கண்டி கட்டுகஸ்தோட்ட பாலம் இன்று ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்படவுள்ளது. கடந்த மூன்று வருடங்களாக இரவு பகலாக நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், இப் பாலத்தின் திறப்பு விழா இடம்பெறுகின்றது. இதேவேளை, கண்டி கன்னொருவ வீதி வியாழக்கிழமை ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது.
கண்டி கெட்டம்ப பாலத்தின் ஊடாக பேராதனை நகருக்குச் செல்லும் இவ்வீதியூடாகவே இனி கொழும்பு கண்டி போக்குவரத்துகள் இடம்பெறவுள்ளன. இதன் மூலம் பேராதனை பாலத்தின் மேல் காணப்பட்ட வாகன நெரிசல் கட்டுப்படுத்தப்படவுள்ளது. கன்னொருவ வீதி கன்னொருவ விவசாய ஆராய்ச்சித் திணைக்களத்திலிருந்து பேராதனை நகர்வரை 2.8 கிலோமீற்றர் தூரத்தினைக் கொண்டுள்ளது. இது ஆறு வாகனங்கள் ஒரே நேரத்தில் செல்லக்கூடியதாக அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு 680 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழா வைபவத்தில் பெருந்தெருக்கள் அபிவிருத்தி அமைச்சர் டி.பீ.ஏக்கநாயக்க, அமைச்சர் கெஹலிய ரம்புக்வல, மத்திய மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ, முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.