May

May

பாலஸ்தீன தேசத்திற்கு தற்போதைக்கு ஆதரவளிக்கும் நோக்கம் எதுவுமில்லை – அவுஸ்திரேலிய அரசாங்கம்

பாலஸ்தீன தேசத்திற்கு தற்போதைக்கு ஆதரவளிக்கும் நோக்கம் எதுவுமில்லை என அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது

 

பாலஸ்தீன அதிகாரசபையை சீர்திருத்தவேண்டும் பணயக்கைதிகள் விடுதலை ஆகியவற்றை வலியுறுத்துவதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

 

நோர்வே அயர்லாந்து ஸ்பெயின் போன்ற நாடுகளை பின்பற்றிஅவுஸ்திரேலியா பாலஸ்தீன தேசத்தைஅங்கீகரிக்கவேண்டும் என கிறீன்ஸ் கட்சியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

அவுஸ்திரேலிய இரண்டு தேசகொள்கைக்கு நீண்டகாலமாக ஆதரவுஅளித்து வந்துள்ளது என தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் பெனிவொங் இந்த செயற்பாடு முன்னர் எப்போதையும் விட அவசியமாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

 

பாலஸ்தீனியர்களிற்கு மேலதிக உரிமைகளை வழங்கும் இரண்டு தேசக்கொள்கைகயை அங்கீகரிக்கும் ஐக்கியநாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக அவுஸ்திரேலியா இந்த மாதம் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் வாக்களித்திருந்தது என தெரிவித்துள்ள பெனிவொங் எனினும் இதன் அர்த்தம் அவுஸ்திரேலியா ஓருதலைப்பட்சமாக பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிக்கின்றது என்பதல்ல எனவும் தெரிவித்துள்ளார்.

காணாமல்போனவர்களின் எண்ணிக்கை மதிப்பிடப்பட்டதை விடவும் அதிகமாக இருக்கக்கூடும் – சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகர்

இறுதிக்கட்டப்போர் இடம்பெற்ற காலப்பகுதியில் வட்டுவாகல் பாலத்தின் நீர் உயிரற்ற சடலங்களாலும், குருதியினாலும் நிரம்பியிருந்ததாக நேரில் பார்த்தவர்கள் கூறியதாகவும், இதன்போது காணாமல்போனவர்களின் எண்ணிக்கை மதிப்பிடப்பட்டதை விடவும் அதிகமாக இருக்கக்கூடும் எனவும் சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகர் அக்னெஸ் கலமார்ட் தெரிவித்துள்ளார்.

மூன்று தசாப்தகால யுத்தம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டு கடந்த சனிக்கிழமையுடன் 15 வருடங்கள் பூர்த்தியடைந்த நிலையில், முதன்முறையாக தெற்காசியப்பிராந்தியத்துக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்ட சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட், கடந்த வெள்ளிக்கிழமை நாட்டை வந்தடைந்தார். இவ்விஜயத்தின்போது முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் கலந்துகொண்ட அவர், பல்வேறு முக்கிய தரப்பினருடன் விரிவான சந்திப்புக்களையும் நடத்தியிருந்தார்.

அதன்படி முள்ளிவாய்க்கால் விஜயத்தின்போது வட்டுவாகல் பாலத்துக்கு அண்மையில் எடுத்துக்கொண்ட புகைப்படமொன்றை ‘வட்டுவாகல் பாலம்’ எனும் மேற்கோளுடன் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருக்கும் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட், ’15 வருடங்களுக்கு முன்னர் வட, கிழக்கில் விடுதலைப்புலிகளால் கையகப்படுத்தப்பட்டிருந்த பகுதியிலிருந்து  ஆயிரக்கணக்கான தமிழ் ஆண்களும், பெண்களும், சிறுவர்களும் இப்பாலத்தைக் கடந்து அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிக்குச் சென்றனர். அப்போது இந்த நீர் உயிரற்ற சடலங்களாலும், குருதியினாலும் நிரம்பியிருந்ததாக நேரில் பார்த்தவர்கள் கூறினர்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

‘இறுதிக்கட்ட யுத்தத்தின்போது மிகக்குறுகியதொரு பகுதிக்குள் சுமார் 300,000 தமிழர்கள் அடைபட்டிருந்ததாக மதிப்பிடப்பட்டிருப்பதுடன், போர் முடிவுக்குக்கொண்டுவரப்படுவதற்கு முன்னைய சில மாதங்களில் சுமார் 40,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை கண்டறிந்துள்ளது’ எனவும் அக்னெஸ் கலமார்ட் தெரிவித்துள்ளார்.

