம் ஒரு போதும் வெறும் தேர்தல் வாக்குகளுக்காக மட்டும் அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ள மாட்டோம்.

யுத்தம் தொடர்பில் பல தலைவர்கள் எமக்கு உதவினார்கள், அதாவது பாதுகாப்பு தொடர்பில் ‘கிடைத்த தலைவரைக் கொண்டு யுத்தத்தை வென்றோம். அது போன்று அபிவிருத்தி தொடர்பிலும் எத்தனையோ பிரதேச, நகர், மாகாண சபை தலைவர்கள் இருக்கின்றனர். இவர்கள் எமக்குக் காட்டும் வழிகள் மூலம் அனைவரும் ஒன்றிணைந்து அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள வேண்டிய காலம் வந்து விட்டது. சுதந்திரக் காற்றை அனுபவிக்கும் நாம் உலகத்திற்கு மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்த நாம் அனைவரும் ஒன்றுபடுவோம் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

ரணவக்க எம்.பி. காலமானார்

sarath-ranawaka.jpgகளுத்துறை மாவட்ட ஐ.தே. கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சரத் ரணவக்க நேற்றுக் காலமானார்.  பல மாதகாலமாக நோய்வாய்ப்பட்டிருந்த இவர் ஸ்ரீ ஜயவர்தனபுர ஆஸ்பத்திரியில் காலமானார்.

புளத்சிங்கள, அகலவத்த தொகுதிகளின் ஐ.தே.கட்சி அமைப்பாளராக பதவி வகித்த சரத் ரணவக்க களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக 15 வருடங்களுக்கு மேல் அங்கம் வகித்தார்.

ஈரான் பயணிகள் விமானம் ஓடுபாதை சுவரில் மோதி விபத்து – 17 பேர் பலி

25-iran-plane-crash.jpgஈரானில் பயணிகள் விமானம் ஒன்று ஓடுபாதையின் சுவற்றில் மோதி தீப்பிடித்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் பலியானார்கள். ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து 153 பயணிகளுடன் மாஷாத்வந்த விமானம் ஒன்று மாஷாத் சர்வதேச விமான நிலையத்தில் தரை இறங்கியது.

எதிர்பாராவிதமாக ஓடு பாதையின் நடுப்பகுதியில் விமானத்தை விமானி தரை இறக்கியதால் குறைந்த தூரமே உள்ள ஓடுபாதையில் வேகமாக சென்ற அந்த விமானம் சுற்றுச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தின் முன்பகுதி சேதம் அடைந்து தீப்பிடித்தது. அவர்களில் முன்பகுதியில் அமர்ந்திருந்த 17 பேர் விபத்தில் சிக்கி பலியானார்கள். 19 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து நடந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். விமானத்தில் இருந்த மற்ற பயணிகள் மீட்கப்பட்டு பாதுகாப்புடன் வெளியே அழைத்துச் செல்லப்பட்டனர்.

பேருவளை கோஷ்டி மோதலில் மூவர் பலி நிலைமை கட்டுப்பாட்டில்; பலத்த பாதுகாப்பு

beruwela.jpgபேருவளை மஹகொடை பகுதியில் இரு முஸ்லிம் கோஷ்டியினரிடையே ஏற்பட்ட மோதல் நிலை தற்போது தணிந்து அமைதி நிலவுகிறது.

இரு கோஷ்டிகளுக்கிடையே நேற்று அதிகாலை 1.30 அளவில் ஏற்பட்ட மோதலில் மூவர் கொல்லப்பட்டனர். மேலும் 11 பேர் காயமடைந்தனரென பொலிஸார் தெரிவித்தனர். ஆயினும் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதோடு அமைதி நிலவுவதாகவும் பொலிஸார் கூறினர். இப் பகுதியில் கடைகள் திறக்கப்பட்டு வியாபார நடவடிக்கைகள் இடம்பெற்றது. வழமை போல் மக்கள் இப்பகுதிகளில் நடமாடுவதைக் காணக் கூடியதாக இருந்தது.

