2024

2024

வெளிநாட்டு அலுவல்கள் வெளிநாட்டு வேலையாப்பு பதில் அமைச்சராக அருண் ஹேமச்சந்திரா நியமனம்!

வெளிநாட்டு அலுவல்கள் வெளிநாட்டு வேலையாப்பு பதில் அமைச்சராக அருண் ஹேமச்சந்திரா நியமனம்!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் குழுவினரும் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியா புறப்பட்டுச் சென்றதன் காரணமாக 05 அமைச்சுக்களுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, ஜனாதிபதியின் கீழ் காணப்படும் டிஜிட்டல் பொருளாதாரம், பாதுகாப்பு அமைச்சு மற்றும் நிதி மற்றும் திட்டமிடல், பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஆகிய 03 அமைச்சுக்களுக்கும், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு மற்றும் தொழில் அமைச்சு ஆகியவற்றுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதற்கமைய, பதில் டிஜிட்டல் பொருளாதார அமைச்சராக, டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் பொறியியலாளர் எரங்க வீரரத்ன, பதில் பாதுகாப்பு அமைச்சராக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர, நிதி மற்றும் திட்டமிடல், பொருளாதார அபிவிருத்தி பதில் அமைச்சராக, நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா பதில் அமைச்சராக, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திர, பதில் தொழில் அமைச்சராக, பிரதி தொழில் அமைச்சர் மஹிந்த ஜயசிங்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அன்று பயங்கரவாதி – இன்று: இலங்கை ஜனாதிபதி அநுராவிற்கு அமோக வரவேற்பு! அனுராவின் பதாதைகள் டெல்லி வீதிகளில்!

அன்று பயங்கரவாதி – இன்று: இலங்கை ஜனாதிபதி அநுராவிற்கு அமோக வரவேற்பு! அனுராவின் பதாதைகள் டெல்லி வீதிகளில்!
‘இலங்கை ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் போது பொருளாதார உறவை மேம்படுத்துவது, சுற்றுலாத்துறையை முதலீட்டை ஊக்குவிப்பது, எரிசக்தியில் பங்காளித்தன்மையை வலுப்படுத்தவது, பிராந்திய பாதுகாப்பு பற்றிய விடயங்கள் பேசப்பட்டதாகவும், இலங்கை ஜனாதிபதியின் இந்திய விஜயம், இலங்கை – இந்திய உறவை மேலும் உறுதிப்படுத்துவாக அமைந்துள்ளது’ என்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 15 ஆன நேற்று ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க பிற்பகல் 5:30 மணியளவில் டெல்லியை சென்றடைந்தார். ஐனாதிபதிக்கு இந்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் கலாநிதி எஸ்.முருகன் (Dr S.Murugan), இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, (Santosh Jha), இந்து சமுத்திர வலயத்தின் மேலதிகச் செயலாளர் புனித் அகர்வால் (Puneet Agrawal), இந்திய உபசரணைப் பிரதானி அன்கூமன் கவூர் (Anshuman Gaur) உள்ளிட்ட இராஜதந்திரிகள் விமான நிலையத்தில் சிறப்பு வரவேற்பளித்தனர். மேலும் டெல்லித் தெருக்களில் இலங்கை ஜனாதிபதியை வரவேற்கும் படி அவரது நிழற்படத்தோடு அலங்கார பதாதைகள் வைக்கப்பட்டிருந்தன.
தற்போது நக்சல்பாரிகளை இல்லாதொழிப்போம் என்று சபதமிட்டு, சதீஸ்கரில் அவர்களைப் படுகொலை செய்துவரும் இந்தியா, இதே பாணியில் 1971 ஏப்ரலில் தென்பகுதிக் காடுகளில் ஜேவிபியை வேட்டையாடியது. வேட்டையாடப்பட்ட ஜேவிபியின் பாசறையில் வளர்ந்த ஒருவருக்கு இலங்கையின் ஜனாதிபதியாக செங்கம்பள வரவேற்பை இந்தியா வழங்கியுள்ளது. இலங்கை பல்வேறு நல்லவிடயங்களுக்குமாக சர்வதேசத்தில் தன்னுடைய பெயரை நிலைநிறுத்தியுள்ளது. அதில் இதுவும் ஒன்றாக அமைகின்றது. 1971 இல் இந்தியப் படைகள் தெற்கில் என்ன செய்தனர் என்பதை இக்காணொலி கூறுகின்றது:
இப்பயணம் இந்தியாவிற்கான  மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம். வழக்கப்படி இலங்கையில் புதிதாக பதவியேற்கும் ஜனாதிபதிகள் முதன் முதலில் மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பயணங்கள் இந்தியாவிற்கேயாகும். ஜனாதிபதி அநுரவின் இந்தியப்பயணத்தில் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் பிரதி நிதியமைச்சர் அனில் ஜயந்த ஆகியோரும் உடனிருந்தார்கள்.  இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் இந்திய உயர்மட்ட இராஜதந்திரிகளுடனும் பேச்சுவார்த்தைகள் நடைபெற ஏற்பாடாகி உள்ளது.
அத்துடன் டெல்லியில் நடைபெறும் இரு நாடுகளுக்கிடையேயான முதலீடு மற்றும் வியாபார உறவுகளை மேம்படுத்துவது தொடர்பான வர்த்தகக் கூட்டத்திலும் ஜனாதிபதி அனுரா கலந்து கொள்கின்றார். இப்பயணத்தின் இறுதியாக டெல்லியில் அமைந்துள்ள புத்த காயாவிற்கு விஜயம் செய்ய உள்ளதாக ஜனாதிபதி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அரச வேலையே வேண்டும் – கலைப்பட்டதாரிகள் விடாப்பிடி : இவர்கள் வரிச்சுமையை கூட்டப் போகின்றனர் – மக்கள் விசனம்