அதுமாத்திரமன்றி இலங்கை இராணுவத்திடம் சரணடைந்த மேலும் ஆயிரக்கணக்கானோருக்கு என்ன நேர்ந்தது எனத் தெரியவில்லை எனவும், அவர்களே வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோர் எனவும் சுட்டிக்காட்டியுள்ள அவர், இவ்வாறு காணாமலாக்கப்பட்டவர்களில் 6 மாதமேயான குழந்தை உட்பட பல குழந்தைகளும், சிறுவர்களும் உள்ளடங்குவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

‘இந்த 30 வருடகால யுத்தத்தில் இருதரப்பினரும் பொதுமக்கள் மீதான தாக்குதல்கள், சட்டவிரோத , வலிந்து காணாமலாக்குதல்கள், சித்திரவதைகளுக்கு உட்படுத்தல் உள்ளிட்ட மிகமோசமான குற்றங்களைப் புரிந்துள்ளனர். இவற்றால் சுமார் 100,000 பேர் உயிரிழந்துள்ளனர். ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், குழந்தைகள் என குறைந்தபட்சம் 60,000 பேர் காணாமல்போயுள்ளனர். இந்த எண்ணிக்கை அதிகமாகவும் இருக்கலாம்’ எனவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின்போது தங்கள் படையினர் இழைத்த அநீதிகளை இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் மறுத்துவருகின்றது – சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம்

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின்போது கொல்லப்பட்டவர்கள் காணாமல்போனவர்களை நினைவுகூர்ந்தவர்களை இலங்கை அதிகாரிகள் அச்சுறுத்தினர் தடுத்துவைத்தனர் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

மே 18ம் திகதி 2009இல் முடிவடைந்த இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின்போது பலவந்தமாக காணாமல்போகச்செய்யப்பட்டோர் குறித்த விவகாரத்திற்கு தீர்வை காண்பதற்காக சர்வதேச விசாரணைகள் மற்றும் ஏனைய பொறுப்புக்கூறல் நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும் என மே 17ம் திகதி ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின்போது தங்கள் படையினர் இழைத்த அநீதிகளை இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் மறுத்துவருகின்றது என தெரிவித்துள்ள சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய பசுபிக் இயக்குநர் எலைன்பியர்சன் இதன் காரணமாக உண்மை நீதி இழப்பீடு போன்றவற்றை வழங்குவதற்கு பதில் இலங்கை அரசாங்கம் பாதிக்கப்பட்டவர்களையும் அவர்களின் சமூகத்தினரையும் மௌனமாக்க முயல்கின்றது என தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்ட்ட மக்களிற்கு நிவாரணம் வழங்குவதற்கும் துஸ்பிரயோகங்கள் நிகழாமல் தடுப்பதற்கும் மேலும் சர்வதேச நடவடிக்கைகள் அவசியம் என்பது புலனாகின்றதுஎனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மே 18ம் திகதி நினைவேந்தல் தினத்திற்கு முன்னர் வடக்குகிழக்கில்நினைவேந்தல் நிகழ்வுகளை இலங்கை பொலிஸார் குழப்ப முயன்றனர் யுத்தத்தின்போது நிலவிய பட்டினி நிலையை குறிக்கும் விதத்தில் வழங்கப்படும் கஞ்சியை தயாரித்து வழங்கியமைக்காக நால்வரை கைதுசெய்து ஒருவாரம் தடுத்துவைத்திருந்தனர் என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

காணாமல்போனவர்களின் உறவினர்கள் சிலரும் ஏனையவர்களும் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொள்வதை தடை செய்யும் விதத்தில் அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவுகளை பெற்றிருந்தனர் என சர்வதேச மனித உரிமைகள்கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

