உலகின் ஒட்டுமொத்த அணு ஆயுத கையிருப்பில் சுமார் 90 சதவீதமான அணு ஆயுதங்களை ரஷ்யா மற்றும் அமெரிக்கா கொண்டுள்ளதாக ஆய்வறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்வீடன் நாட்டு நிறுவனமான ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தினால் (STOCKHOLM INTERNATIONAL PEACE RESEARCH INSTITUTE) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், அமெரிக்கா, ரஷ்யா, பித்தானியா, பிரான்ஸ், சீனா, இந்தியா, பாகிஸ்தான், வட கொரியா மற்றும் இஸ்ரேல் ஆகிய ஒன்பது உலக நாடுகள் அணு ஆயுத சக்தியை கொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, உலகின் ஒட்டுமொத்த அணு ஆயுத கையிருப்பில் சுமார் 90 சதவீதத்தை ரஷ்யாவும் அமெரிக்காவும் கொண்டுள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுடன் ஒப்பிடும்போது சீனாவின் வசமுள்ள அணு ஆயுதங்களின் எண்ணிக்கை சற்று குறைவு எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த ஓராண்டில் உலக நாடுகளின் வசம் ஒட்டுமொத்தமாக அணு ஆயுதங்களின் எண்ணிக்கை சுமார் 13 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாகவும், இதற்காக உலக நாடுகள் சுமார் 91.3 பில்லியன் டொலர்களை செலவிட்டுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உலக அளவில் தற்போது 9,585 அணு ஆயுதங்கள் செயற்பாட்டிலுள்ளதாகவும், இதில் சீனாவிடம் மட்டும் சுமார் 500 அணு ஆயுதங்கள் இருப்பதாகவும் இவ்வருடம் வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தன்பாலின திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதியை தாய்லாந்து அரசு நேற்றைய தினம் வழங்கியுள்ளது. இதன் மூலம் தன்பாலின திருமணத்துக்கு அனுமதி அளித்துள்ள முதல் தென்கிழக்கு ஆசிய நாடாக தாய்லாந்து அறியப்படுகின்றது.
இதற்கான சட்ட மசோதாவை அந்த நாட்டின் செனட் மேல்சபை உறுப்பினர்கள் நேற்று (ஜூன் 18) வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றினர்.
இந்நிலையில் அரசின் குறித்த அறிவிப்பை அடுத்து தன்பாலின ஆர்வலர்கள் மற்றும் எல்.ஜி.பிடி சமூகத்தினர் ஒன்று கூடி வானவில் கொடியைக் காற்றில் பறக்க விட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மேலும் இது வரலற்றுச் சிறப்பு மிக்க தருணம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டு ஹஜ் யாத்திரையின் போது ஏற்பட்ட கடும் வெப்பம் மற்றும் நெரிசல் காரணமாக 550 யாத்ரீகர்கள் உயிரிழந்துள்ளதாக சவூதி அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இறந்த 550 பேரில் 323 பேர் எகிப்தியர்கள் என்று கூறப்படுகிறதுடன் அவர்களில் பெரும்பாலோர் நீர்ச்சத்து குறைவாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடும் வெப்பமான காலநிலையில் யாத்ரீகர்கள் யாத்திரை மேற்கொள்ள முடியாமல் தவித்த நிலையில், அவர்களில் பலர் மயங்கி விழுந்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது அவர்கள் உயிரிழந்ததாக சவுதி அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முரளீதரன் கர்நாடக மாநிலம் சாமராஜநகரா மாவட்டத்தில் உள்ள படன குப்பேயில் குளிர்பானங்கள் மற்றும் தின்பண்டங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் 1,400 கோடி ரூபா முதலீடு செய்ய உள்ளதாக கர்நாடக தொழில்துறை அமைச்சர் பாட்டீல் தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டம் பற்றி அவருடன் முரளீதரன் கலந்துரையாடியுள்ளதாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
குறித்த பதிவில் இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முரளீதரன் குளிர்பானங்கள் மற்றும் தின்பண்டங்கள் தயாரிக்கும் நிறுவனம் அமைக்க திட்டமிட்டுள்ளார்.