அரச வேலையே வேண்டும் – கலைப்பட்டதாரிகள் விடாப்பிடி : இவர்கள் வரிச்சுமையை கூட்டப் போகின்றனர் – மக்கள் விசனம்

தனியார் வேலையோ அல்லது சுயதொழிலோ எமக்கு வேண்டாம்.  அரசாங்க நியமனங்களை அரசு தமக்கு வழங்கியே ஆகவேண்டும் என வடக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் மீண்டும் போராட்டம் நடத்தியுள்ளனர். இதேவேளை இத்தனை வருடங்கள் தம்முடைய வரிப்பணத்தில் இலவசக் கல்வியில் படித்துவிட்டு 5 வருடங்களாக நாட்டின் பொருளாதாரத்துக்கு பங்களிக்காமல் வீட்டில் இருந்துகொண்டு மேலும் தம் வரிச்சுமையை கூட்டுவதற்கு அரச வேலை கேட்டு போராட்டம் நடத்துகின்றனர் என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். யாழ்மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் நேற்று முன்தினம் இடம்பெற்றபோது மாவட்ட செயலகத்தின் முன்பு வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

தாங்கள் பட்டப் படிப்பினை நிறைவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்ற போதிலும் அரச வேலைவாய்ப்பு தமக்கு இதுவரை வழங்கப்படவில்லை. புதிதாக ஆட்சி அமைத்திருக்கும் அரசாங்கம் தமக்கான அரச நியமனத்தை வழங்கவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை முன்வைத்தனர்.  இதில் கலந்துகொண்டிருந்தோரில் மிகப்பெரும்பாலோனோர் கலைப்பீட பட்டதாரிகளாகவே காணப்பட்டனர்.  அவர்களிடம் பல்கலைக்கழக கல்வி தொடர்பான போதிய புரிதலோ அல்லது அதன் நோக்கம் பற்றிய தெளிவையோ காண முடியவில்லை.

பாடசாலைக் கல்வி தொடக்கம் பல்கலைக்கழகம் வரையான தம்முடைய கல்வியின் நோக்கம் அரச வேலைக்கானது என்பதே அவர்களுடைய எண்ணமாக உள்ளமையை அவதானிக்க முடிந்தது. அரசவேலையற்ற கல்வி வீணானது என்ற கருத்தை அவர்கள் வெளியிட்டிருந்தனர். வேலையில்லா பட்டதாரிகளை சந்தித்த பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அரச்சுனா அரசாங்கம் வேலைதராது என்றும், போராடுவது வீண் என்றும் – ஏதாவது திட்டங்களை தொடங்கி வேலை கொடுப்பதாக தெரிவித்திருந்தார். அத்தோடு நின்று விடாமல் மாவட்டத்திற்கு ஒரு குறைகாண் அதிகாரிகளை நியமித்து பட்டதாரிகளை வேலைக்கு அமர்த்தப் போவதாகவும் அவர்களுக்கான சம்பளத்தை புலம்பெயர் தமிழர்கள் பொறுப்பெடுக்க வேண்டும் என்றும் முகநூலில் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஏற்கனவே அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என்ற பெயரில் நாட்டின் அபிவிருத்திக்கு பங்களிக்காமல் பெரும்சுமையாக ஒருதொகை அரச உத்தியோகத்தர்கள் காணப்படுகின்ற நிலையில் குறைகேள் அதிகாரிகள் எனும் பெயரில் பட்டதாரிகளை நியமித்து அந்தச் சுமையை புலம்பெயர் தமிழர்களின் தலையில் கட்டுவதற்கு அர்ச்சுனா தயாராகிவிட்டார்.  நாடு எதிர்நோக்கியுள்ள பெரும் பொருளாதார சரிவுக்கான அடிப்படைக் காரணங்களில் ஒன்று அரசசேவைகளில் தேவைக்கு அதிகமானோர் உள்ளீர்க்கப்பட்டமை என்பது வெளிப்படையானது.