சில இடங்களில் பொலிஸார் தலையிட்டு நிகழ்வுகளை தடுத்தனர் அல்லது மக்கள் அங்கு செல்வதை தடுத்தனர் எனவும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் புதிய அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் உடனடியாக நடைமுறைப்படுத்தவேண்டும் என தெரிவித்துள்ள சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள படி வலிந்து காணாமலாக்கப்பட்டமை இலங்கையில் இடம்பெற்றது என்பதையும் அதன் அளவையும் ஏற்றுக்கொள்ளவேண்டும் உடனடி நம்பகதன்மைமிக்க விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும்,பாரியமனித புதைகுழிகளை தோண்டுவதற்கு சர்வதேச தொழில்நுட்ப உதவியை பெற்றுக்கொள்ளவேண்டும்,எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கை அரசாங்கம் ஒரு சுதந்திரமான வழக்குரைஞர் அதிகாரத்தை ஏற்படுத்த வேண்டும் பயங்கரவாததடைச்சட்டம் உட்பட துஸ்பிரயோகங்களிற்கு வழிவகுக்கும் அனைத்து சட்டங்களையும் நீக்கவேண்டும் எனவும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் முன்வைத்துள்ள பரிந்துரைகளை வெளிநாட்டு அரசாங்கங்கள் ஐக்கியநாடுகள் அமைப்புகள் நடைமுறைப்படுத்தவேண்டும் எனவும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களிற்கு கடும் வேதனையைதுன்பத்தை ஏற்படுத்தும் வலிந்து காணாமலாக்கப்பட்ட வரலாற்றை இலங்கை கொண்டுள்ளது என தெரிவித்துள்ள சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய பசுபிக் இயக்குநர் எலைன்பியர்சன் மேலும் இது நாட்டில் மேலும் துஸ்பிரயோகங்கள் நிகழும் ஆபத்தை ஏற்படுத்துகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் பொறுப்புக்கூறல் செயற்திட்டத்திற்கான ஆணையை செப்டம்பர் அமர்வில் ஐக்கிய நாடுகள் மனிதஉரிமை பேரவை புதுப்பிப்பது மிகவும் அவசியம் என தெரிவித்துள்ள அவர் அந்த குற்றங்களிற்கு காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்கு உலகெங்கிலும் உள்ள வழக்குரைஞர்கள் இந்த ஆதாரங்களை பயன்படுத்துவது அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலிய படைகள் இனப்படுகொலை செய்யவில்லை – அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்

காசாவில் ஹமாஸ் போராளிகளுக்கு எதிரான நடவடிக்கையில் இஸ்ரேலிய படைகள் இனப்படுகொலை செய்யவில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் நடைபெற்ற யூத – அமெரிக்க பாரம்பரிய மாத நிகழ்வில் பேசிய ஜோ பைடன்,

“காசாவில் ஹமாஸ் போராளிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையில், இஸ்ரேலியப் படைகள் இனப்படுகொலை செய்யவில்லை. காசாவில் நடப்பது இனப்படுகொலை அல்ல. இனப்படுகொலை நடப்பதாக மேற்கொள்ளப்படும் பிரச்சாரத்தை நாங்கள் நிராகரிக்கிறோம் என்றார்.

ஹமாஸ் அமைப்பால் பாதிக்கப்பட்ட நாடு இஸ்ரேல் ஒக்டோபர் 7ம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலில் 1,200 பேரைக் கொன்று நூற்றுக்கணக்கான பிணைக் கைதிகளைப் பிடித்துச் சென்றவர்கள் ஹமாஸ் போராளிகள்.

இஸ்ரேலியர்களின் பாதுகாப்புக்கான அமெரிக்காவின் ஆதரவு என்பது இரும்புக் கவசத்தைப் போன்றது. “ஹமாஸ் தலைவர் சின்வார் மற்றும் ஹமாஸின் மற்ற கசாப்புக் கடைக்காரர்களை வெளியேற்ற நாங்கள் இஸ்ரேலுடன் நிற்கிறோம். ஹமாஸ் தோற்கடிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அதைச் செய்ய நாங்கள் இஸ்ரேலுடன் இணைந்து செயல்படுகிறோம்.

ஹமாஸ் போராளிகளால் பிடிக்கப்பட்டுள்ள நோயுற்ற, வயதான மற்றும் காயமடைந்த இஸ்ரேலிய பிணைக்கைதிகளை விடுவிப்பது தொடர்பாக இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் நின்றுபோயுள்ளன.

எனினும், அவர்களை விடுவிப்பதற்கான முயற்சியை நான் கைவிடமாட்டேன். அவர்கள் தங்கள் வீடுகளுக்குச் செல்வதை நாங்கள் உறுதிப்படுத்துவோம்” எனத் தெரிவித்தார்.

தயவுசெய்து போரை நிறுத்துங்கள், இங்கு மனிதர்களை பார்க்க முடிவதில்லை.“ – கண்ணீர் விட்டு கதறி அழும் பாலஸ்தீன் சிறுவன் !

இஸ்ரேல் – ஹமாஸ் போர் தொடங்கி 7 மாதங்கள் கடந்துள்ள நிலையில் பலஸ்தீன் சிறுவன் வெளியிட்டுள்ள காணொளி ஒன்று வைரலாகி வருகின்றது.

கடந்த ஆண்டு ஒக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு தாக்குதலை மேற்கொண்டது.