இதற்காக ஆரம்பத்தில்; 230 கோடி ரூபாய் முதலீட்டில் திட்டமிடப்பட்ட இந்த திட்டம், தற்போது மொத்தம் 1,000 கோடியாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் 1,400 கோடியாக உயர்த்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்திற்காக ஏற்கனவே 46 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த நிறுவனத்துக்கான உற்பத்தி நடவடிக்கைகள் அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், முரளீதரன் எதிர்வரும் காலங்களில் தார் வாட்டில் மற்றொரு பிரிவையும் தொடங்க திட்டமிட்டுள்ளார் என குறித்த பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கம் கடைப்பிடிக்கும் பொருளாதார கட்டுப்பாடுகளின் பாதகமான விளைவுகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் கருத்து தெரிவித்துள்ளார்.
மனித உரிமைகள் பேரவையின் 56 ஆவது அமர்வில் பூகோள ரீதியிலான நிலைமை அறிக்கையை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பொருளாதார நெருக்கடியின் தாக்கங்களும் அதனுடன் தொடர்புடைய கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் ஏழ்மையான மற்றும் வறுமை கோட்டிலுள்ள மக்களை அதிகம் பாதித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இலங்கையில் 2021 மற்றும் 2023க்கு இடையில் வறுமை விகிதம் 13.1 சதவீதத்தில் இருந்து 25.9 சதவீதம் வரை இரட்டிப்பாகியுள்ளது. மேலும் இவ்வாறான நிலை அடுத்த சில ஆண்டுகளுக்கு இதே மட்டங்களில் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் கூறியுள்ளார்.
தியாகியின் திருவிளையாடல்கள் அம்பலத்துக்கு வர தியாகி அரசியலில் இருந்து ஒதுங்கவில்லை மீள் பிரவேசத்திற்கு தயாராகின்றார். ஒரு ஸ்ரன்ட் அடித்துள்ளார்.’தற்காலிகமான ஓய்வு எடுக்கிறேன், நிரந்தரமா என்று காலம் தான் முடிவு செய்யும்’ என யூன் 10இல் அறிவித்து உதவி வழங்குவதை நிறுத்தியுள்ளார். இது தன்னை நியாயப்படுத்துவதற்கு வாமதேவன் தியாகேந்திரன் அடித்த அந்தர் பல்டி. இவ்வாறு செய்தால் தனக்கு ஆதரவான ஒரு அலையை தன்னுடைய உதவி வேண்டும் என்று கேட்பவர்கள் எழுப்புவார்கள் எனத் தியாகேந்திரன் கருதியிருக்கலாம். மேலும் அவரால் வளர்க்கப்பட்ட யூரியூப்பேர்ஸ் மற்றும் சமூக வலைத்தள பிரகிருதிகள் அவருக்காகக் குரல் கொடுப்பார்கள் அதன் மூலம் றீ-என்ரி (re-entry) ஆகலாம் எனப் பார்க்கின்றார். ஆனால் அது அவ்வளவாக வாய்க்கவில்லை. தம்மன்னா – இந்திரன் கோஸ்டியையே மூடிக்கட்டிக்கொண்டு போக வைத்தது யாழ்ப்பாணம். தியாகியெல்லாம் மற்றரே (matter) கிடையாது. ஆனாலும் தியாகி இன்னுமொரு முயற்சி எடுப்பார், மக்களுக்கு தன்னுடைய உதவி தேவைப்படுகின்றது. மக்கள் கேட்கிறார்கள் என்று ஒரு ரீலோடு இன்னுமொரு என்ரிக்கு இடமிருக்கிறது.
உதவி வழங்குகிறேன் என்ற பெயரில் அண்மைக்காலமாக பணத்தை விட்டெறிந்து வரும் தியாகி என அறியப்பட்ட 74 வயதான வாமதேவன் தியாகேந்திரன் யாழ்ப்பாணத்தை தன்னிடம் தந்தால் ரணில் விக்கிரமசிங்கவை தான் ஆதரிப்பேன் என்றும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பத்துக் கோடி வழங்குவதாகவும் தெரிவித்து வருகின்றார். மதியாதார் முத்தம் மிதிக்கமாட்டேன் என்றவர் ரணில் விக்கிரமசிங்க தன்னை வந்து சந்திக்க உள்ளதாகவும் தெரிவித்து வருகின்றார். அண்மையில் சிறிதுகாலமாக பிரபல்யம் அடைந்து வரும் திடீரென முளைத்துள்ள இந்தத் தியாகி யார்? இவருக்கான நிதி எங்கிருந்து வருகின்றது? ஏன் இந்த நிதியை இவர் இவ்வாறு செலவு செய்கின்றார்?