பட்டதாரிகளுக்கு அரச நியமனங்கள் வழங்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்பதும் கடந்த கால அரசாங்கங்கள் வாக்கு வங்கிக்கான கருவியாக அரச நியமனங்களை பயன்படுத்தியுள்ளன என்பதும் மிகத் தெளிவாக பேசப்பட்டு வருகின்றது . அவ்வாறான நிலையில் பட்டதாரிகளின் இவ்வாறான சிறுபிள்ளைத்தனமான கருத்துக்கள் பெரும் அதிர்ச்சியையும் அவர்களின் தகமை தொடர்பில் கேள்விகளையும் எழுப்பியுள்ளன . பட்டதாரிகளின் இந்த நிலைக்கு அவர்கள் மட்டுமல்லாது இலங்கையின் கல்வி முறையிலுள்ள குறைபாடும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் குறிப்பாக கலைப்பீடத்தின் வினைத்திறனற்ற செயற்பாடுகளும் பயனற்ற கற்கை நெறிகளுக்கான விரிவுரையாளர்களின் ஆட்சேர்ப்பும் முக்கிய காரணங்களாகும் . இலங்கையில் வேலைவாய்ப்புகள் தாராளமாக உள்ளபோதும் அவற்றுற்குரிய தகமைகள் கலைப்பீட பட்டதாரிகளிடம் போதுமானதாக இல்லை. சந்தையில் இருக்கும் கேள்விகளுக்கு ஏற்ப தம்மை வளர்த்துக்கொள்ளும் ஆர்வமும் அவர்களிடம் இருப்பதாக தெரியவில்லை . தற்போதைய அரசாங்கம் டிஜிட்டல்மயமாக்கத்தை நோக்கி நாட்டை நகர்த்த ஆரம்பித்துள்ளது.  அதற்கான ஆளணிப் பற்றாக்குறையும் நிலவுகிறது. ஆனால் இவற்றுக்கு பொருத்தமானவர்களாக கலைப் பட்டதாரிகள் இல்லை என்பது ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று.  அரசாங்க வேலை இல்லாமையால் தங்களுடைய காலம் வீணடிக்கப்பட்டுவிட்டது என்று பட்டதாரிகள் புலம்புகின்றார்கள் . உண்மையில் இவர்கள் இந்த நாட்டுக்கும் சமூகத்துக்கும் பயன்கொடுப்பார்கள் என்று நம்பி மக்களுடைய வரிப்பணத்தில் இவர்களுடைய இலவசக் கல்விக்காக இறைக்கப்பட்ட பெருமளவு முதலீட்டை 5 வருடங்களாக வீட்டிலிருந்து இவர்கள் வீணடிக்கின்றனர் என்பதை இவர்கள் விளங்கிக்கொள்ளவில்லை.  பல்கலைக்கழகத்தில் பெறப்படும் கல்வியின் நோக்கம் துறைசர்ந்த திறமைகளைப் பெறுவதோடு , புதியதொரு பார்வையை உருவாக்கி . தனிமனித வளர்ச்சிக்கும் சமூக மேம்பாட்டுக்கும் பங்களிக்க முடியுமாறு ஒருவரை தயாரிப்பதாகும்.அதைவிடுத்து மக்களின் வரிப்பணத்தில் படித்து விட்டு மீண்டும் அரச வேலை எனும் பெயரில் மக்களின் வரிப்பணத்தை வீணடிக்காமல் நாட்டுக்கும் சமூகத்துக்கும் முன்னேற்றகரமான முயற்சிகளை நோக்கி இவர்கள் நகரவேண்டும் .

இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள 2624.29 ஏக்கர் நிலப்பரப்பு விடுவிக்கப்படும் – மீள்குடியேற்ற திட்டங்களுக்காக1303.42 மில்லியன் ரூபா நிதி !

இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள 2624.29 ஏக்கர் நிலப்பரப்பு விடுவிக்கப்படும் – மீள்குடியேற்ற திட்டங்களுக்காக1303.42 மில்லியன் ரூபா நிதி !

தேசிய மக்கள் சக்தி ஊடக பிரச்சாரங்கள் ஏதுமின்றி அமைதியாக தமிழ் மக்களின் தேவைக்களையும் அவர்கள் மீதான காலாதிகாலமான அடக்குமுறை திட்டங்களையும் கைவிட்டு வருகிறது. இராணுவ சாவடிகள் நீக்கப்படுகிறது, ஏற்கனவே காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன, இராணுவ சாவடிக்குள் உள்ள வழிபாட்டு தலங்கள் விடுவிக்கப்படுகின்றன என்றவாறு அரசின் மீதான மக்கள்  நம்பிக்கை அதிகரிப்பதாக செயற்பாட்டுத்தளத்தில் இருப்போர் மூலம் அறிய முடிகிறது.