இந்த தாக்குதலில் இஸ்ரேலைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பலியானதோடு நூற்றுக்கணக்கானோர் பிணைக் கைதிகளாக சிறை பிடிக்கப்பட்டனர்.

போர்நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் அவர்களில் சிலரை இஸ்ரேல் மீட்டது. மீதமுள்ளவர்களையும் மீட்போம் என சூளுரைத்து காசா (Gaza) மீது இஸ்ரேல் போர் தொடுத்து வருகின்றது.

இதேவேளை ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும்வரை ஓயமாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், போரை நிறுத்துங்கள் என பலஸ்தீன சிறுவனின் காணொளி ஒன்று வைரலாகி வருகிறது.

இது குறித்து அந்த காணொளியில் சிறுவன் கூறியதாவது “தயவுசெய்து போரை நிறுத்துங்கள், இங்கு மனிதர்களை பார்க்க முடிவதில்லை. எங்களுக்கென எதுவும் இல்லை. நாங்கள் இடம்பெயர்வு செய்யப்பட்டு வருகிறோம்.

காசாவில் மக்கள் செத்து மடிந்து வருகின்றனர். ஆனால் உலகம் எங்களிடம் பொய் சொல்லி வருகிறது. அவர்கள் இது ஆக்கிரமிப்பு எனக்கூறி வருகின்றனர். ஆனால் அவர்கள் உண்மையை சொல்வதில்லை..” என அழுதபடியே கூறுகிறார்.

போரை நிறுத்துங்கள் என கூறும் காசா சிறுவனின் வீடியோ தற்போது வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://www.instagram.com/reel/C7KJI4wqbS5/?utm_source=ig_embed

பாலஸ்தீன தேசத்தை  அடுத்தவாரம் அங்கீகரிக்கவுள்ள ஐரோப்பிய நாடுகள் !

நோர்வே அயர்லாந்து ஸ்பெயின் ஆகிய நாடுகள் பாலஸ்தீன தேசத்தை  அடுத்தவாரம் அங்கீகரிக்கவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில் இந்த நாடுகளிற்கான தங்கள் தூதுவர்களை இஸ்ரேல் உடனடியாக மீள அழைத்துள்ளது.

பாலஸ்தீன தேசம் என்ற ஒன்று இல்லாமல் மத்தியகிழக்கில் அமைதிநிலவாது  என நோர்வேயின் பிரதமர் ஜொனஸ் கர் ஸ்டோர் தெரிவித்துள்ளார்.

மே 28ம் திகதி நோர்வே பாலஸ்தீன தேசத்தை உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கும் எனஅவர் தெரிவித்துள்ளார்.

இரண்டுதேசம் தீர்வே மத்தியகிழக்கில்  அமைதிக்கு அவசியமான விடயம் என தெரிவித்துள்ள பல ஐரோப்பிய நாடுகள் பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளன.

ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினரால்லாத நோர்வே இரண்டு தேசம் தீர்விற்கு உறுதியான ஆதரவை வெளியிட்டு வந்துள்ளது.

இரண்டு தேசம் கொள்கையை ஆதரிக்காத ஹமாஸ் அமைப்பும் ஏனைய பயங்கரவாத குழுக்களும் இஸ்ரேலுமே பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன என நோர்வே பிரதமர் தெரிவித்துள்ளார்.

‘றோ இன்றி ஒரு புலியும் அசையாது’ பாவம் தலைவர்: அழித்தவர்களின் முகவர்களே டென்மார்க்கில் அஞ்சலியும் செய்தனர்!