பைத்துல் முபாரக் முஸ்தபவிய்யா புஹாரித் தக்கியா, தீவைத்து கொளுத்தப்பட்ட மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசல் பகுதிகளில் விசேட அதிரடிப் படையினரும், இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தனர். அமைதியைப் பேணுமாறு இரு குழுக்களிடையேயும் முக்கிய பிரமுகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பள்ளிவாசல் வளவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள், துவிச்சக்கர வண்டிகளும் தீயினால் எரிந்து நாசமாகியுள்ளன. பேருவளை பொலிஸார் மேலதிக புலன் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

யாழ்.பயணிகளின் போக்குவரத்திற்காக பஸ்ரயில் இணைப்புச் சேவைக்கு கோரிக்கை

bussss.jpgகொழும் பிலிருந்து காங்கேசன்துறை வரை யாழ்தேவி புகையிரத சேவையை ஆரம்பிக்கும் வரை, யாழ்ப்பாணத்திலிருந்து தாண்டிக்குளம் வரை பஸ் போக்குவரத்தையும் தாண்டிக்குளத்திலிருந்து கொழும்புக்கு ரயில் போக்குவரத்தையும் ஏற்பாடு செய்ய வேண்டுமென யாழ்ப்பாணம் மேல் நீதி மன்ற நீதிபதி த. விக்னராஜா ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் அமைச்சருமான பசில் ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ். பொது நூலகத்தில் புதன்கிழமை இடம்பெற்ற, வடக்கின் வசந்தம் மீளாய்வு கூட்டத்தின்போதே நீதிபதி த.விக்னராஜா இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் பேசுகையில்;

இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள ஏ9 வீதி ஊடான தரைவழிப் போக்குவரத்து யாழ்ப்பாணத்திலிருந்து மதவாச்சி வரை பஸ் போக்குவரத்தை நடத்தி தாண்டிக்குளத்திற்கு அப்பால் யாழ்தேவி புகையிரதச் சேவை மேற்கொள்ளப்படவுள்ளது. இந்தப்பொது மக்கள் போக்குவரத்தை இலகுபடுத்துவதற்கு யாழ்ப்பாணத்திலிருந்து தாண்டிக்குளம் வரை அப்பால் யாழ்தேவி புகையிரத சேவையை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதுபோல் கொழும்பிலிருந்து யாழ்.வருபவர்கள் தாண்டிக்குளத்திலிருந்து பஸ் போக்குவரத்தை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

தற்பொழுது நடைமுறையில் பயணிகள் அனுமதிப்பத்திரம் பெறும் முறை இலகுபடுத்தப்பட வேண்டும்.  அதற்காக முன்னாள் யாழ்.மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி சந்திரசிறி முன்னர் மேற்கொண்டிருந்த யாழ். மாவட்ட மக்களுக்கான விசேட இராணுவ அடையாள அட்டையைத் தற்பொழுது வழங்கி அதன் மூலம் போக்குவரத்தை இலகு படுத்த வேண்டுமெனத் தெரிவித்தார்.

யாழ். மேல் நீதிமன்றில் சட்டத்தரணிகள் அலுவலகம் ஒன்று அமைக்கவும் நீதி மன்றத்திற்கான கேட்போர் கூடம் சட்டத்தரணிகள் வாகனத்தரிப்பிடம் என்பனவற்றையும் அமைத்துத் தரவேண்டும் என்ற மகஜர் ஒன்றை மேல் நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கம் சார்பில் பசில் ராஜபக்ஷவிடம் நீதிபதி த.விக்னராஜா கையளித்துள்ளார்.

டுபாய் அரசின் புதிய அறிவிப்பால் பலர் வீடு இழக்கும் அபாயம்

dubai_flag.pngஒரே வீட்டை பலர் பகிர்ந்து கொள்ளக் கூடாது என்ற புதிய உத்தரவு ஒன்றை டுபாய் அரசு பிறப்பித்துள்ளது. இதனால் அங்கு வாழும் வெளிநாட்டவர்கள் பலர் வீடுகளை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. டுபாயில்,  ஒரே வீட்டில் ஒரு குடும்பத்திற்கும் அதிகமானவர்களோ அல்லது திருமணமாகாத இளைஞர்கள் பலரோ சேர்ந்து தங்கலாம் என, அந்நாட்டு அரசு முன்னர் அனுமதித்திருந்தது. எனினும் தற்போது அந்தச் சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி  ஒரு வீட்டில் ஒரு குடும்பத்திற்கு மேல் யாரும் தங்கக் கூடாது என்ற புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

டுபாயில்,  விலா என அழைக்கப்படும் வீடுகளின் வாடகை அளவுக்கு அதிகமாக உள்ளது. அதனால்,  ஏராளமான வெளிநாட்டுக்  குடும்பங்கள் மற்றும் திருமணமாகாத இளைஞர்கள் பலர் ஒரே வீட்டில் வசிக்கின்றனர்.  இப்படி சேர்ந்து வசிப்பவர்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு,  ஒரு வீட்டில் ஒரு குடும்பம் மட்டுமே வசிக்க வேண்டும். இதை மீறும் விலா உரிமையாளர்களுக்கு; அபராதம் விதிக்கப்படும் என,  கடந்தாண்டு மத்தியில் அந்நாட்டு அரசு அறிவித்தது.