இந்த நிலையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் காணப்படும் 2624.29 ஏக்கர் நிலப்பரப்பு எதிர்வரும் காலங்களில் படிப்படியாக விடுவிக்கப்படும் என்று கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

இது தொடர்பில்  அவர் வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரியவருவதாவது,

தற்போது படையினரிடம் உள்ள காணிகள் 2025ஆம் ஆண்டு முதல் படிப்படியாக விடுவிக்கப்படும். அதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

யாழ். மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட மீள்குடியேற்றம் மற்றும் அபிவிருத்தி திட்டங்களுக்காக இந்த வருடம் 1303.42 மில்லியன் ரூபா நிதி செலவழிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

சர்வதேச தமிழ் தேசிய ஆதரவோடு ஆட்சிக்கு வந்த மைத்திரி அடிக்கல் நாட்டிய தையிட்டி விகாரையும் கஜாவின் போரட்டமும் !

சர்வதேச தமிழ் தேசிய ஆதரவோடு ஆட்சிக்கு வந்த மைத்திரி அடிக்கல் நாட்டிய தையிட்டி விகாரையும் கஜாவின் போரட்டமும் !

யாழ்ப்பாணம் – தையிட்டி பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையை அகற்றக் கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்சவைத் தோற்கடித்து சர்வதேசத்தின் ஆதரவோடு தமிழ் தேசியமும் இணைந்து மைத்திரியை ஜனாதிபதியாக்கினர். இந்த ஜனாதிபதி அவசர அவசரமாக அடிக்கல் நாட்டியது தான் இந்தத் தையிட்டி விகாரை,  இந்த விகாரையின் அடிக்கல் நாட்டு விழாவுக்கு அன்றைய தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது . அப்போது கஜா கோமாவில் இருந்தாரா தெரியவில்லை. நேற்று நடந்த இந்தப் போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் , முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்டவர்களும் பொது மக்கள் சிலரும் கலந்துகொண்டிருந்தனர் . குறித்த போராட்டத்தின் போது பொலிஸார் – ஆரப்பாட்டக்காரரிடையே போராட்ட நிலை வலுவடைந்துள்ளதுடன் இதனை கஜா – கஜா குழுவினர் சமூக வலைத்தளங்களில் தமிழீழ விடுதலைப் போராட்டம் செய்தது போல பகிர்ந்து கொண்டிருப்பதையும் அவதானிக்க முடிகிறது.

நாட்டில் நல்லிணக்க சூழல் ஒன்று உருவாகும் நிலையில் இத்தகைய செயற்பாடுகள் பலரை முகஞ்சுழிக்க வைத்துள்ளது. குறித்த தையிட்டி விகாரை 2021 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டு முழுமை நிலையை அடைந்தது.  குறித்த விகாரை அமைக்கப்பட்டிருப்பது தனியார் காணியில் . இக்காணி வலிகாமம் வடக்கு பிரதேசசபைக்குட்பட்ட பகுதியாகவே காணப்படுகிறது. ஆதலால் வடக்கு பிரதேச சபையினரையே கஜா கஜா குழுவினர் கைநீட்டி கேள்வி கேட்க வேண்டியுள்ளது.  இதேவேளை குறித்த விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களில் ஒருவரான ஆறுமுகம் பத்மநாதன் என்பவர் விகாரை அமைக்கப்படும் போதே அனைத்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் இது தொடர்பில் முறைப்பாடளித்ததாகவும் அப்போது யாருமே கண்டு கொள்ளவில்லை எனவும் இப்போது தான் கோமாவிலிருந்து எழும்பிய மாமாக்கள் மாதிரி நடிக்கிறார்கள் தமிழ் தலைவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.  இந்த நிலையில் விகாரை அமைக்கும் போதே நிபுணத்துவம் மிக்க சட்டம்பிகளை வைத்திருக்கிறோம் என கூறும் கஜா கஜா கோஷ்டி விகாரை அமைக்கும் போது கோமா நிலையில் இருந்து விட்டு பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் போதும் – தற்போது பாராளுமன்ற தேர்தல் தோல்வியின் பின்பும் போராட்டங்களை மேற்கொண்டு மக்களின் கவனத்தை திசைதிருப்ப முயற்சிப்பதாக பலரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.  விகாரைப்பணிகள் முழுமைகண்டு விட்ட நிலையில் ஒரு மதஸ்தலத்தை இடிப்பதோ அல்லது அதனை இல்லாதாக்குவதோ மிகவும் உணர்வுபூர்வமான விடயம் . இனிமேல் இந்த விகாரையை அகற்றுவது நடக்க முடியாத காரியம் என்பது தெரிந்தும் கூட அடுத்த மாகாண சபை . உள்ளூராட்சி தேர்தல்களை இலக்கு வைத்து தன் இருப்பை நிலைநாட்ட கஜா குழுவினர் இந்த போராட்டங்களை தம் அரசியலுக்காக பயன்படுத்தி வருகின்றனர்.  இதே போல் தான் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் காணாமல் போனவர்கள் தான் என்பதைத் தெரிந்தும் வாக்கு வங்கி அரசியலுக்காக அதனை தொடர்ந்தும் செய்கின்றனர் என யாழ் அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