கார்திக் மனோகரன் தன்னுடைய சித்தப்பாவான தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் அவரது குடும்பத்திற்கும் அஞ்சலி செய்ய முற்பட்ட நிகழ்வு, தலைவரை அவமானப்படுத்துவதாகவும் அவர் உயிரோடு இருக்கும் வரை வாழ்ந்த லட்சியக் கனவை வன்புணர்வு செய்ததாகவும் அமைந்தது எனத் தெரிவிக்கின்றார் முன்னாள் பெண் போராளியான விமிலினி சிவநேசன். இறுதி யுத்தத்திற்கு முன்னரே போராட்டத்தில் தனது காலை இழந்த அவர் தம்பி கார்த்திக் மனோகரன் சித்தப்பாவிற்கும் அவர் குடும்பத்திற்கும் அஞ்சலி வைக்க வேண்டும் என்று எடுத்த முடிவை தான் வரவேற்றதாகத் தெரிவித்த விமிலினி, அதனை அவர் தங்கள் குடும்ப நிகழ்வாக எல்லோரையும் அழைத்து செய்திருக்க வேண்டும். அதனை விடுத்து தலைவரின் இலட்சியங்களுக்கு விரோதமான புல்லுருவிகளை அழைத்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தது, தலைவரின் இலட்சியங்களை வன்புணர்வு செய்ததற்குச் சமன் என்று ஆவேசத்துடன் தெரிவித்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் அவரது குடும்பத்திற்கும் 2009 இலேயே வீர வணக்க அஞ்சலியைச் செய்திருக்க வேண்டும். அது 15 ஆண்டுகள் கடந்து தற்போதாவது நிகழ்கின்றதே என்ற எண்ணம் வே பிரபாகரனின் இலட்சியக் கனவில் பயணித்த பலருக்கும் இருந்தது. அவர்களும் வெளியே இருந்து நிகழ்வின் உண்மைத் தன்மை தெரியும் வரை வரவேற்றனர். ஆனால் நிகழ்வில் இந்திய உளவுத்துறையான றோ தமிழீழம் வாங்கித் தரும் என்று சன்னதமாடும் பாரதிய ஜனதா கட்சி சங்கிகள் நிகழ்வை நடத்தினார்கள் என்ற பின்னணி வெளியே வந்ததும் இந்நிகழ்வு பிரபாகரனின் இலட்சியக் கனவை வன்புணர்வு செய்ததாகவே அமைந்தது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனது அரசியலற்ற பார்வை தொடர்பிலும் அதீத இராணுவ பிரம்மை தொடர்பிலும் கடும் விமர்சனங்கள் இருந்த போதும் தன்னையும் தனது குடும்பத்தையும் தமிழ் மக்களின் விடுதலைக்காக அர்ப்பணித்த அந்த இலட்சியம் தொடர்பில் அவரது எதிரிகளும் கூட முரண்படவில்லை. பிரபாகரனுக்கு ஒரு விடுதலைப் போராளியான கௌரவத்துடனும் மரியாதையுடனும் வீரவணக்க அஞ்சலி செலுத்தப்பட்டிருக்க வேண்டும். தன்னிடம் தோற்றுப்போன எல்லாளனைக் கௌரவித்தவன் துட்டகைமுனு. இன்றும் அந்த கௌரவம் வழங்கப்படுகிறது. ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு அவரின் பாசறையில் வளர்ந்ததாகக் கூறிக்கொள்பவர்கள் தற்போது இந்திய உளவுப்பிரிவான றோ வுக்கும் மோடிக்கும் சங்கூதிக்கொண்டு பிரபாகரனனுக்கு அஞ்சலி செய்வது மிக வேடிக்கையானது.

இந்திய அமைதிப்படை காலத்தில் பதுக்கி வைக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்களைக் காட்டிக்கொடுத்து, பல புலி உறுப்பினர்களையும் இந்திய அமைதிப்படை என்ற பெயரில் வந்த ஆக்கிரமிப்பு இராணுவத்திற்குக் தலையாட்டிக் காட்டிக்கொடுத்தவர் ‘சுக்லா’ என்றழைக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர். இவருக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் அங்கு மரண தண்டனை விதித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து அன்று யாழ்ப்பாணத்திலிருந்து சுக்லா வை இந்திய இராணுவம் தனது ஹெலிகொப்டரில் கொண்டு வந்து கட்டுநாயக்காவில் தரையிறக்கியது. 90களில் சுக்லா புலம்பெயர்ந்து பாரிஸில் தரையிறங்கினார். அன்று புலம்பெயர் நாடுகளில் புலிகளுக்கு ஆட்பற்றாக்குறை இருந்ததால் புலிகளைக் காட்டிக்கொடுத்தவர்களும் புலிகளால் இயக்கத்திலிருந்து நீக்கப்பட்டவர்களும் புலிகளால் மரண தண்டணை விதிக்கப்பட்டவர்களும் புலம்பெயர் தேசங்களில் தீவிர புலிகளாக இயங்க ஆரம்பித்தனர். அவ்வாறு மாறியவர்களுள் சுக்லாவும் குறிப்பிடத்தக்கவர். தற்போதும் பிரான்ஸில் தான் இவர் வாழ்கின்றார். பாம்பு கூரூப் என்ற வன்முறைக் குழுவின் பின்னணியிலும் இவர் இருந்தவர். பாரிஸில் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளின் பின்னணியிலும் இவர் இருந்துள்ளார். குறிப்பாக பாரிஸ் சபாலிங்கத்தின் படுகொலையை இவரது குழுவே மேற்கொண்டதாக நம்பப்படுகின்றது. தற்போது கனடாவில் வாழும் முன்னாள் சுவிஸ் பொறுப்பாளர் முரளியின் நெருங்கிய நண்பர் சுக்லா. சுவிஸில் பாம்பு கூரூப் உருவாக்கப்பட்டதே முரளிக்கு சில பல காரியங்களைச் செய்வதற்காகவே. சபாலிங்கத்தின் படுகொலையில் முரளியினதும், சுக்லாவினதும் கரங்கள் இருப்பதாகவே தற்போதும் நம்பப்படுகின்றது.