தியாகி யாழ்ப்பாணம் நல்லூரடியைப் பூர்வீகமாகக் கொண்டவர். இவர்கள் யாழ் மேட்டுக்குடியினர். தியாகேந்திரனின் தாயார் சொர்ணாம்பிகை இவர் முன்னாள் யாழ்ப்பாணச் சட்டத்தரணி பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனின் ஒன்றுவிட்ட சகோதரி. அதாவது யோகேஸ்வரனின் தந்தை மருத்துவர் ஏ எஸ் வெற்றிவேலுவின் சகோதரன் புகழ்பெற்ற சட்டத்தரணி ஏ எஸ் நவரத்தினத்தின் ஐந்து பெண் பிள்ளைகளில் ஒருவர். தியாகேந்திரனுக்கு யோகேஸ்வரன் மாமா முறை. தியாகேந்திரன் இனப்பிரச்சினை பூதாகாரமாவதற்கு முன்பே புலம்பெயர்ந்து சுவிஸில் குடும்பத்துடன் குடியேறிவிட்டார். இவருடைய மனைவி நந்தினி தியாகேந்திரன். இவருக்கு இரு பெண் பிள்ளைகள் நிலாயினி, தக்சாயினி ஆகிய இருவரும் மருத்துவர்களாக உள்ளனர். நிலாயினி அறக்கட்டளை ஒன்றை நடத்துகின்றார். தக்சாயினி மருத்துவ நிலையம் ஒன்றை இயக்குகின்றார். மற்றும் மகன் அர்ச்சுனா கனன் நிறுவனத்தில் விற்பனை மேலாளராக உள்ளார். இக்குடும்பத்தினர் சுவிஸில் தமிழ் சமூகத்தோடு ஒன்றியிருப்பதாகத் தெரியவில்லை. அவ்வாறு இருக்க வேண்டும் என்ற நியதியும் இல்லை. அவர்கள் கண்ணியமானவர்களாக அந்நாட்டோடு இயைந்து வாழ்பவர்களாகவே உள்ளனர்.
ஆனால் இவருடைய மகன் அர்ச்சுனா தியாகேந்திரனின் திருமணத்தின் போது கொழும்பில் ஒரு சீதன வீட்டைக் கேட்டு துன்புறுத்தி இறுதியில் அத்திருமணம் முறிந்தது கிளைக்கதை.
தியாகேந்திரன் 2000ம் ஆண்டு சமாதான காலத்தில் தனியாக இலங்கைக்குத் திரும்பி வாழ்கின்றார். தியாகேந்திரன் கோடிக் கணக்கில் உதவி வழங்குவது பாராட்டுக்குரியது தான். இவருக்கு இவ்வளவு கோடிக்கணக்கில் பணம் எங்கிருந்து வருகின்றது என்பதும் ஏன் இதனை இப்படி வழங்குகிறார் என்பதும் சமூக அக்கறையுடைய ஒவ்வொருவரும் எழுப்ப வேண்டிய கேள்வி.
தியாகேந்திரனுக்கு சட்டப்படி பணம் வருகிறதோ சட்ட விரோதமாக வருகின்றதோ என்பதற்கு அப்பால் அவற்றை ஏன் அவர் விசுக்குகின்றார் என்பதை அறிந்தால் பல கேள்விகளுக்கு விடைகள் கிடைக்கலாம்.
விளக்கம் 1: தன்னை எம்ஜிஆர் ரசிகனாகக் காணும் அவர் அவ்வாறான கோமாளித் தனங்களை தொடர்ச்சியாகச் செய்து வருகின்றார். இவ்வாறு அள்ளிக் கொடுப்பதால் தன்னை ஒரு கொடைவள்ளல் என உலகம் போற்றும் என நினைக்கலாம். அவருக்கு 74 வயதாகிவிட்டது. பிள்ளைகளும் நல்ல நிலைக்கு வந்துவிட்டனர். இருக்கிறதை வாரிக் கொடுத்து பெயரெடுக்க எண்ணி இருக்கலாம். இந்த மனநிலை வருவது மிகக்குறைவு. பணத்தை வைத்திருப்பவர்கள் எப்பவும் அதனை மேலும் மேலும் சேர்க்கவே முனைவார்கள். அவர்களின் மரணத்தின் விளிம்பில் கூட. அந்த வகையில் தியாகேந்திரன் வித்தியாசமானவர்.