யார் அங்கே ? மாவை எங்கே ? அவர் உள்ளேயா ? வெளியேயா ? – பாவம் தமிழரசுக் கட்சி : சுமந்திரன் பீலிங்ஸ்

யார் அங்கே ? மாவை எங்கே ? அவர் உள்ளேயா ? வெளியேயா ? – பாவம் தமிழரசுக் கட்சி : சுமந்திரன் பீலிங்ஸ்

பாராளுமன்ற தேர்தலுக்கு பின் டிசம்பர் 14 இல் வவுனியாவில் கூடிய தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் குழாய் அடிச்சண்டை.  10 மணிக்கு வர வேண்டிய பதவி விலகிய மாவை சேனாதிராஜா வரத் தாமதித்தே இந்த வாய்க்கால் சண்டைக்கு காரணம்.  பதவி விலகியவர் கூட்டத்தை தலைமைதாங்க முடியாது.  தாமதியாமல் கூட்டத்தை தொடங்கும்படி செயலாளரை கிழக்கின் தமிழ்த்தேசியத் தலைவர் இரா சாணக்கியன் தூண்ட அதற்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எதிர்ப்பு தெரிவித்தார். மாவைக்கு தொலைபேசி அழைப்பெடுத்து கூட்டத்திற்கு அழையுங்கள் என சிவமோகனும் இடையில் குறுக்கிட்ட சாணக்கியன் ” இது கோல் சென்ரர் அல்ல , கட்சி … ‘ உங்கள் வைத்தியசாலை இதுவல்ல என்று பதிலளித்தார் . இப்படியே உறுப்பினர்களிடையே வார்த்தைகள் தடிக்க சாணக்கியனுக்கு வக்காலத்திற்கு வந்த பீற்றர் இளஞ்செழியனும் சிரேஷ்ட உபதலைவர் தலைமையில் கூட்டத்தை நடத்துங்கள் அல்லது குழப்பவாதிகளை வெளியேற்ற வேண்டும் என உறுமினார் . இதற்கிடையில் விடாப்பிடியாக நின்ற சிவமோகனை நாற்காலி அருகில் சமாதானப்படுத்த முயன்ற சுமந்திரனின் இராஜதந்திரமும் தோற்றுப்போனது . வென்றது என்னவோ மாவை தான் . அடித்துப்பிடித்து ஒருவழியாக 10:45 கூட்டத்திற்கு வந்து சேர்ந்த மாவை குடுகுடு என்று ஓடிப்போய் முன்வரிசையில் தலைவர் இருக்கையில் இடத்தைப் பிடித்துக் கொண்டார் . இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைமைத்துவம் தொடர்பாக விவாதிக்க இக் கூட்டம் நடைபெற்றது . ஓக்டோபரில் மாவை பதவி விலகல் கடிதத்தைக் கையளித்தார் . அது தொடர்பில் கட்சி செயலாளர் விளக்கத்தை கேட்ட போது மாவை உடனடியாகப் பதில் வழங்கவில்லை . அதனைத் தொடர்ந்து செயலாளர் , மாவையின் பதவி விலகல் நடைமுறைக்கு வந்ததாக எடுத்துக்கொண்டு மேலதிக நடவடிக்கைகளை எடுப்பதாக அறிவித்தார்.  இதற்கிடையில் சிறிதரன் ஊடாக மாவை கையொப்பமிட்ட பதவி விலகலை மீளப்பெறும் கடிதமொன்று செயலாளரிடம் ஒப்படைத்திருந்தார் . மறுநாள் மாவையும் நேரடியாக குறிப்பிட்ட கடிதத்தை செயலாளருக்கு அனுப்பியிருந்தார் . இந்த இழுபறிக்குள் கட்சியின் அடுத்த மாநாடு வரைக்குமான எஞ்சிய காலப்பகுதிக்கு தமிழரசுக்கட்சியின் யாப்பின் பிரகாரம் சி.வி. கே . சிவஞானம் தலைவராக முன்மொழியப்பட்டு வழிமொழியப்பட்டார் . இதற்கு போட்டியாக மாவை பதவி விலகலை மீளப்பெற்றதால் அவர் தொடர்ந்தும் தலைவராக இருக்க வேண்டும் என முன்மொழியப்பட்டது , யார் தலைவர் ? என்ற கேள்விக்கு விவாதங்களுாடாக பதில் கிடைக்கவில்லை . அதனால் மாவையின் பதவிவிலகலை ஏற்றுக்கொண்ட தரப்பு இந்த விடயத்தை வாக்கெடுப்பிற்கு விட அழைப்பு விடுத்தது . எந்தவொரு முடிவும் எடுக்கப்படாத நிலையில் டிசம்பர் 28 இல் வாக்கெடுப்பிற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது .

ஐஎம்எப் கடன் பிரச்சினையில் கரணம் தப்பினால் மரணம் !

ஐஎம்எப் கடன் பிரச்சினையில் கரணம் தப்பினால் மரணம் !

ஐஎம்எப் இன் கடன் மீள்வரைவு நிபந்தனைகளை இலங்கை அரசு எதிர்த்து இருக்க வேண்டும் என ASATIC அமைப்பின் செயலாளர் ரவி சுந்தரலிங்கம் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். இலங்கை கடன்களை மீனளித்துவிட்டது. இப்போது இவர்கள் வட்டிக்கு வட்டியும் வட்டி குட்டி போடுவதையும் கேட்கின்றார்கள்.  இலங்கை மக்களை கசக்கிப் பிழிந்து இந்தக் கடனைச் செலுத்த அவசியமில்லை . இலங்கை மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு இந்த மகத்தான ஆணையைக் கொடுத்தது இதற்காககவல்ல. இன்னும் இரு ஆண்டுகளில் கடன்களை மீளக் கட்ட வேண்டிய நேரம் வருகின்ற போது மக்கள் மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டி வரலாம் என அவர் தெரிவித்தார்.  கடந்த காலங்களில் ஐஎம்எப் தனது வட்டியையையும் குட்டியையும் வசூலிக்க முற்பட்ட போது இலங்கையின் ஜனாதிபதிகள் மக்கள் மீது சுமையை ஏற்றினர்.  அதனால் பதவியை இழந்தனர் என்பதைச் சுட்டிக்காட்டினார் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அமிர்தலிங்கம்,  எழுபத்து ஏழுக்களில் மிகப்பெரும் கடன்சுமையோடு ஆட்சிக்கு வந்த ஜேஆர் ஜெயவர்த்தன அரசியலில் சிக்கலானவராக இருந்தாலும் பொருளாதாரத்தில் வெற்றியைக் கண்டதாக பேராசிரியர் அமிர்தலிங்கம் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் தற்போது தேசிய மக்கள் சக்தி பொறுப்பேற்றுள்ள நாடு ஜேஆர் ஜெயவர்த்தனா பொறுப்பேற்றிருந்த நாட்டிலும் மோசமான நிலையில் இருப்பதையும் சுட்டிக்காட்டினார்.  இதற்கு தற்போதைய அரசு எவ்விதத்திலும் காரணமில்லை என்றாலும் இதனை சரிவரக் கையாள வேண்டிய பொறுப்பு ஜேவிபிக்கு உள்ளது என்றும் கரணம் தப்பினால் மரணம் என்பதாகவும் கோடிட்டுக்காட்டினார். மக்களை வருத்தி இந்தக் கடன்களை மீளக் கட்டமுடியாது என்ற நிலைப்பாட்டை தேசிய மக்கள் சக்தி – ஜேவிபி அறிவித்திருக்க வேண்டும் என்கிறார் கொமிற்றி போர் வேர்கர்ஸ் இன்ரநஷனலின் சர்வதேசச் செயலாளர் சேனன். அவர் மேலும் குறிப்பிடுகையில் தாங்கள் அரகலையப் போராட்டத்தின் ஆரம்பத்திலிருந்தே இதனைச் சொல்லி வருவதாகவும் ஜேவிபி ஒரு மார்க்ஸிய சிந்தனையுடைய அமைப்பு இல்லாததால் அவர்களும் முதலாளித்துவ மனப்பான்மையுடனேயே செயற்பட்டு வருவதாகக் குற்றம் சாட்டினார். இது பற்றி ஜேவிபி க்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கையில் வெளியில் இருந்து கருத்துக்களை முன்வைப்பதற்கும் ஆட்சி அதிகாரத்தில் இருந்து முடிவுகளை எடுப்பதற்கும் இடையே பாரிய இடைவெளி இருக்கும் எனத் தெரிவிக்கின்றனர்.  நாங்கள் மக்களையும் நோகடிக்காமல் இந்த நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டமைத்து நாட்டின் பிரச்சினையில் இருந்து மீள்வோம் என்று நம்பிக்கை வெளியிட்டனர் .

ஊசி அர்ச்சுனாவிற்கு எதிராக இலங்கை மருத்துவ நிர்வாகம் கையெழுத்துப் போராட்டம் ! 

ஊசி அர்ச்சுனாவிற்கு எதிராக இலங்கை மருத்துவ நிர்வாகம் கையெழுத்துப் போராட்டம் !