இவ்வாறானவர்கள் பிரபாகரனுக்கு இறுதி அஞ்சலி கொண்டாடும் அவல நிலை ஏனைய அமைப்புகளின் தலைவர்களுக்கு ஏற்படவில்லை. பிரபாகரனால் படுகொலை செய்யப்பட்ட சிறிசபாரத்தினம், பத்மநாபா, அ அமிர்தலிங்கம் போன்றவர்களும் சரி பிரபாகரனால் படுகொலை செய்யப்படாத உமா மகேஸ்வரனானாலும் சரி அவர்களுக்கான நினைவு நிகழ்வுகள் அவர்கள் இறந்த நாள் தொடக்கம் அவர்களது அமைப்பினால் ஒரு அரசியல் உரையாடல் நிகழ்வாக முன்னணி அரசியல் செயற்பாட்டாளர்களின் அரசியல் உரைகளோடு அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.

முப்பது வருடங்கள் ஒரு விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த ஒரு தலைவனுக்கு றோ தமிழீழம் பெற்றுத் தரும் இந்தியாவை எதிர்க்காமல் அணி திரண்டு வாருங்கள் என்று போராட அழைக்கின்றது இந்த றோ கும்பல். இவர்கள் 2009 மேல் ஒரு தடவை மரணித்த வே பிரபாகரனதும் அவரது குடும்பத்தின் மீதும் கோசலம் அடித்து அவமானப்படுத்துகின்றனர்.

இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நேசக்கரம் அமைப்பின் சாந்தி வவுனியன் அரசியல் ஒழுக்கமற்ற ஒருவர். இவர் 2009இற்கு பின் தமிழகத்திற்கு தப்பி வந்த பெண் போராளிகளோடு தொடர்பு கொண்டு மரியாதைக் குறைவாக அவர்களோடு உரையாடியவர். சில தகவல்களை வைத்துக்கொண்டு கதைகளைப் புனைந்து தனது விருப்பு வெறுப்புக்கமைய குழுசார்பு மனப்பான்மையுடன் செயற்படுபவர். பசையுள்ள இடத்தில் ஒட்டிக்கொள்ளும் இவர் ஐபிசி பாஸ்கரனையோ சுபாஸ்கரனையோ கூட அடுத்த தேசியத் தலைவர் என்று அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இந்நிகழ்ச்சியில் மாவீரன் பிரபாகரன் உரை நிகழ்த்திய நிலா என்ற பாலநந்தினி பாலசுப்பிரமணியம், றோ தமிழீழம் பெற்றுத்தரும் தலைவர் பிரபாகரன் இந்தியாவுடன் மோதியது தான் அவரது தவறு இல்லாவிட்டால் இந்திய றோ வே தமிழீழம் பெற்றுத் தந்திருக்கும் என்கிறார். அக்கூட்டத்தில் தலைவர் பிரபாகரன் இறந்தாலும் அவருடைய இலட்சியங்கள் இறக்கவில்லை என்று சொல்லும் நிலா, றோ வோடு சேர்ந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தை வென்றெடுக்க அழைப்பு விடுக்கின்றார். இந்த திபாகரன் – நிலா கூட்டின் மதியுரைஞர் தமிழகத்தில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஆலோசகர் மு திருநாவுக்கரசு. மு திருநாவுக்கரசு, உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன், பழ நெடுமாறன், வெற்றிச் செல்வன் ஆகியோர் நேரடியாகவே றோவின் பராமரிப்பில் உள்ளவர்கள். இவர்கள் ஒருவரோடு ஒருவர் நெருங்கிச் செயற்படுபவர்கள்.

ஈழ அரசியலில் றோ இன்றி ஒரு புலியும் அசையாது என்ற நிலையே தற்போதுள்ளது. தற்போது அரசியலில் ஈடுபடுபவர்களில் புலித்தேசியம் பேசுகின்ற அல்லது புலிகளுக்காக வக்காலத்து வாங்குகின்றவர்கள் மிகப்பெரும்பாலானோர் இந்திய, இலங்கைப் புலனாய்வுப் பிரிவுகளோடு சேர்ந்து செயற்படுபவர்களாகவே உள்ளனர். இதற்கு தமிழ் நாட்டில் கலையகத்தை வைத்துச் செயற்படும் ஐபிசியும் லங்காசிறியும் பாஸ்கரனும் விதிவிலக்கல்ல. இந்திய உளவுத்துறைக்குச் சேவகம் செய்ய இவர்கள் நான் முந்தி நீ முந்தி என்று போட்டி போட்டுக்கொண்டு செயற்படுகின்றனர்.