விளக்கம் 2: தன்னை கொடையாளியாக அறிமுகப்படுத்தி ஒரு அரசியல் வாதியாவது. பிரித்தானியாவில் இருந்து ஊருக்குச்சென்ற தொழிலதிபர் கணேஸ் வேலாயுதம், நெதர்லாந்தில் இருந்து ஊருக்குச் சென்றுள்ள ஐபிசி பாஸ்கரன் வரிசையில் தியாகேந்திரனுக்கும் ஒரு முதலமைச்சர் கனவு இருக்கின்றது. ஆனால் தமிழ் மக்களிடம் இருக்கின்ற அரசியல் விழிப்புணர்வால் அவர்கள் தனக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்பதை கணக்குப் பார்க்கத் தெரியாத முட்டாள் அல்ல தியாகேந்திரன். ஏற்கனவே தேர்தலில் நின்று மண்கவ்விய அனுபவமும் அவருக்கு உண்டு. அதனால் தான் தேர்தலில் நின்று கஸ்டப்படாமல் யாழ்ப்பாணத்தைக் கேட்கின்றார். மிகத் தெளிவாக ஆளுநர் பதவியைக் கேட்கின்றார். போர்துக்கீசர், ஒல்லாந்தர், ஆங்கிலேயேர் வந்து ஆண்ட யாழ்ப்பாணத்தை சுவிஸில் இருந்து வந்த தான் ஏன் ஆளமுடியாது என்று நினைக்கின்றார் போலும். அவர் ரிசிரி (TCT: Thiyagi Charitable Trust) சுப்பர் மாக்கற் லெவலுக்கு யாழ்ப்பாணத்தை கொண்டிழுக்கலாம் என நினைக்கிறாரா? அல்லது தனது திருகுதாளங்களைத் தொடர அது வசதியாக இருக்கும் என நினைக்கின்றாரா?
விளக்கம் 3: பணத்தை தேக்கி வைக்காமல் அதனைப் பாய விடுவதன் மூலமே மேலும் பணத்தை சம்பாதிக்க முடியும். அறக்கட்டளைகள் மூலமாக கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கும் பல நடவடிக்கைகள் உலகம் பூராகவும் நடக்கின்றது. ஆனால் மேற்கு நாடுகளில் இந்த பண பரிவர்த்தனை முறைகளுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தச் சட்டங்களை உச்சுவதற்காக உண்டியல் என்ற பண மாற்று முறைமையூடாக கருப்புப் பணத்தை அறக்கட்டளைகளுக்கு அனுப்பி வைப்பார்கள். அதில் பத்து வீதத்தை அவர்கள் தங்களுக்கு பெற்றுக்கொண்டு மிகுதி தொண்ணூறு வீதத்தை பணம் அனுப்பியவர் தருகின்ற வங்கிக் கணக்கில் வைப்பிலிட வேண்டும். இதன்படி பத்துக்கோடி பரிவர்த்தனை இடம்பெற்றால் உண்டியலில் பெற்று வங்கியில் வைப்பிட ஒரு கோடி கிடைக்கும். இவ்வாறான நடவடிக்கையில் உலகின் பல பாகங்களிலும் உள்ள தமிழர்கள் மத்தியில் ஒரு இரகசிய வலைப்பின்னல் இருப்பதாகவும் அவ்வாறான வலைப்பின்னல் உள்ளவர்களுக்கு தான் சிலரை அறிமுகப்படுத்தியதாக சுவிஸ்லாந்தில் வாழும் போராட்ட அமைப்பொன்றின் முன்னாள் உறுப்பினர் தேசம்நெற் க்குத் தெரிவித்தார்.