இந்த விதிமுறை, அடுத்த மாதம் முதல் கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதற்கு காலநீட்டிப்போ அல்லது விதிவிலக்கோ கிடையாது என துபாய் நகராட்சி அதிகாரி உசேன் நாசர் லூட்டா கூறியுள்ளார்.

கண்டி கட்டுகஸ்தோட்ட பாலம் இன்று ஜனாதிபதியினால் திறந்து வைப்பு

mahinda_raajapakse11.jpgகண்டி கட்டுகஸ்தோட்ட பாலம் இன்று ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்படவுள்ளது. கடந்த மூன்று வருடங்களாக இரவு பகலாக நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், இப் பாலத்தின் திறப்பு விழா இடம்பெறுகின்றது.  இதேவேளை, கண்டி கன்னொருவ வீதி வியாழக்கிழமை ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது.

கண்டி கெட்டம்ப பாலத்தின் ஊடாக பேராதனை நகருக்குச் செல்லும் இவ்வீதியூடாகவே இனி கொழும்பு கண்டி போக்குவரத்துகள் இடம்பெறவுள்ளன. இதன் மூலம் பேராதனை பாலத்தின் மேல் காணப்பட்ட வாகன நெரிசல் கட்டுப்படுத்தப்படவுள்ளது. கன்னொருவ வீதி கன்னொருவ விவசாய ஆராய்ச்சித் திணைக்களத்திலிருந்து பேராதனை நகர்வரை 2.8 கிலோமீற்றர் தூரத்தினைக் கொண்டுள்ளது. இது ஆறு வாகனங்கள் ஒரே நேரத்தில் செல்லக்கூடியதாக அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு 680 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழா வைபவத்தில் பெருந்தெருக்கள் அபிவிருத்தி அமைச்சர் டி.பீ.ஏக்கநாயக்க, அமைச்சர் கெஹலிய ரம்புக்வல, மத்திய மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ, முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

“டெஸ்டின் பெருமையை பாதுகாக்க போட்டிகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும்’

cricket1.jpg“டெஸ்ட் கிரிக்கெட்டின் பாரம்பரியமும் பெருமையும் பாதுகாக்கப்பட போட்டிகளின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும்’ என்கிறார் அன்ட்ரூ பிளிண்டொப். இங்கிலாந்து அணியின் முன்னணி வீரர் அன்ட்ரூ பிளிண்டொப். தற்போது இங்கிலாந்தில் நடந்து வரும் ஆஷஸ் தொடருக்குப் பின் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறவுள்ளார். ஆஷஸ் தொடரின் இரண்டாவது போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர், இங்கிலாந்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாகத் திகழ்ந்தார்.

டெஸ்ட் கிரிக்கெட்டைப் பாதுகாப்பது பற்றி பிளிண்டொப் கூறியதாவது;

கடந்த சில ஆண்டுகளாக மக்களின் மனநிலை மாறிவிட்டது. டெஸ்ட் கிரிக்கெட்டின் பாரம்பரியத்தைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம். “ருவென்ரி20′ கிரிக்கெட் போட்டிகளின் அசுர வளர்ச்சி டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு கட்டாயம் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால், டெஸ்ட் போட்டிகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும்.

இன்றைய உலகில் சிறிய குழந்தைகளிடம் எவ்வகைப் போட்டிகள் பிடிக்கும் என்று கேட்டால், “கவர்ச்சியும் உற்சாகமும் நிறைந்த “ருவென்ரி20′ போட்டிகள் தான் பிடிக்கும்’ என்று பதில் வருகிறது. இனிவரும் காலங்களில் டெஸ்ட் போட்டிகளில் வீரர்கள் அர்ப்பணிப்புடன் விளையாட வேண்டும்.

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவது பற்றி எந்த வருத்தமும் எனக்கில்லை. லோர்ட்ஸில் நடந்த ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்டுக்குப் பின் இது இம்மைதானத்தில் எனக்கு கடைசி போட்டி என்பதை உணர்ந்தேன். அமர்ந்து மைதானத்தைச் சுற்றிப்பார்த்து எனக்குள்ளாக மகிழ்ச்சியடைந்தேன். இருப்பினும், எட்பாஸ்டனில் நடக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முழு வீச்சில் தயாராகி வருகிறேன். அப்போட்டியில் சிறப்பாக செயல்பட வேண்டுமென்பதே இப்போதைக்கு எனது கவலை என்றும் பிளிண்டொப் கூறினார்.