றோ வின் ஒரு பிரிவு பழ நெடுமாறன் கவிஞர் காசி ஆனந்தன் அணி துவாரகா வந்துவிட்டார், பிரபாகரன் வந்துகொண்டிருக்கிறார், அவருக்குப் பின்னால் மதிவதனி வருகிறார் என்று கதையளக்க, முன்னாள் இந்திய இராணுவ மேஜர் மதன்குமார் அதற்கு ‘பில்ட்அப்’ கொடுக்கின்றார். மறுபக்கம் றோவின் மற்றைய பிரிவு மு திருநாவுக்கரசு வழிகாட்டலில் இயங்கும் திபாகரன் – நிலா கூட்டு துவாரகா வரவில்லை. தலைவரும் வரமாட்டார், மதிவதனியும் வரமாட்டார். அவர்களுக்கு வீரவணக்க அஞ்சலி செய்வோம் என்று கார்த்திக் மனோகரனின் நிகழ்வை தங்களுடைய நிகழ்வாக ஹைஜாக் பண்ணி ஒரு விடுதலைப் போராளியின் நிகழ்வில் கோசலம் அடித்துள்ளனர்.

இவ்வாறு மற்றவர்களுடைய நிகழ்வுகளில் புகுந்து அவற்றை ஹைஜாக் பண்ணுவதை தங்களுடைய திறமை என்று றோவின் ஈழத்தமிழ் ஊதுகுழலாகச் செயற்படும் லங்காசிறியிலும் ஐபிசியிலும் மார்தட்டி வருகின்றார் திபாகரன். தமிழரசுக் கட்சியின் பிரித்தானியக் கிளையைக் கைப்பற்ற இவர்கள் போட்ட திட்டத்தை தேசம்நெற் அம்பலப்படுத்தி இருந்தது. அரசியலில் ஏடே தொடங்கியிராத கார்த்திக் மனோகரன் சித்தப்பாவுக்கும் குடும்பத்துக்கும் நிகழ்த்திய வீரவணக்க நிகழ்வில் றோ – மோடி கூட்டம் கோசலம் அடித்தது மிகக் கேவலமானது. ஒரு காலத்தில் மாற்றுக் கருத்தாளர்கள் வைக்கும் கூட்டங்களில் தங்களைப் புலிகளாகக் காட்டிக்கொள்ளும் இவ்வாறான விரோத சக்திகள் புகுந்து அட்டகாசம் பண்ணுவது வழமை. இப்போது அவர்கள் தங்கள் தலைவனின் வீரவணக்க நிகழ்வையே அவ்வாறு அசிங்கப்படுத்துகின்றனர்.


இந்திய புலனாய்வுத்துறையும், இந்திய இராணுவத்தால் பயிற்றப்பட்ட இலங்கைப் புலனாய்வத்துறையும் இணைந்தே இறுதி யுத்தத்தை நடத்தியதாக அதன் பின்னர் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய பொறுப்பாளர் ஒருவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். தற்போது கனடாவில் வாழும் இவர் தான் இலங்கைச் சிறையில் நான்காம் மாடியில் இருந்த போதும் தன்னைக் கைது செய்ததும் விசாரணை செய்ததும் இந்திய புலனாய்வுப் பிரிவினர் என்று தேசம்நெற்க்குத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் இலங்கைப் புலனாய்வுப் பிரிவு என்றொன்று இலங்கையில் இல்லை என்றும் அங்கு இருப்பதும் இந்திய புலனாய்வுப் பிரிவால் பயிற்சி அளிக்கப்பட்ட இந்தியாவின் நலன்களுக்காகப் பணியாற்றும் புலனாய்வுப் பிரிவு என்றும் அவர் தெரிவித்தார்.