 

பாராளுமன்றம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு மாதம் ஆவதற்கு முன்னரே பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட ஊசி அர்ச்சுனாவுக்கு எதிரான கையெழுத்துப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது . ‘ இலங்கை அரசியல்வாதிகள் இலங்கை மருத்துவ நிர்வாகத்தில் தலையீடு செய்வதை நிறுத்துங்கள் ! – Stop Sri Lankan Politicians from being involved with medical administration in Sri Lanka என்ற கோசத்தோடு டிசம்பர் 1 ம் திகதி இப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது . ஊசி அர்ச்சுனா யாழ் போதனா வைத்தியசாலைக்குள் நுழைந்து தன்னை ‘ சேர் ” என்று அழையுங்கள் எனக் கலகம் பண்ணி அதனை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி , மற்றுமொரு பிரபலம் பெற்றுக்கொண்ட அன்றே இக்கையழுத்துப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது . இருந்தாலும் இப்போராட்டத்திற்கு பெருமளவில் ஆதரவு இருப்பதாகத் தெரியவில்லை. 650 பேர்வரையே இந்த ஒன்லைன் போராட்டத்தில் கையெழுத்திட்டுள்ளனர். ஊசி அர்ச்சுனா ஆரம்பித்த சாவகச்சேரிப் போராட்டம் பரவலாக எல்லாத்தரப்பினராலும் ஆதரிக்கப்பட்டிருந்தது.  ஆனால் மிக விரைவாகவே ஊசி அர்ச்சுனா அந்த ஆதரவுத்தளத்தை நுணலும் தன் வாயால் கெடும் என்பது போல் தன்னுடைய பிற்போக்குத் தனமான யாழ் மையவாத சைவ வேளான ஆண் ஆதிக்க சிந்தனையை மட்டும் முன்னிலைப்படுத்தி தன் ஆதரவுத்தளத்தை சரிபாதியாக்கிவிட்டார் என இவருக்கு ஆதரவளித்த இவருடைய சகாக்களே தெரிவிக்கின்றனர்.

மேலும் அர்சுனாவால் சாவகச்சேரி வைத்தியசாலையின் நிலைபற்றி வெளிக்கொண்டுவந்ததற்குப் பிற்பாடு அங்கு எந்த மாற்றத்தையும் அர்ச்சுனாவால் கொண்டுவர முடியவில்லை. சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை தற்போது பிரதேச வைத்தியசாலை அளவுக்கு கீழ்நிலைக்கு வந்துவிட்டதாக அங்கு டிசம்பர் 13 வெள்ளிக்கிழமை பதவியேற்றுச் சென்ற வைத்தியர் வி நாகநாதன் தேசம்நெற்க்குத் தெரிவித்தார் .

இன்று எந்தத்துறையாக இருந்தாலும் எந்த வேலையாக இருந்தாலும் ஒருமித்த குழுவாக செயற்படுவதன் மூலமே வேலையை வினைத்திறனுடன் செயற்படுத்த முடியும் எனத் தெரிவித்தார் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் . மனைவியுடன் . மீண்டும் காதலியுடன், நண்பர்களுடன் , சக பணியாளர்களுடன் என்று சமூகத்தில் யாருடனும் இணைந்து பணியாற்ற முடியாத ஒருவரால் எப்படிப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்று அவர் கேள்வி எழுப்பினார் . கேள்வி எழுப்ப வேண்டும் . பிரச்சினைப்பட வேண்டும் . ஆனால் அது பிரச்சினையைத் தீர்க்கும் நோக்குடன் இருக்க வேண்டும் . இருக்கின்ற நிலைமையை மோசாமாக்கி சாவகச்சேரி மக்களுக்கு இதுவரை கிடைத்து வந்த வைத்தியசாலையின் சேவையை வழங்க முடியாமல் இன்னும் குறைந்த சேவையே அங்கு கிடைப்பதாக சொல்லப்படுகின்றது . ஊசி அர்ச்சுனா தனக்கு பிரபலம் தேடுவதைக் குறைத்து மக்களின் வாழ்நிலையை மேம்படுத்த கூடிய கவனம் எடுக்க வேண்டும் . இல்லையேல் , இன்னுமொரு எம் கே சிவாஜிலிங்கம் ஆகிவிடுவார் ஊசி அர்ச்சுனா என்றும் அந்த மாகாணசபை உறுப்பினர் தெரிவித்தார் .

முன்னாள் ஜனாதிபதிகள் பாதுகாப்பு செலவுகளுக்காக வருடாந்தம் 1100 மில்லியன் ரூபாய் – உடன் நடவடிக்கை எடுத்த அரசாங்கம்!

முன்னாள் ஜனாதிபதிகள் பாதுகாப்பு செலவுகளுக்காக வருடாந்தம் 1100 மில்லியன் ரூபாய் – உடன் நடவடிக்கை எடுத்த அரசாங்கம்!