தியாகேந்திரன் தான் எவ்வளவு பணத்தை மக்களுக்கு கொடுத்தார் என்பதையோ பணம் எங்கிருந்து வருகின்றது என்பதையோ குறிப்பாகச் சொல்லவில்லை. தன்னுடைய பிள்ளைகளதும் அல்ல, தன்னுடைய சொந்தப் பணம் தனது பென்சன் பணம், தான் கார்களை பழுது பார்த்து ஏற்றுமதி செய்வதன் மூலம் கிடைக்கும் பணம் என்று சொல்கின்றாரேயல்லாமல் அதற்கு எவ்வித ஆதாரங்களும் இல்லை. இவர் தன்னுடைய வீட்டில் நிற்கும் கார்களைக் காட்டுகின்றார். ஆனால் பா உ கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் பென்ஸ் மொடலில் வந்த அத்தனை கார்களும் அருங்காட்சியகம் போல உள்ளது. அவரிடம் உள்ள சொத்துக்கள் தியாகேந்திரனிடம் உள்ளதா தெரியவில்லை. ஆனால் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கட்சிக்கும் தியாகேந்திரன் பல வேலைத்திட்டங்களைச் செய்துள்ளார். தியாகேந்திரன் இராணுவத்துடன் இணைந்து வேலைத்திட்டங்களை முன்னெடுத்ததால் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தியாகேந்திரனிடமிருந்து சற்றுத் தள்ளியே நிற்கின்றது. ஆனால் மணிவண்ணன் கோஸ்டி இன்னமும் ஒட்டுறவாகவே உள்ளது. ஆரிய குளத்தை ஒரு சுற்றுலாப் புள்ளியாக்கியது தியாகேந்தரனின் உதவித்திட்டம் தான். மணிவண்ணன் மேயராக இருந்தும் அப்பதவியைப் பயன்படுத்தி எதையும் சாதித்ததாகத் தெரியவில்லை.
தியாகேந்திரன் சமூக அக்கறையுடைய ஒரு மனிதராகத் தெரியவில்லை. தன்னுடைய அடையாளத்தை நிலைநிறுத்தவும் ஒரு பிரபலமாக ஆவதையும் விரும்புகின்றார். அதில் எந்தத் தவறும் கிடையாது. அதற்காக சட்டபூர்வமான பணமோ சட்டத்துக்கு புறம்பான பணமோ அதனை மக்களுக்கு வழங்கி இருக்கின்றார். ஆனால் எம்மத்தியில் ஒரு பழமொழி உண்டு. வலது கை செய்வது இடது கைக்கு தெரியக்கூடாது என்று. இன்றைய சூழலில் சந்தைப்பொருளாதாரச் சூழலில் எல்லாமே சந்தைக்கு வந்துவிட்டது. அறக்கட்டளைகளும் அப்படித்தான். ஆனால் தியாகேந்திரன் உதவி கேட்பவர்களை தனக்குக் கீழானவர்களாக ஆட்டுவிப்பது, நலிந்தவர்களை, நடக்க முடியாத வயதானவர்களை, நோய்வாய்ப்பட்டவர்களை, உடல் ஊனமுற்றவர்களை அவர்களது தனித்துவத்தை ஏறி மிதிக்கும் வகையில் எவ்வித முன்னேற்பாடுகளும் இன்றி தனதிடத்திற்கு வரவழைத்து, நெரிசல்படவிட்டு, காத்திருக்க வைத்து இவ்வாறு நடந்துகொள்வது ஒரு சமூக அக்கறையுடையவர் செய்யும் சேவை கிடையாது. தியாகேந்திரன் காசை நிலத்தில் போட்டு மிதித்தது ஒன்றும் பெரிய குற்றமாக எனக்குத் தெரியவில்லை. ஆனால் அந்தக் காசை மிதித்தன் மூலம் அதனை வேண்ட வந்த சமூகத்தின் நலிந்த மக்களைப் போட்டு மித்திதுள்ளார். அந்த மக்களைக் கேவலப்படுத்தியுள்ளார்.