றோ இன்றி ஒரு புலியும் அசையாது என்பது போல் பிரபாகரனும் அவரது குடும்பத்தில் ஒருவரும் உயிருடன் இருக்கக் கூடாது என்று உத்தரவிட்டது இந்திய புலனாய்வுப் பிரிவு. அதன் படி அக்குடும்பத்தையே படுகொலை செய்தவர்களின் முகவர்கள் அக்குடும்பத்திற்கு வீரவணக்கம் செலுத்த, ஆயிரம் ஆயிரம் போராளிகளும் மக்களும் அதனை வேடிக்கையாக கடந்து செல்கின்றனர். பாவம் பிரபாகன். அவருக்கு ஒரு கௌரவமான வீர வணக்கத்தை ஈழத்தமிழர்கள்: ஒடுக்கப்பட்ட சிங்கள, முஸ்லிம், மலையக மற்றும் சமூகங்களுடனும் ஒடுக்கப்பட்ட உலக மக்களோடும் இணைந்து சுயவிமர்சனத்தோடு செய்ய வேண்டும்.

 

இப்ராஹீம் ரைசி உயிரிழந்தமைக்கும் எங்களது நாட்டும் எந்த வித தொடர்பும் இல்லை – மறுக்கும் இஸ்ரேல்!

ஈரான் அதிபர் இப்ராஹீம் ரைசி உலங்கு வானூர்தி விபத்தில் உயிரிழந்தமைக்கும் தங்களது நாட்டும் எந்த வித தொடர்பும் இல்லை என இஸ்ரேல்  திட்டவட்டமாக மறுத்துள்ளது.

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பயணித்த உலங்ககு வானூர்தி கிழக்கு அஸர்பைஜானுக்கு அருகிலுள்ள ஜோல்பா பகுதியில் நேற்று (19) விபத்துக்குள்ளானது.

அதன்போது, அதிபர் ரைசி உட்பட 8 பேர் உயிரிழந்ததாக ஈரானிய அரசு ஊடகம் உறுதிபடுத்தியது.

அத்துடன், ஈரான் அதிபரின் மரணத்திற்கு இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்புதான் காரணம் என சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வந்தன.

இந்நிலையில், இஸ்ரேல், இந்த சந்தேகங்களை திட்டவட்டமாக மறுத்து வருவதோடு இது தொடர்பாக சர்வதேச செய்தி நிறுவனங்களிடம் பேசிய இஸ்ரேல் அதிகாரிகள், ரைசியின் உலங்கு வானூர்தி விபத்துக்கு நாங்கள் காரணம் அல்ல,இது எங்களுடைய நடவடிக்கையும் அல்ல என திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.

பிரித்தானியாவின் இப்ஸ்விச் மாநகராட்சியின் மேயராக முதல் முறையாக புலம்பெயர் இலங்கை தமிழர் !

பிரித்தானியாவிலுள்ள நகரமொன்றின் மேயராக முதல் முறையாக புலம்பெயர் இலங்கை தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

தொழில் ஆணையாளராக பதவி வகிக்கும் இளங்கோ இளவழகன் என்பவர் இப்ஸ்விச் மாநகராட்சியின் வருடாந்த கூட்டத்தில் அதிகவாக்குகளை பெற்று ஆளுநராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

“நான் இன்று மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன், இந்த பெரிய நகரத்தின் ஆளுனராக நியமிக்கப்பட்டமைக்கு மிகவும் பெருமைப்படுகிறேன்” என இளங்கோ இளவழகன் குறிப்பிட்டுள்ளார்.

வேட்புமனுவை முன்மொழிந்த நகராட்சி தலைமை ஆளுநர் நீல் மெக்டொனால்ட் , தான் பதவியில் இருக்கும் ஆண்டில் பொதுத் தேர்தல் முடிவை இளங்கோ இளவழகன் அறிவிப்பார் என அறிவித்துள்ளார்.

இந்நிலையில், புதிய மேயராக இளங்கோ இளவழகன் நியமிக்கப்பட்டமைக்கு அங்குள்ள தமிழ் சமூகம் வாழ்த்து தெரிவித்து நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் ஈரான் நாட்டு ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி பலி !

ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் ஈரான் நாட்டு ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகமான மெஹர் செய்திச் சேவை இன்று திங்கட்கிழமை (20) உறுதிப்படுத்தியுள்ளது.

அசர்பைஜானில் அணை திறப்பு விழாவில் கலந்துகொண்ட இப்ராஹிம் ரைசி ஹெலிகொப்டர் மூலம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (19) ஈரான் புறப்பட்டார்.

இந்நிலையில், கடுமையான பனிமூட்டத்தில் மலைப்பகுதியை கடக்கும்போது ஹெலிகொப்டர் ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் விபத்துக்குள்ளானது.

ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியுடன் ஹெலிகொப்டரில் பயணித்த வெளிவிவகார அமைச்சர் உசைன் அமீர், கிழக்கு அசர்பைஜான் மாகாண ஆளுநர் மாலிக் ரஹ்மதி உள்பட 9 பேரும் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.