நாட்டின் முன்னாள் ஜனாதிபதிகளுக்காக அதிகப்படியான பணம் ஒதுக்கப்படுவது தொடர்பாக தேசிய மக்கள் சக்தி கடந்த கால தேர்தல் பிரச்சாரங்களின் போது குறிப்பிட்டிருந்தது. இந்த நிலையில் ஆடம்பர செலவுகளை கட்டுப்படுத்தி மக்கள் மீதான வரிச் சுமையை குறைப்பதில் தமது அரசாங்கம் அதிக கவனம் செலுத்தும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு செலவுகள் தொடர்பில் ஆராய்வதற்காக தனியான குழு ஒன்று நியமிக்கப்பட்டது. முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்காக அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட குழு வழங்கிய பரிந்துரைகளின் படி, முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்காக சுமார் 60 பாதுகாப்பு அதிகாரிகளை பணியில் அமர்த்தினால் போதுமானது எனவும் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக அறிக்கை சுட்டிக்காட்டியிருந்தது.

மேலும் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு வருடாந்தம் செலவிடப்படும் மொத்த தொகையில் 326 மில்லியன் ரூபாய் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு செலவிடப்படுவதாக பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களுக்காக வருடாந்தம் சுமார் 1100 மில்லியன் ரூபா செலவிடப்படும் நிலையில் மகிந்த ராஜபக்சவுக்காக அதில் 326 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இது மொத்த தொகையில் மூன்றில் ஒரு பகுதியாகும்.

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்காக சுமார் 60 பாதுகாப்பு அதிகாரிகளை பணியில் அமர்த்தினால் போதுமானது என, முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்காக அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட குழு வழங்கிய பரிந்துரைகளின் படி, பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

மேலும், மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பிற்கு நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளதன் மூலம் அவரின் பாதுகாப்பில் எவ்வித சமரசமும் ஏற்படவில்லை எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழரசுக்கட்சியில் இருந்து சிலர் நீக்கம் செய்யப்படவுள்ளனர்- எம்.ஏ.சுமந்திரன்

இலங்கை தமிழரசுக் கட்சியில் இருந்து சிலர் நீக்கப்படுவதுடன், சிலர் இடைநிறுத்தப்படுவர் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்  தெரிவித்துள்ளார்.

இன்று (14) இடம்பெற்ற தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“கட்சிக்கு எதிராக போட்டியிட்டவர்களை உடனடியாக கட்சியிலிருந்து நீக்குவதற்கு பொதுச் செயலாளருக்கு அதிகாரம் இருக்கிறது என மத்திய குழு ஏற்றுக் கொண்டிருக்கின்றது. அதனை பொதுச்செயலாளர் எதிர்வரும் நாட்களில் செய்வார். வேறு சிலர் கட்சிக்கும், கட்சியினுடைய வேட்பாளருக்கு எதிராகவும் செயற்பட்டமை தொடர்பிலும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும். அந்த ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் வரை அவர்கள் கட்சியின் செயற்பாடுகளில் இருந்து இடை நிறுத்தப்படுவார்கள்.

கடந்த காலத்தில் அரசியல் உருவாக்கம் சம்பந்தமான விடயங்களில் தமிழரசு கட்சி தீர்க்கமான நிலைப்பாடுகளை எடுத்திருக்கின்றது. சில வரைவுகள் செய்யப்பட்டு இருக்கின்றன. சில வரைவுகளோடு நாங்கள் இணங்கி இருக்கின்றோம்.ஆகவே அது எங்களுடைய நிலைப்பாடு.

அதனைத் தொடர்ந்து கோட்டாபய ராஜபக்சவினுடைய காலத்தில் அவர் நியமித்த குழுவுக்கு முன்பாகவும் நாங்கள் சென்று எங்களுடைய நிலைப்பாட்டை எழுத்து மூலமாக கொடுத்திருக்கிறோம். ஆகவே அது எங்கள் கட்சியினுடைய நிலைப்பாடு.

ஆகவே அவ்வாறான நிலைப்பாட்டோடு ஒத்து வருகின்றவர்கள் இருந்தால் எந்த ஆட்சேபனையும் கிடையாது. ஆனால் வேறு சிலர் எங்களுடைய கட்சிக்கு போட்டியாக வேண்டுமென்றே வெவ்வேறு வரைவுகளை செய்து சில குழப்பங்களை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

அவ்வாறான குழப்பங்களை அந்த காலப்பகுதியில் செய்தவர்களோடு, அவர்களுடைய வரைவுக்கு இணங்கி செல்ல வேண்டிய அவசியம் நமக்கு கிடையாது.

தமிழரசு கட்சி தமிழர்களுடைய பிரதான கட்சி. வடக்கு கிழக்கில் சகல மாவட்டங்களில் இருந்தும் பிரதிநிதிகளை தெரிவு செய்திருக்கின்ற ஒரே ஒரு கட்சி இலங்கை தமிழரசு கட்சி.

ஆகவே மக்கள் கொடுத்த அந்த ஆணையை மீறி செயற்பட மாட்டோம். மற்றவர்கள் எங்களோடு எங்களுடைய நிலைப்பாட்டோடு இணைந்து செயல்படுவதற்கு வருவார்களாக இருந்தால் எமக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.