யாழ் மேட்டுக்குடியிலிருந்து புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வாழும் தம்பதிகளுக்குப் பிறந்து கல்வியிலும் முன்னேற்றம் கண்டு வாழுகின்ற இவருடைய பிள்ளைகள் பொருளாதார ரீதியில் மேன்நிலையிலிருப்பது ஆச்சரியமல்ல. இவர்களைக் காட்டிலும் கல்வியிலும் பொருளாதாரத்திலும் மேல்நிலையில் உள்ள பலரைத் தமிழ்ச் சமூகம் கண்டுள்ளது. இலங்கையிலேயே இந்நிலையில் இருப்பவர்கள் இன்னமும் இலைமறைகாயாக வாழ்கின்றனர். சிறந்த பெறுபேறு பெற்றவர்களையும் பல்கலைக்கழகப் பட்டதாரியானவர்களையும் அவர்களுடைய சுயமரியாதையை மிதிக்கும் வகையில் கேவலப்படுத்துவது அழகல்ல. வடக்கு கிழக்கில் பல கொடையாளிகள், தொண்டு நிறுவனங்கள் கோடிக்கணக்கான உதவிகளை நாளாந்தம் எங்கோ ஒரு மூலையில் மேற்கொண்டு வருகின்றன. அவற்றை இன்னமும் வினைத்திறனோடும் சீரான முறையிலும் மேற்கொள்ள வேண்டும் என்ற விமர்சனங்கள் வருகின்ற போது, தியாகேந்திரனின் ரிசிரி நடவடிக்கைகள் காலனித்துவ கால பிரபுக்கள் அடிமைகளுக்கு உதவி வழங்குவது போன்ற தோற்றப்பாட்டையே கொடுக்கின்றது. மேற்குலக நாகரீகத்தில் வளர்ந்த தியாகேந்திரனின் பிள்ளைகள் அவருக்கு இவற்றைச் சுட்டிக்காட்டவில்லையா என்பது ஆச்சரியமானது.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக தியாகேந்திரன் நடத்திய சிறுவர் இல்லம் 2016இல் விசாரணைகளின் பின் மூடப்பட்டதும் இந்த விடயம் மூடி மறைக்கப்பட்டதும் பலருக்குத் தெரியாது. தெரிந்த பலரும் அரசியல் வாதிகளும் அதனைக் கண்டுகொள்வதில்லை. கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தமிழ் தேசிய முன்னணி, தமிழரசுக் கட்சியின் தலைவர் பா உ எஸ் சிறிதரன் போன்றவர்கள் ‘நக்கினார் நாவிழந்தார்’ என அந்தச் சிறுமிகள் இல்லம் மூடப்பட்ட விடயத்தில் மௌனமாகவே உள்ளனர். இலங்கை விமானப்படை விமானத்தை பார்வையிடச் சென்ற மாணவிகளை பெற்றார் ‘கூட்டிக்கொடுப்பதாகக் கூக்குரலிட்ட செல்வராஜா கஜேந்திரன் இலங்கை இராணுவத்தோடு இணைந்து கொடை செய்யும் தியாகேந்திரனின் திருவிளையாடல் பற்றி மௌனமாகவே உள்ளார். யூரியூபேர்ஸ்ம் தியாகேந்திரன் வானத்திலிருந்து குதித்த வள்ளல் என்ற போர்வையில் கதை அளக்கின்றனர். இது பற்றி பயிற்சிபெற்ற மனித உரிமைக் காப்பாளர் செயற்பாட்டாளர் த கிருஷ்ணன் தேசம்நெற்க்கு வழங்கிய பேட்டி:
இச்சிறுவர் இல்லத்திலிருந்த பதின்ம வயதுச் சிறுமிகளை தியாகேந்திரன் ‘நான் அப்பா ஸ்தானத்தில் உள்ளவர்’, ‘அப்பா மாதிரி’ என்ற தோரணையில் அணைப்பது, மடியில் இருத்துவது, முத்தமிடுவது போன்ற சிலுமிசங்களை மேற்கொண்டதால் சிறுமிகள் மன உளைச்சலுக்கு உள்ளாகி தற்கொலைக்கும் முயற்சித்துள்ளனர். இக்குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னரேயே தியாகி அறக்கட்டளையால் நடாத்தி வரப்பட்ட இல்லம் மூடப்பட்டுள்ளது.
