கொழும் பிலிருந்து காங்கேசன்துறை வரை யாழ்தேவி புகையிரத சேவையை ஆரம்பிக்கும் வரை, யாழ்ப்பாணத்திலிருந்து தாண்டிக்குளம் வரை பஸ் போக்குவரத்தையும் தாண்டிக்குளத்திலிருந்து கொழும்புக்கு ரயில் போக்குவரத்தையும் ஏற்பாடு செய்ய வேண்டுமென யாழ்ப்பாணம் மேல் நீதி மன்ற நீதிபதி த. விக்னராஜா ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் அமைச்சருமான பசில் ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
யாழ். பொது நூலகத்தில் புதன்கிழமை இடம்பெற்ற, வடக்கின் வசந்தம் மீளாய்வு கூட்டத்தின்போதே நீதிபதி த.விக்னராஜா இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் பேசுகையில்;
இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள ஏ9 வீதி ஊடான தரைவழிப் போக்குவரத்து யாழ்ப்பாணத்திலிருந்து மதவாச்சி வரை பஸ் போக்குவரத்தை நடத்தி தாண்டிக்குளத்திற்கு அப்பால் யாழ்தேவி புகையிரதச் சேவை மேற்கொள்ளப்படவுள்ளது. இந்தப்பொது மக்கள் போக்குவரத்தை இலகுபடுத்துவதற்கு யாழ்ப்பாணத்திலிருந்து தாண்டிக்குளம் வரை அப்பால் யாழ்தேவி புகையிரத சேவையை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதுபோல் கொழும்பிலிருந்து யாழ்.வருபவர்கள் தாண்டிக்குளத்திலிருந்து பஸ் போக்குவரத்தை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
தற்பொழுது நடைமுறையில் பயணிகள் அனுமதிப்பத்திரம் பெறும் முறை இலகுபடுத்தப்பட வேண்டும். அதற்காக முன்னாள் யாழ்.மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி சந்திரசிறி முன்னர் மேற்கொண்டிருந்த யாழ். மாவட்ட மக்களுக்கான விசேட இராணுவ அடையாள அட்டையைத் தற்பொழுது வழங்கி அதன் மூலம் போக்குவரத்தை இலகு படுத்த வேண்டுமெனத் தெரிவித்தார்.
யாழ். மேல் நீதிமன்றில் சட்டத்தரணிகள் அலுவலகம் ஒன்று அமைக்கவும் நீதி மன்றத்திற்கான கேட்போர் கூடம் சட்டத்தரணிகள் வாகனத்தரிப்பிடம் என்பனவற்றையும் அமைத்துத் தரவேண்டும் என்ற மகஜர் ஒன்றை மேல் நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கம் சார்பில் பசில் ராஜபக்ஷவிடம் நீதிபதி த.விக்னராஜா கையளித்துள்ளார்.