வாமதேவன் தியாகேந்தரனுக்கு ஒன்றுவிட்ட ஒரு சகோதரர் உள்ளார். தியாகேந்தரனின் தாய் சொர்ணாம்பிகை யின் சகோதரி யோகசோதியின் மகன் குடுமி ஜெயா என்ற வெ ஜெயந்திரன். இவரும் இளம்பெண்களை வளைத்துப் போட்டு திருமணம் செய்தும் செய்யாமலும் கைகழுவிவிடுபவர். இவர் இதற்கு முன் திருமணம் செய்த – கூடி வாழ்ந்த பெண்களும் இவரைக்காட்டிலும் முப்பது வயதுவரை குறைந்தவவர்கள். அப்படி வாழும் போதே இவர் வீட்டுக்கு வேலைக்கு வந்த சிறுமிகளை அணைப்பது, முத்தமிடுவது, மடியிலிருத்துவது என்று போய் கட்டிலுக்கும் கொண்டு சென்றதாக குற்றச்சாட்டுகள் உள்ளது. ஒன்றுவிட்ட சகோதரர்களாக இருந்தாலும் இரு சகோதரர்களுக்கும் இடையே மிக நெருங்கிய ஒற்றுமைகள் உண்டு. பிரபல்யம் தேடுவது, சுயபுலம்பல், இளம்பெண்கள் மீதான பரிவு கனிவு, அரசியல் நாட்டம் என்று பல ஒற்றுமைகள். இருவரது முகநூல்பக்கதிலுமே தங்களை நியாயப்படுத்துகின்ற வாசகங்களை குறிப்புகளைப் பதிவிட்டிருப்பார்கள்.
குடுமி ஜெயா என்ற ஜெயந்திரன் தற்போது சஜித் பிரேமதாசாவின் ஐக்கிய மக்கள் சக்திக் கட்சியின் மாவட்ட அமைப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். ‘காமவிடுதி என அறியப்பட்ட ஜெயந்திரனின் லக்ஸ் ஹொட்டல் ஐக்கிய மக்கள் கட்சியின் அலுவலகமாக திறந்துவைக்கப்பட்ட போது அதில் வாமதேவன் தியாகேந்திரனையும் காணலாம்.
ஒரு காலத்தில் தமிழர்களின் காலாச்சாரத் தலைநகரம் என்று அறியப்பட்ட கல்வியின் மகுடம் என்று அறியப்பட்;ட யாழ்ப்பாணத்தில் தற்போது ஹொட்டலியர்கள் புகுந்து அதனை அந்தப்புரமாகவும், மது, மாது, போதை களியாட்ட கொட்டகையாகவும் மாற்றி வருகின்றனர். இவற்றை முன்னெடுப்பவர்கள் தான் கட்சிகளின் அமைப்பாளராக உள்ளனர். அல்லது முதலமைச்சர்களாக வரத் துடிக்கின்றனர். இன்னுமொருவர் யாழ்பாணத்தை தாருங்கோ என்கிறார். யாழ் பல்கலையின் கலைப்பீடத்திற்குள் ஆரம்பித்து இப்போது இந்த சுகர் டாடி கலாச்சாரம் எங்கும் பரவிக் கிடக்கின்றது. இளம்பெண்கள் இந்த சுகர் டாடிகள் விடயத்தில் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.
உலகம் முழுவதும் இன்று (ஜூன் 17) திங்கட்கிழமை ஹஜ் பண்டிகை கொண்டாட்டங்கள் கோலாகலமாக தொடங்கியுள்ளது. உலகெங்கிலும் பரந்து விரிந்த அதிக மக்களைக் கொண்ட இரண்டாவது பெரிய மதம் இஸ்லாம் (முதலாவது கிறிஸ்துவம்) ஆகும் . இந்நிலையில் இன்று ஹஜ் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி தேசியத் தலைவர்களும் உலகத் தலைவர்களும் தங்களது வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
தற்போது உள்ள உலக நடப்பின்படி இஸ்லாமிய மக்களைக்கொண்ட பாலஸ்தீன நாட்டின்மீது இஸ்ரேல் தொடுத்துள்ள போரில் இதுவரை சுமார் 37,000 மக்கள் பலியாகியுள்ளனர். வெடிகுண்டுகளால் தகர்க்கப்பட்ட மசூதிகளே காஸாவில் மிஞ்சுகின்றன. முகாம்களில் தங்களின் துயர நிலையிலும் இறுக்கமான மனதுடன் பாலஸ்தீன மக்கள் கொண்டாடும் பண்டிகையாக இது அமைகிறது . தற்காலிகமாக தாக்குதலை இஸ்ரேல் நிறுத்திவைத்துள்ளதால் சற்று ஆசுவாசப்பட அவர்களுக்கு கிடைத்துள்ள நேரம் இது.
அமெரிக்காவில் விரைவில் ஜனாதிபதி தேர்தல் வர உள்ள நிலையில் காஸா போர் நிறுத்தத்துக்கு ஜனாதிபதி ஜோ பைடன் அழுத்தம் கொடுக்கத் தொடங்கியுள்ளார். இன்று ஹஜ் பண்டிகையை முன்னிட்டு முக்கியத்துவம் வாய்ந்த வாழ்த்துச் செய்தி ஒன்றை ஜோ பைடன் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது,
ஹமாஸுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான இந்த போரின் கொடூரங்களை நிறுத்துவதற்கான சரியான மற்றும் சிறந்த வழி இதுதான். ஆயிரக்கணக்கான குழந்தைகளும் அப்பாவி மக்களும் இந்த போரில் கொல்லப்பட்டுள்ளனர். தங்களின் வீடுகளையும் சொந்தங்களையும் இழந்து நிற்கும் அம்மக்களின் வலி மிகவும் ஆழமானது.
3 கட்ட பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தத்தை எட்ட முடியும் என்பதை நான் தீவிரமாக நம்புகிறேன். இதற்கு ஹமாஸும், இஸ்ரேல் அரசும் உடன்பட்டு இந்த வன்முறை வெறியாட்டங்களை நிறுத்த வழிவகை செய்ய வேண்டும். இறைத்தூதர் இப்ராஹிம் கடவுளுக்காக தனது மகனையே தியாகம் செய்ய முன்வந்த இந்த ஹஜ் திருநாளில் காஸாவில் தற்காலிகமாக நிலவி வரும் அமைதி நிரந்தரமானதாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் ஆறு பேர் கொண்ட போருக்கான அமைச்சரவையைக் கலைக்கப் போவதாக அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார்.
நேற்று மாலை இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சரவைக் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜெனரல் பென்னி கான்ட்ஸ் (Benny Gantz) வெளியேறிய நிலையில் நெதன்யாகு இந்த முடிவை எடுத்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் தேசிய பாதுகாப்புதுறை அமைச்சர் இடாமர் பென்-கிர், (Itamar Ben-Gvir) நிதிஅமைச்சர் பெசாலால் ஸ்மொட்ரிச் (Bezalel Smotrich) ஆகியோரை போருக்கான அமைச்சரவையில் சேர்க்க வேண்டும் என தேசியவாத மற்றும் மதம் சார்ந்த கூட்டணி கட்சிகள், வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை வம்சாவளியும் அமெரிக்க எழுத்தாளருமான வாசுகி கணேசநாதன் இந்த ஆண்டுக்கான புனைக்கதை நாவலுக்கான Women’s Prize விருதை வெற்றி கொண்டுள்ளார்.
29ஆவது Women’s Prize வெற்றியாளர்களை அறிவிக்கும் நிகழ்வு கடந்த 13ஆம் திகதி மத்திய லண்டனின் Bedford Square Gardens -இல் நடைபெற்றது.
Women’s Prize ஸ்தாபகரும் எழுத்தாளருமான Kate Mosse தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வின்போது புனைக்கதை பிரிவு மற்றும் புனைக்கதை அல்லாத பிரிவு ஆகியவற்றுக்கான வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தை அடிப்படையாகக் கொண்டு சுகி கணேசநாதன் எழுதிய Brotherless Night’ நாவல் சிறந்த புனைக்கதைக்கான Women’s Prize விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வெற்றிக்காக சுகி கணேசநாதனுக்கு 30,000 யூரோக்கள் வழங்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
யேமன் கடற்பரப்பில் படகு ஒன்று கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 38 பேர் உயிரிழந்தனர்.
சுமார் 250 பேருடன் பயணித்த இப்படகு, சீரற்ற காலநிலை காரணமாக கவிழ்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
படகில் இருந்தவர்கள் எத்தியோப்பிய ஏதிலிகள் என தெரியவந்துள்ளது. விபத்தில் காணாமல் போன நூற்றிற்கும் மேற்பட்டவர்களைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதுவரையில் 78 பேர் வரை பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.